Announcement

Collapse
No announcement yet.

பகவத்கீதை த்யானச்லோகங்கள்.- மதுசூதன சரஸ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பகவத்கீதை த்யானச்லோகங்கள்.- மதுசூதன சரஸ்

    பகவத்கீதை த்யானச்லோகங்கள்.- மதுசூதன சரஸ்வதி.


    1. பார்த்தாய பிரதிபோதிதாம் பகவதா நாராயணேன ஸ்வயம்
    வ்யாசேன க்ரதிதாம் புராண முனினா மத்யே மஹாபாரதம்
    அத்வைதாம்ருத வர்ஷிணீம் பகவதீம் அஷ்டாதசாத்யாயிநீம்
    அம்ப த்வாம் அனுஸந்ததாமி பகவத்கீதே பவத்வேஷிணீம்


    புராண முனிவராகிய வியாசரால் மஹாபாரதத்தின் நடுவில் வைக்கப்பட்டவளும், அர்ஜுனனுக்காக பகவான் நாராயணனாலேயே உபதேசிக்கப்பட்டவளும், அத்வைதமாகிய அமுதத்தை வர்ஷிப்பவளும், பதினெட்டு அத்தியாயங்களைக் கொண்டவளும், சம்சார சாகரத்தின் எதிரியும் ஆன பகவத் கீதா என்ற அன்னையை நமஸ்கரிக்கிறேன்.


    கீதையின் பெருமையை இந்த ஸ்லோகம் கூறுகிறது. பகவானாலேயே உபதேசிக்கப்பட்டது.. நாராயணனின் அம்சமே எனப்பட்ட வியாசரால் மகாபாரதம் என்ற நூலில் நடுவில் பதக்கம் போல பிரகாசிக்கிறது. இதை இயற்றிய மதுசூதன ஸரஸ்வதி என்ற அத்வைத சிரோமணியால் இது அத்வைதாம்ருதத்தை வர்ஷிக்கிறது என்று கூறப்படுவதனால் அத்வைதத்தை போதிக்கும் நூல் என்று அர்த்தமில்லை.
    அத்வைதம் என்பது இந்த பிரபஞ்சத்தில் எல்லாம் பிரம்மமே என்ற மனோபாவம். ஆழ்வாரும் இதையேதான் உண்ணும் சோறு பருகும் நீர் தின்னும் வெற்றிலை எல்லாம் கண்ணன் என்று கூறுகிறார்.


    பதினெட்டு அத்தியாயங்கள் கொண்டது கீதை. பதினெட்டு என்ற எண் தனிச்சிறப்பு வாய்ந்தது.மகாபாரத யுத்தம் நடந்தது பதினெட்டு நாட்கள். பாகவதபுராணம் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. ஒன்று எட்டு இவற்றின் கூட்டுத்தொகை ஒன்பது. மாறாத நம்பர். அத்துடன் எதைக் கூட்டினாலும் அந்த எண்களின் கூட்டுத்தொகை 9 ஆகவே இருக்கும்


    .பஞ்ச பூதங்கள், பத்து இந்த்ரியங்கள், மனம், புத்தி அஹங்காரம் இவை மொத்தம் பதினெட்டு. இவைகளின் மூலம்தான் சம்சார பந்தம் ஏற்படுகிறது.இதை அகற்றுவதால் சம்சார சாகரத்தின் எதிரி எனப்படுவது கீதை. ஒரு அன்னையைப் போல் நல்வழி காட்டுவதால் அன்னை என்று கூறலாம்.


    2. நமோஸ்து தே வியாஸ விசாலபுத்தே
    புல்லாரவிந்தாயத பத்ரநேத்ர
    யேன த்வயா பாரததைலபூர்ண:
    ப்ரஜ்வாலிதோ ஞானமயப்ரதீப:


    அளவற்ற ஞானம் உடைய விரிந்த தாமரைக்கண்களை உடைய வ்யாசகுருவே , உமக்கு நமஸ்காரம். உங்களால் ஞானமாகிற தீபம் பாரதம் என்கிற தைலத்தால் நிரப்பப்பட்டு ஒளிவீசுகிறது.


    இந்த பிரபஞ்சம் ஒரு விளக்கு என்றால் அதில் தர்மம் என்பது தைலம். புத்தி என்கிற திரி இறையருள் என்ற நெருப்பால் ஏற்றப்பட்டால் உலக அறிவு எரிந்து ஞான ஒளியாக மாறுகிறது. மகாபாரதத்தை உலகுக்கு அளித்ததன் மூலம் இதை செய்தவர் வியாசர். அதனால் அவரை வணங்க வேண்டும். வேதத்தை தொகுத்து அளித்ததனால் வேத வியாசர எனப்படும் இவரை நினைவுகூருவதே குரு பூர்ணிமா. அதனால்தான் இது வ்யாசபூர்ணிமா எனப்படுகிறது.
    .
    3. ப்ரபன்ன பாரிஜாதாய தோத்ரவேத்ரைக பாணயே
    ஞானமுத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருததுஹே நம:


    ஆச்ரயித்தவர்களுக்கு கற்பகத்தருவைப்போல் வேண்டுவதையும் மேலும் அவர்க்கு நன்மை தரும் எல்லாவற்றையும் அளிக்கும், சாட்டைக்குச்சியையும் கடிவாளத்தையும் கையில் கொண்டு பார்த்தசாரதியாக , இன்னொரு கையில் ஞானமுத்திரையுடன், கீதை என்கிற பாலைக்கறந்து,அர்ஜுனனுக்கு உபதேசம் அளித்த கிருஷ்ணனுக்கு நமஸ்காரம்.


    இது எளிதில் புரிகிறது ஆனால் கீதை என்னும் பாலைக் கறந்தானா? எதனிடம் இருந்து? இதை அடுத்த ஸ்லோகம் சொல்கிறது.


    4.ஸர்வோபநிஷதோ காவோ தோக்தா கோபால நந்தன:
    பார்த்தோ வத்ஸ: ஸுதீர்போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத்


    உபநிஷத்துக்களே பசுக்களாக இருக்க கோபால நந்தனன் கறப்போனாக , அர்ஜுனனே கன்றாக, உலகில் உள்ள நல்லோர் பருகுவதற்காக கீதை என்கிற அம்ருதம் கறக்கப்பட்டது.


    உபநிஷத்துக்களின் பொருள் எல்லோராலும் அறியக்கூடியதன்று. அதனால் எல்லையற்ற கருணையுடன் பகவான் அவற்றின் சாரத்தை கீதை என்கிற பாலின் மூலம் எல்லோரும் பருகும்படி செய்தான். பால் குழந்தையிலிருந்து முதியோர்வரை எல்லோராலும் எளிதில் ஜீரணிக்கப்படுகிறதல்லவா?


    உபநிஷத்துக்கள் பசு என்றால் அதை கறப்பவன் கை தேர்ந்த பால்காரனாக இருக்கவேண்டும் அல்லவா? கோபாலனாகிய கிருஷ்னை விட வேறு யார் இதை செய்ய முடியும்?


    பசு கன்றைப் பார்த்தால் எளிதில் பால் கறக்கும். அர்ஜுனன்தான் கன்று என்கிறார். அர்ஜூனன் அறிவுத்தாகம் எடுத்த மனிதன். 'அதாதோ பிரம்ம ஜிக்ஞாசா,' என்று பிரம்ம சூத்திரத்தில் கூறியபடி, யாருக்கு பிரம்மததைப்பற்றி அறிய வேண்டும் என்ற வேட்கை இருக்கிறதோ அவருக்குத்தான் அந்த ஞானத்தைப் பெற தகுதியுள்ளது. அர்ஜுனன் பரம் விசுவாசத்துடன் கேட்டதனால் அவனை பசுவின் கன்றாக உவமை கூறுகிறார்.


    பாலைக் கறந்தபின் அது முழுவதும் கன்றுக்காக அல்லவே. உலகில் எல்லோருடைய உபயோகத்திற்காகவே அல்லவா? அதனால் ஸுதீ: நல்ல மதியுடையவர் இதை அனுபவிக்கிறார்கள் என்கிறார் . அருமையான உருவகம்.


    (மதுசூதன ஸரஸ்வதி அத்வைத குரு மட்டும் அல்ல. ஒரு சிறந்த கவியும் ஆவார். க்ருஷ்ணபக்தர் . அவருடைய ஒரு ஸ்லோகம் இங்கே பார்க்கலாமா.-


    யேன அப்யாசேன வசீக்ருதேன மனஸா யத் நிர்குணம் நிஷ்க்ரியம்
    ஜ்யோதிம் கிம்சசனா யோகின: யதி பரம் பச்யந்தி பச்யந்து தே
    அஸ்மாகம் து ததேவ லோசனசமத்காரயா பூயாத் சிரம்
    காளிந்தி புலிநேஷு கிமபி யத் நீலம் மஹோ தாவதி


    எந்த குணமற்ற செயலற்ற பரபிரம்மமாகிய ஒளியை யோகிகள் மனதைக் கட்டுப்படுத்தி யோகத்தால் பார்க்கிறார்களோ அதை அவர்கள் தாராளமாக பார்க்கட்டும். ஆனால் நமக்கு இங்கு யமுனை நதிக்கரையில் நீல நிறமான ஒரு ஒளி நம் கண்களை குளிர்விக்க ஓடிக்கொண்டிருக்கிறதே அதுவே போதும்.இது ஒரு அத்வைதியிடம் இருந்து என்றால் நம்ப முடிகிறதா?)


    5. வசுதேவஸுதம் தேவம் கம்ஸசாணூரமர்தனம்
    தேவகீபரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
    இந்த ஸ்லோகம் கீதாசார்யனின் நிஜ ஸ்வரூபத்தை விளக்கும் ஒன்று.


    வசுதேவரின் மகன் ஆனால் தேவன். அதாவது பகவானே கிருஷ்ணனாக அவதரித்தான் என்பதை சுட்டுகிறது. . கம்சன் சாணூரன் இவர்களை அழித்தவன்., இது அவன் அவதார நோக்கமான துஷ்டசம்ஹாரம். தேவகியின் பரமானந்தத்திற்குக் காரணம் ஆனவன். இது அவன் பால லீலைகளால் தேவகிக்கு மட்டும் அல்ல யசோதைக்கும் மற்றும் எல்லோருக்கும் இந்த உலகத்துக்குமே ஆனந்தத்தை கொடுத்தது. கடைசியில் ஜகத்குருவான க்ருஷ்ணனை நமஸ்கரிக்கிறேன் என்று அவன் யார் என்பதை காட்டுகிறார்.


    ஜகத்குரு . முதலில் பிரம்மாவுக்கு உபதேசம் செய்தவரான பரம்பொருள். இங்கு கீதாசார்யனாக உலகுக்கு உபதேசம் செய்கிறார்.


    இந்த குருபூர்ணிமா அன்று ஜகத்குருவான பகவானையும் அவன் பெருமையை கீதை மூலமும் பின்னர் பாகவதம் மூலமும் உலகத்திற்கு எடுத்துரைத்த வியாசரையும் வணங்குவோம்/
    அடுத்துவரும் ஸ்லோகங்கள் கவித்துவம் நிரம்பியவை. அதை பிறகு காணலாம்
Working...
X