Announcement

Collapse
No announcement yet.

திருப்புகழ்அம்ருதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருப்புகழ்அம்ருதம்

    307.குடல்நிண
    307விஜயபுரம்
    (திருவாரூர் அருகில் உள்ளது)
    தனதன தந்தன தானன தனதன தந்தன தானன
    தனதன தந்தன தானன தனதான
    குடல்நிண மென்புபு லால்கமழ் குருதிந ரம்பிவை தோலிடை
    குளுகுளெ னும்படி மூடிய மலமாசு
    குதிகொளு மொன்பது வாசலை யுடையகு ரம்பையை நீரெழு
    குமிழியி னுங்கடி தாகியெ யழிமாய
    அடலையு டம்பைய வாவியெ அநவர தஞ்சில சாரமி
    லவுடத மும்பல யோகமு முயலாநின்
    றலமரு சிந்தையி னாகுல மலமல மென்றினி யானுநி
    னழகிய தண்டைவி டாமல ரடைவேனோ
    இடமற மண்டுநி சாசர ரடையம டிந்தெழு பூதர
    மிடிபட இன்பம கோததி வறிதாக
    இமையவ ருஞ்சிறை போயவர் பதியுளி லங்கவி டாதர
    எழில்பட மொன்றுமொ ராயிர முகமான
    விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ
    வெயில்நகை தந்தபு ராரிம தனகோபர்
    விழியினில் வந்துப கீரதி மிசைவள ருஞ்சிறு வாவட
    ஜயபு ரந்தனில் மேவிய பெருமாளே



    பதம் பிரித்து உரை

    குடல் நிணம் என்பு புலால் கமழ் குருதி நரம்பு இவை தோல் இடை
    குளு குளு எனும்படி மூடிய மலம் மாசு


    குடல் நிணம் என்பு - குடல், கொழுப்பு,எலும்பு புலால் - மாமிசம் கமழ் - பரந்துள்ள குருதி - இரத்தம் நரம்பு இவை - நரம்பு ஆகியவற்றை தோலிடை - தோலின் இடையே மலம் மாசு - மலமும் மற்ற அழுக்குகளும் குளு குளு எனும்படி மூடிய - குளுகுளு என்ற அமையும்படி வைத்து மூடப்பட்டுள்ளதும்


    குதி கொளும் ஒன்பது வாசலை உடைய குரம்பை நீர் எழு
    குமிழியினும் கடிதாகியே அழி மாய


    குதி கொளும் - பொதிந்துள்ள ஒன்பது வாசலை உடைய - ஒன்பது ஓட்டைகளை உடையகுரம்பையை - சிறு குடிலாகிய உடலை நீர் எழு - நீரில் தோன்றுகின்ற குமிழியினும் -திவலைகளைக் காட்டிலும் கடிதாகியே -வேகமாகவே அழி - அழிகின்ற மாய -மாயமான


    அடலை உடம்பை அவாவியே அநவரதம் சில சாரம்
    இலாத அவுடதமும் பல யோகமும் முயலா நின்று


    அடலை உடம்பை - துன்பத்துக்கு ஈடான உடலை அவாவியே - விரும்பி அநவரதம் -எப்போதும் சில சாரம் இலா - சில பயனற்ற அவுடதமும் - மருந்துகளையும் பல யோகம் - பலவித யோகங்களையும் முயலா நின்று - கைப்பிடித்து


    அலமரும் சிந்தையில் ஆகுலம் அலம் அலம் என்று இனி யானும்
    நின் அழகிய தண்டை விடா மலர் அடைவேனோ


    அலமரும் சிந்தையில் - துன்பப்படும் மனத்தில் ஆகுலம் - துன்பம் அலம் அலம் என்று - போதும் போதும் என்று உணர்ந்து இனி யானும் - இனி நானும் நின் அழகிய - உனது அழகான தண்டை விடா - தண்டை எப்போதும் சூழ்ந்துள்ள மலர் அணைவேனோ - திருவடி மலரை அடைவேனோ?


    இடம் அற மண்டும் நிசாசரர் அடைய மடிந்து எழு பூதரம்
    இடிபட இன்ப மகோததி வறிதாக


    இடம் அற மண்டு - காலி இடம் இல்லாதபடி நெருங்கி நிசாரர் - அசுரர்கள்அடைய - முழுவதும் மடிந்து - இறந்துபட்டுஎழு பூதரம் - ஏழு மலைகளும் இடிபட -பொடியாகவும் இன்ப மகோததி - காட்சிக்கு இன்பம் தரும் கடல் வறியாக - வற்றிப் போகவும்


    இமையவரும் சிறை போய் அவர் பதி உள் இலங்க விடு ஆதர
    எழில் படம் ஒன்றும் ஓராயிரம் முகமான


    இமையவரும் - தேவர்களும் சிறைபோய் - சிறை நீங்கி அவர் பதியும் இலங்க - அவர்களுடைய பொன்னுலகும் விளங்கவும் விடு ஆதர - செய்வித்த ஆதரவாளனே எழில் படம் ஒன்றும் - அழகிய படங்கள் பொருந்திய ஒராயிரம் முகமான -ஒரு ஆயிரம் முகங்களைக் கொண்ட


    விட தர கஞ்சுகி மேரு வில் வளைவதன் முன் புரம் நீறு எழ
    வெயில் நகை தந்த புராரி மதனகோபர்


    விட தர கஞ்சுகி - விடத்தைக் கொண்ட ஆதிசேடன் மேரு வில் - மேரு மலை என்னும் வில்லை வளைவதன் முன் -(நாணாகப் பூட்டப்பட்டு) அந்த வில் வளைபடு முன்னரே புரம் நீறு எழ - முப்புரங்கள் சாம்பலாக வெயில் நகை தந்த -ஒளி வீசும் சிரிப்பை வெளியிட்ட புராரி - திரிபுரப் பகைவர் மதன கோபர் -மன்மதனைக் கோபித்து எரித்தவராகிய (சிவபெருமானுடைய)


    விழியினில் வந்து பகீரதி மிசை வளரும் சிறுவா வட
    விஜயபுரம் தனில் மேவிய பெருமாளே


    விழியினில் - கண்களில் வந்து - (பொறியாகத்) தோன்றி பகீரதி மிசை - கங்கையின் மீதுவளரும் சிறுவா - வளர்ந்த சிறுவனே வட விஜயபுரந்தனில் - வட விஜய புரத்தில் மேவிய பெருமாளே - வீற்றிருக்கும் பெருமாளே

    சுருக்க உரை

    விளக்கக் குறிப்புகள்
    அடலை உடம்பை அவாவி
    அடலை - துன்பம்
    அடலைக் கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார் - திருநாவுக்கரசர் தேவாரம்
    எழு பூதரம் இடிபட
    குன்றோ டுஞ்சூ ழம்பே ழுஞ்சூ
    ரும்போய் மங்கப் பொருகோபா - திருப்புகழ், வெங்காளம்
    புர நீறெழ வெயில் நகை தந்த புராரி
    அரிய திரிப்புர மெரிய விழித்தவன்
    அயனை முடித்தலை யரியு மழுக்கையன் --- திருப்புகழ், குருவியென
    மதனகோபர் விழியினில் வந்து
    ஆட்டி வடவரை வாட்டி யரவொடு
    பூட்டி திரிபுர மூட்டி மறலியி
    னாட்ட மறசர ணீட்டி மதனுடல் .... திருப்புகழ், பாட்டிலுரு
Working...
X