Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    249.இருவினை யஞ்ச
    249
    திருப்பந்தணைநல்லூர்
    தனதன தந்த தனதன தந்த
    தனதன தந்த தனதான
    இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச
    இருள்பிணி துஞ்ச மலமாய
    எனதிடர் மங்க வுனதருள் பொங்க
    இசைகொடு துங்க புகழ்கூறித்
    திருமுக சந்த்ர முருகக டம்ப
    சிவசுத கந்த குகவேல
    சிவசிவ என்று தெளி வுறு நெஞ்சு
    திகழந டஞ்செய் கழல்தாராய்
    மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு
    மகிழரி விண்டு மருகோனே
    வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற
    வலம்வரு செம்பொன் மயில்வீரா
    அருகுறு மங்கை யொடுவிடை யுந்து
    மமலனு கந்த முருகோனே
    அருள்செறி பந்த ணையிலிரு மங்கை
    அமளிந லங்கொள் பெருமாளே



    பதம் பிரித்தல்



    இருவினை அஞ்ச வருவினை கெஞ்ச
    இருள் பிணி துஞ்ச மலம் மாய


    இரு வினை = பெரிய எனது பழைய வினை(சஞ்சித வினை) அல்லது சஞ்சிதம், ப்ரார்ப்தம் என்ற இரண்டு வினைகளும் அஞ்ச = பயப்படவருவினை = இனித் தாக்கவேண்டிய வினைகள் (ஆகாமிய வினை) கெஞ்ச = நாங்கள் வரவில்லை என்று கெஞ்சிக் கூத்தாடி விலகஇருள் = இருண்ட பிணி = நோய்கள் துஞ்ச =வராது மடிய (அல்லது இருள் பிணி துஞ்ச = அக இருள் பரப்பும் ஆணவ நோய் தன் செயல் அடங்கவும்) மலம் மாய = ஆணவம், கன்மம்,மாயை என்னும் மும்மலங்களும் அழிந்தொழிய


    எனது இடர் மங்க உனது அருள் பொங்க
    இசை கொடு துங்க புகழ் கூறி


    எனது இடர் = என்னுடைய துன்பங்கள் எல்லாம் மங்க = நீங்க உனது அருள் பொங்க =உன்னுடைய திருவருள் பொங்கி எழ இசை கொ(ண்)டு துங்க = இசையுடனே பரிசுத்தமானஉனது புகழ் கூறி = திருப்புகழை ஓதி


    திரு முக சந்த்ர முக கடம்ப
    சிவசுத கந்த குக வேல


    திரு முக சந்த்ர = அழகிய சந்திரனை ஒத்த முகத்தை உடையவனே முருக = முருகனேகடம்ப=கடம்பாசிவ சுத = சிவ குமரனே கந்த குக வேல = கந்தனே, குகனே, வேலனே

    சிவசிவ என்று தெளி வு உறு நெஞ்சு
    திகழ நடம் செய் கழல் தாராய்


    சிவ சிவ என்று = சிவசிவ என்று கூறி (மவுனப் போரொளியே என்று ஓயாது உருவேற்றி - ரசபதி) தெளிவுறு நெஞ்சு = (எனது) தெளிவு பெற்ற மனம் திகழ = பொலிவு உற நடனம் செய்= நடனம் புரியும் கழல் தாராய் =திருவடிகளைத் தந்தருள வேண்டும்


    மருதொடு கஞ்சன் உயிர் பலி கொண்டு
    மகிழ் அரி விண்டு மருகோனே


    மருதொடு கஞ்சன் உயிர் பலி கொண்டு =மருதமரம், கம்சன் இவர் தம் உயிரைப் பலி கொண்டு மகிழ் = மகிழ்ந்த அரி விண்டு = அரி திருமாலின் மருகோனே = மருகனே


    வதை புரிகின்ற நிசிசரர் குன்ற
    வலம் வரு செம் பொன் மயில் வீரா


    வதை புரிகின்ற = உயிர்களைக் கொன்றநிசிசரர் = அசுரர்கள் குன்ற = ஒடுங்கி அடங்கவலம் வரும் = உலகை வலம் வந்த செம் பொன் மயில் வீரா = செம்பொன் மயிலின் மீது விளங்கும் வீரனே


    அருகு மங்கையொடு விடை உந்தும்
    அமலன் உகந்த முருகோனே


    அருகு உறு = பக்கத்தில் உள்ள மங்கையொடு =பார்வதியுடன் விடை
    = இடப வாகனத்தை உந்தும் = செலுத்தும்அமலன் = குற்றமற்ற சிவபெருமான் உகந்த முருகோனே = விரும்பும் குழந்தையே


    அருள் செறி பந்தணையில் இரு மங்கை
    அமளி நலம் கொள் பெருமாளே


    அருள் செறி = அருள் நிறைந்த பந்தணையில் =திருப்பந்தணை நல்லூரில் இரு மங்கை அமளிகொள் = வள்ளி, தேவசேனை என்னும் இரண்டு தேவிகளின் இன்பத்தை அனுபவிக்கும்பெருமாளே = பெருமாளே

    சுருக்க உரை



    விரிவுரை குகஸ்ரீ ரசபதி

    பிள்ளைகள் இருவர் குபேரனுக்குப் பிறந்தனர். ஒருவன் பெயர் நளகூபரன். மற்றவன் பெயர் மணிகிரீவன். செல்வத்தில் பிறந்து வளர்ந்த இருவரும் எங்கும் செருக்கித் திரிந்தனர். மட்டு மரியாதையை மறந்தனர். அநியாய மதுவை அருந்தினர். மதியை இழந்தனர். இன்ப அரிவையர் பலரை இழுத்துச் சென்றனர். அம்மணம் ஆக்கினர். நீரில் தள்ளினர். தாமும் நிர்வாணம் ஆயினர். குபீரென்று பொய்கையில் குதித்தனர். நெடுநேரம் இப்படி பெண்களுடன் நீந்தி விளையாடினர். பட்டப்பகலில் இப்படி ஆணும் பெண்ணும் மாடுகள் ஆயினர். கடவுள் தான் இவ்வுலகைக் காப்பாற்ற வேண்டும்.


    எதிர்பாரா நிலையில் அவ்வழியில் மா தவ முநிவர் நாரதர் வந்தார். காரிகையர் யாவரும் கண்டனர். நாணினர். கரை ஏறினர். இருந்த ஆடையை எடுத்து உடுத்தனர். குபேரன் பிள்ளைகளும் கரை ஏறினர். ஏறிய போதை இறங்கவில்லை. நிர்வாண நிலையில் நேரில் நின்றனர். அருந்தவர் நாணினர். அண்மையில் இருந்தது மருதமரம். அதையும் பார்த்தார். அவர்களையும் நோக்கினார். அதற்கும் இவர்கட்கும் என்ன வேற்றுமை? இந்த நெடு மரம் போல் நில்லுங்கள் என்று கொடும் சாபம் கொடுத்தார். அவர்களும் அப்படியே ஆயினர். பல காலம் இதே நிலை உருண்டு காலச் சக்கரம் ஓடியது.


    என் தங்கை தேவகி அவளுக்கு பிள்ளைகள் எண்மர் பிறப்பராம் இறுதி மகனால் எனக்கு இறுதியாம் அசரீரியால் இதை அறிந்தேன். பார்க்கிறேன் என்று பதைத்து கருவி இருந்தான் கம்ச பாதகன். பிறந்த ஏழு பிள்ளைகளின் உயிரைப் பிரித்தான். எட்டாவது பிள்ளை பிறப்பது எப்போது என்று உருகிய வாளுடன் இருந்தான். அவன் அறியாதபடி தேவகி மகனாகத் தோன்றிய கண்ணன்,வசுதேவர் மூலம் ஆயர்பாடியை அடைந்தான். முறையே வளர்ந்தான்


    கோகுலத்தில் புனித கோபிகளின் குடிசைகள் தோறும் புகுந்தான். அவர் தம் பால், தயிர், வெண்ணெய்களை வாரிப் பருகினான். திருட்டுக் கண்ணன் செயலைக் கேள் என்று யாசோதையின் முன் வந்து இடைச்சியர் முறையிட்டனர். கண்ணனைச் சினந்த யசோதை கயிற்றால் வயிற்றில் கட்டினாள். பெரிய உரலோடு பிணைத்தாள். இருந்த உரலை கண்ணன் இழுத்தான். புழக்கடைக்குச் சென்றான். இங்கிருந்த இரு மருத மரங்களுக்கிடையில் புகுந்தான். இம்மரங்கட்கும் குறுகா நின்று
    இழுத்தமையால் மரங்கள் இரண்டும் முறிந்து விழுந்தன. குபேர மக்கள் பெற்றிருந்த தொல்லை சாபம் தொலைந்தது. இவ்வரலாறு மருதொடு எனும் பகுதியில் வெளியாகின்றது


    கண்ணன் இளம் பிள்ளை விளையாட்டுக்கள் எண்ணிறந்தன. கம்சன் கண்ண்னைக் கொல்லச் செய்த சதிகளும் அளவிலாதன. கண்ணன் பலராமனோடு கம்ச சதிக்கு சென்றான். அசுர ஆட்சியே ஆக்கம் என்று அதற்றினான் கம்சன். தெய்வ ஆட்சியே தேவை உன் ஆட்சி ஒழியட்டும் என்றான் கண்ணன். வாதம் வளர்ந்தது. மோதல் பிறந்தது. கம்சன் ஒழிந்தான். அவனுடன் அசுரப்பூண்டு அழிந்தது, ஹரி ஹரி என்று அகில உலகும் கண்ணனை ஆராதித்தது. கண்ணனாக அவதரித்த மாதவன் திருவுளம் மலர்ந்தது அவ்வரலாற்றை கஞ்சன் உயிர் பலி கொண்டு எனும் பகுதியில் அறிகிறோம்


    சாபம் தவிர்த்து பாவரூபனைப் பலிகொண்ட மாமானார் போல்
    சன்முனிவர் சாபம் அகற்றி பாதக அவுணர்களை பலி கொண்டான் மருகன். அந்த அருமையை எண்ணி மகிழ் அரி விண்டு மருகோனே என்று ஆர்வம் கொண்டு அழைத்தார்


    சாதுக்களை வதைப்பதில் சால மகிழ்பவர் அவுணர்கள் அவர்கள் ஆற்றல் அடங்க அகில உலகிலும் பவனி வருகிறது. ஆங்காரம் அடக்கும் ஓங்கார மயில் அக்குடிலைக்கே உரியோனை மயில் வீரா என்று மகிழ்ந்து கூறுகிறார்


    பாதித் திருமேனியில் பார்வதியார், அவர் சித்தானார் அவரோடு தர்ம விடை ஊர்ந்து வரும் அமலர் சத்தானார் இருவரில் இருந்து ஒருமை தோன்ற உதித்த இன்ப வடிவ இறைவனை கந்தா என்றார் அவனே அழகிய மணமுள இளம் பரிபூரண ஓம் பொருளோன் என்பார்.. முருகோனே என்று வீரிட்டு விளித்தார்


    திருப்பந்தணை நல்லூர் என்பது ஒரு தெய்வத் திருப்பதி. அங்கு இச்சை கிரியை எனும் இரு சித்திலும் சத்தாய்ச் சார்ந்து நலம் தருவானை, இரு மங்கை அமளி நலங்கொள் என்றார் இத்தனையும் செய்யும் எங்கும் நிறை பெரிய பொருளை பெருமாளே என்று பேரிட்டு அழைத்தார்.


    வினை மூன்று வகை. வந்த வினை, வருகின்ற வினை, வரும் வினை என அவை முத்திறம். பெறும்வந்த வினை சஞ்சிதம். வருகின்ற வினை ப்ராரார்த்தம். வரும் வினை ஆகாமியம். சஞ்சிதம் அனுபவித்த மிச்சம். ப்ராராத்தம் இப்பிறப்பில் அனுபவிப்பது. ஆகாமியம் மனம் வாக்கு உடலால் எடுத்த பிறப்பில் செய்வது


    சஞ்சித வினை அருள் நோக்கில் சாம்பலாகும் இடையறாத
    பிராத்தனையால் புனித குகன் உள்ளம் புகுந்தான். உடலிடம் கொண்டான்.. அதனால் பிராரத்தம் மோதல் தோன்றாது. தோன்றும் எனினும் அதன் பாதிப்பு தோன்றாது. திண்ணம். நின்னை மனம் நினைக்க, வாக்கு உன்னை வழுத்த,ஆக்கை வழிபாட்டை ஆவலிக்க ஆகாமியம் அணுகவே அணுகாது. நாம் வலிந்து முயன்றாலும், வேண்டா எனைத் தொட வேண்டா என்று கெஞ்சி கொஞ்சி அவை தூரம் போம் இருள் இருவகை ஒன்று புற இருள் மற்றொன்று அக இருள் புற இருள் தன்னை காட்டும் தலைவனைக் காட்டாது அக இருள் தன்னையும் காட்டாது தலைவனையும் காட்டாது. அக இருள், பிறவி நோய் நேர பெருகும். இந்த ஆணவ நோய் என் மட்டில் தூங்கிவிடும். மாயாமலமும் மாய்ந்து படும் இப்பேறு எளியேற்கு நேர வழிவகை அறிந்துள்ளேன். தங்கிய என்துயர் மங்கவும் பொலிவுறு நினது அருட்புகழ் பொங்கவும் ஓயாது உனது திருப்புகழே ஓதுவேன்.


    திருமுக சந்திர, முருக, கடம்ப, சிவசுதா, கந்தா, குக, வேலா, சிவ, சிவஎன்னும் ஒன்பது நாமங்களை ஓயாது உருவேற்றுவார் தெளிந்த மனத்தில் திருநடனம் செய்யும் உனது திருவடி என்பார். அரிய அத்திருவடி தரிசனம் அடியேற்கும் நேர பெருமானை வேண்டி பிரார்த்தித்தப்படி.



    விளக்கக் குறிப்புகள்
    இருவினை 1) சஞ்சித வினை ( அனுபவித்து போக எஞ்சி இருப்பது இது
    குருவின் திருநோக்கால் அழிந்து போம் 2) ஆகாமிய வினை (இனி உறும் பிறப்பில் வரும் புண்ணிய பாவங்கள் மேல் வரும் ஆகாமியமும் ஆகும்

    சஞ்சிதம் எல்லாம் ஞானத்தழல் சுட்டு வெண்ணீறாக்கும் கிஞ்சிலா
    காமியந்தான் கிட்டாமல் விட்டுப் போகும் விஞ்சின பிராரத்வத்தின்
    வினை அனுபவித்துத் தீரும் - கைவல்யநவநீதம்


    ஒப்புக:
    நெஞ்சு திகழ
    எத்தால் நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய்
    – சுந்தரர் தேவாரம்
    ஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினையாதொரு போதும் இருந்தறியேன் -திருநாவுக்கரசர் தேவாரம்
Working...
X