Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    245.வங்கார மார்பிலணி
    245
    திருசெங்காட்டங்குடி
    (நன்னிலம் வட்டம் திருப்புகலூர் அருகில் உள்ளது)


    தந்தான தானதன தானதன தானதன
    தந்தான தானதன தானதன தானதன
    தந்தான தானதன தானதன தானதன தனதான


    வங்கார மார்பிலணி தாரொடுயர் கோடசைய
    கொந்தார மாலைகுழ லாரமொடு தோள்புரள
    வண்காதி லோலைகதிர் போலவொளி வீசியிதழ் மலர்போல
    மஞ்சாடு சாபநுதல் வாளனைய வேல்விழிகள்
    கொஞ்சார மோககிளி யாகநகை பேசியுற
    வந்தாரை வாருமிரு நீருறவெ னாசைமய லிடுமாதர்
    சங்காளர் சூதுகொலை காரர்குடி கேடர்சுழல்
    சிங்கார தோளர்பண ஆசையுளர் சாதியிலர்
    சண்டாளர் சீசியவர் மாயவலை யீட்டியெ னுழலாமற்
    சங்கோதை நாதமொடு கூடிவெகு மாயையிருள்
    வெந்தோட மூலஅழல் வீசவுப தேசமது
    தண்காதி லோதியிரு பாதமலர் சேரஅருள் புரிவாயே
    சிங்கார ரூபமயில் வாகனந மோநமென
    கந்தாகு மாரசிவ தேசிகந மோநமென
    சிந்தூர பார்வதிசு தாகரந மோநமென விருதோதை
    சிந்தான சோதிகதிர் வேலவந மோநமென
    கங்காள வேணிகுரு வானவந மோநமென
    திண்சூர ராழிமலை தூள்படவை வேலைவிடு முருகோனே
    இங்கீத வேதபிர மாவைவிழ மோதியொரு
    பெண்காத லோடுவன மேவிவளி நாயகியை
    யின்பான தேனிரச மார்முலைவி டாதகர மணிமார்பா
    எண்டோளர் காதல்கொடு காதல்கறி யேபருகு
    செங்கோடு மேவிபிர காசமயில் மேலழகொ
    டென்காதல் மாலைமுடி ஆறுமுக வாவமரர் பெருமாளே



    பதம் பிரித்தல்



    மார்பில் அணி வங்கார தாரோடு உயர் கோடு அசைய
    கொந்து ஆர மாலை குழல் ஆரமோடு தோள் புரள
    வண் காதில் ஓலை கதிர் போல ஒளி வீச இதழ் மலர் போல


    மார்பில் அணி = மார்பில் அணிந்துள்ள வங்கார = பொன் தாரோடு = மாலையுடன் உயர் = மேலானகோடு அசைய = மலை போன்ற (கொங்கைகள்)அசைய கொந்தார மாலை = பூங்கொத்துக்கள்நிறைந்த மாலை அணிந்துள்ள குழலார் = கூந்தலும்ஆரமோடு = மணி மாலையும் தோள் = தோளில் புரள= புரண்டு அசைய வண் = வளப்பம் உள்ள காதில் =காதுகளில் ஓலை = ஓலையாகிய காதணி கதிர் போல = சூரியனைப் போல ஒளி வீச = ஒளியை வீசஇதழ் மலர் போல = வாயிதழ் மலர் பல விளங்க


    மஞ்சு ஆடு சாபம் நுதல் வாள் அனைய வேல் விழிகள்
    கொஞ்சி ஆர மோக கிளியாக நகை பேசி உற
    வந்தவரை வாரும் இரும் நீர் உறவு என ஆசை மயல் இடு மாதர்


    மஞ்சு ஆடு சாபம் வில் = அழகு விளங்கும் வில் (போன்ற) நுதல் = நெற்றி வாள் வேல் அனைய =வாளைப் போலவும், வேலைப் போலவும் விழிகள் =கண்கள் கொஞ்சு ஆர = கொஞ்சுதல் மிக நிறைந்தமோக = ஆசை கிளியாக = கிளி போன்று நகை பேசி =சிரிப்பு மொழிகளைப் பேசி உற வந்தாரை =தம்மைத் தேடி வந்தவரை வாரும், இரும் =வாருங்கள், உட்காருங்கள் நீர் உறவு என = நீர் நமக்கு உறவினர் ஆயிற்றே என்றெல்லாம் ஆசை மயல் இடு = ஆசை மயக்கத்தை ஊட்டும் மாதர் =பொது மகளிர்


    சங்காளர் சூது கொலைகாரர் குடி கேடர் சுழல்
    சிங்கார தோளர் பண ஆசை உள்ளர் சாதி இலர்
    சண்டாளர் சீசி அவர் மாய வலை ஓடு அடியேன் உழலாமல்


    சங்காளர் = கூடிக் களிப்பவர்கள் சூது = வஞ்சக ஒழிக்கத்தினர் கொலைகாரர் = கொலையையும் செய்யும் குணத்தினர் குடி கேடர் = குடி கெடுப்பவர்சுழல் = திரிகின்றவர் சிங்கார தோளர் = அலங்கார தோளினர் பண ஆசையுளர் = பண ஆசை உள்ளவர்கள் சாதி இலர் = சாதி பேதம் கவனிக்காதசண்டாளர் = சண்டாளர்கள் சீசி அவர் =இத்தகையோரது மாய வலை ஓட = மாய
    வலைகளில் அடியேனும் உழலாமல் = அடியேனும் சிக்கி அலையாமல்


    சங்கோதை நாதமோடு கூடி வெகு மாயை இருள்
    வெந்து ஓட மூல அழல் வீச உபதேசம் அது
    தண் காதில் ஓதி இரு பாத மலர் சேர அருள் புரிவாயே


    சங்கோதை = (யோக வழியில் கிடைக்கும்) சங்க ஓசை ஒலியை நாதமோடு கூடி = (தச) நாதங்களை அனுபவித்து வெகு மாயை இருள் = மிக்க மாயையாகிய இருள் வெந்து ஓட = வெந்து ஒழிந்துபோக மூல அழல் = மூலாக்கினி வீச = வீசஉபதேசமது = உபதேசத்தை தண் = (எனது) குளிர்ந்த காதில் ஓதி = ஓதி இரு பாத மலர் சேர = உனது இரண்டு பாத மலரைக் கூடும் படியாக அருள் புரிவாயே = அருள் புரிவாயாக


    சிங்கார ரூப மயில் வாகன நமோ நம என
    கந்தா குமார சிவ தேசிக நமோ நம என
    சிந்தூர பார்வதி சுத ஆகர நமோ நன என விருது ஓதை


    சிங்கார = அலங்காரமான ரூபா = உருவத்தோடு கூடிய மயில் வாகன = மயில் வாகனனே நமோ நமஎன = உன்னை வணங்குகின்றேன்,வணங்குகின்றேன் கந்தா, குமார = கந்தனே, குகனேசிவ தேசிக = சிவபெருமானுக்குக் குருநாதனேநமோ நம என = சிந்தூர = குங்குமம் அணிந்துள்ளபார்வதி சுத ஆகர = பார்வதியின் பிள்ளையாய் அமைந்தவனே நமோ நம என = (என்று) விருது ஓதை = வெற்றி சின்னங்களின் ஓசை


    சிந்து ஆன சோதி கதிர் வேலவ நமோ நம என
    கங்காள வேணி குருவான நமோ நம என
    திண் சூரர் ஆழி மலை தூள் பட வை வேலை விடு முருகோனே


    சிந்தான = கடல் போல முழங்க சோதி ஒளி கதிர் =சோதி ஒளி கொண்ட வேலவ = வேலாயுதனே நமோ நம என = கங்காள = எலும்பை அணிந்தவனும்வேணி = சடாமுடி உடையவனுமாகிய குருவானவ =சிவனுக்குக் குரு மூர்த்தியாகியனவனே நமோ நம என = திண் = வலிமை மிக்க சூரர் = சூரர்களும் ஆழி =கடலும் மலை = கிரவுஞ்சம், எழு மலை ஆகியவை தூள் பட = பொடியாகும்படி வை = கூரிய வேலைவிடு = வேலைச் செலுத்திய முருகோனே =முருகனே


    இங்கீத வேத பிரமாவை விழ மோதி ஒரு
    பெண் காதாலோடு வனம் மேவி வள்ளி நாயகியை
    இன்பான தேன் இரச மார் முலை விடாத மணி மார்பா


    இங்கீத = இனிமை வாய்ந்த வேத பிரமாவை =வேதத்தில் வல்ல பிரமன் விழ = விழும்படி மோதி =அவனை மோதியும் ஒரு = ஒப்பற்ற பெண் =பெண்ணாகிய வள்ளி மேல் காதலோடு = காதல் கொண்டு வனம் மேவி = (தினைக்) காட்டுக்குச் சென்று வள்ளி நாயகியை = வள்ளி நாயகியின்இன்பான = இன்ப மயமான தேன் இரச = தேன் போல் இனிக்கும் மார் முலை விடாத = மார்பில் பொருந்திய கொங்கையை விடாத கர = கைகளும்மணி மார்பா = அழகிய மார்பும் கொண்டவனே


    எண் தோளர் காதல் கொண்டு காதல் கறியே பருகி
    செங்கோடு மேவி பிரகாச மயில் மேல் அழகோடு
    என் காதல் மாலை முடி ஆறு முகவா அமரர் பெருமாளே


    எண் தோளர் = எட்டு தோள்கள் கொண்ட சிவபெருமான் காதல் கொண்டு = ஆசையுடன் காதல் கறியையே = பிள்ளைக் கறியை பருகும் = உண்டசெங்காடு மேவி = திருசெங்காட்டங்குடி எனும் தலத்தைச் சார்ந்து பிரகாச மயில் மேல் = ஒளி வீசும் மயிலின் மேல் அழகோடு = அழகாக வீற்றிருந்துஎன் காதல் = அடியேனுடைய ஆசையால் எழுதப்பட்ட மாலை = (தமிழ்ப் பாட்டுக்களாகிய)மாலைகளை முடி = புனைந்துள்ள அறு முகவா = ஆறு முகத்தனே அமரர் பெருமாளே = தேவர்கள் பெருமாளே



    சுருக்க உரை





    விளக்கக் குறிப்புகள்

    வள்ளி மலை சுவாமிகளின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்த திருப்புகழ்
    வங்காரம் = பொன்
    ஒப்புக
    1சங்கோதை நாதம்
    கிண்கிணி, சிலம்பு, மணி, சங்கம், யாழ், தாளம், வேய்ங்குழல்,பேரி,மத்தளம்,
    முகில் என்னும் பத்துவகை
    சிவ யோக நிலையைக் குறிக்கும்
    நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய
    நாதங்க ளொடு குலாவி விளையாடி - திருப்புகழ்,ஞானங்கொள்


    2 எண் தோளர் காதல் கொடு
    எண் தோளர் முக்கண்ணர் எம்மீசர் இறைவர் .. சம்பந்தர் தேவாரம்


    எண்ணுதற்கு அரிய தோள்கள் என்றும் கொள்ளலாம்


    3 மாலை முடி ஆறுமுகவா
    காழியர் மன்னன் உன்னிய மாலை யீரைந்து ... சம்பந்தர் தேவாரம்




    2 காதல்கொடு காதல் கறி
    காதல் கறி = பாசம் மிக்க பிள்ளைக் கறி


    சிவபெருமான் ஒரு விரதியர் போல் சிறுத் தொண்டர் வீட்டுக்கு வந்து உண்ண விரும்பி, சிறிதும் தயங்காது அவருடைய பிள்ளையையே கறியாகச் சமைத்துத் தருமாறு கேட்டார். அடியாரும் பிள்ளையை அரிந்து கறி சமைத்தத் திருவிளையாட்டைக் குறிக்கும்


    அந்த திருவிளயாடல் வரலாறு


    ஏழாம் நூற்றாண்டாடில் நரசிம்ம பல்லவ மன்னனிடம் படைத் தளபதியாக பரஞ்சோதியார் இருந்தார். இவர் ஒரு சிறந்த சிவத் தொண்டர். இவர் மன்னனின் ஆணைப்படி வாதாபி மீது போர் தொடுத்து மாபெரும் வெற்றி பெற்றார்.


    பரஞ்சோதியார் சிவத் தொண்டில் சிறந்து விளங்குவதைக் கேள்விப்பட்ட மன்னர்,அவரை வணங்கி, அத்தொண்டிலேயே அவர் முழுமையாக ஈடுபட அனுமதி அளித்தார்


    உடனே தனது "போர்த் தளபதி' பதவியை விட்டு நீங்கி, சிறுத் தொண்டர் என்னும் பெயருடன், தனது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடி வந்து சேர்ந்தார் அங்கே அவரது மனைவியாரான "திருவெண்காட்டு நங்கை'யுடன்சிவத்தொண்டில் ஈடுபட்டார். நாள்தோறும் ஒரு சிவனடியாருக்காவது அன்னமிட்டு உண்பது அந்தத் தம்பதியின் வழக்கமாக இருந்து வந்தது.


    இப்படியிருக்கையில்,, ஒரு நாள் ஒரு அடியார் கூட கிடைக்காத நிலைஏற்பட்டது. யாரேனும் சிவனடியார் கிடைக்கின்றாரா ' என்று எதிர்பார்த்த்திருந்த சமயத்தில் இவரின் அன்பை வெளிப்படுத்த விரும்பிய இறைவன், பைரவர் வேடம் தாங்கி, சிறுத்தொண்டரின் இல்லத்திற்கு வந்தார்.


    அவரை வரவேற்ற தம்பதியினர், அவரை அமுதுண்ண அழைத்தபோது, ""நான் நரப்பசு மட்டுமே உண்பேன்; எனக்கு பெற்றோரின் விருப்பத்தின் பேரில் ஊனமில்லாத தலைமகனின் கறி சமைத்துத் தந்தால் சாப்பிட வருவேன்'' என்று கூறினார்.


    இதைக் கேட்டு சற்றும் தயங்காத சிறுத் தொண்டர், அடியார்க்கு அமுது படைக்க தனக்கொரு பிள்ளை பிறந்ததை எண்ணி மகிழ்ந்தார் அவரது மனைவியும் கணவன் சொல் தட்டாத காரிகை அதனால் மனதைத் திடமாக்கிக் கொண்டு,பிள்ளைக் கறி சமைக்க ஒப்புக் கொண்டாள். இருவரும் மனமொருமித்து,சிவனடியார்க்கு பிள்ளைக் கறி சமைக்கத் தயாராகினர்.


    தங்கள் குழந்தையான சீராளனைப் அழைத்து வந்து, அவனை ஒரு காய்கறிப் பொருளாகவே எண்ணி, அரிந்து கறி சமைத்தனர், சிறுத் தொண்டரும் அவரது மனைவியாரும்! சமைத்ததை இலையில் பரிமாறினர்.


    சாப்பிட அமர்ந்த இறைவன், ஒன்றும் அறியாதவர் போல், "உன் மகனையும் அழைத்து என் பக்கத்தில் அமர வைத்தால்தான் சாப்பிடுவேன்' என்று பிடிவாதம் செய்தார் வேறு வழியின்றி சிறுத் தொண்டர் வெளியே சென்று, ""கண்மணியே சீராளா! ஓடி வா! சிவனடியார் நாம் உய்யும்படி உடன் உண்ண உன்னை அழைக்கின்றார், ஓடி வா!'' என்று ஓலமிட்டு அழைத்தார்


    அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.


    வெளியில் சென்றிருந்த சீராளன் வழக்கம் போல ஓடி வந்தான்! அவனைக் கண்டு அதிசயித்த சிறுத் தொண்டர், அவனை வாரி அணைத்து சிவனடியாரிடம் கொண்டு சென்றார் அங்கே அடியாரைக் காணவில்லை இவை அனைத்தும் இறைவனின் திருவருளே என்பதைஉணர்ந்தனர். அப்போது வான வீதியில் காளை வாகனத்தில், அன்னை பார்வதியுடன் இறைவன் சோமாஸ்கந்தராகத் தோன்றி காட்சியளித்து அருள் வழங்கினார்’


    இச்சம்பவம் நிகழ்ந்த நாள், சித்திரை மாதம் பரணி நட்சத்திர நாளாகும் இன்றும் இந்த ஐதீகம், "அமுது படையல் திருநாளாக' ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது பிள்ளைக் கறி கேட்டு வந்த "உத்திராபதி' என்னும் பைரவர், திருங்செங்காட்டங்குடி கோயிலில் தனி சந்நிதியில் அருள் பாலிக்கின்றார்
Working...
X