Announcement

Collapse
No announcement yet.

Concise Teachings of Gita

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Concise Teachings of Gita

    Concise Teachings of Gita
    யோகேஸ்வரன் கிருஷ்ணன்
    J.K. SIVAN


    எங்க அப்பா காலத்து கீதை புஸ்தகத்திற்குள் எப்போதோ நான் வைத்திருந்த ஒரு கிருஷ்ணன் படம் கண்ணில் பட்டது. யோகேஸ்வர, த்யான கிருஷ்ணன். கண்ணைக் கவர்வதால் தானே அவன் கண்ணன். ரொம்ப பிடித்தது. அவனைப் பற்றி கொஞ்சம் சொல்ல ஆசை தோன்றியது.


    கிருஷ்ணன் வேறு விஷ்ணு வேறு அல்ல. ஆயிரம் பெயர்களில் பெயர் தான் வேறு. ஆயிரம் நாமங்களால் வணங்கப்படும் ஒரே தெய்வம். 'ஈஸ்வர: பரம: கிருஷ்ணா:' நாம் பார்க்கும் பிரபஞ்சத்திலும் அதற்கு அப்பால் இருந்தும் எல்லாவற்றையும் கண்காணித்து காக்கும் ஒரு சக்தி.


    paratamam nanyat kincid asti dhananjaya, mayi sarvam idam protam sutre mani-gana iva'


    "என்னிலும் உயர்ந்த உண்மை இல்லையே. நான் தான் எல்லாமுமே. எல்லாரும் என்னையே சார்ந்து அல்லவோ இருக்கிறார்கள்'' என்கிறார் கிருஷ்ணனே கீதையில்.


    ஒரு நெருக்கமாக கட்டிய ஹாரத்தில் தங்கம், வெள்ளி, வைர, மரகத, முத்துமணிகள் தானே தெரிகிறது. அவற்றின் உள்ளே இருந்து அவற்றை எல்லாம் இணைக்கும் கம்பியோ கயிறோ தெரியவில்லையே. அது போல நான் தான் உள்ளே இருந்து கொண்டுஎல்லாவற்றையும் இணைக்கும் வெளியே தெரியாத கம்பி'' இதுக்கு மேலே எப்படி சுருக்கமாக நச்சென்று சொல்லமுடியும்.


    na me viduh sura-ganah prabhavam na maharshayah, aham adir hi devanam maharshinam ca sarvasah


    " அக்னி, வாயு, இந்திரன், சந்திரன், முப்பத்து முக்கோடி தெய்வங்கள் எதை வணங்கினாலும் அவற்றை இயக்கும் என்னையே (கிருஷ்ணனையே ) அது சேரும். அதாவது கிருஷ்ணன் தான் 'சர்வ ஆதார சக்தி'. கடவுள் என்று எழுதவேண்டிய சந்தர்ப்பத்தில் எல்லாம் ''என் கிருஷ்ணன் '' என்று நான் எழுதுவது இதனால் தான்.


    விஷ்ணுவின் அவதாரங்கள் கார்யார்த்தமானவை. அவர் மகா விஷ்ணு, கர்போதகசாயி விஷ்ணு, க்ஷீரோதகசாயி விஷ்ணு என்றும் காணப் படுபவர். எந்த விஷ்ணுவாக வர்ணிக்கப் பட்டாலும் நாராயணன் ஒருவரே. கிருஷ்ணன் என்று சுலபமாக அறியப்படுபவர்.


    ''சச்சிதானந்த விக்ரஹ'' என்று சொல்கிறோமே எதனால்? கிருஷ்ணனின் சரீரம் சத் (நிரந்தரம்), சித் (பூரண ஞானம்) ,ஆனந்தம் (எல்லையிலாத இன்பம்) இவற்றின் மொத்த உருவகம்.


    நாம் எல்லோரும் அவரவர் பூர்வ ஜென்ம கர்ம பலனுக்கேற்ப உடல் தரிக்கிறோம். பிறக்கிறோம். உலகில் பிறக்கும்போது உலகத்தின் காரணமான பஞ்ச பூதங்களிலிருந்தே உருவாகிறோம் . வாழ்ந்தபின் அதிலேயே கரைகிறோம். இது உடல் பற்றி மட்டுமே. உடலுக்கு உள்ளே ஒன்று இருக்கிறதே ஆத்மா, அது இதில் சேராதது. சுதந்திரமானது. அது ஒன்று தான் உண்மையில் நமது அடையாளம். என்றும் மாறாதது. உடல் மாறக்கூடிய உருவம் கொண்டது, மரணம் எய்துவது. ஆத்மா உருவமற்ற, மரணமற்ற ஒரு பாகம் நம்மில், நம்முள். அதன் உண்மையான தன்மை தான் ''சத், சித், ஆனந்தம்''. எனவே உடல் அசத், அசித், நிரானந்தம் கொண்டது என்று இப்போது புரிகிறதா? புரிந்தால் நான் ஏதோ ஒருவழியாக சரியாக சொல்லிவிட்டேன் என்று அர்த்தம்.


    கிருஷ்ணன், அழியாத ஆத்மாவையே உருவமாக கொண்டவன். உலக வியவஹாரங்களில் சம்பந்தப் படாதவன். ஜனனம் மரணம் அற்றவன். இது ஒன்றே கிருஷ்ணனை மற்ற முப்பத்தி மூன்று கோடி தேவதைகளிலிருந்து தனித்து காட்டுகிறது. இந்த பெரிய கும்பல், தேவதைகள், நம்மைப் போன்றவர்கள் தாம் ஒரு வகையில். உருவம் உடல் கொண்டவை. மேலும் ஒரு சில குறிப்பிட்ட அதிகாரங்கள், சக்திகள் கொண்டவர்கள். பரம்பொருள் என்று ஈடுகட்ட முடியாது.


    மேலே சொன்னபடி, கர்ம பலனுக்கேற்ப இந்த பூமியிலோ, அல்லாத எந்த உலகிலோ, தோன்றும்போது, சத்வ குணம் அதிகம் காண்பின், அப்படி பிறந்தவர்கள் மனிதரை விட உயர்ந்த பதவிகளை அடைபவர்கள். தேவர்கள். தேவதைகள். இந்த தேவதைகள் எல்லோருமே ஒரு வித எல்லைக்குட்பட்ட ஸ்தானம் வகிப்பவர்கள். இந்திரன், கணபதி, பிரம்மா ஆகியோர் அந்தந்த ஸ்தானத்தில் வரையறுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தான் அந்தந்த இந்திர ப்ரம்ம லோக பதவி, தலைமை வகிப்பவர்கள். என்றைக்கும் சாஸ்வதமல்ல. முடிவற்றதல்ல.


    அப்படி சத்வ குணம் ரொம்ப இல்லாத, 'மாயையில் கட்டுண்ட' மற்றவர்களாகிய நாம் பின் தங்கிய நிலையில் உள்ளோம். ரஜஸ், தமஸ், ஜாஸ்தி நம்மிடம். இது பற்றி கீதை என்ன சொல்கிறது?:


    brahma-bhuvanal lokah, punar avartino 'rjuna, mam upetya tu kaunteya, punar janma na vidyate


    " அர்ஜுனா, இந்த பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த லோகமான பிரம்ம லோகம் முதலாக, அதல பாதாள லோகம் வரை எல்லாமே துன்பம் வசப்பட்டவை தான். மாறுகின்ற ஜனன மரண சம்பந்தமானவை. ஆனால் என்னையே கதி என்று சரணடைந்தவன் பிறவியற்றவன்'' - கிருஷ்ணன் கீதையில்.


    பகவானை இதற்கு மேல் எப்படி விளக்குவது? . பகவான் கிருஷ்ணன் காலத்திற்கு அப்பாற்பட்டவர். அக்னி, கணேசர், சுப்ரமணியம் ஆகிய தெய்வங்களுக்கும் ஒரு கல்ப கால வரையறை உண்டு. .கல்பம் என்றால் நமது கணக்குப்படி எத்தனை வருஷம் தெரியுமா? 4,320,000,000 வருஷங்கள்!! 2ஜி கிஜி என்று தான் இவ்வளவு பூஜ்யங்கள் நமக்கு தெரியும்.


    பிரபஞ்சம் சிவபெருமானால் முடியும்போது வேறு பிரம்மா தேவையாகிவிடுவார். கிருஷ்ணன் அஜா : பிறப்பில்லாதவன். 'அஜோ பி ஸன் அவ்யயாத்மா '' மற்ற தேவதைகளுக்கும் உப தெய்வங்களுக்கும் பிரத்தியேக பூத உடல் உண்டு.


    இதோ இந்த ஒரு வரியில் பகவான் யார் என்று புரியும் :
    'அநாதிர் ஆதிர் கோவிந்தா, சர்வ காரண- காரணம்'' anadir adir govinda, sarva karana-karanam


    பகவான் கிருஷ்ணன் பூரண ஆனந்தம் என்பதன் உருவம். ஆதி அந்தம் இல்லாதவன். ஆனாலும் அனைத்துக்கும் ஆதாரமானவன். வேதாந்த சாரமானவன். ''ஜன்மாதியஸ்ய யதத்' - என்ற பொருள் படும்' எல்லா ஜீவன்களுக்கும் மூல காரணமானவன். கீதையில் இதையே கிருஷ்ணன் சொல்லும்போது '''அஹம் ஸர்வஸ்ய ப்ரபவோ, மத ஸர்வம் ப்ரவர்த்ததே, இதி மத்வ பஜந்தே மாம், பூத பாவ சமன்விதா ' (aham sarvasya prabhavo, mattah sarvam pravartate, iti matva bhajante mam, bootha bhava-samanvitha என்ன அர்த்தம்?


    "நான் தானே ஐயா எதற்குமே எல்லாவற்றிற்குமே முதலும் மூலமும். இதை உணர்ந்தவன் தான் ஞானி . ஆகவே என்னை முழு மனதோடு பூரணமாக தொழுது பணிகிறான்."


    எத்தனையோ தெய்வங்களை, தேவதைகளை வழிபட்டாலும், வணங்கினாலும், அவை அத்தனையும் க்ரிஷ்ணனனையே சேரும்.--- நாராயண உபநிஷம்.


    விசாலமான நோக்கு இன்றி, தனக்கு விருப்பமானதை மட்டுமே சிறந்ததாக நமது வழிபாட்டை அதை சார்ந்ததாக ஆக்கிக் கொள்கிறோம். நாம் வழிபடும் தேவதை, உப தெய்வமே, எல்லாவற்றிலும் மிக உயர்ந்தது என தம்பட்டம் அடிக்கிறோம். இதைப்பற்றி கிருஷ்ணன் சொல்வது என்ன என்று அறிய கீதையைப் புரட்டுவோம்:


    antavat tu phalam tesam, tad bhavaty alpa-medhasam, devan deva-yajo yanti, mad-bhakta yanti mam api'' - அதாவது நமது "சிற்றரிவுக் கெட்டியபடி மேற்கொண்ட தெய்வ வழிபாடு, அப்போதைக்கு தேவையான சில பலன்களை தரலாம். அவை எல்லை யற்றவையோ, நிரந்தரமானவையோ அல்ல. வழிபடும் அந்தந்த உப தெய்வங்களின் சக்திக்குட்பட்ட லோகத்தில், கிரகத்தில் தற்காலிக பலனை பெறலாம். ஆனால் என்னை வழிபட்ட பக்தன் என்னை, என் வாசஸ்தலத்தையே
    நிரந்தரமாக அடைகிறான்.'' என்ன ஒரு அழுத்தமான காரண்டி கொடுக்கிறார் கிருஷ்ணன்!


    எதற்காக இந்த வழிபாடு என்பதை ஸ்ரீ கிருஷ்ணனே விளக்குகிறாரே : ''காமைஸ் தைஸ் ஹ்ரித ஞானா ப்ரபத்யந்தே அன்ய தேவதா'' (kamais tais tair hrita-jnanah, prapadyante 'nya-devatah).
    அர்த்தம்:
    "ஏன் மற்ற ஏனைய உப தெய்வங்களையும் தேவதையும் நாடி வணங்குகிறார்கள் என்றால் அவர்களது புத்தி, மனம் ஆகியவை ஏதோ ஒன்றின் நாட்டத்தில் வசப்பட்டு ஒரு ஈர்ப்பினால் திசை திரும்புகிறது என்பது புரியும்.'' .


    ஏதோ ஒரு கோவிலுக்கு போகிறோம். அங்கே சில பக்தர்களிடம் '' ஐயா நீங்கள் இந்த ஆலயத்திற்கு சாமி கும்பிட வந்ததற்கு காரணம் ஏதாவது உண்டா?'' என கேட்டால் வித விதமான பதில்கள் (அடி கூட!) வரிசையாக வந்து விழும். மொத்தத்தில் அவர்கள் எல்லோருமே எதையோ எதிர்பார்த்து வந்ததை நிரூபிக்கும்.


    ''அதுவா, எங்க வீட்டிலே என் பிள்ளை சுந்தாவுக்கு காலேஜ் சீட் கிடைக்கணும்னு வேண்டிக்கொண்டு வந்தேன்''
    என் தம்பி IAS எழுதறான் பாஸ் ஆகணும்''
    '' பெண்ணுக்கு இந்த தை லேயே கல்யாணம் நிச்சயம் ஆகவேண்டாமா''
    என் அக்கா பொண்ணுக்கு நல்ல கணவனா வரணும்''
    '' இங்கே 7 தடவை வந்தால், கடன் தொல்லை தீருமாமே. ஆபிஸ்லே ஏகப்பட்ட கடன்''
    ''இந்த வருஷமாவது ப்ரோமோஷன் வரும்படியான பகவான் பண்ணனும். மூணு நாலு வருஷமாக இழுத்துண்டே போறதே ''-- இதெல்லாம் சில உதாரணங்கள் தான். இது போன்று தாம் வணங்கும் கடவுளை ஏதோ ஒரு ஆவல், காரியசித்தி, திருப்தி அடைவதற்காகவே நெருங்குவது புரியும். காணிக்கை செலுத்தினால் காரியம் ஆகும் என்ற வழக்கம் எப்படியோ வந்துவிட்டது. லாட்டரியில் ஜெயிக்கக்கூட பிள்ளையாரை வேண்டுபவர்கள் எத்தனையோ பேர். இந்த மாதிரி வழிபாட்டினால் பயன் இல்லை.


    நாம் அனுபவிக்கும் சுக துக்கங்கள் நமது கர்ம பலனை அனுசரித்தே நேர்கிறது. அதிலிருந்து விடுபட பல பிறவிகள் தேவை. தலைமுடி கொடுத்தோ, தேங்கா உடைத்தோ, தரையில் புரண்டோ, எதையோ காணிக்கையாக போட்டால் தீரும் விஷயமா இது.? ஒன்று நிச்சயம். அப்போதைக்கப்போது தாற்காலிக சந்தோஷம், மனத் திருப்தி ஏற்படும். இது கானல் நீர் வகை. நிரந்தரமாக தாகத்தை தீர்க்காது.


    பாவம் பிள்ளையாரையோ, முருகனையோ, எந்த தெய்வத்தையோ, அனாவசியமாக நமது IAS பற்றியோ, உத்தியோகம், லாட்டரி பற்றியோ அக்கறை கொள்ள எதிர்பார்ப்பது சிறு பிள்ளைத்தனம். அவ்வளவுதான். விக்ரஹ ஆராதனையே நமது மனம் அருவமான பரம்பொருளிடம் ஈடுபட முதல் படி. இஷ்ட தெய்வ வழிபாடு. நிச்சயமாக நாம் வழிபடும் தெய்வங்கள் கட்டாயம் நம்மை பரம்பொருளிடம் சேர்க்கும் தன்மை உடையவர்கள் தான்.சந்தேகமே வேண்டாம்.


    வேதங்கள் 64 நிலையிலான ஸ்தானங்களை குறிப்பிடுகிறது. அவற்றில் நமக்கு அனுபமாவது மூன்று மட்டுமே. படிப்படியாக மேலே நம்மில் உயர்ந்தோர், அங்கங்கே தகுதிக்கேற்ப இருப்பதை காணலாம். அவர்களுக்கும் அங்கே எது வரை என்று ஒரு காலவரையறை, முடிவு உண்டு.


    மனிதர்களை 4, 00,000 வகையாக படிப் படியாக உயர்ந்த ரக மனிதர்களாக நூல்கள் காட்டுகிறதே. படிப்படியாக உயர்வது இதில் தான். இதில் நாம் எங்கு இருக்கிறோமோ? , நமக்கு மேலே எத்தனையோ, கீழே எவ்வளவு பேரோ,? வானர, கந்தர்வ, அப்சர, கிம்புருஷ, கின்னர, யக்ஷ, ராக்ஷச, பைசாச, --- வகைகள் புரிகிறதா? உச்சாணி மேல் தட்டிலே பிரம்மா!


    இந்த பிரபஞ்சத்தில் (universe ) ஈரேழு பதினாலு உலகங்கள் கீழேயும் மேலேயுமாக. நமது பூமி இதில் நடுவில் எங்கேயோ இருக்கிறது. அங்கங்கே அதற்கேற்ற மனித வகைகள். அவற்றின் பெயர்கள் அவரவர் தமோ, ரஜஸ், சத்வ குணத்திற்கேற்ப மேலே சொன்ன பெயர்களாக இருக்கலாம். யார் கண்டார்கள்!


    தியானம் தான் நம்மால் செய்ய முடிந்தது. நாம் ரிஷிகளல்ல. தவம் செய்ய முடியாது சார். தியானம் மூலமாகவே நாம் மேம்பட முடியும். அது உள்ளத்தை சுத்திகரிக்கிறது. இறைவனைப் பற்றிய உணர்வு உள்ளே தங்க உதவுகிறது. சூக்ஷ்ம சரீரம் மூலமாக் நாம் உயர்ந்த ஸ்தானங்களுக்கு போக இயலும். சூக்ஷ்ம சரீரம் என்பது,உடலற்ற, வெறும் மனது, புத்தி, ஸம்ஸ்காரத்தோடு இணைந்த உணர்வு, வாசனை, கலந்த 'நாம்'. உடலில்லாத போதும் உடலோடு வியாபிப்பது போன்ற நிலை. பேசுவது, பார்ப்பது, நுகர்வது, போன்ற புலனுணர்வுகள் அனுபவமாகத் தோன்றுகின்ற நிலை.


    ஒரு இடத்தில் கீதையில் கிருஷ்ணன் ' yanti deva-vratan deva''---என்கிறார். அதாவது "எந்த தேவதையை வழிபட்டாலும் அவர்களை, அவர்களிருக்கும் இடத்தை அடையலாம்," என்கிறார். இது சாதாரணமாக நாம் கோவில்களில் சாமி கும்பிடுகிறோமே அது அல்ல. '' எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு. உனக்கு இதை கொடுக்கிறேன்'' சமாசாரம் அல்ல. தேவர்களை, தேவதைகளை வழிபடுபவன் தன்னை முழுதும் இழந்து சரணடைய வேண்டும். சிவனை இவ்வாறு வணங்குபவன் கைலாச பதவி அடைகிறான். அங்கு அவன் பெறும் சுகம் பூமியில் அவனுக்கு முந்தைய பிறவியில் கிடைத்தவிட பல மடங்கு அதிகமானது. உயர்ந்தது. ஆனால் அது சாஸ்வத மல்ல. ஆகவே தான் நாம் புரிந்து கொள்ளவேண்டியது: ''நிஜமிருக்கையில், எதற்கு நிழலைத் தேடவேண்டும்? பொன்னான நேரம் பயனற்றதாக ஏன் போகவேண்டும்?''


    கீதையில் கிருஷ்ணன் சொன்னது : '' மனுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்சித் யததி சித்தயே '' -- பல்லாயிரம் மக்களில் யாரோ ஒருவன் தான் செய்வன திருந்தச் செய்பவன் ஆகிறான்.


    அர்ஜுனன் வெறும் க்ஷத்ரியன், போர் புரிபவன் என்று தப்பான எடை போடவேண்டாம். அவன் ஒரு சிறந்த தவ வலிமை படைத்த யோகி. இல்லையெனில் எப்படி அவனுக்கு போர்க்களத்திலும் கிருஷ்ணன் மேல் அவ்வளவு பக்தி?'' அவனைப்போலவே நாமும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டே இறைவனையும் த்யானிக்க முடியுமே. பகவத் கீதையில் புத்தி நாட்டம் கொள்ளவேண்டும். தத்தவங்களை புரிந்துகொள்ள ஆர்வம் வேண்டும். பிறகு மற்றதெல்லாம் கை கூடி வரும். தனக்குள்ளே ஆயிரம் கேள்விகளை சிந்தித்து அவற்றிற்கு விடை தேடுவதே ஆத்ம சிந்தனை. உள்ளுணர்வில் பரமாத்மாவே விடை காட்டிக் கொடுப்பார்.


    இன்னும் நிறைய சொல்லலாம்.
Working...
X