Announcement

Collapse
No announcement yet.

Duryodhana's Envy

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Duryodhana's Envy

    துரியோதனன் பொறாமை J.K. SIVAN
    சிலருக்கு என்னதான் அவர்களிடம் நிறைய தேவைக்கும் மேலாக பொருள் இருந்த போதும் அடுத்தவனிடம் தன்னிடம் இல்லாதது ஏதேனும் இருந்தால் நிம்மதி இழப்பார்கள். ஒரு சிறு பிளாஸ்டிக் பெட்டி அழகாக மற்றவனிடம் இருந்தாலே போதும். அது நம்மிடம் இல்லையே என்று தூக்கமிழப்பவர்கள் நிறைய பேர் இன்னும் இருக்கிறார்கள். ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள். திருப்தி என்பதே இல்லாத ஜீவன்கள். அவர்களில் தலை சிறந்தவன் துரியோதனன். இந்த்ரப்ரஸ்தம் சென்று வந்தது முதல் அவன் எண்ணம் யுதிஷ்டிரன் ராஜசூய யாகத்தில் பெற்ற எண்ணற்ற பொருள் மீதே தான். பாண்டவர்களுடைய செல்வம், பெருமை, புகழ் அவனை சித்ரவதை செய்தது.


    தன்னிடம் அனேக பொருள் குவிந்திருந்த போதும், அதிகாரமும், மற்றவர்களுக்கில்லாத அளவு பெருஞ் செல்வமும் படைகள், சேனைகள் இந்திரன் போல மரியாதை, பதவி இருந்தும், உலகில் ஒருவருக்கும் கிடைக்காத இன்பம் அனைத்தும் இருந்த போதும், கண்ணற்ற முதியோன் திருதராஷ்டிரன் மகனான துரியோதனன் காய்ந்த நெஞ்சுடன் பொறாமையால் துடித்து என்ன சொல்கிறான் தெரியுமா?


    ' இந்த பாண்டவர்கள் முடியணிந்து பிரபலமாக, இந்தப் பார் மீது அரசர்களாக யுலவிடும் நாள்வரை, நானும் ஒரு அரசனா? எனது இந்த அஸ்தினாபுரம் ஒரு ராஜ்யமா? அரசர்கள் மத்தியில் அவர்கள் மதிப்பில் நமது ராஜ்யம் குறைந்ததாகவே தான் உணரப்படும். எனது ஆண்மையும் புகழும் ஒரு பொருட்டாகுமோ? உலகமே திரண்டு மெச்சும் அந்த காண்டிபம் என்கிற வில்லுடைய அர்ஜுனன் கண்களிலும் யானை பலம் கொண்ட அந்த மகா பலிஷ்டன் பீமன் மார்பிலும் என்னைப்பற்றி ''சீ நீயும் ஒரு வீரனா?'' என்று இகழ்ச்சியாக எழுதி ஒட்டியது போல் அல்லவா இருக்கிறது?


    என்னால் மறக்க முடியவில்லையே! யுதிஷ்டிரனின் ராஜசூய யாகத்திற்கு அப்பப்பா.பாரத நாட்டிலுள்ள முடியரசர்கள் அனைவரும் பார்த்து இவனே எங்களின் தலைவன் என்று ஏற்றுக் கொண்டதை, அதை அங்கீகரித்து அங்கே நாரத முனிவரே மற்ற பெரும் ரிஷிகளோடு வந்து மெச்ச, அந்த யாகத்தை தருமன் நடத்தி பெருமை சேர்த்தான். எல்லாம் அந்த கள்ளன், கிருஷ்ணன், யது குலத்தான் செய்யும் சூழ்ச்சி. தனது வீரத் தம்பியரின் தோள்வலியில் குளிர் காய்ந்து கொண்டுள்ள அந்த வீரமிலாத் தர்மன் தான் உலகத்திலேயே ராஜாதி ராஜன், சக்ரவர்த்தி என்று பிரகடனப் படுத்தினார்களே. என்னால் தாங்க முடியவில்லையே.


    அடேயப்பா, எவ்வளவு பெரிய கூட்டம் அன்று அங்கே. ஆயிரம் ஆயிரம் முடிவேந்தர்கள், பதினாயிரமாயிரம் சிற்றரசர்கள் எல்லோரும் வரிசை வரிசையாக நின்று கப்பம் கட்டினார்களே தர்மனுக்கு. மலை மலையாக பரிசுகள், ஆடைகள், ஆபரணங்கள், எத்தனை பெண்கள், தேர்கள், எல்லாமே கொஞ்சமாகவா கொடுத்தார்கள்? குடம் குடமாக பொங்கி வழியும் தங்க காசுகள். மாணிக்கம், மரகதம், ரத்னம், முத்துக் கற்கள் வைத்து பூட்டிய பெரிய தேர்களையும் ''இந்தா என் காணிக்கை'' என்று அல்லவோ கொடுத்தார்கள். அப்படியே எல்லாம் என் கண் முன்னாலேயே நிற்கிறதே''


    துரியோதனனுக்கு தூக்கம் போய் விட்டது. திரும்ப திரும்ப அவன் கண்ட காட்சிகள் வந்து அவனை துன்புறுத்துகிறது.


    ''அப்பப்பா, என்ன வெல்லாம் பரிசு அந்த தர்மனுக்கு அன்று. நாலு வகை பொன், ஒரு நாலாயிர வகைப் பணக்குவியலும், வித வித ஆயுதங்கள், வேல், வில், அம்பு, அம்புரா துணிகள், வாள், ஈட்டிகள், கதைகள், எண்ணற்ற வாத்யங்கள், மேள தாளங்கள்,


    இப்படியெல்லாம் கூடவா கொடுப்பார்கள்?


    'எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும் வேலையில்லா கிழவிகள், முனிவர்கள், போல தனியே அமர்ந்து பழைய காலத்து கிளிக்கதை படிப்பவன் அவன், பொறுமை சாத்வீகம் கர்மா என்று சொல்லிக்கொண்டு வீரமில்லாமல், ஒரு ஓரமாக மதிப்பின்றி கிடந்த அந்த வழ வழா கொழ கொழா ஆசாமி தர்மனுக்கா இந்த சக்ரவர்த்தி பட்டத்தை மன்னாதி மன்னர்கள் கொடுத்தார்கள்? அவன் காலில் விழுந்து வணங்கினார்கள்? மனம் எனக்கு ஆறவில்லையே, பொறுக்கவில்லையே?


    எல்லாம் அந்த பீமார்ஜுனர்கள் பலத்தால் தானே? உலகே மூக்கில் விரல் வைக்கும் மா பெரும் யாகம்! பேர், புகழ். ராஜாக்கள் அனைவரும் யுதிஷ்டிரன் காலடியில் ! இந்த தருமன் எப்படி இருந்தான் என்று எனக்கு தெரியாதா? அவனுக்கு வந்த வாழ்வைப் பாருங்களேன்! முத்து, பவழம், வைரம், வைடூரியம், எல்லாத்தையும் கொண்டு வந்து காலடியில் கொட்டிவிட்டு பெரிய பெரிய ராஜாக்கள் கைகட்டி ஓரமாக நிற்கிறார்களே! அக்கிரமம் இல்லை இது! இல்லை அவனுடைய அதிர்ஷ்டமா?''


    துரியோதனன் பொறாமையால் போடும் பட்டியல் இன்னும் முடியவில்லை. மேலே படியுங்கள்.


    ' மலை நாடுகளின் அரசர்கள் நிறைய மான், தேன், என்னென்னவோ, குதிரை, பன்றி, ஆடு, மாடுகள் கொணர்ந்து தந்தார்களே . அடேயப்பா, எவ்வளவு கலைமான் கொம்புகள்,யானைகளின் தந்தமும், கவரி மான்கள் தோல், கொம்புகள், வித வித அழகிய பதப் படுத்திய தோல் வகைகள், ஒருவேளை இது போதாதோ என்று நிறைய பொன்னும் மணியும் வேறு! இது எங்கேயாவது அடுக்குமா?


    'தோல் என்று சொன்னேனே, அதில் தான் எத்தனை நிறம். சிகப்பு, கருப்பு, பொன்னிறம், புலித்தோல், யானையுடையது,. பறவைகள். அந்த திரௌபதிக்கு என்று நிறைய சந்தனம், அகில் கட்டைகள், வாசனை திரவியங்கள். என்னையா இது?


    வாசனையாக மூக்கை துளைக்கும் ஏலக்காய், கற்பூரம், லவங்கம், ஜாதி, மலையாக அல்லவோ குவித்துவிட்டார்கள்!.


    விலை சொல்ல முடியாத அழகிய கை வேலைப் பொருள்கள். எல்லா மன்னர்களும் கொடுப்பதையும் கொடுத்து விட்டு கை கட்டி வேறு நின்றார்களே. கண்டது கனவா நிஜமா?


    ''இதை சொல்ல வில்லையே. பளபள வென்று பொன் கவசம், கழல்கள், கடகம், ஹாரம். வெள்ளை, சிகப்பு, நீலம், மயில் கழுத்து, கிளி வயிறு போல பல நிறங்களில், அக்னி மாதிரி சிவப்பில், மேகம் மாதிரி நீலம், கருப்பில், வான வில் போல எத்தனையோ வண்ணங்களில் ஆபரணங்கள். போதுமா?


    அங்கே நான் பார்த்த யானை குதிரைகளைப் பற்றி ஒரு வார்த்தை. காற்றைவிட வேகமாக செல்பவை. அரேபிய உயரமான ஜாதி வகைகள். ஒட்டகங்கள், யானைகள் மந்தை மந்தையாக.


    தெற்கு பக்கத்திலிருந்து சாவகம், புஷ்பகம் தீவுகளிலிருந்து சீன தேசம் வரை கூட ராஜாக்கள் வந்து பரிசுகள் கொடுத்தார்களே.


    'வண்ண வண்ண நறுமண மாலைகள் பொன், மணிகள் கட்டிய வகை வேறு, வண்ண வண்ண பட்டு பீதாம்பர சேலைகள்,எத்தனை எத்தனை வகை ஆடுகள், பசுக்கள், வண்டி வண்டியாக அரிசி பருப்பு வகை தானியங்கள், கட்டு கட்டாக கரும்பு, வாசனை தைலங்கள்.


    இந்த கேடு கேட்ட தர்மன் யாகத்துக்கு குடம் குடமாக நெய், பால், வெண்ணை, தயிர், அங்கிகள், சால்வைகள், கம்பளங்கள், ஆளுயரத்திற்கு அடுக்கி அடுக்கி அல்லவா வைத்திருந்தார்கள். வேறு சில வேந்தர்கள் அப்பாண்டவர் மனம் கோணாது திருப்தியுற தந்தத்தில் கட்டில்கள், பல்லக்கு, தேர், வாகனங்கள், தந்த பிடி போட்ட வாள்கள், அழகிய சிற்ப வேலைப்பாடுகள், இதெல்லாம் என்னால் கணக்கிட்டு சொல்ல முடியவில்லை. அவ்வளவும் அங்கே பார்த்தேன். நெஞ்சு வெடித்துவிடும்போல இருக்கிறதே. தருமனுக்கா இத்தனையும்?


    பார்த்த பல் வேறு பொருள்கள், பரிசுகள் அந்த மாபெரும் அரசன் துரியோதனனை தான் ஒரு பரம ஏழை பிச்சைக்காரன் என்று நினைக்க வைத்துவிட்டதே. பொறாமை இயலாமை அவனை வாட்டியது. அவனது ஆண்மை, வீரம் எல்லாம் அழிந்து பரிதாபமாக நின்றான். சக்தியற்ற ஒரு பெண் போல், சிறு பிள்ளை போல தவித்தான் .
Working...
X