Announcement

Collapse
No announcement yet.

Sur das & Tulasi das - Spiritual story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Sur das & Tulasi das - Spiritual story

    துளசிதாசர்: J.K. SIVAN
    ஐயோ மத யானை வருகிறதே....!
    சில கதைகள் படிக்கும்போது அதில் வரும் பாத்திரங்கள் நடந்து கொள்ளும் விதம் நமது மனதில் பதிந்து விடுகிறது. அதே கதையை வேறு ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் இன்னொருவருடைய அனுபவமாக படிக்கும் போதோ, கேட்கும்போதோ, அடடே எது சரியானது என்று கேள்விக்குறி மண்டையில் நுழைகிறது. ரெண்டு பேர் எங்கெங்கோ ஒரே மாதிரி அனுபவத்தை கொஞ்சமும் மாறாமல் பெற முடியாதே.
    பெண்ணின்பமே பேரின்பம் என வாழ்ந்து கொண்டிருந்தார் ஒருவர். ஒருநாள் இரவு வேளை...
    மனைவியின் நினைவுடன் வீட்டுக்குச் செல்லும் போது பெருமழை பிடித்துக் கொண்டது. அதைப் பொருட்படுத்தாமல் வீடு நோக்கி நடந்தார். மனம் முழுவதும் அவளது நினைப்பு! வீட்டுக்குப் போக வேண்டுமானால், இடையிலுள்ள நதியை கடக்க வேண்டும். ஆற்றில் வெள்ளம் வந்ததால், ஓடக்காரன் வீட்டுக்கு போய் விட்டான். இவருக்கோ, எப்படியும் ஆற்றைக் கடந்து வீடு போய் சேர மனம் துடித்தது. ஆற்றில் பாய்ந்தார். ஏதோ ஒன்று கையில் சிக்கியது. கட்டையாக இருக்க வேண்டும்! அதைப் பற்றிக் கொண்டு கரை சேர்ந்து விட்டார். வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. விளக்கை அணைத்து விட்டு மனைவி உறங்கி விட்டாள் போலும்! மழையின் சப்தத்தில், அவர் கதவைத் தட்டிய ஒலி அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே மாடிக்கு ஏறுவதற்காக, மாடியில் இருந்து தொங்கிய கயிறைப் பிடித்து ஏறினார்.
    ஒரு வழியாக மனைவி தூங்கும் அறைக்குள் நுழைந்தார்.
    திடுக்கிட்டு எழுந்த மனைவி, கணவன் அங்கே நிற்பது கண்டு, ""நீங்களா! இந்தக் கடும் மழையில் ஆற்றைக் கடந்து எப்படி வந்தீர்கள்? வீடு வேறு பூட்டியிருந்ததே!'' என்றாள்.
    நடந்ததைச் சொன்ன கணவர், அவளது ஸ்பரிசத்திற்காக கடலையும் கடப்பேன் என்று மோக வெறியில் ஆசைமொழி பேசினார்.
    மறுநாள் விடிந்தது. அவள் மாடிப்படியில் தொங்கிய கயிறைப் பார்த்தாள், அது கயிறல்ல, பாம்பு என்பது தெரியவந்தது. அவரை அழைத்து வந்து காட்டினாள். ஆற்றுக்கு நீராட இருவரும் சென்றார்கள். கரையில் அவர் பிடித்து வந்த கட்டை கிடந்தது. அருகே சென்று பார்த்தபோது, அது கட்டை இல்லை, ஆற்றில் அடித்து வரப்பட்ட பிணம் என்று தெரிந்தது.
    ''பார்த்தீரா! அழியும் என் உடல் மீது கொண்ட ஆசையில் என்னவெல்லாம் செய்திருக்கிறீர் என்று! இந்த உடல் தரும் சுகம் தற்காலிக மானது தான் இதன்மீது பற்றுக் கொண்டிருப்
    பதை விட, ராமநாமத்தின் மீது பற்றுக் கொண்டால், என்றும் நிரந்தர சுகம் தரும் வைகுண்டமே கிடைக்கும்! பிணத்தையும், பாம்பையும் கட்டிக் கொண்டு சுகம் பெற வந்த உம் நிலையை நீரே ஆராய்ந்து பாரும்!'' என்றாள். அவருக்குள் ஏதோ பொறி தட்டியது.
    சே என்ன காரியம் செய்தேன். ஒரு பெண்ணுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டுமா! அவள் சொன்னது சரிதான்.
    மனைவியென்றும் பாராமல் அவள் காலில் விழுந்தார்.
    "நீயே என் குரு' என்றார். உடனேயே எழுதுகோலை எடுத்தார். ராமாயணத்தை இந்தியில் மொழி பெயர்த்தார். "ஸ்ரீராமசரித மானஸ்' என்று பெயர் சூட்டினார். அவர் தான் துளசி தாசர் என்று இப்போது அறிகிறேன். ஆனால் இதே கதை ஈ அடிச்சான் காப்பியாக படித்திருக்கிறேன். பில்வ மங்கள் என்ற ஹரிதாஸ் ... அங்கே மனைவிக்கு பதிலாக ஒரு நாட்டிய மாது. பொதுமகள் ..
    ம்ம் ... துளசிதாசர் என்றே எடுத்துக்கொண்டு மேலே தொடர்வோம். துளசிதாசர் எழுதிய அந்த நூல் தான் "துளசி ராமாயணம்' என உலகம் இப்போது பாராயணம் செயகிறது.
    இப்போது நமக்கு ஏற்கனவே அறிமுகமான இன்னொரு மஹானை பற்றி சொல்லியாகவேண்டும். அவர் பெயர் நீங்கள் அறிந்த சூர்தாஸ். பிறவியிலே கண்பார்வை அற்றவர். கண்ணற்ற குழந்தையை குடும்பம் ஒதுக்கி வைத்தது.
    ஒருநாள் யாரோ தெருவில் கிருஷ்ண பஜனை பாடிச் சென்றது சிறுவன் சூர்தாஸ் மனதுக்கு பிடித்தது.
    எவரையோ உரக்க ''நீங்கள் பாடியது பிடிக்கிறதே. யாரை பற்றி இந்த பாட்டு ?''
    ''அடே பையா, இது கிருஷ்ண பகவானை பற்றிய பஜனை?''
    ''யார் கிருஷ்ணன், அவனை பற்றி சொல்லுங்களேன்?''
    கிருஷ்ண சரித்திரம் சுருக்கமாக சொல்லக் கேட்டு மனம் பரவசமாகிறது. கிருஷ்ணன் எப்படி இருப்பான் என்று கேட்டு அறிகிறார்?
    ''அவன் பால கிருஷ்ணன், குழந்தை, புல்லாங்குழல், பசுக்கள், பிருந்தாவனம், கோப கோபியர்கள், வெண்ணை திருடன், நீல வர்ணன், பீதாம்பர வஸ்திரம், யமுனை நதி விளையாட்டு, மயில்தோகை அணிந்தவன், என்றும் புன்னகை தவழும் முகம், அவன் இசையால் புவியே மயங்கும்''' என்று அவனை வர்ணிக்கிறார் பாகவதர். போய்விட்டார்.
    அன்றுமுதல் சூர்தாசர்மனதில் கண்ணன் உறைந்தான். பாடல்களாகினான். எண்ணற்ற பக்தர்கள் கேட்டு மயங்கினார்கள்
    ஆற்றங்கரையில் கண்ணனை தன மனதில் நினைத்து பாடினார். பக்தர்கள் அவர் பசியாற உணவு அளிக்க ஆயிரக்கணக்கான பாடல்களாக சூர் சாகரமாக கிருஷ்ணன் மாறினான்.
    இனி ஒரு சுவாரசியமான கதை சொல்லி முடிக்கிறேன்.
    சூர் சாகரம் என்று அடிக்கடி கண்ணில்லாத சூரதாஸர் கிருஷ்ணன் சரித்திரம் சொல்வதை கிருஷ்ணனே சிறு குழந்தையாக அவர் எதிரே அமர்ந்து கேட்கும் படத்தோடு எழுதுகிறேன். நீங்களும் ஆர்வத்தோடு படிக்கிறீர்கள். அந்த சூரதாஸர் துளசி தாசர் காலத்தை சேர்ந்தவர் தான். நண்பர்கள்.எப்படி பழக்கமாயிற்று என்பது தான் இன்றைய விஷயம்.
    ஒருநாள் துளசி தாசர் எங்கோ செல்லும்போது வழியில் ஆற்றங்கரையில் சூர் தாசர் வழக்கமாக ஒரு மூலையில் அமர்ந்து கிருஷ்ணன் பாடல்களை இயற்றி மனதில் சந்தோஷமாக ரசித்து பாடிக்கொண்டிருப்பார் அங்கே வரும்போது சூரதாஸர் பாடல் அவரை ஈர்க்கிறது. அருகே செல்கிறார். அமைதியாக கேட்டு தன்னை மறக்கிறார். பிரிந்தா வனத்துக்கே அவரை அழைத்துச் செல்கிறார் சூரதாஸர். பாட்டு முடியும் வரை சிலையாக நின்று கண்களை மூடி ரசித்த துளசிதாசர் சூர்தாசரை வணங்கி தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.


    ''ஓ நீங்கள் துளசிதாசரா. உங்களை பற்றி சொல்வார்கள். அற்புதமான ராம பக்தர். உங்களை தரிசிக்கும் பாக்யம் எனக்கு இல்லை. தொட்டு பார்த்து வணங்குகிறேன்''--- சூர் தாஸ்.


    ''மஹானுபாவா , இனி தொடர்ந்து உங்களோடு நட்பு கொண்டு நான் உங்களோடு இருப்பேன்'' என்கிறார் துளசிதாசர்.


    ''ஆஹா கிருஷ்ணன் மேல் கீர்த்தனைகள் நிறைய சேர்ந்தே பாடுவோம் '' என்கிறார் உற்சாகமாக சூர் தாஸ் .


    ஒரு நாள் ராஜாவின் பட்டத்து யானைக்கு மதம் பிடித்து தெருவில் ஓடிவருகிறது. கோவில் அருகே சூரதாஸ் துளசிதாஸ் இருவரும் நிற்கிறார்கள். '


    ''ஓடுங்கள் ஓடுங்கள் யானை வருகிறது. எதிரே யார் இருந்தாலும் கொன்றுவிடும்'' மக்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.


    ''யானை என்பது பெரிய மிருகமாமே, எப்படி இருக்கும் என எனக்கு தெரியாதே என்கிறார் சூர்தாஸ் '


    ''சூரதாஸ் நாம் இருவரும் கவலைப்பட
    வேண்டாம். நம்முள் கிருஷ்ணன் இருக்கிறான் அவன் பார்த்துக்கொள்வான். ஒரு ஓரமாக நிற்போம்''


    கிருஷ்ணனை தியானித்து கண்மூடி துளசிதாசர் சிலையாக அமர்ந்திருக்க யானை அருகே வந்துவிட்டது. பார்த்தது. ஒருகணம் நின்றது. மெதுவாக அவர் எதிரில் நின்றது தும்பிக்கையால் அவரை வணங்கியது அமைதியாக அவரை சுற்றி வந்து திரும்பியது. எல்லோரும் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்த போது தான் துளசிதாசர் மெதுவாக தியானத்திலிருந்து கண் விழித்தார்.


    துளசிதாசருக்கு அப்போது தான் சூர்தாஸ் பற்றி நினைப்பு வந்தது. ''எங்கே சூர்தாஸ் ? காணோமே.'' சற்று தூரத்தில் மரத்தின் பின்னே இரு கைகளாலும் நெஞ்சை மறைத்துக்கொண்டு நடுங்கியபடி சூர்தாஸ் நிற்பது தெரிந்து அவரை அழைத்துக் கொண்டு வருகிறார். கண் தெரியாத அவருக்கு எல்லோரும் விஷயம் சொல்கிறார்கள்.


    ''சூர்தாசர் எனக்கு ஒரு சந்தேகம் உங்களை நேரடியாக கேட்டுவிடுகிறேன்?'' ஏன் எல்லாரையும் போல் நீங்களும் யானையை கண்டு பயப்பட்டு நடுங்கினீர்கள்?'' நான் தான் நம்முள் கிருஷ்ணன் இருக்கிறான் பார்த்துக் கொள்வான் என்றேனே ''


    ''துளசிதாசரே நீங்கள் ஒரு உன்னத கிருஷ்ண பக்தர் என அறிவேன். உங்கள் மனதில் இருக்கும் கிருஷ்ணன் நீங்கள் கண்ணை மூடி தியானத்தில் இருக்கும்போது வந்த அந்த பொல்லாத கோபமான யானையை கிருஷ்ணன் விரட்டி விடுவான் என்று தைரியமாக இருந்தீர்கள்.


    ஆனால் என் மனதில் இருக்கும் கிருஷ்ணன் ஒரு குட்டிப்பயல். இதுவரை எனது மனதில் அவனை குழந்தையாகவே நான் அறிவேன். அவனது சிரித்த விளையாட்டு முகம் ஒன்றே நான் அறிந்தது. பல பாடல்கள் அப்படியே அவனைப் பற்றி பாடியுள்ளேன். நீங்கள் சொன்னது போல் யானை மிக பெரிய மிருகம், அதற்கு மதம் என்று ஏதோ சொன்னீர்களே அது பிடித்தால் ரொம்ப ஆத்திரமடைந்து எல்லோரையும் தாக்கி கொன்றுவிடும் என்று சொன்னீர்களே..


    ஒருவேளை என் மனதில் உள்ள குழந்தை கிருஷ்ணன் அந்த பெரிய யானையை பார்த்து பயந்து அழுதுவிட்டால்?? நான் எப்படி அவனுக்கு ஆறுதல் சொல்லமுடியும்? எனக்கு சிரிக்கும் கிருஷ்ணன் தான் பிடிக்கும். அழுபவர்களை கண்டாலே பிடிக்காது. ஆகவே என் இரு கைகளாலும் என் நெஞ்சை மூடி மறைத்து கொண்டேன். என் நெஞ்சின் உள்ளே இருக்கும் அவனுக்கு யானை கண்ணில் படாது அல்லவா, பயம் தோன்றாது அல்லவா, அழுகை வராது அல்லவா? '' என்கிறார் சூர்தாஸ்


    இதை கேட்டதும் உங்களுக்கு எப்படி இருக்கிறது?


    அப்புறம் துளசிதாசர் கண்களில் ஆனந்த கண்ணீர் வந்ததை , அவர் சூர்தாசரின் கிருஷ்ண பக்தியை உணர்ந்ததை, சிலையாக நின்று ரசித்து அவர் பாதங்களில் விழுந்ததை பற்றி நினைப்போம்.
Working...
X