Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    303.குருதிகிருமிகள்
    303வயலூர்
    தனன தனதன தனதன தனதன
    தனன தனதன தனதன தனதன
    தனன தனதன தனதன தனதன தனதான
    குருதி கிருமிகள் சலமல மயிர்தசை
    மருவு முருவமு மலமல மழகொடு
    குலவு பலபணி பரிமள மறுசுவை மடைபாயல்
    குளிரி லறையக மிவைகளு மலமல
    மனைவி மகவனை யநுசர்கள் முறைமுறை
    குனகு கிளைஞர்க ளிவர்களு மலமல மொருநாலு
    சுருதி வழிமொழி சிவகலை யலதினி
    யுலக கலைகளு மலமல மிலகிய
    தொலைவி லுனைநினை பவருற வலதினி யயலார்பால்
    சுழல்வ தினிதென வசமுடன் வழிபடு
    முறவு மலமல மருளலை கடல்கழி
    துறைசெ லறிவினை யெனதுள மகிழ்வுற அருள்வாயே
    விருது முரசுகள் மொகுமொகு மொகுவென
    முகுற ககபதி முகில்திகழ் முகடதில்
    விகட இறகுகள் பறையிட அலகைகள் நடமாட
    விபுத ரரகர சிவசிவ சரணென
    விரவு கதிர்முதி ரிமகரன் வலம்வர
    வினைகொள் நிசிசரர் பொடிபட அடல்செயும் வடிவேலா
    மருது நெறுநெறு நெறுவென முறிபட
    வுருளு முரலொடு தவழரி மருகசெ
    வனச மலர்சுனை புலிநுழை முழையுடை யவிராலி
    மலையி லுறைகிற அறுமுக குருபர
    கயலு மயிலையு மகரமு முகள்செநெல்
    வயலி நகரியி லிறையவ அருள்தரு பெருமாளே



    பதம் பிரித்து உரை

    குருதி கிருமிகள் சல(ம்) மல(ம்) மயிர் தசை
    மருவும் உருவமும் அலம் அலம் அழகொடு
    குலவு பல பணி பரிமளம் அறு சுவை மடை பாயல்


    குருதி - இரத்தம் கிருமிகள் - புழுக்கள் சலம் மலம் மயிர், தசை - நீர், மலம், மயிர், மாமிசம் ஆகிய இவை மருவும் -பொருந்திய உருவமும் - உருவை உடைய (இந்த உடல் எடுத்தது) அலம் அலம் - போதும் போதும் அழகொடு குலவு -அழகோடு விளங்கும் பல பணி - பல விதமான அணி கலன்களும் பரிமளம் - நறு மணமுள்ள வாசனைப் பொருள்களும் அறு சுவை மடை - ஆறு சுவைகள் கூடியசோறு பாயல் - படுக்கை




    குளிர் இல் அறை அகம் இவைகளும் அலம் அலம்
    மனைவி மகவு அ(ன்)னை அநுசர்கள் முறை முறை
    குனகு கிளைஞர்கள் இவர்களும் அலம் அலம் ஒரு நாலு


    குளிர் இல் அறை - குளிர் இல்லாத அடக்கமான அறைகள் கொண்ட அகம் - வீடு இவைகளும் - இவைகளும் அலம் அலம்- போதும் போதும் மனைவி மகவு அ(ன்)னை - மனைவி ,குழந்தைகள், தாயார் அநுசர்கள் - கூடப் பிறந்தவர்கள் முறை முறை - உறவு முறை கூறி குனகு - கொஞ்சிக் குலவும்கிளைஞர்கள் - சுற்றத்தினர் இவர்களும் அலம் அலம் -இவர்களும் போதும் போதும் ஒரு நாலு - ஒரு நான்கு




    சுருதி வழி மொழி சிவ கலை அலது இனி
    உலக கலைகளும் அலம் அலம் இலகிய
    தொலைவு இல் உனை நினைபவர் உறவு அலது இனி அயலார் பால்


    சுருதி வழி - வேதங்களின் வழியை மொழி - எடுத்துக் கூறும்சிவ கலை அ(ல்)லது - சைவ சித்தாந்த நூல்கள் தவிர இனி உலக கலைகளும் - வேறு உலக சம்பந்தமான நூல்களைஅலம் அலம் - (ஓதுவதும்) போதும் போதும் இலகிய -விளங்கி நிற்பவனும் தொலைவு இல் உனை நினைபவர் -அழிவில்லாத வனுமாகிய உன்னை நினைப்பவர்களுடையஉறவு அலது - நட்பைத் தவிர இனி அயலார் பால் - இனி பிறரிடத்தே




    சுழல்வது இனிது என வசமுடன் வழிபடும்
    உறவு அலம் அலம் அருள் அலை கடல் கழி
    துறை செல் அறிவினை எனது உளம் மகிழ்வுற அருள்வாயே


    சுழல்வது - திரிவது இனிது என - நல்லது என்று வசமுடன் -அவர்கள் வசப்பட்டு வழிபடும் - அவர்களைப் பின்பற்றி வழிபடுகின்ற உறவு அலம் அலம் - நட்பும் போதும் போதும்அருள் அலை - (உனது) திருவருள் அலை வீசும் கடல் கழி துறை - கடலின் கால்களின் துறை வழியில் செல் அறிவினை- செல்லும் அறிவை எனது உள் மகிழ்வுற - என் மனம் மகிழும் பொருட்டு அருள்வாயே - அருள்வாயாக




    விருது முரசுகள் மொகு மொகு மொகு என
    முகுற கக பதி முகில் திகழ் முகடு அதில்
    விகட இறகுகள் பறை இட அலகைகள் நடமாட


    விருது முரசுகள் - வெற்றிச் சின்னமான பறைகள் மொகு மொகு மொகு என முகுற (குமுற) - மொகு மொகு என்று பேரொலி செய்ய ககபதி - கருடன் முகில் திகழ் - மேகம் விளங்கும் முகடு அதில் விகட - ஆகாயத்தில் அகன்ற (தனது)இறகுகள் பறையிட - இறகுகளைக் கொண்டு வட்டமிடஅலகைகள் நடமாட - பேய்கள் நடமாட




    விபுதர் அரகர சிவ சிவ சரண் என
    விரவு கதிர் முதிர் இம கரன் வலம் வர
    வினை கொள் நிசிசரர் பொடிபட அடல் செயும் வடிவேலா


    விபுதர் - தேவர்கள் அரகர சிவ சிவ சரண் என - அரகர சிவசிவ சிவசிவ உன் அடைக்கலம் என்று ஒலி செய்ய விரவு கதிர் - பொருந்திய சூரியனும் முதிர் இமகரன் - நிறைந்த கிரணங்களை உடைய சந்திரனும் வலம் வர - வலம் வரவினைகொள் - தீச்செயலைக் கொண்ட நிசிசரர் - அசுரர்கள்பொடிபட - பொடிபட்டு அழிய அடல் செயும் - போர் செய்தவடிவேலா - அழகிய வேலனே




    மருது நெறு நெறு நெறு என முறிபட
    உருளும் உரலொடு தவழ் அரி மருக செவ்
    வனசம் மலர் சுனை புலி நுழை முழை உடைய விராலி


    மருது - மருத மரம் நெறு நெறு நெறு என முறி பட - நெறு நெறு என்று முறிபடும்படி உருளும் உரலொடு - உருண்டு சென்று உரலுடனே தவழ் - தவழ்ந்து சென்ற அரி மருக -திருமாலின் மருகனே வனசம் மலர் - செந்தாமரை மலர்கின்றசுனை - சுனையும் புலி நுழை - புலி நுழையும் முழை உடைய -குகையும் கொண்ட விராலி மலையில் - விராலி மலையில்




    மலையில் உறைகிற அறு முக குருபர
    கயலும் மயிலையும் மகரமும் உகள் செ(ந்)நெல்
    வயலி நகரியில் இறையவ அருள் தரு பெருமாளே


    உறைகிற - வீற்றிருக்கும் அறுமுக - ஆறுமுகனே குருபர -குருபரனே கயலும் - கயல் மீன்களும் மயிலையும் - மயிலை என்னும் மீன்களும் மகரமும் - சுறா மீன்களும் உகள் - தாவித் திரியும் நெ(ந்) நெல் வயல் - செந்நெல் வயல்களைக் கொண்ட ஊரில் நகரியில் இறைவ - வயலூர்ப் பதியில் இறைவனேஅருள் தரு பெருமாளே - திருவருள் புரியும் பெருமாளே
    சுருக்க உரை
    இரத்தம், புழுக்கள், நீர், மலம், மயிர், சதை ஆகியவை பொருந்தும் உருவமாக இவ்வுடல் எடுத்ததும்,அழகொடு விளங்கும் அணி கலன்களும், அறுசுவை உணவும், வீடும், மனைவி, குழந்தைகள், உற்றார்,உறவினர், இவை எல்லாம் போதும் போதும்; நான்கு வேதங்களின் மார்க்கங்களை எடுத்து உரைக்கும் சைவ சித்தாந்த நூல்களைத் தவிர, மற்ற உலக சம்பந்தமான நூல்களைப் படித்தது போதும்; நண்பர்களிடம் பழகி அவர்களைப் பின் பற்றுதல் போதும்; உனது திருவருள் வழியில் செல்லும் அறிவை என் உள்ளம் மகிழ்ச்சி பெற அருள் புரிவாயாக
    வெற்றிப் பறைகள் முழங்கவும், கருடன் வட்டமிடவும், பேய்கள் நடமாடவும், தேவர்கள் அரகர சிவசிவ என்று துதி செய்யவும், கதிர்கள் வலம் வரவும்,அசுரர்கள் பொடிபட்டு விழப் போர் செய்த வேலனே, மருத மரம் முறிய தவழ்ந்து சென்ற கண்ணனுடைய மருகனே, விராலி மலையில் உறையும் ஆறு முகனே குருபரனே, செழிப்பான வயலுரில் வீற்றிருக்கும் பெருமாளே, என் அறிவு உன்னைப் போற்றி மகிழ அருள்புரிவாயாக



    விளக்கக் குறிப்புகள்
    அலம் அலம் அலம் - போதும் இந்தச் சொற்றொடர் வந்துள்ள மற்றொரு திருப்புகழ் பாடல் -அருவமிடை, குடல் நிண


    முகுற ககபதி
    முகுற என்பது குமுற என்பதின் நிலை மாறல்


    மருது நெறு நெறு நெறு என முறிபட
    பரிவொடு மகிழ்ந்து இறைஞ்சு மருதிடை தவழ்ந்து நின்ற
    பரமபத நண்பர் அன்பின் மருகோனே- திருப்புகழ்- 'மருமலரினன்'
Working...
X