Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 3 adhyaya 31,32 in tamil
    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam


    ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம்3- அத்தியாயம் 31


    பூர்வகர்மவசத்தால் உந்தப்பட்டு ஜீவன் உடலை எடுக்கும்பொருட்டு புருஷனுடைய
    வீரியத்தில் ஒட்டிக்கொண்டு ஸ்திரீயின் கர்பப்பையில் புகுகிறான்.ஓர்
    இரவில் கருவாகவும், ஐந்து இரவுகள் சென்றபின் நுரை போன்ற வடிவமும், பத்து
    நாட்களில் இலந்தைப்பழ வடிவமும் அதன் பிறகு முட்டை வடிவமும் எய்துகிறான்.


    ஒரு மாதத்தில் தலையும், இரண்டு மாதத்தில் கை கால் முதலிய அங்கங்களின்
    தோற்றமும் மூன்று மாதங்களில் நகம் ரோமம் தோல் எலும்பு முதலியவைகளின்
    அடையாளங்களும் தோன்றுகின்றன. ஆணா பெண்ணா என்பது இப்போது
    நிச்ச்யிக்கப்படுகிறது. ஐந்தாவது மாதத்தில் சிசு பசி தாகம் இவைகளை
    உணர்கிறது. ஆறாவது மாதம் அசைய ஆரம்பிக்கிறது.


    ஏழாவது மாதம் தொடங்கி அறிவு உதிக்க ஆரம்பிக்கிறது. இந்த சமயம் பூர்வஜன்ம
    நினைவுகள் வர மறுபடி பிறவி எடுக்க பயந்து எந்த பகவானால் தாயின் வயிற்றில்
    புகுத்தப்பட்டானோ அந்த பகவானை கைகூப்பி துதிக்க ஆரம்பிக்கிறான்.


    " பகவானுடைய மாயையின் சக்தியினால் கர்மவசப்பட்டு என் உண்மை நிலையை
    உணராமல் சம்சார பந்தத்தில் அகப்பட்டுள்ளேன். எங்கும் நிறைந்த அந்த
    பரம்பொருளின் கிருபையால் எனக்கு இப்போது பூர்வஜன்ம நினைவு வருகிறது. அவர்
    அருளாலேயே கர்மபந்தத்தில் இருந்து விடுபட முடியும்.


    இப்போது இன்னொரு உடலினுள் அகப்பட்டு அங்குள்ள திரவங்களால்
    அலைக்கழிக்கப்பட்டு ஜாடராக்னியால் பொசுக்கப்பட்டு வெளியேறுவேன் என நாளை
    எண்ணிக்கொண்டிருக்கிறேன்.


    ஆயினும் இவ்வளவு கஷ்டங்கள் அனுபவித்தாலும் இதை விட்டு வெளியேற
    விரும்பவில்லை. ஏனென்றால் வெளியே என் நினைவுகள் மறைந்து உலக மாயையில்
    அகப்பட்டு சம்சார பந்தத்தில் சிக்கி பகவானை மறந்து தேகமே நான் என்றெண்ணி
    மறுபடி பிறவிப்பிணியை அனுபவிக்க வேண்டுமே.


    அதனால் நான் இறைவனின் பகவத்த்யானத்தினால் இந்தப் பிறவித் துன்பத்தை
    ஒழிக்க எண்ணுகிறேன்.
    இவ்வாறு கர்பத்தில் இருக்கும்போது ஈச்வரனைத் துதித்துக்கொண்டிருக்கையில்
    பத்து மாதம் முடிந்து சட வாயுவானது அவனை உந்திக் கீழே தலை கீழாகத்
    தள்ளிவிடுகிறது. அறிவு மறைந்து விபரீத அஞ்ஞானநிலையடைந்து வீரிட்டு அழத்
    தொடங்குகிறான்.


    பிறந்தவுடன் நடக்கவும் பேசவும் ஆரம்பிக்கும் முன் பிறர் தயவில்
    வாழும்போது, பூச்சி கடித்தாலும், உடல் உபாதை இருந்தாலும் அவனால் அழத்தான்
    முடிகிறது. அறிவுள்ள பெற்றோர் வாய்ப்பின் ஓரளவு சுகம் காண முடியும்
    இல்லாவிட்டால் நரக வேதனைதான்.


    வளர்ந்த பிறகும் தேவைகளும் ஆசைகளும் கூடவே வளர்வதால் முந்தைய ஜென்மத்தின்
    இடர்கள் பின் தொடர்கின்றன.


    நல்லவழியில் செல்லும் ஜீவனும் காம இச்சைக்கும் வயிற்றை நிரப்புவதற்குமே
    வாழும் தீயோரிடம் சேர்ந்தால் முன்போல் நரகவாசம் போன்ற பிறவித்துன்பத்தை
    அடைகிறான்.


    அதனால் இந்த துன்பத்தை வெல்ல என்ன வழி ?
    மரணபயத்தை விட்டு தன் உண்மை நிலை என்ன என்று உணர்ந்து பற்றற்ற வாழ்க்கை
    மூலம் தேஹாத்ம புத்தியை விட்டு கர்ம பந்தத்தில் இருந்து விடுபடவேண்டும்.


    ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம்3-அத்தியாயம் 32


    கபிலர் கூறினார்.


    பெரும்பாலான மக்கள் கிருஹஸ்த தர்மத்தில் ஈடுபட்டு தர்ம, அர்த்த
    காமங்களாகிய மூன்று புருஷார்த்தங்களையே விரும்புகின்றனர். வேதத்தில்
    கூறப்பட்ட யாகம் , தானம் முதலிய தர்மங்கள் கூட ஸ்வர்க்கம் முதலிய மேல்
    உலகங்களை அல்லது அடுத்த பிறவியில் இவ்வுலக சுகங்களை அடையவே
    பின்பற்றப்படுகின்றன.


    அர்த்தம் அல்லது செல்வம் சேர்ப்பது , காமம் அல்லது சுகத்தில் நாட்டம் இவை
    இரண்டும் எவ்வளவு அனுபவித்தாலும் தீர்வதில்லை.
    இவ்வாறு யாகம் முதலியவைகளும் தானம் முதலிய தர்ம காரியங்களும் பலனை
    எதிர்பார்த்து செய்வது கர்ம மார்க்கம் (கர்ம யோகம் பலனை எதிர்பாராது
    செய்வது) எனப்படும். இப்படிப்பட்டவர்களை கீதையில் பகவான் 'காமாத்மான:
    ஸ்வர்கபரா:' என்று குறிப்பிடுகிறார்.


    இவர்கள் தேவர்களையும் பித்ருக்களையும் திருப்திப்படுத்தி இந்த உடலை
    விட்டதும் சந்திர லோகத்திற்கு செல்லுகிறார்கள். சுவர்கத்திற்கு
    சென்றாலும் 'க்ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி ' என்ற கீதை
    வாக்கியப்படி அவர்கள் செய்த புண்ணியம் தீர்ந்ததும் மறுபடியும் இந்த
    உலகத்தில் பிறக்கிறார்கள். ஆக இந்த பிறப்பு இறப்பு என்னும் சுழற்சி
    தொடர்கின்றது.


    பகவான் யோகநித்திரையில் எப்போது ஆழ்கிறாரோ அப்போது சந்திரலோகம் வரை உள்ள
    எல்லா லோகங்களும் அழிகின்றன. மறுபடி சிருஷ்டி ஏற்படும்போது எல்லா
    உயிர்களும் முன்னிருந்தவாறே மறுபடி தோன்றுகின்றன.


    கர்ம மார்க்கத்தில் ஈடுபட்டவர்களினின்றும் வேறானவர்கள் பாகவத தர்மத்தை
    அனுசரிப்போர்., அவர்கள் ஸ்வதர்மத்தை பயன் கருதாது செய்து ஆசைகளற்று எல்லா
    செய்கைகளையும் பகவதர்ப்பணமாகவே செய்கின்றனர். இவர்கள் உடலை விட்டபின்
    சூரியமார்க்கமாகச் சென்று சத்யலோகத்தை அடைகின்றனர். ஸத்ய லோகம் என்பது
    ப்ரம்மலோகம்.,


    ஒரு த்விபரார்த்தத்தின் முடிவில் பிரம்மா (அதாவது பிரம்மாவின் ஆயுள்
    முடிவில்) பிரம்மப்ரலயம் ஏற்படும்போது பிரம்ம பகவானுடன் ஐக்கியம்
    ஆகிறார். பிரம்மாவுடன் கூட சத்ய லோகத்தில் இருந்து பகவானையே த்யானித்துக்
    கொண்டிருந்த இந்த யோகிகள் பிரம்மாவுடனேயே பகவானிடம் ஐக்யமாகின்றனர்.


    கபிலர் தேவஹூதியிடம் அதனால் பற்றை விட்டு பகவானிடம் சிந்தையை
    செலுத்துமாறு கூறி, வாசுதேவரிடம் கொண்ட பக்தியானது சீக்கிரத்தில்
    வைராக்யத்தையும் ஞானத்தையும் கொடுக்கிறது என்றார்.


    ஞானமாத்ரம் பரம் பிரம்ம பரமாத்மா ஈஸ்வர: புமான்
    த்ருச்யாதிபி: ப்ருதக்பாவை: பகவான் ஏக: ஈயதே (ஸ்ரீமத். பா. 3.32.26)


    ஞானஸ்வரூபமான பரப்ரம்மம் ஒருவரே பரமாத்மா, ஈஸ்வரன், பகவான் , புருஷன்
    என்றும், காண்பது, காண்பவன், காணப்படுவது என்று பலவாறாக அறியப்படுகிறான்.
    நிர்குணமான பிரம்மம் ஒன்றே வெளிமுகப்பட்ட இந்த்ரியங்களால் பிராந்தியினால்
    பலவாகத் தோன்றுகிறது.


    யதேந்த்ரியை: ப்ருதக்த்வாரை: அர்தோ பஹுகுணாஸ்ரய:
    ஏகோ நானேயதே தத்வத் பகவான் சாஸ்த்ரவர்த்மபி: (ஸ்ரீமத். பா. 3.32. 33)


    எவ்வாறு ஒரே வஸ்து இந்த்ரியங்களினால் வெவ்வேறாக அறியப்படுகிறதோ அவ்வாறே
    பல சாஸ்திர மார்க்கங்களினால் வெவ்வேறாக அறியப்படுகிறார்.


    உதாரணமாக பால் கண்ணுக்கு வெண்மையாகவும் நாவுக்கு இனிமையாகவும்
    ஸ்பர்சத்தால் தண்மையாகவும் இருக்கிறது அல்லவா? ஆனாலும் பால் என்பது ஒரே
    வஸ்துதானே. அதுபோல பகவான் வெவ்வேறு அறியும் திறனுக்கேற்ப
    வெவ்வேறாகத்தொன்றினாலும் அவன் உண்மைஸ் ஸ்வரூபம் ஒன்றுதான். இதைத்தான்
    கபிலர் கூறுகிறார்.


    இது மட்டும் புரிந்து விட்டால் உலகில் வாதப் பிரதிவாதங்கள் பேதமனப்
    பான்மையினால் ஏற்படும் சண்டைகள் எல்லாம் மறைந்துவிடும்!.


    பக்தி நான்கு வகைப்படும்என்று கபிலர் தேவஹூதியிடம் கூறுகிறார்.


    1. ஸகாம பக்தி- பகவானிடம் பலன் எதிர்பார்த்து பக்தி செலுத்துவது
    (உலகத்தில் பெரும்பான்மையான பக்தி இவ்வகையைச் சேர்ந்தது.)
    2. நிஷ்காம பக்தி- கர்மபலனை பகவானுக்கு சமர்ப்பணம் செய்வது.
    3. ஸகுணபக்தி- பிரஹ்லாதன் கூறிய நவவிதபக்தி, ஸ்ரவணம், கீர்த்தனம் முதலியவை.
    4.நிர்குண பக்தி- இதுவே பிரேம பக்தி எனப்படும். பகவானை நினைத்த
    மாத்திரத்திலேயே கண்ணில் நீர் பெருக அவனில் ஆழ்ந்து போவது.


    கடைசியில் இதை யாருக்குக் கூறலாம் யாருக்குக் கூறக்கூடாது என்பதை சொல்கிறார்.


    ஒரு சாஸ்திர உபதேசத்திற்கு நான்கு முக்கியமான அங்கங்கள் உண்டு. ( இது
    ஆரம்பத்திலேயே முதல் ஸ்கந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது )
    அவையாவன, இது என்ன, எதைப்பற்றி, இதைக் கேட்க தகுதியுடையோர் யார், இதன்
    பலன் யாது என்பதேயாகும்.


    இது கபிலோபதேசம் எனப்படும். சாங்க்ய தத்வத்தைப்பற்றியும் பக்தியோகத்தை
    பற்றியும் விவரிக்கிறது. இப்போது இதைக்கேட்க தகுதியுடையோர் யார் என்பதைப்
    பற்றிச் சொல்கிறார்.


    கபிலர் கூறியது.


    இதை துஷ்டன், வினயமில்லாதவன், கர்வம் கொண்டவன் , கெட்ட நடத்தை உள்ளவன்,
    டாம்பீகன், விஷயசுகத்திலும் உலக வாழ்க்கையிலும் பற்றுக்கொண்டவன் ,
    பக்தியில்லாதவன், பக்தர்களுக்கு விரோதியானவன் இவர்களுக்கு இதை
    சொல்லகூடாது.


    அப்படியானால் யாருக்குச் சொல்லலாம் ? அதற்கு விடை ,


    ஸ்ரத்தையுள்ளவன், பக்தயுள்ளவன், வினயமுள்ளவன், அசூயை இல்லாதவன்,
    பிராணிகளிடத்தில் அன்பு பூண்டவன், குருசுச்ரூஷையில் ஈடுபட்டவன்,
    உலகப்பொருள்களில் நாட்டம் இல்லாதவன், சாந்தமானவன், சுத்தமானவன் ,
    பகவானிடம் எதையும் விட அதிகமாக பிரியம் கொண்டவன், இவர்களுக்கு இதைக்
    கூறவேண்டும் என்கிறார்.


    இப்போது நான்காம் அங்கமான பலனைச் சொல்கிறார்.


    "ய ஏவம் ஸ்ருணுயாத் அம்ப, ஸ்ரத்தயா புருஷ: ஸக்ருத்
    யோவா அபிதத்தே மச்சித்த: ஸ ஹ்யேதி பதவீம் ச மே


    எவன் ஒருவன் இதை ச்ரத்தையுடன் என்னிடம் மனதை செலுத்தி ஒருதடவை
    கேட்கின்றானோஅல்லது உபதேசிக்கின்றானோ அவன் என்னை வந்தடைவான்
Working...
X