Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 4 adhyaya part 2 in tamil
    Courtesy:Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம் ஸ்கந்தம் 4-பாகம் 2


    கைலாய மலையானது சித்தியடைந்தவர்களும், கின்னரர் கந்தர்வர் அப்சரஸ்கள் இவர்கள் இருக்கும் இடம். அதன் சிகரங்கள் அதில் உள்ள ரத்தினங்களால் பல நிறங்களில் ஜ்வலிக்கின்றன. பலவித மரங்கள் கொடிகள் மற்றும் பிராணிகளை அங்கு காணலாம். மயில்களும் குயில்களும் கூவும் சப்தம், மதுவுண்ட வண்டுகளின் ரீங்காரம் இவைகளால் அந்த மலை நிரம்பியுள்ளது.


    உயர்ந்த மரக்கிளைகள் பறவைகளை வா வா என்றழைப்பது போல் உள்ளது. யானைகள் மரங்களின் கிளைகளினூடே செல்வது அந்த மரங்களே செல்வது போலவும், கண்ணுக்குத்தெரியாத அருவிகளின் சப்தம் காடே பேசுவது போல் தோன்றுகிறது.


    மந்தாரம் , பாரிஜாதம் ,ஸரலம், தமாலம், கதம்பம், மாலதி சம்பகம், முதலிய பூக்களின் மரங்களும், வாழை, மா, பலா, அரசு முதலிய மரங்களும், மூங்கில், கரும்பு முதலியவைகளும் நிறைந்த அந்த மலையில் உள்ள ஏரிகள் தாமரை, அல்லி முதலியவைகளின் மீது பறவைகள் பறக்கும் காட்சி ரம்மியமானதாக உள்ளது.


    மற்றும் மான்கள், குரங்குகள், காட்டுப்பன்றிகள், சிங்கங்கள் , புலிகள் கவரிமான்கள் முதலிய பிராணிகளும் காணப்படுகின்றன. சதிதேவி ஸ்னானம் செய்ததால் புனிதமாக்கப்பட்ட கங்கையால் சூழப்பட்டதும் ஆன அந்த இமயமலையைக் கண்டு தேவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.


    அடுத்து குபேரனின் அழகாபுரியைக் கண்டு அங்கு தங்க, ரத்தினமயமான் மாளிகைகளைக் கண்டு வியந்து அதைக்கடந்து சௌகந்திக வனத்தை அடைந்தனர். அதிலிருந்து வெகுதூரத்தில் ஓர் மிகப்பெரிய ஆலமரத்தைக் கண்டனர்.


    சிறந்த யோக நிலையமும் மோக்ஷத்தை விரும்புவர்க்கு அடைக்கலமும் ஆன அந்த மரத்தின் கீழ் கோபத்தை விட்ட யமனைப்போல் அமர்ந்திருக்கும் சிவபெருமானைக் கண்டனர்.


    அவரை பாகவதம் இவ்வாறு வர்ணிக்கிறது.


    சனந்தனர் முதலிய சாந்தமே உருவான யோகிகளாலும் குபேரனாலும் சேவிக்கப்பட்டு தபஸ்விகளின் சின்னமான விபூதி, தண்டம், ஜடை, மான்தோல் இவைகளுடன், சந்திர கலையையும் தரித்து விளங்கினார்.


    தர்பாசனத்தில் அமர்ந்து நாரதர் முதலிய ரிஷிகளுக்கு பிரம்மத்தைப் பற்றி உபதேசம் செய்கிறவராக , வலது தொடையில் இடது பாதமும் இடது முழங்காலில் இடது கையும் வைத்து, வலது கரத்தில் ஜபமாலையும் சின்முத்திரையும் தரித்து அமர்ந்திருந்த அவரைக்கண்டு தேவர்களும் முனிவர்களும் வணங்கினர்.


    பிரம்மதேவரைக் கண்டதும் தன் ஆசனத்தை விட்டு எழுந்து அவரை நமஸ்கரித்த சிவபெருமானைப் பார்க்கும்போது வாமனராக வந்து மகாவிஷ்ணு காச்யபரை தந்தை என்ற ஸ்தானத்தில் வணங்கியது போல் இருந்தது.


    சிவனைச்சுற்றி அமர்ந்திருந்த முனிவர்களும் சித்தர்களும் அதைக்கண்டு பிரம்மதேவரை வணங்கினர். அதை ஏற்றுக்கொண்ட பிரம்மா பின்வருமாறு பேசலுற்றார்.


    சிவன் சக்தி என்ற இரு ரூபங்களுக்கும் அப்பாற்பட்ட பிரம்ம ஸ்வரூபமாகத் தங்களைக் காண்கிறேன். புருஷார்த்தங்களை அடைய உங்களால் தக்ஷன் மூலமாக ஏற்படுத்தப்பட்டது அல்லவா யாக யக்ஞாதிகள்? கர்மபலத்தினால் பரந்தாமன் மாயையால் கட்டுண்ட மனிதர்களின் குற்றங்களை நீங்கள் பொறுக்கவேண்டும்.


    யக்ஞத்தின் பலனைத் தருபவரான உங்களுக்கு பாகம் அளிக்காமல் செய்யப்பட்ட தக்ஷனின் யாகம் பூர்த்தியடையுமாறு அருள வேண்டும். ஆயுதங்களால் அடிக்கப்பட்டு அங்கஹீனர்களான தேவர்களும் ருத்விக்குகளும் நலமடைய அனுக்ரஹம் செய்வீராக. யாகத்தில் எஞ்சியுள்ள பாகமெல்லாம் உமக்கு உரித்தாகுக. "


    அடுத்து சிவபெருமான் கருணைகூர்ந்து அனுக்ரஹம் செய்வதும், தக்ஷன் தவறுணர்ந்து மன்னிப்பு வேண்டுதலும், ஸ்ரீஹரியின் பிரசன்னத்தோடு யாகப்பூர்த்தியும் சொல்லப்படுகின்றன.
Working...
X