Announcement

Collapse
No announcement yet.

Adaikkala pathu-Desikan

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Adaikkala pathu-Desikan

    சுவாமி தேசிகன்: அடைக்கலப்பத்து - J.K. SIVAN
    நான் ஒரு காகம்.
    அழகு தமிழிலும் ஆழ்ந்த பக்தி தோய்ந்த சமஸ்க்ரிதத்திலும் இணையாக அற்புத பக்தி ஸ்தோத்திரங்களை இயற்றியவர்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர்கள் வெகு வெகு சிலரே. அவர்களில் பிரதானமாக ஜொலிப்பவர்`களில் ஒருவர் தான் சுவாமி தேசிகன்.
    பத்து பாசுரங்களை கொண்ட ஒரு சிறிய தொகுப்பு தான் சரணாகதி எனும் அவருடைய 'அடைக்கல பத்து''
    ''அப்பா வரதராஜா , அடியேனுக்கு நினது சரணாரவிந்தத்தில் அளிப்பாயா முக்தி'' என அவர் காஞ்சி வரதராஜனை வேண்டும் ஸ்தோத்திரங்கள் அவை. சமஸ்க்ரிதத்தில் அதே போல் 'ந்யாஸ தசகம் '' சரணாகதி யை அற்புதமாக விவரிக்கும் ஸ்லோகங்கள்.


    தனது பாட்டு வேண்டுமானால் அதற்கு இவ்வளவு காசு என்று நிர்ணயித்து அதை பெற்று, தான் எழுதும் தகர டப்பா கவிதைகளை எங்கோ குளுகுளு என்று ஒரு ஐந்து நக்ஷத்ர குளிர் அறையில் குடித்துக்கொண்டே எழுதும் கவிஞர்களின் கவிதைகளையே படித்து பழக்கப்பட்ட நமக்கு கண்ணெதிரில் இருக்கும் விலையில்லா மாணிக்கங்கள் தெரிவதில்லை. அவற்றை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்து தூசி தட்டி அளிப்பது எனது தணியாத தாகம். சைவ வைணவ பேதமற்ற முயற்சி. இது இனியும் தொடர ஸ்ரீ கிருஷ்ணன் அருளட்டும்.


    ஆச்சார்யர்கள் தாம் உபதேசித்ததை, நல்லொழுக்கத்தை, பக்தியோடு வாழ்ந்து காட்டியவர்கள். தர்ம ஞாய சிந்தனையோடு எளிய வாழ்க்கை மேற்கொண்டவர்கள். நடமாடும் தெய்வங்கள்.


    பக்தியால் மோக்ஷம் பெற வழி காட்டியவர்கள். ஞானமும் பக்தியும் இரு கண்கள் என விளங்கியவர்கள். விளக்குபவர்கள். அவனருளால் அவன் தாள் பற்ற சொல்லிக்கொடுப்பவர்கள்.


    யோகமார்க்கம் முக்தி அளிக்கும் என்பதை பதஞ்சலியின் யோக சூத்ரங்கள் அஷ்டாங்க யோகத்தை பற்றி விவரிப்பதையும் அறியலாம்.


    योग: चित्त-वृत्ति निरोध: yogah citta-vṛtti-nirodhaḥ — பதஞ்சலி யோக சூத்ரம் 1.2


    எண்ணம் அலை அலையாய் ஓயாமல் மனதை அலைக்கழிப்பதை முதலில் நிறுத்து. அது தான் யோகம் என்று உணர்த்தும் ஸ்லோகம். த்யானத்தில் மனது நிலைத்து விட்டால் அதன் ஓட்டம் நின்றுவிடும். வேறு எதுவுமே மனதில் இடம் பெறாது. யோகத்தை எட்டு அங்கங்களாக பிரித்திருக்கிறார்கள் யோகிகள். இந்த அஷ்ட அங்கங்களை அடையாளம் கட்டி பெயரும் வைத்திருக்கிறார்கள். பதஞ்சலி அவற்றை யமம், (நெருங்காமல் இருப்பது) நியமம் கடைப்பிடிப்பது) ஆசனம்: (உடல் தோற்றங்கள்) பிராணாயாமம்: ஸ்வாச கட்டுப்பாடு) ப்ரத்யாஹாரம் : (புலன்களை அடக்குவது) தாரணம்: (மனத்தை ஒருநிலைப்படுத்துவது), த்யானம் : (மனதை இறை சிந்தனையில் ஈடுபடுத்துவது ) கடைசியாக சமாதி: (தன்னை இழந்த ஆத்ம சங்கமம்). இதெல்லாம் நம்மால் முடியுமா என்றால் முடியாது என்று சொல்லமாட்டேன். முயன்றால் ஒருவேளை முடியலாம். பலருக்கு முடிந்திருக்கும்போது நமக்கு முடியாமல் போய்விடுமா?


    சரணாகதி அடைய வழி என்ன? சில உபாயங்களை உபநிஷத்துகள் மஹான்கள் உபதேசங்கள் சொல்கிறதே !


    நாராயண உபநிஷத் ஓம் எனும் பிரணவ மந்த்ரத்தை விடாமல் உச்சரி என்கிறது. '' AUM iti Atamanam yunjita (Narayana Upanishad 147.8)


    கத்ய த்ரயம் எனும் தனது உபதேசத்தில் ஸ்ரீ ராமானுஜ ஆசார்யர் த்வய மந்திரம் சரியான வழி என்கிறார்.
    Sriman Narayana charanau Saranam prapadye Srimathe Narayanaya Namah


    ''என்னப்பனே , ஸ்ரீமந் நாராயணா, உன் திருவடிகளே சரணம் என கெட்டியாக பிடித்துக்கொண்டு என்னை அர்ப்பணித்தேன். நான் இனி நானில்லை. தயையே உருவான தாய் ஸ்ரீ லட்சுமி தேவி சமேத ஸ்ரீமந் நாராயணன் திருவடிகளை சரணடைவதே எனது ஒரே லக்ஷியம்'' என்கிறார். வெங்கடேச பிரபத்தி இதை அற்புதமாக சொல்கிறது.


    சரணாகதி லக்ஷணமாக ஐந்து அங்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது. அனுகூல்ய சங்கல்பம், பிரதிகூல்ய வர்ஜனம், மஹா விஸ்வாசம்,கோப்த்ரிவ வாரணம், கார்ப்பண்யம் எனும் இவற்றை மற்றொரு சந்தர்ப்பத்தில் விவரமாக சொல்கிறேன். இவற்றோடு இணைந்தது தான் ''அங்கி'' எனப்படும் ஆத்மநிக்ஷேபம், சரணாகதி. வாயினால் வெறுமனே சரணாகதி அடைந்தேன் என்றால் போதாது. மேற்கண்ட குணங்களும் சேர்ந்திருக்கவேண்டும். அப்போது தான் நிறைவேறும். விபீஷண சரணாகதி படித்தவர்கள் அறிந்தவர்கள் இதை உணரலாம்.


    இதை ஏன் சொல்கிறேன் என்றால் இந்த பின்னணியில் சுவாமி தேசிகனின் அடைக்கல பத்து படித்து அறிந்துகொள்ளும்போது ஆனந்தமாக அதை ரசித்து புரிந்து கொள்ள உதவும்.


    விசிஷ்டாத்வைத தத்துவத்தில் முக்கியமான ஒரு அம்சம் சரணாகதி அடைவது. அதை பின்பற்றுவோர் அத்தியாவசியமாக செய்து கொள்வது பர நியாசம், பர சமர்ப்பணம், பிரபத்தி எனும் சரணாகதி. இவையோடு நமது கர்ம பலனெனும் கனிகளை ஸ்ரீமந் நாராயணன் திருவடிகளில் சமர்ப்பிக்கிறோம்.


    காஞ்சிபுரத்தில் வராஜராஜன் ஹஸ்த கிரியில், (அத்தி கிரி எனும் குன்றின் மீது ) வீற்றிருந்து மோக்ஷ மளிப்பவராக அருள்பாலிக்கிறார் என்பார்கள்.
    ஸ்ரீ சுவாமி தேசிகனின் அற்புதமான ''அடைக்கல பத்து'' இனி தொடர்வோம்:


    ''பத்தி முதலாம் மவதில், பதி எனக்கு கூடாமல்,
    எத்திசையும் உழன்றோடி, இளைத்து விழும் காகம் போல்,
    முத்திதரு நகர் ஏழில் முக்கியமாம் கச்சி தனில்,
    அத்திகிரி அருளாளற்கு, அடைக்கலம் நான் புகுந்தேனே ||1||


    Patthi mudhalaam mavathil, pathi yenakku koodamal,
    Yethisayum uzhandru odi ilaithu vizhum kakam pol,
    Mukthi tharum nagar ezhil mukkiyamaam kachi thanil,
    Athigiri arul aalarkku, adaikkalam naan pugundhene ||1||


    நான் என்ன செய்வேன். என்னால் மனதை ஒருமித்து உன்னை நினைக்க முடியவில்லையே. பக்தி அவ்வளவு எளிது அல்ல. எங்கு சென்று அமைதியாக அமர்ந்தாலும், இடம் தான் அமைதியாக இருக்கிறதே தவிர மனம் அமைதியுறவில்லையே. எண்ணற்ற எண்ணங்கள் என் மனதை திசை திருப்புகிறதே. நான் ஒரு காகம் தான். எங்கெங்கோ வெவ்வேறு என்ன, எட்டு திசைகளிலுமே மாற்றி மாற்றி பறந்து களைப்புற்று,நீயே கதி என்று உன் திருவடிகளில் விழுந்த தாகம் கொண்ட காகம். முத்தி தரும் சப்த க்ஷேத்திரங்களில் தலை சிறந்ததாக அத்திகிரி எனும் காஞ்சிபுர வாசனான ஸ்ரீ வரதராஜா , உன் திருவடிகளே சரணம் என்று முதல் பாசுரத்திலேயே அற்புதமாக பாடுகிறார் சுவாமி தேசிகன்.


    கொஞ்சம் ஊன்றி உள்ளர்த்தம் தேடுபவர்களுக்கு ஒரு குறிப்பு கிடைக்கும். இந்திரன் மகன் காகாசுரன் சீதையை துன்புறுத்தியதால் ஸ்ரீ ராமன் அவனை நோக்கி எறிந்த ஒரு சிறு புல் சக்தி வாய்ந்த ஆயுதமாக மாறி அவன் உயிர் குடிக்க, துரத்துகிறது. எங்கெங்கோ சுற்றி அலைந்த காகாசுரன் கடைசியில் ஸ்ரீ ராமன் பாதத்தையே கதி என அடைந்து மன்னிப்பு கேட்கிறான் என்பதை தான் சுவாமி தேசிகன் தன்னை சரணடைந்த காகம் என்று சொல்கிறார் என்று விளங்கும்.


    சுவாமி தேசிகனை மேலும் வணங்கி கேட்போம்:
    No automatic alt text available.
    சுவாமி தேசிகன் - J.K. SIVAN
    அடைக்கல பத்து 2 & 3


    ஞான மார்கம், பக்தி மார்க்கம் என்ற வழிகள் மோக்ஷத்தை அளித்தாலும், கலியுகத்தில் சரணாகதி ஒன்றே எளியது என்பதால் சுவாமி தேசிக ஆசார்யன் நமக்கு அடைக்கல பத்து என்ற பத்து பாசுரங்களை அளித்திருக்கிறார். முதல் பாசுரத்தை தொடர்ந்து மற்றவற்றை அறிவோம்.


    ஞானத்தை பக்தியையும் போதித்த ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு உபதேசிப்பதாக வரும் சரணாகதி ஒன்றே அடைக்கல பத்தின் சாரமாக அமைந்துள்ளது.


    Sarva-dharman parityajya mam ekam saranam vraja
    Aham tvam sarva-papebhyo moksayisyami ma sucah ||18.66||


    ''அர்ஜுனா, சதா என் நினைவில் இருந்து என் பக்தனாக ஆகிவிடு. என்னை வழிபடு, தொழு, என்னை அடைய இது ஒன்றே போதுமே. இது நிச்சயமாக உன்னை என்னிடம் சேர்க்கும் என்னுடைய நண்பன் நீ என்பதால் உனக்கு இதை நினைவூட்டுகிறேன் '' என்று கண்ணன் சொல்வதை அற்புதமான தமிழில் சுவாமி தேசிகன் அடைக்கல பத்து பாசுரங்களில் விளக்குகிறார்.


    நமது ஆச்சார்யர்கள் எதையோ சொல்லிவிட்டு போனவர்கள் அல்ல. சொல்லை செயலாக்கி வாழ்ந்து காட்டிய எடுத்துக் காட்டுகள். உதாரண புருஷர்கள்.


    Pasuram 2


    சடை முடியன், சதுர் முகன் என்று, இவர் முதலாம் தரம் எல்லாம்,
    அடைய வினை பயன் ஆகி, அழிந்து விடும் படி கண்டு,
    கடி மலராள் பிரியாத, கச்சி நகர் அத்திகிரி,
    இடமுடைய அருளாளர், இணை அடிகள் அடைந்தேனே ||2||


    Sadai mudiyan, chathur mukanendru, ivar mudhalaam tharam yellam,
    Adaya vinai payanagi, azhindu vidum padi kandu,
    Kadi malarial piriyatha, kachi nagar athi giri,
    Idamudaya arulaalar, inay adikal adainthene ||2||


    அடைக்கல பத்து எனும் இந்த பத்து பாசுரங்களின் நாயகன் ஸ்ரீமந் நாராயண னான காஞ்சிவாழ் வரதராஜன். காஞ்சியை ஹஸ்தி கிரி எனும் பொருள்படும் அத்திகிரி என்று அடையாளம் காட்டுகிறார் சுவாமி தேசிகன். இந்த சிவன் ப்ரம்மா எனும் மூவரில் இருவரும் கூட நடுவரான விஷ்ணுவை வழிபட்டு பாபம் நீங்கியவர்கள் தான் என்று அறியும்போது நான் திருமகள் மார்பினில் உய்ய அருளும் அத்திகிரி வாழ் காஞ்சி வரதராஜா ,உன் திருவடிகளில் சரணம் என்று அடைக்கலமாகிறேன். உன் அருளோடு எனக்கு திருமகளின் காருண்ய கடாக்ஷமும் சேருமே, மோக்ஷம் எனக்கு அருள்வீர்களே. நான் பாக்கியசாலி அல்லவா?.


    திருவையாறு அருகே சிரக்கண்டிபுரம் எனும் கண்டியூரில் பரமேஸ்வரன் பிரம்மனின் சிரம் கொய்த க்ஷேத்ரம், அருகே ஹரசாப விமோசன பெருமாள் எனும் கமலநாதர் ஆலயம். சிவனுக்கு ப்ரம்மனின் சிரத்தை கொய்ததால் ஏற்பட்ட ப்ரம்மஹத்தி தோஷம் நீங்க அவர் வழிபட்ட விஷ்ணுவின் ஆலயம் இருக்கிறது. இரண்டையும் சமீபத்தில் தரிசித்து ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.


    Pasuram 3


    தந்திரங்கள் வேரின்றித், தமது வழி அழியாது,
    மந்திரங்கள் தம்மாலும், மற்றும் உள்ள உரையாலும்,
    அந்தரம் கண்டடி பணிவார், அனைவர்க்கும் அருள் புரியும்,
    சிந்துர வெற்பிரையவனார், சீலம் அல்லதறியேனே ||3||


    Thanthirangal verindri thamathu vazhi azhiyaadhu,
    Manthirangal thammalum, mathumulla urayalum,
    Antharam kandu adi panivaar, anaivarkkum arul puriyum,
    Sinthura verpu iraiyavanaar, seelam allathu ariyene ||3||


    வாயினால் சுலபமாக இது தான் உபநிஷதங்கள், வேதங்கள் மற்றும் நீதி நூல்கள் சொல்லும் ஞான மார்க்கம், பக்தி மார்க்கம் பற்றி விளக்கி, இதை பின்பற்றினால் மோக்ஷம் நிச்சயம் என்று யாருக்கு வேண்டுமானாலும் உபதேசிக்கலாம். அதை அடைவதற்கு தீவிரமாக எவ்வளவு சிரமபடவேண்டும் என்பது அதை விடாப்பிடியாக முயற்சி செய்வோருக்கு தான் தெரியும். சரணாகதி அடைவோனுக்கு அந்த வழி எளியது என புரியும். இந்த ரெண்டு வழிகளுக்கும் இடையே உள்ள வித்யாசம் என்ன, எது எளிது, நம்மால் முடியக்கூடியது என்று புரிந்து கொள்வோர்கள், உடனே ப்ரபத்தியை தான் நாடுவார்கள். வரதராஜன் காருண்ய மூர்த்தி, ஈடிணையற்ற தயாளன், எல்லோரையும் சமமாக கருதும் பேரருளாளன். அவன் பக்தன் எந்த வழியை பின்பற்றினாலும் அவனுக்கு பேதமின்றி அருளுபவன் அல்லவா?
Working...
X