Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    280. தவர்வாட்
    280திருவோத்தூர்
    (காஞ்சிக்கு அருகே உள்ளது. தற்சமயம் செய்யார், திருவந்திபுரம் என அழைக்கப்படுகிது.)
    வேல், ம்யில், சேவல், வள்ளி தேவசேனை, இறைவன் இவர்கள் யாவரும் இப்பாடலில் கூறப்பட்டிருக்கிறார்கள்
    தனனாத் தானன தானந் தனனாத் தானன தானந்
    தனனாத் தானன தானந் தனதான


    தவர்வாட் டோமர சூலந் தரியாக் காதிய சூருந்
    தணியாச் சாகர மேழுங் கிரியேழுந்
    சருகாக் காய்கதிர் வேலும் பொருகாற் சேவலு நீலந்
    தரிகூத் தாடிய மாவுந் தினைகாவல்
    துவர்வாய்க் கானவர் மானுஞ் சுரநாட் டாளொரு தேனுஞ்
    துணையாத் தாழ்வற வாழும் பெரியோனே
    துணையாய்க் காவல்செய் வாயென் றுணராப் பாவிகள் பாலுந்
    தொலையாப் பாடலை யானும் புகல்வேனோ
    பவமாய்த் தாணது வாகும் பனைகாய்த் தேமண நாறும்
    பழமாய்ப் பார்மிசை வீழும் படிவேதம்
    படியாப் பாதகர் பாயன் றியுடாப் பேதைகள் கேசம்
    பறிகோப் பாளிகள் யாருங் கழுவேறச்
    சிவமாய்த் தேனமு தூறுந் திருவாக் காலொளி சேர்வெண்
    டிருநீற் றாலம ராடுஞ் றியோனே
    செழுநீர்ச் சேய்நதி யாரங் கொழியாக் கோமளம் வீசுந்
    திருவோத் தூர்தனில் மேவும் பெருமாளே.



    பதம் பிரித்து உரை

    தவர் வாள் தோமர(ம்) சூலம் தரியா காதிய சூரும்
    தணியா சாகரம் ஏழும் கரி ஏழும்
    தவர் = வில். வாள் = வாள். தோமரம் = தண்டாயுதம். சூலம் = சூலம். தரியா = (இவைகளைத்) தரித்து. காதிய = கொலைகளைச் செய்த. சூரும் = சூரனும். தணியா = வற்றாத. சாகரம் ஏழும் = ஏழு கடல்களும். கிரி ஏழும் = ஏழு மலைகளும்.
    சருகா காய் கதிர் வேலும் பொரு கால் சேவலு(ம்) நீல(ம்)
    தரி கூத்தாடிய மாவும் தினை காவல்
    சருகா(க) = சருகைப் போல. காய் = உலர்ந்து போகும்படி எரித்து அழித்த. கதிர் வேலும் = ஒளி வேலும். பொரு = சண்டை செய்கின்ற. கால் சேவலும் = காலை உடைய கோழியும். நீலம் தரி = நீல நிறம் கொண்டு. கூத்தாடிய = நடனம் செய்ய வல்ல. மாவும் = மயிலாகிய குதிரையும். தினை காவல் = தினைப் புனம் காத்து வந்த.


    துவர் வாய் கானவர் மானும் சுர நாட்டாள் ஒரு தேனும்
    துணையா தாழ்வு அற வாழும் பெரியோனே


    துவர் வாய் = பவளம் போன்ற வாயைக் கொண்ட. கானவர் மானும் = வேடுவர்களுடைய மான் போன்ற வள்ளியையும். சுர நாட்டாள் ஒரு தேனும் = விண்ணுலக மங்கையாகிய தேன் போன்ற தேவசேனையையும். துணையா = துணையாகக் கொண்டு. தாழ்வு அற வாழும் = ஒரு குறையும் இன்றி வாழும். பெரியோனே = பெரியோனே.


    துணையாய் காவல் செய்வாய் என்று உணரா பாவிகள் பாலும்
    தொலையா பாடலை யானும் புகல்வேனோ


    துணையாய் காவல் செய்வாய் = (நீ) துணையாகக் காவல் செய்து காப்பாற்றுவாய். என உணராப் பாவிகள் பாலும் = என்று உணராத பாவிகளிடமும் போய். தொலையாப் பாடலை = அழிவில்லாத அருமைப் பாடல்களை. யானும் புகல்வேனோ = நானும் சொல்லித் திரிவேனோ?


    பவ(ம்) மாய்த்து ஆண் அதுவாகும் பனை காய்த்தே மண(ம்) நாறும்
    பழமாய் பார் மிசை வீழும்படி வேதம்


    பவம் = பிறப்பை. மாய்த்து = ஒழித்து. ஆண் அது வாகும் பனை = ஆணாய் இருந்த பனை. காய்த்தே மணம் நாறும் = காய்த்து நறு மணம் வீசும். பழமாய் = பழங்களாகி. பார் மிசை வீழும்படி = பூமியில் விழும்படி. வேதம் = வேதத்தை. (தேவார வேதத்தை)


    படியா பாதகர் பாய் அன்றி உடா(த) பேதைகள் கேசம்
    பறி கோப்பாளிகள் யாரும் கழு ஏற


    படியாத = படிக்காத. பாதகர் = பாதகர்கள். பாய் அன்றி = பாயைத் தவிர வேறு ஒன்றையும். உடாத = உடுக்காத. பேதைகள் = பேதைகள். கேசம் பறி = தலை மயிரை நீக்கிய. கோப்பாளிகள் = கூத்தாடிச் சமர்த்தர்கள். யாரும் = அனைவரும். கழு ஏற = கழுவில் ஏறும்படி.


    சிவமாய் தேன் அமுது ஊறும் திருவாக்கால் ஒளி சேர் வெண்
    திரு நீற்றால் அமராடும் சிறியோனே


    சிவமாய் = சிவ மயமானதும். தேன் அமுது ஊறும் = தேனும் அமுதும் ஊறிய. திரு வாக்கால் = (சம்பந்தராக வந்த உனது) பாடல்களாலும். ஒளி சேர் = பெருமை வாய்ந்த. திருநீற்றாலும் = திரு நீற்றாலும். அமர் ஆடும் சிறியோனே = வாதப் போர் செய்த இளையவனே.


    செழு நீர் சேய் நதி ஆரம் கொழியா கோமளம் வீசும்
    திருவோத்தூர் தனில் மேவும் பெருமாளே.


    செழு நீர் = செழுமை வாய்ந்த நீரைக் கொண்ட. சேய் நதி = சேயாறு. ஆரம் கொழியா = முத்துக்களைச் கொழித்து. கோமளம் வீசும் = அழகு வீசும். திருவோத்தூர் தனில் மேவும் பெருமாளே = திருவோத்தூரில் வீfற்றிருக்கும் பெருமாளே.

    சுருக்க உரை



    விளக்கக் குறிப்புகள்
    1 பொருகால் சேவல்....
    சேவல் காலைக் கொண்டு சண்டை செய்யும் (காலாயுதம், பதாயுதம்).
    2. ஆண் அதுவாகும் பனை காய்த்து....
    குரும்பை ஆண்பனை ஈன் குலை ஓத்தூர்
    அரும்பு கொன்றை அடிகளை
    பெரும் புகலியுள் ஞானசம்பந்தன் சொல்
    விரும்புவார் வினை வீடே... சம்பந்தர் தேவாரம்.


    3. வேதம் படியாப் பாதகர்...
    வேதவேள்வியை நிந்தனை செய்து உழல்
    ஆதம் இ(ல்)லி அமணொடு தேரரை
    வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே... சம்பந்தர் தேவாரம்.
    4. வெண் திரு நீற்றால் அமராடும்....
    ஆலவாய் அண்ணல் நீறே
    மன்னும் மந்திரமும் ஆகி
    மருந்தும் ஆய்த் தீர்ப்பது என்று
    பன்னிய மறைகள் ஏத்திப்
    பகர் திருப்பதிகம் பாடி... திருத்தொண்டர் புராணம்

    சம்பந்தர் வரலாற்றை முந்திய திருப்புகழ் பாக்களில் பார்க்கலாம்
Working...
X