Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    பகவத்கீதை த்யானச்லோகங்கள்.- மதுசூதன சரஸ்வதி.
    1. பார்த்தாய பிரதிபோதிதாம் பகவதா நாராயணேன ஸ்வயம்
    வ்யாசேன க்ரதிதாம் புராண முனினா மத்யே மஹாபாரதம்
    அத்வைதாம்ருத வர்ஷிணீம் பகவதீம் அஷ்டாதசாத்யாயிநீம்
    அம்ப த்வாம் அனுஸந்ததாமி பகவத்கீதே பவத்வேஷிணீம்
    புராண முனிவராகிய வியாசரால் மஹாபாரதத்தின் நடுவில் வைக்கப்பட்டவளும், அர்ஜுனனுக்காக பகவான் நாராயணனாலேயே உபதேசிக்கப்பட்டவளும், அத்வைதமாகிய அமுதத்தை வர்ஷிப்பவளும், பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டவளும், சம்சார சாகரத்தின் எதிரியும் ஆன பகவத் கீதா என்ற அன்னையை நமஸ்கரிக்கிறேன்.


    கீதையின் பெருமையை இந்த ஸ்லோகம் கூறுகிறது. பகவானாலேயே உபதேசிக்கப்பட்டது.. நாராயணனின் அம்சமே எனப்பட்ட வியாசரால் மகாபாரதம் என்ற நூலில் நடுவில் பதக்கம் போல பிரகாசிக்கிறது. இதை இயற்றிய மதுசூதன ஸரஸ்வதி என்ற அத்வைத சிரோமணியால் இது அத்வைதாம்ருதத்தை வர்ஷிக்கிறது என்று கூறப்படுவதனால் அத்வைதத்தை போதிக்கும் நூல் என்று அர்த்தமில்லை.
    அத்வைதம் என்பது இந்த பிரபஞ்சத்தில் எல்லாம் பிரம்மமே என்ற மனோபாவம். ஆழ்வாரும் இதையேதான் உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று கூறுகிறார்.


    பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது கீதை. பதினெட்டு என்ற எண் தனிச்சிறப்பு வாய்ந்தது.மகாபாரத யுத்தம் நடந்தது பதினெட்டு நாட்கள். பாகவதபுராணம் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. ஒன்று எட்டு இவற்றின் கூட்டுத்தொகை ஒன்பது. மாறாத நம்பர். அத்துடன் எதைக் கூட்டினாலும் அந்த எண்களின் கூட்டுத்தொகை 9 ஆகவே இருக்கும்


    .பஞ்ச பூதங்கள், பத்து இந்த்ரியங்கள், மனம், புத்தி அஹங்காரம் இவை மொத்தம் பதினெட்டு. இவைகளின் மூலம்தான் சம்சார பந்தம் ஏற்படுகிறது.இதை அகற்றுவதால் சம்சார சாகரத்தின் எதிரி எனப்படுவது கீதை. ஒரு அன்னையைப் போல் நல்வழி காட்டுவதால் அன்னை என்று கூறலாம்.


    2. நமோஸ்து தே வியாஸ விசாலபுத்தே
    புல்லாரவிந்தாயத பத்ரநேத்ர
    யேன த்வயா பாரததைலபூர்ண:
    ப்ரஜ்வாலிதோ ஞானமயப்ரதீப:


    அளவற்ற ஞானம் உடைய விரிந்த தாமரைக்கண்களை உடைய வ்யாசகுருவே , உமக்கு நமஸ்காரம். உங்களால் ஞானமாகிற தீபம் பாரதம் என்கிற தைலத்தால் நிரப்பப்பட்டு ஒளிவீசுகிறது.


    இந்த பிரபஞ்சம் ஒரு விளக்கு என்றால் அதில் தர்மம் என்பது தைலம். புத்தி என்கிற திரி இறையருள் என்ற நெருப்பால் ஏற்றப்பட்டால் உலக அறிவு எரிந்து ஞான ஒளியாக மாறுகிறது. மகாபாரதத்தை உலகுக்கு அளித்ததன் மூலம் இதை செய்தவர் வியாசர். அதனால் அவரை வணங்க வேண்டும். வேதத்தை தொகுத்து அளித்ததனால் வேத வியாசர எனப்படும் இவரை நினைவுகூருவதே குரு பூர்ணிமா. அதனால்தான் இது வ்யாசபூர்ணிமா எனப்படுகிறது.
    .
    3. ப்ரபன்ன பாரிஜாதாய தோத்ரவேத்ரைக பாணயே
    ஞானமுத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருததுஹே நம:


    ஆச்ரயித்தவர்களுக்கு கற்பகத்தருவைப்போல் வேண்டுவதையும் மேலும் அவர்க்கு நன்மை தரும் எல்லாவற்றையும் அளிக்கும், சாட்டைக்குச்சியையும் கடிவாளத்தையும் கையில் கொண்டு பார்த்தசாரதியாக , இன்னொரு கையில் ஞானமுத்திரையுடன், கீதை என்கிற பாலைக்கறந்து,அர்ஜுனனுக்கு உபதேசம் அளித்த கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.


    இது எளிதில் புரிகிறது ஆனால் கீதை என்னும் பாலைக் கறந்தானா? எதனிடம் இருந்து? இதை அடுத்த ஸ்லோகம் சொல்கிறது.


    4.ஸர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபால நந்தன:
    பார்த்தோ வத்ஸ: ஸுதீர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்


    உபநிஷத்துக்களே பசுக்களாக இருக்க கோபால நந்தனன் கறப்போனாக , அர்ஜுனனே கன்றாக, உலகில் உள்ள நல்லோர் பருகுவதற்காக கீதை என்கிற அம்ருதம் கறக்கப்பட்டது.


    உபநிஷத்துக்களின் பொருள் எல்லோராலும் அறியக்கூடியதன்று. அதனால் எல்லையற்ற கருணையுடன் பகவான் அவற்றின் சாரத்தை கீதை என்கிற பாலின் மூலம் எல்லோரும் பருகும்படி செய்தான். பால் குழந்தையிலிருந்து முதியோர்வரை எல்லோராலும் எளிதில் ஜீரணிக்கப்படுகிறதல்லவா?


    உபநிஷத்துக்கள் பசு என்றால் அதை கறப்பவன் கை தேர்ந்த பால்காரனாக இருக்கவேண்டும் அல்லவா? கோபாலனாகிய கிருஷ்னை விட வேறு யார் இதை செய்ய முடியும்?


    பசு கன்றைப் பார்த்தால் எளிதில் பால் கறக்கும். அர்ஜுனன்தான் கன்று என்கிறார். அர்ஜூனன் அறிவுத்தாகம் எடுத்த மனிதன். 'அதாதோ பிரம்ம ஜிக்ஞாசா,' என்று பிரம்ம சூத்திரத்தில் கூறியபடி, யாருக்கு பிரம்மததைப்பற்றி அறிய வேண்டும் என்ற வேட்கை இருக்கிறதோ அவருக்குத்தான் அந்த ஞானத்தைப் பெற தகுதியுள்ளது. அர்ஜுனன் பரம் விசுவாசத்துடன் கேட்டதனால் அவனை பசுவின் கன்றாக உவமை கூறுகிறார்.


    பாலைக் கறந்தபின் அது முழுவதும் கன்றுக்காக அல்லவே. உலகில் எல்லோருடைய உபயோகத்திற்காகவே அல்லவா? அதனால் ஸுதீ: நல்ல மதியுடையவர் இதை அனுபவிக்கிறார்கள் என்கிறார் . அருமையான உருவகம்.


    (மதுசூதன ஸரஸ்வதி அத்வைத குரு மட்டும் அல்ல. ஒரு சிறந்த கவியும் ஆவார். க்ருஷ்ணபக்தர் . அவருடைய ஒரு ஸ்லோகம் இங்கே பார்க்கலாமா.-


    யேன அப்யாசேன வசீக்ருதேன மனஸா யத் நிர்குணம் நிஷ்க்ரியம்
    ஜ்யோதிம் கிம்சசனா யோகின: யதி பரம் பச்யந்தி பச்யந்து தே
    அஸ்மாகம் து ததேவ லோசனசமத்காரயா பூயாத் சிரம்
    காளிந்தி புலிநேஷு கிமபி யத் நீலம் மஹோ தாவதி


    எந்த குணமற்ற செயலற்ற பரபிரம்மமாகிய ஒளியை யோகிகள் மனதைக் கட்டுப்படுத்தி யோகத்தால் பார்க்கிறார்களோ அதை அவர்கள் தாராளமாக பார்க்கட்டும். ஆனால் நமக்கு இங்கு யமுனை நதிக்கரையில் நீல நிறமான ஒரு ஒளி நம் கண்களை குளிர்விக்க ஓடிக்கொண்டிருக்கிறதே அதுவே போதும்.இது ஒரு அத்வைதியிடம் இருந்து என்றால் நம்ப முடிகிறதா?)


    5. வசுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூரமர்தனம்
    தேவகீபரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
    இந்த ஸ்லோகம் கீதாசார்யனின் நிஜ ஸ்வரூபத்தை விளக்கும் ஒன்று.


    வசுதேவரின் மகன் ஆனால் தேவன். அதாவது பகவானே கிருஷ்ணனாக அவதரித்தான் என்பதை சுட்டுகிறது. . கம்சன் சாணூரன் இவர்களை அழித்தவன்., இது அவன் அவதார நோக்கமான துஷ்டசம்ஹாரம். தேவகியின் பரமானந்தத்திற்குக் காரணம் ஆனவன். இது அவன் பால லீலைகளால் தேவகிக்கு மட்டும் அல்ல யசோதைக்கும் மற்றும் எல்லோருக்கும் இந்த உலகத்துக்குமே ஆனந்தத்தை கொடுத்தது. கடைசியில் ஜகத்குருவான க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன் என்று அவன் யார் என்பதை காட்டுகிறார்.


    ஜகத்குரு . முதலில் பிரம்மாவுக்கு உபதேசம் செய்தவரான பரம்பொருள். இங்கு கீதாசார்யனாக உலகுக்கு உபதேசம் செய்கிறார்.


    இந்த குருபூர்ணிமா அன்று ஜகத்குருவான பகவானையும் அவன் பெருமையை கீதை மூலமும் பின்னர் பாகவதம் மூலமும் உலகத்திற்கு எடுத்துரைத்த வியாசரையும் வணங்குவோம்/
    அடுத்துவரும் ஸ்லோகங்கள் கவித்துவம் நிரம்பியவை. அதை பிறகு காணலாம்.


    பகவத்கீதை த்யானச்லோகங்கள் தொடர்ச்சி


    6. பீஷ்மத்ரோணதடா ஜெயத்ரதஜலா காந்தாரநீலோத்பலா
    சல்யக்ராஹவதீ க்ருபேண வஹநீ கர்ணேன வேலாகுலா
    அஸ்வத்தாம விகர்ணகோரமகரா துர்யோதனாவர்த்திநீ
    ஸோத்தீர்ணா கலு பாண்டவை: ரணநதீ கைவர்தக: கேசவ:


    பூபாரம் தீர்க்க வந்தவர் கிருஷ்ணன். அதன் விளைவு மகாபாரதப்போர் . இந்த ச்லோகம் ஒரு அதிசய உருவகத்தின் மூலம் அதை வர்ணிக்கிறது.


    இந்த யுத்தம் ஒரு ரத்த ஆறாக வர்ணிக்கப்படுகிறது. இதில் பீஷ்மரும் துரோணரும் கரைகள். கரைகளைப் போல் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதால். ஜெயத்ரதன் கௌரவரின் ஒரே சஹோதரியின் கணவன். இவன்தான் அபிமன்யுவின் வதத்திற்கு மூல காரணம்.அவனை நதியின் நீர் என்று கூறுகிறார்.


    சகுனி நீலதாமரை. பார்ப்பதற்கு சாதாணமானவன் ஆனால் உள்ளே விஷத்தன்மை உடையவன். நீல நிறம் விஷத்தைக் குறிக்கும்.சல்லியன் முதலையாகவும் கிருபர் நதியின் வேகமாகவும் கர்ணன் அந்த நதியின் அலை போலவும் அஸ்வத்தாமன விகர்ணன் இவர்கள் சுறாமீன்கள் எனவும் உருவகப்படுத்தப்பட்டுள்ளார்கள்.


    துரியோதனன் நீர்ச்சுழலுக்கு ஒப்பானவன் ஏனென்றால் அவன்தான் எல்லோரையும் தன்னுள் இழுத்துக்கொண்டு அழிக்கிறான். அப்படிப்பட்ட ரத்த ஆறானது பாண்டவர்களால் கேசவன் என்ற ஓடக்காரனின் உதவியால் கடக்கப்பட்டது.


    கேசவன் என்ற சொல்லின் பொருள் மும்மூர்த்திகளையும் தம்முள் அடக்கிய பரம்பொருள் என்பது. அதுவே அழகிய கேசங்கள் உடைய கண்ணனாக வந்து பாண்டவர்களுக்குதவியது. பவசாகரம் கடக்கவே உதவும் பகவான் யுத்தமாகிய ரண நதியைக் கடக்க உதவியதில் என்ன ஆச்சரியம்!


    7. பாராசர்யவச: சரோஜம் அமலம் கீதார்த்தகந்தோத்கடம்
    நானாக்யானககேசரம் ஹரிகதா சம்போதனாபோதிதம்
    லோகே ஸஜ்ஜனஷட்பதை: அஹரஹ: பேபீயமானம் முதா
    பூயாத் பாரதபங்கஜம் கலிமலப்ரத்வம்சின: ஸ்ரேயசே


    அடுத்து ஒரு அழகான உருவகம். மகாபாரதம் ஒரு மலர்ந்த தாமரையாக சித்தரிக்கப்படுகிறது. அது வியாசரின் வாக்கென்ற ஏரியில் மலர்ந்திருக்கிறது. அதிலிருந்து கீர்த்தி என்னும் நறுமணம் வீசுகிறது. பலப்பல கதைகள் அதன் கேசரங்கள். ஹரியின் கதை என்ற சூரியனால் முழுவதும் மலர்ந்துள்ளது. இந்த தாமரையின் தேனை அடிக்கடி மகிழ்ந்து பருகும் வண்டுகள் நல்லோராவர். இது கலியின் தீமைகளைப் போக்கி நன்மை விளைவிக்கும்.


    8. மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம்
    யத்க்ருபா தமஹம் வந்தே பரமானந்த சாகரம்


    யாருடைய கருணை ஊமையை பேச்சாளனாக்கி முடவனுக்கு மலை ஏறும் திறன் அளிக்குமோ அந்த பரமானந்தசாகரம் ஆகிய மாதவனை வணங்குகிறேன். மாதவன் என்றால் மாயா: தவ: (மா என்றால் லக்ஷ்மி) லக்ஷ்மி பதி என்று பொருள்,. தாயாரின் கருணை ஊமையை பேசவைக்கும்குருடனைக் காணவைக்கும் முடவனை ஓட வைக்கும் அல்லவா? அவளை ஹ்ருதயத்தில் வைத்த பகவானின் கிருபை அதனால் மிகப்பெரிது.


    9. யம் ப்ரம்மா வருணேந்த்ரருத்ர மருத: ஸ்துந்வந்தி திவ்யை: ஸ்தவை:
    வேதை: ஸாங்கபதக்ரமோபநிஷதை: காயந்தி யம் ஸாமகா:
    த்யானாவஸ்தித்த தத்கதேன ,மனஸா பச்யந்தி யம் யோகின:
    யஸ்யாந்தம் ந விது: ஸுராஸுரகணா: தேவாய தஸ்மை நம:
    இந்த ஸ்லோகத்தில் கிருஷ்ணனை பரப்ரம்மமாகவே வந்தனைசெலுத்துகிறார். பிரம்ம ருத்ரன் வருணன் இந்திரன் வாயு முதலியோர் யாரை திவ்ய ஸ்தோத்திரங்களால் துதிக்கிறார்களோ., சாம வேத கானம் செய்வோர் வேதாங்கங்கள் , உபநிஷத் இவைகளுடன் கூடிய வேதத்தால் கானம் செய்கிறார்களோ , யோகிகள் த்யானத்தின் மூலம் ஒருமுகப்பட்ட மனதால் யாரைப் பார்க்கிறார்களோ எவருடைய ஆதியும் அந்தமும் தேவர்களும் அசுரர்களும் அறியார்களோ, அந்த பகவானுக்கு நமஸ்காரம்.
Working...
X