Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    233
    சீகாழி




    தானத்தன தானன தந்த தானத்தன தானன தந்த
    தானத்தன தானன தந்த தனதான






    ஊனத்தசை தோல்கள்சு மந்த காயப்பொதி மாயமி குந்த
    ஊசற்சுடு நாறுகு ரம்பை மறைநாலும்
    ஓதப்படு நாலுமு கன்ற னாலுற்றிடு கோலமெ ழுந்து
    ஓடித்தடு மாறியு ழன்று தளர்வாகிக்
    கூனித்தடி யோடுந டந்து ஏனப்படு கோழைமி குந்த
    கூளச்சட மீதையு கந்து புவிமீதே
    கூசப்பிர மானப்ர பஞ்ச மாயக்கொடு நோய்கள கன்று
    கோலக்கழ லேபெற இன்று அருள்வாயே
    சேனக்குரு கூடலி லன்று ஞானத்தமிழ் நூல்கள்ப கர்ந்து
    சேனைச்சம ணோர்கழு வின்கண் மிசையேறத்
    தீரத்திரு நீறுபு ரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
    தீமைப்பிணி தீரவு வந்த குருநாதா
    கானச்சிறு மானைநி னைந்து ஏனற்புன மீதுந டந்து
    காதற்கிளி யோடுமொ ழிந்து சிலைவேடர்
    காணக்கணி யாகவ ளர்ந்து ஞானக்குற மானைம ணந்து
    காழிப்பதி மேவியு கந்த பெருமாளே





    பதம் பிரித்தல்



    ஊன தசை தோல்கள் சுமந்த காய பொதி மாயம் மிகுந்த
    ஊசல் சுடும் நாறும் குரம்பை மறை நாலும்


    ஊனத் தசை = அழிந்து போகும் தன்மையுடையமாமிசம் தோல்கள் சுமந்த = தோல்கள்(இவைகளைச்) சுமக்கும் காயப் பொதி =உடற்சுமை ஊசல் = பதன் அழியும் தன்மையொடுகூடியதும் சுடு = (கடைசியில்) சுடப்படுவதும்நாறும் குரம்பை = நாறுவதுமான குடில் மறை நாலும் = நான்கு வேதங்களால்


    ஓத படும் நாலு முகன் த(ன்)னால் உற்றிடும் கோலம் எழுந்து
    ஓடி தடுமாறி உழன்று தளர்வாகி


    ஓதப்படும் = ஓதப்படுகின்ற நாலு முகன் த(ன்)னால் உற்றிடு = பிரமனால் ஏற்படுத்தப்பட்டகோலம் எழுந்து = அழகுடன் உருப் பெற்றுஎழுந்து ஓடித் தடுமாறி உழன்று = ஓடியும்தடுமாறியும், திரிந்தும் தளர்வாகி = தளர்ச்சி அடைந்தும்


    கூனி தடியோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
    கூள சடம் ஈதை உகந்து புவி மீதே


    கூனித் தடியோடு நடந்து = கூனித் தடிகொண்டுநடந்தும் ஈனப்படு = இழிவைத் தரும் கோழைமிகுந்த = கோழை மிக்க கூளச் சடம் ஈதை =குப்பையான இந்த உடலை உகந்து = மிக விரும்பிபுவி மீதே = இந்தப் பூமியில்


    கூச பிரமாண ப்ரபஞ்ச மாய கொடு நோய்கள் அகன்று
    கோல கழலே பெற இன்று அருள்வாயே


    கூசப் பிரமாண ப்ரபஞ்சை = நாணம்உறும்படியாக விதிப் பிரகாரம் செல்வதானஇந்த உலக மாயக் கொடு = மயக்கதில் உண்டாகும் நோய்கள் அகன்று = பிணிகள்நீங்கிகோலக் கழலே பெற = உனது அழகிய இரண்டுதிருவடிகளை இன்று அருள்வாயே = இன்றுஅருள் புரிவாயாக


    சேன குரு கூடலில் அன்று ஞான தமிழ் நூல்கள் பகர்ந்து
    சேனை சமணோர் கழுவின் கண் மிசை ஏற


    சேனக் குரு = சேனன் என்னும் பட்டப் பெயர்வைத்திருந்த சமண குருக்கள் கூடலில் =மதுரையில் அன்று = முன்பு ஞானத் தமிழ்நூல்கள் பகர்ந்து = (சம்பந்தராக வந்து) ஞானத்தமிழ் நூல்களாகிய தேவாரப் பாக்களைப் பாடி சேனைச் சமணோர் = கூட்டமான சமணர்கள்கழுவின் கண் மிசை ஏற = கழுவில் ஏறும்படி


    தீர திரு நீறு புரிந்து மீன கொடியோன் உடல் துன்று
    தீமை பிணி தீர உவந்த குருநாதா


    தீரத் திரு நீறு = திடத்துடன் திரு நீற்றை புரிந்து =தந்து மீனக் கொடியோன் = மீனைக் கொடியாகக்கொண்ட பாண்டியனின் உடல் துன்று = உடலில் பொருந்திய தீமைப் பணி தீர = கொடிய சுர நோய்தீர உவந்த குரு நாதா = அருள் சுரந்த குரு நாதரே


    கான சிறு மானை நினைந்து ஏனல் புனம் மீது நடந்து
    காதல் கிளியோடு மொழிந்து சிலை வேடர்


    கானல் சிறு மானை = (வள்ளி மலைக்) காட்டில்மீது இருந்த சிறு மான் போன்ற வள்ளியைநினைந்து = நினைந்து ஏனல் புனம் மீது நடந்து =தினைப் புனத்தில் நடந்து காதற் கிளியோடுமொழிந்து = ஆசைக் கிளியாகிய அவளோடு பேசிசிலை வேடர் = வில் ஏந்திய வேடர்கள்


    காண கணியாக வளர்ந்து ஞான குற மானை மணந்து
    காழி பதி மேவி உகந்த பெருமாளே




    காண = காணும்படியாக கணியாக வளர்ந்து =வேங்கை மரமாக வளர்ந்து ஞானக் குற மானை வளர்ந்து = அந்த ஞானக் குறப்பெண்ணை மணந்துகாழிப் பதி மேவி = சீகாழிப் பதியில் அமர்ந்து உகந்த பெருமாளே = மகிழும் பெருமாளே



    சுருக்க உரை





    குகஸ்ரீ ரசபதி விரிவுரை



    விதி வழி ஆவது மதி மதிக்குத் தக்க படி மத சால்பு ஊன்றி இதை உணராமல், சால்பில் உயர்ந்தது எம் சமயம், எவரும் இதையே ஏற்க வேண்டும் என்பது விதண்ட நடை எந்தச் சமயமும் அடிப்படைக் கொள்கையில் அருமை உடையவை அதை அறிந்தால் சமயச் சச்சரவுகள் சரிந்து விடும் கோண நடை போடும் சில கோமமாளிகள் உயர்ந்த இந்த தர்மத்தை உணர்வது தான் இல்லை சால்பு மிக்கவர்கள் ஆதி சமணர்கள் அவர்கள் கால் வழியில் வந்த பலர் விழுப்பம் கொள்ளாமல் வழுக்கினர்
    விரிந்த சைவத்தை விரோதித்தனர் கம்பீரமான பாண்டிய நாட்டில் கால் ஊன்றினர்


    அரசர் கூன் பாண்டியரை தம் வசம் ஆக்கினர் நீறணிந்தாரைக் கண்டால் அப்பாவம் தீர இன்று பட்டினி என்றனர் சிவ சிவ என்றால் இனி மூன்று நாள் எமக்கு முட்டு என்றனர் முட்டு என்பது பட்டினி பரிபவம் பயனான குருமார்களை பட்டினி போடுவதா என்று சமயப் பொது மக்கள் கொதித்து குதித்தனர் ஆத்திரம் தீர மக்களை பல வழிகளில் அவமதித்தனர் நாடு முழுவதும் இதே நிலை இவைகளால் நலிந்தது அறம் வலிந்தது மறம் - சந்து சேனனும் இந்து சேனனும் தரும சேனனும் கருமை சேர் கந்து சேனனும் கனக சேனனும் முதலாகிய பேர் - என சேன குரு பட்டம் பெற்ற சாகச சமணர்கள் கூடல் மாநகரில் இப்படி நாடகம் ஆடினர்


    ஆளுடை பிள்ளையார் மதுரைக்கு வந்தார் அடியர் பலருடன் வந்த அவரை ஊருள் நுழையாதே என்று அடக்கி வழியில் மறியல் செய்தனர் அவ்வளவு தானா ? பிள்ளையார் தங்கிய மடத்தில் பெரும் தீயை மூட்டினர் நள்ளிருளில் எழுந்த தீயைக் கண்டு அடியார்கள் நடுங்கினர் உடனே பிள்ளையார் துள்ளிஎழுந்தார் தீயவர் மூட்டிய தீயைக் கண்டார் தீ வண்ணன் திருவுருவைத் திருவுளத்தில் கொண்டார் - செய்யனே, ஆலவாயில் மேவிய ஐயனே, அஞ்சல் என்று அருள் செய் எனை, கையராம் அமணர் கொழுவும் சுடர் பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே என்று பாடினார் மதுரைக்குத் தம்மை அழைத்த மங்கையர்க்கரசியார் மாங்கல்யத்தைக் காக்கவும் அரசைத் திருத்தி ஆளவும் கருதி பையவே என்று என்று கூறி அருளiய படி அவ்வெம்மை சிறுகச் சிறுக பரவிச் சென்று பாண்டியரை சுர நோயாக பற்றியது புழுவாய்த் துடித்தார் பூபதி முன் வந்த சமண குருமார் சுரம் தீர்க்க முயன்றனர் முடியாது சோர்ந்தனர் மகாராணியார் விண்ணப்பித்தபடி பிள்ளையார் வந்தார்


    மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
    தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
    சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
    செந்துவர் வாய் உமை பங்கன் திரு அலவாயான் திருநீறே


    என்று திருநீற்றுப் பதிகம் பாடி தீரா சுர நோயைத் தீர்த்தார் முதுகு கூனும் நிமிர்ந்தது பிறவிப்பிணியும் தணிந்தது ஆளுடைய பிள்ளையாரின் அருள் நோக்காலும் வாசன தீட்சையாலும் விளைந்த பயன் இவை கூன் பாண்டியன் என்ற பெயர் ஒழிந்தது நின்றசீர் நெடுமாற நாயனார் ஆயினர் அரசர் பிரான்.
    தோற்ற சமணர் மேலும் துள்ளினர். எதிர் நீச்சலையும் என்பது குறித்து அனுபவ வாதம்செய்வோம் என்று ஆரவாரித்தனர். மெய்சமய நுட்பத்தை ஏட்டில் எழுதுவம் எரி நெருப்பில் இடுவம் வேகாத ஏடு வெற்றிச் சமயம் என்றனர் சமண ஆச்சாரியர். உடனே அஸ்தி நாஸ்தி எனும் சமய மந்திரத்தை எழுதிய ஏட்டை நெருப்பில் இட்டனர். அந்த ஏடு அப்போதே எரிந்தது கரிந்தது.


    ஆளுடைய பிள்ளையார் உளம் கொண்டு மெய்ப்பொருளை உணர்ந்தார். உணர்ந்த உள்ளத்தில் ஊன்றிய மெய்ப்பொருள் உண்மை உருக் கொண்டு உயர்ந்து வாய் வழி அவ்வுண்மையை வருவித்தார். அப்போது அவ்வுண்மை வாய்மை எனும் பெயருடன் மாய்ந்து வளர்ந்தது. வாய்மையை ஒசையும் ஒலியும் ஆக்கினார். ஒலியை பொருள் அமைந்த சொல்லாக்கி அரிய ஒரு பதிகத்தை அருளினார். அதை எரியில் இட்டார். பசுமை உடையது சைவம் என்பதை பலரும் அறிய அந்த ஏடு இறுதி வரை பசுமையாக இருந்தது கண்டவர் அது கண்டு கை குவித்தனர்.


    சுர வாதில், அனல் வாதில் தோல்வி கண்ட அமணர்கள் சூதாடுவார் எண்ணுதல் போல் மூன்றாம் வாதத்தில் முடி சூட்ட எண்ணினர். ஏட்டில் சமய உண்மையை எழுதுவோம். புனித ஆற்றில் போடுவோம். எதிரேறும் ஏடு ஏற்றமான சமயத்திற்கு எடுத்துக்காட்டு என்றனர். இளைய பிள்ளையார் அதற்கும் இணங்கினர். அமணர் இட்ட ஏடு ஆற்று நீரோடு ஓடி அதனுள் ஒழிந்தது திருஞானசம்பந்தர், - வாழ்க அந்தணர் வானவர் ஆவினம் உள்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமு துயர் தீர்கவே- என வரும் திருமுகப்பாசுரம் அருளினார். அப்பதிகம் வரைந்த ஏட்டை வைகை ஆற்றில் இட்டார். அது நீரைக் கிழித்து எதிரேறிச் சென்று திருவேடகம் தலத்தில் கரை ஏறியது. அது கண்ட சமணர்கள் மானம் போனதே என மயங்கினர் நடந்தனர். கழுமரம் பல நட்டனர்பாய்ந்து அதனில் மாய்ந்தனர். இம்முன்மை வாதத்திலும் நுட்பங்கள் பல என்ன அதிசயம் ? அழிவு செய்தவர் தமது அழியைத் தாமே செய்து கொண்டனர். அபர சுப்ரமணியமாகி இத்தகைய ஆடல் பல செய்த ஆளுடைய பிள்ளையார் நீர் தானே மதுரையில் நீர் அருளிய பதிகங்கள் ஞானத் தமிழ் நூல்கள் என்று உயர்ந்த மேலோர் என்றும் உணர்துளரே இது வரை விவாத காலம்.


    சிவ முனிவர் கண்ணில் இருந்தார். மான் வயிற்றில் புகுந்தார் பிறந்த பின் மறவர் மகளாய் வளர்ந்தார் காட்டில் தினைப்புனத்தைக் காவல் செய்தார் எங்கிருந்தாலும் நின்னையே நினைந்தார். நிமல முருகன் அருள் என்று வருமோ என்று எப்புறமும் மருண்டு நோக்கும் மானாக இருந்தார். நினைந்த அவரை நீ நினைத்தாய் தினைப்புனம்நோக்கி நடந்தாய் மருட்சியிலும் துள்ளலிலும் மானான வள்ளியை, அதிகமாக கொஞ்சுகிளி என்று அணுகி அறிந்தாய். கொஞ்சித் தமிழைப் பகரும் உனக்குத் தான் அவர் கொஞ்சும் அருமை குணிக்க இயலும்அவ்வள்ளிக்கிளி யாது யாது வினவியதோ காதல்
    மொழி எனும் பெயரில் அனுபவ நுட்பம் யாது யாது கூறினையோ ஐயா மானை நினைந்து, புனமீது நடத்து, கிளியோடு காதல் மொழிந்த, நுட்பம் கணிப்பாரும் உளரேயோ ?


    இடையில் வேடுவர் தடையாய் நுழைந்தனர். கண்டனை உடனே வேங்கை மரமாய் ஆயினை. வேங்கை மரம் பூ பூத்தால் அது விவாக காலம். இது மறவர் அறியும் மரபு. அவர்கட்கு பஞ்சாங்கம் பார்க்கத் தெரியாது அல்லவா? பாவை வள்ளி பரிபாகம் மேவினாள். நீயும் மணக்க உளம் கொண்டாய். அதை அறிவித்தால் அன்றி அறியாத வேடர்கள் அறியுமாறு அம்மர வடிவில் அமர்ந்தாய். முன்னே மருளும் வெறும் மானாய் இருந்தார் வள்ளியார். அடிப்பாகம் வேதம், இடைப்பாகம் ஆகமங்கள், கிளைகள் எல்லாம் கலைகள் இப்படி எழுந்த வேங்கையை தரிசித்த பின் ஞானக்குறமான் அயினர் அந்நங்கையார்.


    ஞானசக்திதரனான உனக்கு குறவர்குடியில் இருந்தாலும் புனித ஞான குறமான் நல்ல பொருத்தம் தான். காளி வழிபட்ட பதி காழி என ஆயது நிக்ரக சக்தி பேறு பெற்ற அத்தலத்தில் அருள் ஞான அநுக்ரக சக்தியான வள்ளியுடன் இன்பம் கண்டிருக்கின்றாய்.


    சொரூபத்தில் ப்ரம்மம் தடத்தத்தில் இருக்கும் பெருமாள்களுக்குள் பெரிய பெருமாள் நீ எனும் பொருளில் பெருமாளே என்று கூறி அழைக்கும் என் விண்ணப்பம் கேட்டருள். குமரா செவி ஏற்றருள்.


    ஊனமான ஊன் மறைய அதன் மேல் புளுங்கும் தோல் ஒன்று போர்க்கப்பட்டது - மட்ச மெச்சு சூத்ரம் ரத்த பித்த மோத்ரம் வைச்சி இறச்ச பாத்ரம்- சிதம்பரம் திருப்புகழ்- ஆகாயப் பொதி இது. இச்சுமையை ஏற்றேன் பாலனான பருவம் போம் பன்னு குமாரப்பருவம் போம் கோலமான தருணம் போம் கோலை உன்றி குனிந்து எழுந்து காலன் மாய்க்க அனைவரும் கொல் என்று அழுது ஏலப்பிணம் என்று ஓர் பெயர் இட்டு இடுகாட்டில் இடுதல் என்ற படி மாறி மாறி வரும் இதன் மாயத்தை நினைத்தாலே மடங்கி மனம் முடங்குகிறதே இந்த அழகில் எதையோ சாதிப்பது போல் எங்கெங்கேயோ போவதும் வருவதுமாக ஊசலாட்டுகிறதே


    இக்காயத்தைக் காக்க படும் பாட்டிற்கும் கணக்குண்டோ வாய் நாற்றம், கண்ணின் பீளை நாற்றம் , அக்குள் நாற்றம் மல நாற்றம் ஐய்யய்ய,ஏறிய வெப்பத்தால் உள்ள நாற்றம் சொல்லத் தரம் அல்லவே இறுதியில் சுட்டுப் பொசுக்கும் காலத்தில் உண்டாகும் சுடு நாற்றம் தாங்க முடிவது இல்லையே உடம்பெல்லாம் பொத்தல் பெரும் துவாரம் ஒன்பது இது சுடு நாறு குரம்பை என்பது எவ்வளவு உண்மை அனுபவம் இவ்வுடலை சுமந்து எழுந்து, ஓடு, தடுமாறி, உழன்று, தாழ்வடைந்து, கூனி தடி பிடித்து, ஊன்று காலால் நடந்து, ஈனமான கோழை மிகுந்த குப்பையான இவ்வாக்கையை விரும்பிய அநியாய வாழ்க்கை இது அளவிளாது நாணும் அளவு செய்த செயல் வழி நான் பிறந்தேன் என்று வரும் உலக மாயா நோய்கள் எத்தனை என் கோலமெல்லாம் செயற்கை பாழ் - ஆயிரக்கோடி காமர் அழகெல்லாம் திரண்டு ஒன்றாகி மேயின எனினும் செவ்வேள் விமலமாம் சரணந்தன்னில் தூய நல் எழிலுக்கு ஆற்றாது என்றிடின் இனைய தொல்லோன் மாயிரு வடிவுக்கெல்லாம் ஊவமை யார் வகுக்கப் பாலார்? என்று சூரபத்மன் சொல்லித் துதித்த இயற்கை அருட் கோல வாழ்வானது உனது அருளால் திருவடிகற்றும் அறிவிலா சமணருக்கு மெய்மை காட்டினை காட்டியும் தேறாஅவர்கள் கழுமரம் ஏதினார் கல்லா மறவர் குல வள்ளியார் உளநெகிழ்வை உணர்ந்து காதல் நாடகம் ஆடினை அவரது பரிபாக காலத்தை கணி எனும் பெயருடைய வேங்கை மரமாக்கிக் காட்டினை திருத்தி திருத்தி வள்ளியாரை இணைக்கினைஅடியேனுக்கு மற்றொன்றும் வேண்டா இந்த செயற்கைக் கோலம் போதும் போதும் குருநாதா, பெருமாளே , கோலமாகிய பேறு தரும் நின் திருவடிகளில் இடம் கொடு அடியேனுக்கு என்று இறஞ்சி வேண்டிய படி.



    ஒப்புக




    1 சேனக் குரு


    சேனைக் குரு = சமண குருக்கள் சேனன் என்னும் பட்டத்தைத் தாங்கி இருந்தார்கள்

    சந்து சேனனும் இந்து சேனனும் தரும சேனனும் கருமைசேர்
    கந்து சேனனும் கனக சேனனும் முதலதாகிய பெயர் கொளா
    --- சம்பந்தர் தேவாரம்

    2 குரு கூடல்
    சம்பந்தர் காலத்தில் மதுரையில் பாண்டிய நாட்டில் சமண குருக்களால் சமண மதம் மிகப் பரவி இருந்தது
    திகுதிகென மண்ட விட்ட தீயொரு
    செழியனுடல் சென்று பற்றி வாருகர்------------ -திருப்புகழ்,திடமிலி


    3 காணக் கணியாக வளர்ந்து

    வேங்கை யடவி மறவர் ஏங்க வனிதை யுருக
    வேங்கை வடிவு வருவுங் குமரேசா ------ - திருப்புகழ், கோங்கமுகை


    சேனைச்சம ணோர்கழு வின்கண் மிசையேறத்
    தீரத்திரு நீறுபு ரிந்து மீனக்கொடி யோனுடல் துன்று
    தீமைப்பிணி தீரவு வந்த குருநாதா
    சம்பந்தர் தொடர்பு கொண்ட இந்த வரலாற்று நிகழ்ச்சியை பாடல் 187 விளக்கத்தில் காணலாம்


    சீகாழிக்கு பன்னிரண்டு பெயர்கள்


    1 வேணுபுரம் கஜமுக அசுரனுக்குப் பயந்த வேணு என்னும் இந்திரன் பூசித்த தலம்
    2 திருப்புகலி சூரனுக்கு அஞ்சி தேவர்கள் புகலிடமாக வந்த தலம்
    3 வெங்குரு பிரகஸ்பதி பூசித்த தலம்
    4 பூந்தராய் பூவும் தாரையும் பூசித்த தலம்
    5 சிரபுரம் அமிர்தம் வழங்கப்பட்டபோது திருமாலால் சிரம் தறிப்பட்ட ராகு கேதுக்கள் தலையைத்
    திரும்பப் பெற பூசித்த தலம்
    6 புறவம் புறாவான பிரசாபதி என்னும் முனிவர் தம்
    உடல் மாமிசத்தைக் கொடுத்து அரசனைக் காத்துப் பேறு பெற்ற தலம்
    7 சண்பை சண்பை முனி எனப்பட்ட துர்வாசர் பூசித்த தலம்
    8 சீகாழி காளி என்னும் நாகம் பூசித்த தலம்
    9 கொச்சை பராசர முனிவர் மற்ற ரிஷிகளiன் சாபத்தால் துர்க்கந்தம்உடலில் பெற்று, அது நீங்கப் பூசித்த தலம்
    10 கழுமலம் ஆன்மாக்களiன் மலம்கழுவப்படுகின்ற தலம்
    11 பிரமபுரம் பிரமன் பூசித்த தலம்


    12 தோணிபுரம் பிரளய காலத்தில் தோணி போல மிதந்த காரணத்தால் இப் பெயர் வந்தது
Working...
X