Announcement

Collapse
No announcement yet.

Pagazhi kootar

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Pagazhi kootar

    Pagazhi kootar
    சிவாயநம திருச்சிற்றம்பலம்.
    பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
    *கோவை.கு.கருப்பசாமி.*
    *என்ன?, முருகன் சொன்னானா?, நீ எழுதினாயா?..போயா!*
    மதுரையில் ஒரு சிற்றூரில், அரசர்களின் போர்த் தொழிலுக்கு வேண்டிய 'பகழி' (அம்பு) களைத் தயாரிக்கும் தொழிலில் தலைசிறந்து விளங்கியவர்.
    உத்தமப் பிள்ளையொன்று உமை சுதனருளால் உதித்தது. குழந்தைக்கு, *கூத்தன்* எனப் பெயரிட்டார்கள் பெற்றோர்கள்.
    அக்குழந்தைதான், *பகழிக்கூத்தர்* எனவானார்.
    பகழிக்கூத்தருக்கு முன்வினைத் தொடர்பால், கலைமகளின் திருவருள் எளிமையாகக் கைகூடி வரப்பெற்றது.
    ஆனால், கல்வி கேள்விகளில் தலைசிறந்த பகழிக் கூத்தரோ, எந்த தெய்வத்தின் மீதும், யாவர் மீதும் பாடல்கள் இயற்ற மாட்டேன் என்று வைராக்கியம் கொண்டிருந்தார்.
    பலரும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்கள். பகழிக்கூத்தா!, அருந்தமிழ்ச் செல்வத்தை கலைமகள் உனக்கு அருமையாக கொடுத்திருக்கிறாள்.
    நீ சென்று ஆண்டவனையோ, நல்லரசர்களையோ பாடாமல், உனக்கிருக்கும் கலைமகள் செல்வத்தை இப்படி வீணடிக்கிறாயே? என்றார்கள்.
    இவ்வாறு சொன்னவர்களகடம் பகழிகூத்தர்,............
    எந்தத் தெய்வம் செந்தமிழில் விருப்பம் உடையதாக இருக்கிறதோ, அந்தத் தெய்வம் தன்மீது பாடும்படியாக எனக்கு கட்டளை இடட்டும்.
    அவ்வாறு கட்டளையிட்டால் நான் பாடுகிறேன் என்று கூறினார் பகழிக் கூத்தர்.
    இதன் பிறகும் முருகப்பெருமான் சும்மா இருப்பாரா? சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரையில், தானும் ஒரு
    சங்கப் புலவனாக இருந்து, தமிழை வளர்த்தவரல்லவா? முருகன்.


    மேலும், 'தமிழ்க் கடவுள்' எனப் பெயர் பெற்ற ஒரே பெருந்தெய்வம் ஆயிற்றே!, விடுவாரா?


    அதனால், பகழிக்கூத்தரின் கனவில் வந்து, செந்தூர் கந்தக்கடவுள் காட்சி கொடுத்தார்.


    பகழிக் கூத்தா! யாம் செந்தூர்வாழ் கந்தப்பெருமான், என்று சொல்லி, பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதத்தையும் ஓர் ஓலைத் துணுக்கையும் தந்து வைத்து மறைந்தார்.


    செக்கச் செய்வேலென ஜோதி வடிவில் எழுந்தருளிப் பேசி, இரு பொருட்களையும் தந்து விட்டுப்போன, இமவான் பேரனின் அருளை நினைத்துக் கண் விழித்தார் பகழிக்கூத்தர்.


    அவரை மேலும் ஆச்சரியப்படுத்தும் விதமாக, முருகப்பெருமான் தந்த இரு பொருட்களும் தன்னருகிலேயே இருப்பதைக் கண்ணாரக் கண்டார்.


    என்ன அதிசயம்!, என கண்களைக் கசக்கி மீண்டும் பார்த்தார்.


    படுக்கையிலிருந்து துள்ளியெழுந்த பகழிக்கூத்தர், இரு பொருட்களையும் முன்பு விழுந்து விழுந்து வணங்கினார்.


    பன்னீர் இலைப் பிரசாதமான விபூதியை நெற்றி நிறையப் பூசிக்கொண்டார், அதனுடன் இருந்த ஓலைத் துணுக்கை எடுத்துப் படித்துப் பார்த்தார்.


    அதில்...
    *பூமாது போற்றும் புகழ்ப் பகழிக்கூத்தா உன் பாமாலை கேட்கயாம் பற்றேமா? ஏமம் கொடுக்க அறியேமா கூற்றுவன் வாராமல் தடுக்க அறியோமா தாம்?*
    என முருகப்பெருமான் எழுதி வைத்துப் போயிருந்ததைப் படித்து முடித்தார்.


    பகழிக்கூத்தருக்கு மெசிலிர்த்தது. அலைகட லோரம் அடியார்களின் துன்ப அலைகளை இல்லாமல் செய்வதற்காக எழுந்தருளியிருக்கும், இபமுகன் இளையோனே! உன் கட்டளையை யான் மீறேன்? என்று மனமுருகி வழிபட்டுப் பாடத் தொடங்கினார்.


    தமிழ்க் கடவுள் தந்த ஓலைச் சுவடியிலிருந்த முதல் சொல்லான, *பூமாது* என்ற சொல்லையே முதலாவதாக வைத்து, *திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்* பாடினார்.


    பாடி முடித்ததும் அதை அரங் கேற்றுவதற்காகத் திருச்செந்தூருக்குச் சென்றார்.


    ஆனால், திருச்செந்தூரில் பகழிக்கூத்தருக்குச் சரியான வரவேற்பு இல்லை. பாடிய பாடலை அறங்கைற்றம் செய்யாவிடாது தடுத்தனர்.


    அவர்களிடம் எவ்வளவோ முறையிட்டும் பார்த்தார். கந்தவேளின் அறிவுறுத்தலினால் கவி பாடியிருக்கிறேன் என்றார் பகழிக்கூத்தர்.


    அதற்கு இசையாமலும், நீ
    பகட்டையே பின்பற்றும் கூட்டத்தான், உன் கனவுல வந்து, ஆறுமுகன் சொன்னானாம். இவரு எழுதினாராம் என அவமானப்படுத்தி அனுப்பினார்கள்.


    பகழிக்கூத்தருக்கு உள்ளம் கலங்கியது. தனக்கு ஆதரிப்பார் யாரும் இன்றி மனம் புழுங்கினார்.


    உணவுக்கும் தங்குமிடத்துக்கு மாக மூன்று மாத காலங்கள் வரை, திருச்செந்தூரில் அல்லாடிப் போனார் பகழிக்கூத்தர்.


    சில சமயங்களில் முருகப் பெருமான் மீது, அவருக்கு கோபம் கூட வந்தது. ஆனால், கனவில் வந்து கருணை செய்த கந்தப்பெருமானின் கருணையை எண்ணி எண்ணி களிப்புற்றிருந்து விட்டார்.


    மீண்டும் ஒரு நாள், பகழிக்கூத்தரின் கனவில் செந்தூர் இறைவன் காட்சியளித்து, பகழிக்கூத்தா! இந்தா! இதைவைத்துக்கொள்! இங்கேயே இரு! நூல் அரங்கேறும் எனச் சொல்லி மறைந்தார்.


    கண் விழித்தார் கூத்தர். அவரருகில் முருகப்பெருமானின் திருமார்பை அலங்கரிக்கும் தங்கப்பதக்கம் இருந்தது கண்டு அதிர்ந்து போனார்.


    அதேசமயம், குலசேகரன்பட்டினத்தில் இருந்த காத்தபெருமாள் மூப்பனார் எனும் உத்தமரின் கனவிலும் செந்திலாண்டவன் தோன்றி.........


    பக்தா! நம் பகழிக்கூத்தன் நம்மைப் பற்றிப் பிள்ளைத்தமிழ் பாடியிருக்கிறான். அந்நூலை அரங்கேற்றம் செய்ய நீ ஆவன செய்! என்று நடந்ததையெல்லாம் விவரித்துக் கூறி மறைந்தார்.


    காத்தபெருமாள் உடனே ஒரு பல்லக்கில் புறப்பட்டுத் திருச்செந்தூரை அடைந்தார்.


    அதேசமயம், செந்திலாண்டவரின் தங்கப்பதக்கக் கவசம் காணாமல் போய்விட்டது. யாரோ களவாடி விட்டார்கள் என்று திருச்செந்தூரில் ஒரே களேபரமாக இருந்தது.


    அந்த நேரம் பார்த்து, திருச்செந்தூருக்கு வந்த மூப்பனார், கோயில் நிர்வாகிகளைச் சந்தித்து, கந்தப்பெருமான் கனவில் வந்து சொன்னதைக்கூறி விவரித்தார்.


    பகழிக்கூத்தரின் நூல் அரங்கேற்றத்துக்கு ஆவன செய்யவே அடியேன் வந்திருக்கிறேன் என்றார்.


    பகழிக்கூத்தரை மட்டமாக எண்ணி ஒதுக்கியவர்கள் இதன்பின்பு, திருந்தினார்கள்.


    குகப் பெருமானருளால் நூல் பாடிய, பகழிக்கூத்தரை நாம் அவமானப்படுத்தி விட்டோம். நமக்கு புத்தி புகட்டவே, நாரணன் மருகன் தன் தங்கப்பதக்கத்தைத் தானே கொண்டுபோய், கவிஞரிடம் அளித்துவிட்டார். மன்னித்து விடு முருகா என்று புலம்பியபடியே பகழிக்கூத்தரைத் தேடிப்போனார்கள்.


    அங்கு போனதும் காத்தபெருமாள் பகழிக் கூத்தரை வணங்கி, வள்ளி மணவாளனின் உத்தரவைக் கூறினார்.


    பகழிக்கூத்தருக்கு உள்ளம் உருகியது. பார்வதி மைந்தா! பன்னிருகை பரமா! பாடல் பாடிய வனுக்குப் பதக்கம் அளித்து மரியாதை செய்யத்தான் இவ்வாறு செய்தாயா? என இருந்த இடத்திலிருந்தே கைகளைக் கூப்பித் திருச்செந்தூரான் சன்னிதியிருந்த திசை நோக்கி விழுந்து வணங்கினார்.


    அதன் பிறகு, அனைவருமாக அலைகடலோன்
    சன்னிதியை அடைய, *திருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்* அரங்கேற்றமானது.


    அனைவரும் கூடிக்கேட்டு, ஆனந்தித்தார்கள்.


    அப்போது ஆறுமுக வள்ளலே, ஒரு புலவராக அங்கு வந்து கேட்டு ஆனந்தித்தார்.


    கூடவே,
    *செந்தமிழுக்கு வாய்த்த திருச்செந்திற் பதிவாழும் கந்தனுக்குப் பிள்ளைக்கவி செய்தான்-சொந்தத் திருமாது சேர்மார்பன் தேர்ப்பாகன் வண்மை தருமால் பகழிக் கூத்தன்*
    எனும் சிறப்புப்பாயிரமும் கூறியருளி மறைந்தார்.


    அரங்கேற்றம் முடிந்ததும் காத்தபெருமாள் மூப்பனார் ஏராளமான பொருளைப் பகழிக்கூத்தருக்கு வழங்கி, பகழிக்கூத்தரிடம் இருந்த முருகப்பெருமானின் தங்கப் பதக்கத்தை மீட்டு, அதை மறுபடியும் செந்தூரான் திருமேனியிலேயே சாத்த ஏற்பாடு செய்தார்.


    செந்தூர்க் கூத்தனை வணங்கி, அவன் செய்த அருளாடலை நினைத்தபடியே இருப்பிடம் திரும்பினார் பகழிக்கூத்தர்.


    (தர்ப்பாதனர் எனும் வைணவ அந்தணரின் மகன், பகழிக்கூத்தர். அவருக்குக் கடுமையான வயிற்றுவலி வந்து, செந்திலாண்டவனைக் குறித்துப் பிள்ளைத்தமிழ் பாடினார் என்றும், பகழிக்கூத்தர் செங்குந்த மரபைச் சேர்ந்தவரென்றும் தகவல்களும் உண்டு.)
Working...
X