Announcement

Collapse
No announcement yet.

Gracing a bhakta -Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Gracing a bhakta -Periyavaa

    Gracing a bhakta -Periyavaa


    பெரியவா ஆந்த்ராவில் சித்தூர் மாவட்டத்தில் முகாம். அங்கு பெரியவாளை தர்ஶனம் செய்ய வந்த பக்தருக்கு பக்கத்திலிருக்கும் தன்னுடைய ஊரிலும் பெரியவாளுடைய திருப்பாதம் பதிய வேண்டும் என்று ஆசை.


    மெல்ல தன் வேண்டுகோளை விடுத்தார்.....


    "பெரியவா....இங்கேர்ந்து மூணு மைல் தூரந்தான் நாங்க இருக்கும் ஊர்...அங்க இருக்கற ஜனங்கள் பெரியவாளை தர்ஶனம் பண்ண ரொம்ப ஆவலா இருக்கா....."


    "நீ அழைச்சிண்டு போறியா? அப்டீன்னா....வரேன்! நீ ஒரு கார்யம் பண்ணு. இன்னிக்கி ராத்ரி இங்கியே தங்கிக்கோ! நாளைக்கு கார்த்தால என்னை அழைச்சிண்டு போ!..."


    கூட வந்த நண்பரிடம் பெரியவா வரும் விஷயத்தை சொல்லி, ஊரில் ஏற்பாடு பண்ணச் சொல்லி அனுப்பினார்.


    பக்தர் பாவம் ஏதோ ஒரு வேகத்தில் தன் ஆசையை சொல்லிவிட்டாரே ஒழிய, அவர் இருக்கும் ஊருக்கு பாத யாத்ரையாக போகணும் என்றால், பெரியவா பத்து மைல் அதிகமா நடக்கணும். பெரியவாளை ரொம்ப ஸ்ரமப்படுத்தறோமே! என்ற குற்ற உணர்ச்சியோடு இருந்தார்.


    போறாத குறைக்கு, பாரிஷதர்களும், சில பக்தர்களும் " என்ன ஒய்! ஒம்ம ஆசைக்கு, பெரியவாளை ரொம்ப படுத்தறேளே!..." என்று கோபித்துக் கொண்டார்கள்.


    பாவம். பெரியவா குழந்தை மாதிரி "என்னை அழைச்சிண்டு போறியா?" என்று கேட்ட அழகை ரஸிப்பதா, அல்லது அதிக தூரம் அவரை ஸ்ரமப்படுத்தி நடத்தி அழைத்துக் கொண்டு போவதற்காக நொந்து கொள்வதா என்று தெரியவில்லை. ஆனால் பெரியவா உண்மையான அன்பை மட்டுமே பார்ப்பவர் இல்லையா? அந்த பக்தரிடம் ரொம்ப ஸ்நேக பாவத்துடன் பேசிக் கொண்டிருந்தார்.....


    "ஒனக்கு தெரியுமோ? நா.......இப்போ மடத்துப் பொறுப்புலேர்ந்து முழுக்க வெலகிண்டுட்டேன்.... அதுனால எனக்கு இப்போ இந்த ரிக்க்ஷாவும், ரெண்டு பாராக்காராளையும் குடுத்திருக்கா....."


    [ஊழல் மிகுந்த அரசியல்வாதிகளுக்கும், முக்யஸ்தர்களுக்கும் "Z" செக்யுரிட்டி, ஓய்வு பெற்ற பின்னும்! ஆனால், இந்த உலகமே நன்றாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு க்ஷணமும் பாடுபடும் மஹா மஹா பெரியோனுக்கு ரிக்க்ஷாவும், ரெண்டு பாராவும்! எளிமை எளிமை என்று பேசுகிறோமே, இதோ இதுதான் எளிமை!! இதைப் படிக்கும் போது கூட, அழுகையை அடக்க முடியாது]


    பக்தரின் கண்கள் குளமாயின.


    "ப்ரபோ! என்னையும் ஒரு பொருட்டா மதிச்சு கொழந்தை மாதிரி இப்பிடிப் பேசிண்டு இருக்கேளே !.." மானஸீகமாக புலம்பினார்.


    மறுநாள் காலை ஒன்பது மணிக்கு கிளம்பி, கரடுமுரடான பாதையில் நடந்தார்கள். ஸூர்யன் பெரியவாளை தர்ஶிக்கும் ஆசையில் முழு வேகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான். அதனால் கூட வந்தவர்களின் உக்ரமான பார்வை வேறு, பக்தரை தஹித்தது.


    "ஒனக்கு கூட வழி புதுஸ்..ஸா இருக்கும் போலருக்கே!..."


    சிரித்துக் கொண்டே கேட்டார்.


    உண்மைதான். நடந்து போகும் பாதை புதுஸோ புதுஸுதான்.


    "பெரியவா தங்கிக்க நம்மாத்துலேயே ஏற்பாடு பண்ணியிருக்கேன்...."


    "ஒங்க ஊர்ல புதுஸ்ஸா கட்டி, குடுத்தனம் வராத வீடு எதாவுது இருந்தா சொல்லு..நா...அங்க தங்கிக்கறேன்"


    பக்தருக்கு பொறி தட்டியது! மேனி சிலிர்த்தது! பக்த பராதீனன், பக்த வத்ஸலன் என்ற நாமங்கள் இதோ காஷாயம் அணிந்து தன்னுடன் நடந்து கொண்டிருக்கிறது! காரணம்?


    அவர் ஊரில் ஒரு முதலியார் பெரியவாளிடம் ரொம்ப பக்தி பூண்டவர். பெரியவாளை தர்ஶனம் பண்ண முடியவில்லையே என்று எப்போதும் ரொம்ப ஏங்குவார். வயஸானவர். மஹா பக்தரான அந்த முதலியார் அப்போது ஒரு வீடு கட்டி க்ருஹப்ரவேஸம் செய்ய நாள் குறித்துக் கொண்டிருந்தார். பக்தரின் வீட்டுக்கு பின்பக்கம்தான் கட்டியிருந்தார். பெரியவா புது வீடு என்று கேட்டதும், பக்தரின் கண் முன் முதலியார் வந்து நின்றார்.


    "இருக்கு பெரியவா! புது வீடு இருக்கு!..."


    ஸந்தோஷத்தில் கொஞ்சம் கத்தியே விட்டார்!


    முதலியார் பெரியவா மீது வைத்திருந்த அத்யந்த பக்தி, பெரியவாளை, அவருடைய க்ருஹத்துக்கே அழைத்துக் கொண்டு வந்துவிட்டது! முதலியாருக்கு பெரியவாளை தர்ஶனம் பண்ணியதும், கண்கள் ஆறாகப் பெருகி ஓடியது. ஹ்ருதயமோ விம்மியது.


    மறுநாள் விடிகாலை நாலு மணிக்கு கிணற்றடியில் ஏதோ ஶப்தம் கேட்கவும் பக்தர் எழுந்து போய்ப் பார்த்தால், பின் வீட்டுக் கிணற்றில் இருந்து தன்னுடைய மரத்தாலான பாத்திரத்தில் ஜலம் இறைத்துக் கொண்டிருந்தார் பெரியவா!


    வேலி கீலீ எதுவும் இல்லாததால், பக்தர் பெரியவாளுக்கு உதவ ஓடினார்.


    மறுபடியும் அவரிடம் குழந்தை மாதிரி பேச ஆரம்பித்தார்..


    "இதோ பாத்தியா!..இந்த மரச்சொம்பு ஒடஞ்சு போச்சு! கையக் கிழிக்கறது!...எனக்கு வேற மரச்சொம்பு வாங்கித் தருவியா?..."


    [ஆண்டவா! இது என்ன எளிமை! குழந்தைத்தனம்! உபநிஷத் "குழந்தையாக இரு!" என்று உபதேஸிக்கிறது. இதோ, வேத ஸ்வரூபம் குழந்தையாக அவர் முன்னால் நிற்கிறது]


    விடிந்ததும் முதல் வேலையாக திருப்பதியில் இருந்து மரச்சொம்பு, கமண்டலு, மரத்தட்டு என்று பெரியவா அனுஷ்டானத்துக்கானதை வாங்கி வரச் செய்தார். மாலை புதுப் பாத்ரங்கள் அவர் முன்னால் வைக்கப்பட்டன.


    பெரியவா முகமெல்லாம் ஸந்தோஷம் ! சிரிப்பு !


    மரச்சொம்பை கையில் எடுத்து தடவிப் பார்த்துவிட்டு, "என்ன வழவழப்பா இருக்கு பாத்தியோ?..."


    குழந்தை தன்னுடைய விளையாட்டு பொம்மையை ஆசையோடு தடவி பார்த்தது போலிருந்தது. ஆஶுதோஷி இல்லையா?


    பெரியவாளுடைய அனுக்ரஹத்தை விட, அவருடைய இந்த கள்ளமில்லாத, வெள்ளையான பேச்சும், எளிமையும் நம் மனஸை என்னவோ செய்துவிடும். அழுதால் ஸுகம்!
Working...
X