Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 4 adhyaya9,10,11 in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam


    ஸ்ரீமத்பாகவதம் -ஸ்கந்தம்4-அத்தியாயம் 9(தொடர்ச்சி) , 10,11


    துருவனின் மனம் தவம் செய்த பிறகு மோக்ஷத்தில்தான் நாட்டம் கொண்டது . ஆனாலும் பகவானின் ஆக்ஞையை ஏற்று நாடு திரும்பினான். இறந்தவன் திரும்பினது போல் புதல்வன் திரும்பி வருகையில் அரசன் ஆவலுடன் அவனை எதிர்கொள்ள விரைவாக நகரத்தில் இருந்து கிளம்பினான்.


    துருவனும் தந்தையைக் கண்டு அவரை வணங்கியபின் தாய்மார்களையும் வணங்கினான். பகவானின் பாதங்களைத் தொட்டு பாவங்களையும் பந்தத்தையும் அறவே ஒழித்த புதல்வனைக் கண்டு ஸுநீதி மனக்கவலை நீங்கியவளானாள். மனம் திருந்திய ஸுருசியும் அவனை வாழ்த்தினாள். நகரஸ்திரீகள் வழிமுழுவதும் வாத்சல்யத்துடன் மங்கள அக்ஷதை புஷ்பம் இவைகளைத் தூவி ஆசீர்வதித்தனர்.


    இங்கு மைத்ரேயர் சொல்கிறார்,
    யஸ்ய பிரஸன்னோ பகவான் குணை: மைத்ர்யாதிபி: ஹரி:
    தஸ்மை நமந்தி பூதானி நிம்னம் ஆப இவ ஸ்வயம்


    எவ்வாறு ஜலம் தானாகவே பள்ளத்தை நோக்கிச் செல்லுகிறதோ அதுபோல எவருடைய குணங்களினால் பகவான் ஹரி ப்ரீதியடைகிறாரோ அவரை எல்லா ப்ராணிகளும் வந்தனம் செய்கின்றன.


    நாளடைவில் துருவன் யௌவனம் அடைந்ததும் உத்தானபாதன் பிரஜைகளின் பிரியத்திற்குப் பாத்திரமான அவனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்தார். பின்பு வயோதிகம் அடைந்த உத்தான பாதன் வைராக்கியம் அடைந்து வனம் புகுந்தார்.


    அத்தியாயம் 1௦


    துருவன் சிசுமார பிரஜாபதியின் மகளான ப்ரமியை மணந்து அவள் மூலம் கல்பன் , வத்சரன்என்ற புதல்வர்களை அடைந்தான். வாயு என்ற இன்னொரு மனைவி மூலம் உத்கலன் என்னும் புதல்வனையும் அழகே உருவான் பெண்ணையும் அடைந்தான்.


    உத்தமன் விவாகம் செய்து கொள்ளவில்லை. ஒரு சமயம் வேட்டைக்குச் சென்ற போது இமயமலைச் சாரலில் ஒரு யக்ஷ்னால் கொல்லப்பட்டான். ஸுருசி தன் மகனைத் தேடி அலைந்து உயிர் நீத்தாள்.


    அதனால் கோபம் கொண்ட துருவன் யக்ஷர்களின் ராஜதானியாகிய அழகாபுரிக்குச் சென்று அங்கு அவனை எதிர்த்த குஹ்யகர்கள் என்னும் சேனையுடன் பயங்கரமாக சண்டையிட்டான். முப்பதாயிரம் குஹ்யகர்களின் அம்புமழையில் மறந்த போதிலும் வெளி வந்து அவர்களை வென்றான். பிறகு அழகாபுரியின் உள்ளே நுழைய முற்பட்ட போது குஹய்கர்களின் மாய அஸ்திரங்களால் துருவன் செயலிழந்து காணப்பட்ட போது ரிஷிகள் மகாவிஷ்ணுவை பிராத்தித்தனர்.


    அத்தியாயம் 11


    அதைக் கேட்ட துருவன் நாராயணாஸ்திரத்தை ஏவ மாய அஸ்திரங்கள் மறைந்தன. குஹ்யகர்கள் பெரும் அளவில் மாண்டனர். அப்போது துருவனின் பாட்டனாரான ஸ்வாயம்புவ மனு ரிஷிகளுடன் அங்கு வந்து துருவனைப் பார்த்துக் கூறினார்.


    "உன் சகோதரனைக் கொன்ற ஒருவனை தண்டிக்க ஒரு குற்றமும் செய்யாத இவர்களைக் கொன்றது பிசகு. ஹரியின் பக்தனான நீ எவ்விதம் இந்த பாபத்தை செய்யலாம்? காலம் என்பது எல்லாவற்றையும் அழிக்க வல்லது. மரணம் என்பது தெய்வ சங்கல்பத்தினால் ஏற்படுவது. காலன் எல்லோருக்கும் சமமானவன் . அவனுக்கு வேண்டுபவர் வேண்டாதவர் என்பதில்லை. அவரவர் கர்மாவின்படி மரணம் நிகழ்கிறது. .உன் சகோதரன் இறந்தது தெய்வ சங்கல்பம்.


    உன் மாற்றாந்தாய் சொல்லினால் புண்பட்டு சிறு வயதில் கானகம் சென்று பகவான் அருளைப் பெற்று மூவுலகிலும் சிறந்த பதவியை அடைந்தாய். உன்னுள் அவரைக் கண்டு ஞானம் பெற்று அறியாமையினால் உண்டான 'நான்' 'எனது' என்னும் எண்ணத்தை விடுவாயாக. ஞானம் பெற விரும்புபவன் கோபத்திற்கு இடம் கொடுக்கலாகாது.


    ருத்ரனுக்கு நண்பனான குபேரன் குஹ்யகர்களின் அரசன். அவர்களைக் கொன்றதன் மூலம் குபேரனுக்கு அபராதம் செய்துவிட்டாய். ஆகையால் குபேரனை வணங்கி அவனிடம் மன்னிப்பு வேண்டுவாயாக.
    இவ்வாறு கூறிவிட்டு மனு தன் இருப்பிடம் சென்றார்.
Working...
X