Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 5 adhyaya 5,6 in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத் பாகவதம் -ஸ்கந்தம் 5 அத்தியாயம் 5/6


    அத்தியாயம் 5


    ரிஷபரின் உபதேசம்


    இந்த உடல் சிற்றின்பங்களை நுகர்வதற்காக அன்று. எதனால் சித்தம் நிர்மலமாகி பிரம்மானுபவசுகம் கிடைக்குமோ அந்தத் தவத்தை செய்வீர்களாக.


    மகான்களின் சேவை மோக்ஷ வாசல். ஸ்திரீ சங்கம் அஞ்ஞான வாசல். மகான்கள் யார் என்றால், சமசித்தம், கோபமின்மை, சாந்தம், எல்லோரையும் நேசிக்கும் தன்மை இவை உள்ளவராவர்.


    ஆத்ம விசாரத்தில் ஈடுபடாது, உலக சுகங்களைக் கருதியே செயலாற்றும் மனிதர்கள் திரும்பத் திரும்ப பிறக்கிறார்கள். அறியாமை மனதில் உள்ளவரை கர்ம வினை தொடர்கிறது. இறைவனிடம் மனம் லயிக்கும் வரை பிறப்பிறப்பு என்பதற்கு முடிவே இல்லை.
    மனைவி மக்கள் சொத்து சுகம் இவைகளிடம் ஏற்படும் பற்றே ஹ்ருதயக்ரந்தி அல்லது மனதில் உண்மையை அறிய தடையாயிருக்கும் முடிச்சுகள்.இந்த முடிச்சுகள் அவிழ வேண்டுமானால் ஞானியாகிய குருவின் சேவை , அவருடைய அருள் இன்றியமையாதது .


    துறவு மனப்பான்மை, சுகதுக்கங்களை சமமாக பாவிப்பது, சுயநலமான கர்மங்களை விட்டொழிப்பது, தவம்,செயல்களை எல்லாம் பகவதர்ப்பணமாகவே செய்வது, பகவானைப் பற்றி கேட்டல், கூறுதல், பக்தர்களின் சேர்க்கை, யாரிடமும் விரோதம் இல்லாமல் இருப்பது, சம புத்தி , அமைதியான மனநிலை, இந்த்ரிய நிக்ரஹம், எல்லா உயிரிடத்தும் இறைவனையே காணுதல் இவை நான் என்ற உணர்வால் ஏற்பட்ட தடைகளை நீக்கும்.


    எங்கும் இறைவனை காண்பதால் தெளிந்த ஞானம் ஏற்படுகிறது. இதன் பின் விவேகத்தாலும் , விடாமுயற்சியாலும் நான் என்ற அஹங்காரத்தை அடியோடு அகற்ற வேண்டும்.


    பகவானையே விரும்புபவன், அவரை அடைவதையே பரம புருஷார்த்தமாக கருதுபவன், பிதாவாயின் புத்திரர்களையும்., குருவாயின் சீடர்களையும், அரசனாயின் பிரஜைகளையும் புத்தி புகட்டி தத்துவத்தை அறியச் செய்ய வேண்டும்..
    இதைக் கூறிய ரிஷபர் தன் நிலையை எடுத்துரைக்கிறார்.


    " இந்த என்னுடைய சரீரம் கர்ம வினையால் ஏற்பட்டதன்று. என் மனது சத்வ குணத்தால் நிரம்பியுள்ளபடியால் அதில் அதர்மத்துக்கு இடமில்லை. ஆதலால் என் புத்திரர்களான நீங்கள் அனைவரும் உத்தமனான உங்கள் தமையன் பரதனை பின்பற்றுவீர்களாக."


    இவ்விதம் கூறிய ரிஷபர் மேலும் சொல்கிறார்.
    "தாவரங்கள், பிராணிகள், மனிதர்கள், தேவர்கள் இவர்கள் படிப்படியாக உயர்ந்த ஸ்ருஷ்டியாவர். தேவர்களைக் காட்டிலும் உயர்ந்தவர் ப்ரஜாபதிகள். ருத்ரன், பிரம்மா இவர்கள் அவர்களுக்கும் மேலானவர்கள். இவர்கள் இருவரும் என் பக்தர்கள் ( அதாவது மகாவிஷ்ணுவின்) . நான் மகான்களின் பக்தன். இவர்கள் எனக்களிப்பது எதுவோ அது எனக்கு ஹவிர்பாகத்தைக் காட்டிலும் உயர்ந்தது . சொல் செயல் எண்ணம் எல்லாமே என்னுடைய ஆராதனையாக ஆனால் அவனுக்கு சரீர சம்பந்தம் இல்லை. "


    சுகர் கூறினார்.


    இதற்குப் பிறகு ரிஷபர் பரதனை பூமியை ஆளும்படி நியமித்து அனைத்தையும் துறந்து அவதூதராக உன்மத்தனைப் போல், விரித்த சடையுடன் , வெளியேறினார். மற்றவர் கண்களுக்கு ஊமையைப்போலவும் குருடனைப்போலவும் செவிடனைப்போலவும் உன்மத்தனைப் போலவும் காணப்பட்ட அவர் தேசம் முழுவதும் சஞ்சரிக்கையில் சிலர் அவரை பலவிதத்திலும் துன்புறுத்தியும் , தேகப் பற்று இல்லாமையால் எதுவும் அவரை பாதிக்கவில்லை. ஆயினும் இந்த உலகம் யோகிகளை புரிந்துகொள்வதில்லை என்று கண்ட அவர் அஜகரவ்ருத்தி என்னும் மலைப்பாம்பு போன்ற நிலையை அநுஷ்டித்தார். மற்றும் அனேக யோக பாவனைகளை அனுஷ்டித்து பகவானுடன் அபேத பாவனையை அடைந்தவராய் யோக சித்திகளை உடையவர் ஆனார். அஷ்டமாசித்திகக்ளும் அவரை வந்தடைந்தன. ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை


    அத்தியாயம் 6


    பரீக்ஷித், ஆத்மஞானம் அடைந்தவரான அவருக்கு இந்த சித்திகள் ஒரு தடையே இல்லை. அப்படி இருக்கையில் எதற்காக அவர் அவற்றை நிராகரித்தார் என்று வினவினார் .


    அதற்கு சுகர் பதிலளிக்கையில் , மனம் என்பது நம்பத்தகாதது. எவ்வாறு ஒரு வேடன் தான் பிடித்த மிருகத்தை கட்டவிழ்த்து விட விரும்ப மாட்டானோ அதுபோல யோகிகள் வசப்படுத்தின மனதை எந்த சலனத்திற்கும் உட்படுத்தமாட்டார்கள். ஏனென்றால் எப்பேர்ப்பட்ட முனிவர்களும் சலனத்திற்கு இடம் கொடுத்ததாக சரித்திரமே இருக்கிறதே என்று கூறினார்.


    இவ்வாறு ரிஷபர் நாடெங்கும் திரிந்து குடகுமலைக் காடுகளில் பித்தனைப் போல், வாயில் கற்களைப் போட்டு மென்று கொண்டு சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் அப்போது காற்றின் வேகத்தால் மூங்கில்கள் உராய்ந்து கடுமையான காட்டுத் தீ பரவ அதில் அவருடைய சரீரம் எரிந்து மறைந்தது.


    கலியுகத்தில் அர்ஹன் என்ற கொங்கு நாட்டரசன், அவனுடைய் பூர்வ கர்ம வாசனையினால் ரிஷபருடைய சரிதத்தைப் பற்றி கேள்வியுற்று அவர் வர்ணாஸ்ரம தர்மத்தைத் துறந்தவராய் இருந்தது அவருடைய நாத்திகக் கொள்கையை காட்டுகிறது என்றெண்ணி தன் தர்மத்தை விட்டு பிரஜைகளிடம் நாத்திகத்தைப் பரப்பினான்,அவனைப் பின்பற்றி பலர் வேத கர்மாக்களை விட்டுத் தனி மதத்தை ஸ்தாபித்தனர். (அதுதான் ஜைன மதம் என்று கூறப்படுகிறது.)


    இந்த அவதாரம் ரஜோ குணம் மேலிட்டவர்க்கு கைவல்ய மார்க்கத்தை விளக்குவதற்காக ஏற்பட்டது.
    சுகர் மேலும் கூறினார்..


    " உங்களுக்கும் யாதவர்களுக்கும் ரட்சகனும், குருவும், தெய்வமும் நண்பனுமாக விளங்கிய பகவான் வேலைக்காரனுமாக அல்லவா இருந்தான்! முகுந்தன் தன்னை நாடுவோர்க்கு முக்தியைக் கொடுத்தாலும் இந்த மாதிரி பக்தியை அவ்வளவு எளிதில் கொடுக்க மாட்டான்.


    சிற்றின்பங்களில் அழுந்திக் கிடக்கும் உலகிற்கு அறிவுறுத்தி எந்த ரிஷபதேவர் பயமற்ற ஆனந்தமான ஆத்ம உலகைக் காட்டி அருளினாரோ அவருக்கு நமஸ்காரம்.,"




    Srimad Bhagavatam skanda 5 adhyaya 7,8 in tamil






    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத் பாகவதம் - ஸ்கந்தம் 5- அத்தியாயம் 7,8


    அத்தியாயம் 7- பரதோபாக்யானம்
    மஹா பாகவதரான பரதர் பூமியை பரிபாலிக்க வேண்டியது பகவத்சங்கல்பம் என்று உணர்ந்தவராய் அந்த கடமையை நிறைவேற்றுவதில் முழு மனத்தராய் விச்வரூபரின் பெண்ணான பஞ்சஜனியை மணந்துகொண்டார் . அவளிடம் தனக்கு நிகரான ஐந்து புத்திரர்களைப் பெற்று தருமம் தவறாதவராக பிரஜைகளை ஒரு தந்தையைப்போல் பரிபாலித்து வந்தார்.


    அவருக்கு வாசுதேவரிடத்தில் பக்தியானது மேன் மேலும் வளர்ந்து வர ஒரு கட்டத்தில் கர்மத்திலிருந்து விடுதலையை நாடி தன் புத்திரர்களுக்கு ராஜ்ஜியத்தையும் செல்வத்தையும் பிரித்துக் கொடுத்து விட்டு அரண்மனையிலிருந்து வெளியேறி புலஹாச்ரமம் அடைந்தார்.


    அங்கு ஏகாந்தமாக இருந்து கொண்டு பகவானை ஆராதிப்பவராக பற்றற்று பரம சாந்தராக இருந்து பரமானந்தத்தை அனுபவித்தார். இவ்விதம் இடையறாத பகவதாராதனையால் தியானத்தில் ஆழ்ந்து ஆனந்த வெள்ளத்தில் புத்தியும் முழுகிப்போக தன்னையும் தன் ஆராதனையையும் கூட மறந்தார்.
    பிறகு மான்தோல் ஆடையுடன் செம்பட்டை பாய்ந்த ஜடையுடன் ப்ரகாசிப்பவராய் பொன் போலொளிரும் பரம புருஷனை சூரிய மண்டலத்தில் சூரிய ரிக் மந்திரத்தால் வழிபட்டார்.


    'பரோ ரஜ: ஜாதவேத: தேவஸ்ய பர்கோ மனஸா இதம் ஜஜான. ஸுரேதஸாத: புனராவிச்ய சஷ்டே ஹம்ஸம் க்ருத்ராணம் ந்ருஷத்ரிம் கிராம் இம: '
    இதன் பொருள்,
    'பரம தேஜஸ் வடிவமான சூர்யநாராயணரும் ( சூரியனாக வடிவெடுத்த பகவான் நாராயணன்) , ரஜஸ் கலக்காத சுத்த் சத்வமாணவரும், கரம பலன்களைத் தருபவரும் , இந்த உலகை சங்கல்பமாத்திரத்தில சிருஷ்டித்தவரும், பின் அந்தர்யாமியாக ஜீவர்களை ரக்ஷிப்பவருமான அந்த ஜ்யோதியை சரணடைவோமாக.'


    (சாந்தோக்ய உபநிஷத்,' ய ஏஷோ அந்தராதித்யே ஹிரண்மய: புருஷ: த்ருச்யதே ஹிரண்யச்மச்ரு, ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வம் ஏவ ஸுவர்ண:,' இதன் பொருள், ஆதித்ய மண்டலத்தில் ஒரு பொன் மயமான புருஷன் காணப்படுகிறான். பொன் மயமான தாடி, பொன்மயமான கேசம் , நகநுனி வரை எல்லாம் தங்க மயம்)


    அத்தியாயம் 8.


    ஒரு சமயம் பரதர் மகாநதியில் நீராடிவிட்டு நித்ய நைமித்திக கர்மங்களை முடித்து பிரணவ ஜபம் செய்துகொண்டு நதிக்கரையில் அமர்ந்திருந்தார். அப்போது ஒரு பெண்மான் நீர் அருந்த அங்கு வந்தது. அது நீர் அருந்தும்போது சிங்கத்தின் கர்ஜனை கேட்டு பயந்து அக்கரையில் தாண்டி குதித்தது. அப்போது கர்ப்பமாயிருந்த அதன் கருவிலிருந்த சிசு நழுவி நதியில் விழுந்தது. அந்த மான் பயத்தினாலும் சோகத்தினாலும் ஒரு குகையில் வீழ்ந்து இறந்தது.


    நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்படும் மான்குட்டியைக் கண்ட பரதர் கருணை கொண்டு அதைக் காப்பாற்றி ஆச்ரமத்திற்குக் கொண்டுபோனார்.


    எல்லாவற்றையும் துறந்து ஆஸ்ரமம் வந்த பரதர் அந்த மான் குட்டியிடம் அளவிலாத அன்பு கொண்டு அதை பராமரிப்பதிலும் போஷிப்பதிலும் நாட்டம் உள்ளவராக சிறுகச் சிறுகத் தன் நியமங்களையும் மறந்து அந்த மான் குட்டியிடம் பற்றுக்கொண்டு சம்சாரி ஆகிவிட்டார்.


    அதை காணாத போது பரிதவிப்பதும் அதைக்கண்டபோது ஆசையுடன் குழந்தையைப் போல் கொஞ்சுவதுமாக யோகானுஷ்டானத்தில் இருந்து நழுவியவரானார்.


    மான்குட்டி ரூபத்தில் வந்த அவர் பிராரப்த கர்மம் அவரை ஆத்ம சிந்தனையை இழக்கும்படி செய்துவிட்டது. இதற்கிடையில் எலிவளையில் பாம்பு நுழைவதைப் போல் மரணகாலம் வந்து விட்டது அப்போது கூட அந்திம ஸ்ம்ருதி அந்த மான் குட்டியைப் பற்றியே இருந்ததனால் அடுத்து மான் பிறவியை அடைந்தார்.


    அந்தப்பிறவியிலும் முன் ஜன்ம நினைவு உள்ளவராக மான் ஜன்மம் வந்த காரணத்தை உணர்ந்து ஆசையை ஒழித்து காய்ந்த புல்லையும் இலையையும் தின்று தன் முடிவு காலத்தை எதிர்பார்த்திருந்தார். அந்திம காலம் வந்தபோது புண்ணியமான நதியில் தன் மான் உடலை நீத்தார்.


    அடுத்து ஜடபரதரின் வரலாறு.
Working...
X