Announcement

Collapse
No announcement yet.

Akshaya Tritiya

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Akshaya Tritiya

    அக்ஷய திரிதியை விஷயம்'' -- J.K. SIVAN
    அக்ஷய த்ரிதியை வருஷா வருஷம் ஒரு தங்க வேட்டை ஆடும் நாள் ஆகிவிட்டது. இந்தவருஷம் கொளுத்தும் வெயிலிலும் சரவணாவிலும் மற்றும் தங்கநகைக் கடைகளிலும் எள் விழுந்தால் எண்ணையாக ஓடும் அளவு கும்பல் என்ன விலை விற்றாலும் தங்கம் வாங்கும். நகை வியாபாரிகள் தினமும் அக்ஷய த்ரிதியைதான் என்று ஏன் பஞ்சாங்கம் சொல்லவில்லை என்று கோபிக்கலாம்.
    அப்படி யாராவது சொன்னாலும் நாம் நம்புவோம்.


    குபேரன் இன்றைக்கு தான் எப்போதோ தான் இழந்த செல்வங்களை மீண்டும் பெற்றான் என்று புராணம் சொல்கிறது. தங்கம் வாங்குவதை விட தான தர்மங்கள் செய்யவேண்டிய நாள் இது. அக்ஷய திரிதியை அன்று சில விசேஷங்கள் நடந்திருக்கிறது.


    த்ரேதாயுகம் இன்று தான் துவங்கியதாம் . இன்றுதான் வேத வியாசர் தொண்டையை கனைத்துக்கொண்டு மஹாகணபதி தயாராக எழுத ஆயத்தமானவுடன் மஹாபாரதத்தை சொல்ல ஆரம்பித்த நாள். பரம ஏழையான குசேலனுக்கு துவாரகையில் பல வருஷங்கள் கழித்து கிருஷ்ணன் தரிசனம் தந்த நாள். குசேலன் அதனால் செல்வங்களை கேட்காமல் பெற்றான். ஆதி சங்கரர் இன்று தான் கனக தாரா ஸ்தோத்ரத்தை ஒரு வாடிய நெல்லிக்காயை பெற்றுக்கொண்டு பிரதியுபகாரமாக பாடி அந்த ஏழை பெண்மணியின் குடிசை தங்கக்காசுகள் பொன்மழையாக பொழிய நிரம்பிய நாள். இன்னும் தேடிப்பார்த்தால் நிறைய சிறப்புகள் இருக்கும் ஒரு அற்புத நாள் இது என்றாலும் சூரியன் திரௌபதிக்கு வற்றாத உணவளிக்கும் அக்ஷய பாத்திரம் கொடுத்த நாள் என்பது சூப்பர்.


    அப்படி இல்லை, திரௌபதி அக்ஷய பாத்திரத்தை தேய்த்து கவிழ்த்து வைத்துவிட்டதால் மறுநாள் தான் அதில் வற்றாத உணவு கிடைக்கும் என அறிந்து துரியோதனன் துர்வாசரையும் அவரது பதினாயிரம் சிஷ்ய கோடிகளும் பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று உணவருந்த வேண்டுகிறான். அவரும் திடும் என நேரம் கேட்ட நேரத்தில் அங்கே வந்து நிற்க, என்ன செய்வது அக்ஷய பாத்திரம் உணவு தராதே என்று திரௌபதி துடிக்க, கிருஷ்ணன் எனும் மாயாவி சமய சஞ்சீவியாக அங்கே அப்போது வருகிறான்.


    ''எனக்கு பசிக்கிறது உணவு கொடு'' என்ற கிருஷ்ணனை கண்டு திரௌபதி கதறுகிறாள்.


    ''கிருஷ்ணா ஏற்கனவே துர்வாசர் என்ற கோபக்கார முனிவரும் அவரது எண்ணற்ற சிஷ்யர்களும் இதோ ஸ்நானம் செய்ய போயிருக்கிறார்கள். எந்த நேரமும் பசியோடு சாப்பிட வருவார்கள். இங்கோ உணவில்லை என்ன செய்வது'' என்று தவித்துக் கொண்டிருக்கிறேன். நீ வேறு என்றுமில்லாமல் இன்று வந்து பசிக்கிறது என்கிறாயே . அக்ஷய பாத்திரத்தை கழுவி கவிழ்த்தாகி விட்டதே. இனி நாளை தானே சூரியன் அருளால் உணவு அதில் கிடைக்கும். கிருஷ்ணா நீயுமா இப்படி என்னை சோதிக்கிறாய். என்னை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்ற வேண்டும் '' என்கிறாள் திரௌபதி.


    ''இதோ பார் திரௌபதி நீ சொல்வது எதுவும் என் காதில் ஏறவில்லை. பசி என் காதடைக்கிறது. நீ போய் அந்த அக்ஷய பாத்திரத்தை கொண்டுவா. அதை கேட்போம். ஏதாவது வழி செய்கிறதா பார்ப்போம் '' என்கிறான் கிருஷ்ணன்.


    அக்ஷய பாத்திரத்தை திரௌபதி கொடுக்க அதை முன்னும் பின்னும் கவனித்த கிருஷ்ணன் கண்களில் ஒரு மூலையில் விளிம்பில் ஒரு கீரை துண்டு ஒட்டிக்கொண்டு இருப்பது தெரிகிறது. அவன் முகத்திலும் புன்னகை ததும்புகிறது.


    '' நல்லவேளை அக்ஷய பாத்திரத்தை நீ சரியாக கழுவ வில்லை என்பதும் ஒருவிதத்தில் நல்லதாக போய்விட்டது. இந்த சிறு கீரைத்தூண்டு ஒட்டிக்கொண்டிருக்கிறது பார், அதுவும் உணவு தான் அது போதும் எனக்கு என் பசியை ஆற்ற. நான் தான் ஒரு துளி ஜலம் , ஒரு சிறிய கனி, இலை இதை யாராவது கொடுத்தாலே திருப்தி அடைபவன் ஆயிற்றே''


    கிருஷ்ணன் அந்த சிறு கீரைத்துண்டை எடுத்து வாயில் போட்டு சிறிது நீர் அவள் கொடுக்க அதையும் பருகுகிறான். கிளம்புகிறான்.


    ''கிருஷ்ணா, என்ன இது? திடீரென வந்தாய். ஒரு கீரைத் துண்டை அக்ஷயபாத்திரத்தில் தேடி கண்டுபிடித்து சாப்பிட்டு விட்டு கிளம்புகிறாயே, அந்த கோபக்கார ரிஷிக்கும் அவர் சிஷ்யர்களுக்கும் நான் எவ்விதம் உணவளிப்பேன். ஏதாவது உபாயம் சொல்லாமல்போகிறேன் என்கிறாயே ''


    ''கிருஷ்ணா, ஆமாம் நீயும் கிருஷ்ணா என்ற பெயர் கொண்டவள் தானே திரௌபதி. அந்த ரிஷி சாப்பிட்டால் என்ன சாப்பிடாவிட்டால் எனக்கென்ன என் பசி ஒருவாறு தீர்ந்தது நான் செல்கிறேன். நீ உன் கணவன்மார்களை கேட்டு ஏதாவது வழி செய்துகொள்'' என சிரித்துக்கொண்டே கிருஷ்ணன் சொல்ல


    ''அலகிலா விளையாட்டுடைய கிருஷ்ணா இது தானா உன் பதில் '' என்கிறாள் திரௌபதி.


    ரிஷியும் அவர் சிஷ்யர்களும் ஸ்நானம் செய்யும்போது வயிறு நிரம்பிவிட, சொல்லிக்கொள்ளாமலேயே அந்த காட்டை விட்டு மறுநாள் வரை உணவு உண்ணமுடியாமல் சென்றுவிட்டார்கள் என்று அப்புறம் தான் தெரிகிறது அவளுக்கு.


    இது நடந்தது அக்ஷய த்ரிதியை நாள் அன்று என்றும் அறிகிறோம். அப்படியா என்று அதிசயித்து நாம் மூக்கின்மேல் விரலை வைக்கிறோம். இதை யாராவது படித்து விட்டு இன்று மூக்கின் மேல் விரல் வைக்கும் நாள் என்று கிளப்பி விட்டால் அதற்கு நான் பொறுப்பு இல்லை.


    அக்ஷய திரிதியை என்னை பொறுத்தவரை கிருஷ்ணனை வழிபடும் நாள். உலகை காக்கும் கடவுள் நம்மை நிச்சயம் காப்பான். நாம் மற்றவர்களுக்கு முடிந்தவரை இன்று என்ன தானம் தர்மம் செய்ய முடியுமோ அதை ''சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பண மஸ்து '' என்று மன நிறைவோடு இன்று செய்வோம். பசுக்களுக்கு பக்ஷிகளுக்கு மற்ற ஜீவன்களுக்கு கொளுத்தும் இந்த சம்மர்வெயில் காலத்தில் ஏதாவது உண்ண உணவளிப்போம், நீர் பருக உதவுவோம். அக்ஷய என்றாலே அமோகமாக பெருகும், குறைவில்லாத ஒன்று என்பதால் இந்த நல்ல காரியம் மற்ற நாளிலும் தொடரட்டும்.
Working...
X