Announcement

Collapse
No announcement yet.

Lord Shiva - A family story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Lord Shiva - A family story

    Lord Shiva - A family story


    Courtesy: Sri.J.K.Sivan


    ஒரு குடும்பக் கதை J.K. SIVAN


    அப்பா பொறுப்பில்லாதவர் போல் தான் தென்படுவார். பித்தன், பேயன் என்று சுலபமாக பேர் வாங்கியவர். எப்போதும் தனியே போய் மலை உச்சியில் அமர்ந்து அரைக்கண் திறந்து தியானம் செய்பவர். அப்படி அவரது மௌன தியானத்தை எவரேனும் கலைத்தால் அவ்வளவு தான். மற்றநேரத்தில் சுடுகாட்டு சாம்பலை வாரி பூசிக்கொண்டு எங்காவது ஆடுவார். ரொம்ப ஜாக்கிரதையாக அவரோடு பழகவேண்டும். கோவம் வந்தால் அவ்வளவு தான் எவ்வளவு பெரிய ஆளானாலும் ஊரானாலும் சுட்டெரித்து சாம்பலாக்கி விடுவார்.


    ஏன் இப்படி இருக்கிறார் இவர்?. அப்பா, அம்மா, நன்றாக வளர்க்கவில்லையா என்று கேட்க வழியே இல்லை. அவருக்கு அப்பா அம்மாவே கிடையாது. தானே முதல் ஆள். பிறப்பது இறப்பது எல்லாம் கிட்டவே நெருங்காதவர். எல்லோரும் பார்த்தார்கள். இவரை அழித்தலுக்கு அதிகாரியாக்கி விட்டார்கள்.


    எல்லோர் உயிரையும் வாங்கும் காலனையே இவர் காலமாக்கியவர். ஆடைக்காக எங்கேயும் எதையும் தேடிப்போய் வாங்கி தையல் கூலி கொடுத்து தைக்கவேண்டாம். ஏதாவது ஒரு புலியின் தோல் போதும் இடுப்பில் சுற்றிக்கொள்வார். புலிகள் புலன்கள் எல்லாம் இவரிடம் வாலாட்டாது. ஆபரணமும் எவரும் திருட விரும்பாதது. கழட்டி வைத்தால் கூட எவரும் தொடமாட்டார்கள். கபாலம், மண்டையோடு ருத்ராக்ஷம். போதுமா. அவர் மனைவி பார்த்தாள். யார் எது கேட்டாலும் யோசிக்காமல் வாரிக் கொடுத்துவிடுகிறாரே இவர் என்ற கவலை அவளை வாட்டியது.


    இப்படித்தான் ஒருசமயம் எல்லோரும் அம்ரிதம் சாப்பிட முயற்சிக்கும்போது திடீரென்று அங்கே கொடிய விஷம் சேர்ந்து விட்டது. அடடா அமிர்தம் தேடப்போய் விஷம் வந்து விட்டதே இதை உடனே அப்புறப்படுத்தவேண்டுமே என்னசெய்வது என்று விழித்தார்கள். இவரைப்பார்த்தவுடன் சரியான ஆள் அகப்பட்டார் என்று பெருமூச்சு விட்டார்கள். நீங்கள் தான் இந்த விஷம் எவரையும் கொல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏதாவது உபாயம் சொல்லுங்களேன் என்று கேட்டவுடனே இவருக்கு தலைகால் புரியவில்லை. அதற்கென்ன நானே அதை விழுங்கிவிடுகிறேன். அப்புறம் அதால் யாருக்கும் துன்பம் விளையாதே என்று சொன்னவர் ஏதோ அல்வா சாப்பிடக் கொடுத்தது போல் அந்த கொடிய நஞ்சை '' லபக்'' என்று விழுங்கிவிட்டார். நல்லவேளை அவர் மனைவி அருகில் இருந்தவள் ''ஐயோ இது விஷம் முழுங்காதீர்கள் என்று '' டபக்'' என அவர் நெஞ்சை ஒரு அமுக்கு அமுக்கி அந்த விஷம் உள்ளே போய் வேலை செய்யாமல் தடுத்து விட்டாள்.


    ஏதோ அவளது சக்தி மந்திரத்துக்கு கட்டுப்பட்டதைப் போல் அந்த விஷம் வெளியேயும் வராமல் உள்ளேயும் போகாமல் அவள் கணவன் நெஞ்சில் உறைந்து விட்டது. ஏற்கனவே செக்க சிவந்த பொன்னார் மேனியன் அவர் . நெருப்போடு இருப்பவர் அல்லவா? கழுத்தில் நீலமாக உள்ளே அந்த நஞ்சு, நெஞ்சில் இருந்தது வெளியே தெரிந்தது. அதனால் எல்லோரும் இனி அவரை எளிதில் அடையாளம் கண்டுகொள்ளமுடிந்தது. நீலகண்டன் என்ற பெயர் சாஸ்வதமாகிவிட்டது. திகு திகு என்ற எரிச்சல். எனவே சில்லென்று பனிமலை உச்சியில் போய் அமர்ந்து விட்டார். கைலாசம் என்று அவர் அமர்ந்த பனி மலை வாசஸ்தலத்துக்கு பெயர். இன்று கூட நிறைய பேர் சென்று பார்த்துவிட்டு வருகிறார்கள்.


    இந்த குளிர்ச்சி போதாது என்றோ என்னவோ, எப்போதும் சில்லென்று பனி உருகி பெரு நதியாக ஓடிய கங்கையை பிடித்து தலைமேல் வைத்துக்கொண்டார். எப்போதுமே சில்லென்ற நிலையில் அவர் மௌனமாக எல்லோருக்கும் தனது ஆனந்தத்தை பரிமாறிக்கொள்கிறார். சித்தானந்தர். சிவானந்தர். பரமானந்தர், ப்ரம்மானந்தர் அவர். மௌனமாக வடக்கே பனிமலை யில் அமர்ந்தவர் நிறைய ரிஷிகள் தன்னை சூழ்ந்து எங்களுக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள் என்கிறார்கள். ஆசாமி தெற்கே பார்த்து அமர்ந்து கொண்டிருப்பவர். தெற்கு பார்ப்பவர் என்று எல்லோரும் அவரை தக்ஷிணாமூர்த்தி என்று வேறு சொல்கிறார்கள். அவருக்கு ஒரு நம்பிக்கையான வாகனமாக இருப்பவர் நந்திதேவன். அதன் மீது ஏறி எங்கு வேண்டுமானாலும் சென்று விடுகிறார் இவர் என்று மனைவி யோசித்து ஒரு முடிவெடுத்தாள் . இவரை தனியாக விட்டால் தானே காணாமல் போகிறார் என்று அவரோடு கூடவே இருக்க ஒரு உபாயம் செய்தாள். அவருடைய உடம்பில் தான் பாதியாகிவிட்டால் இனி அவர் எங்கே அவளறியாமல் நகர முடியும்? அவள் பாகம் பிரியாள் என்ற பெயர் பெற்றுவிட்டாள் . அர்த்தநாரிஸ்வரி. இனி எவரும் எதையாவது விஷம் கிஷம் கொடுத்து இந்த மனிதர் சாப்பிடப்போகிறாரே என்று விஷமுள்ள நாகங்களை அவர் மேல் படரவிட்டிருக்கிறது. கிட்டே எது எவர் வரமுடியும்?. அவர் பாடமாட்டார். யார் பாடினாலும் ஆடுவார். உடுக்கு சத்தம் என்றால் உயிர். நந்தி ரொம்ப நன்றாக அவர் ஆட்டத்துக்கு ஏற்றவாறு தாளம் வாசிப்பவரா அல்லது அவரது தாளத்துக்கேற்றவாறு அந்த மூன்று கண்ணன் தலை விரித்து ஆடுபவரா?


    ஒன்று நிச்சயம். அவர் சங்கீதப்ரியர். இது தெரிந்து தான் ஒரு பெரிய ராக்ஷஸன் நைசாக ஒரு சாமகானம் பாடி இவரை மயக்கி வேண்டும் சக்தியை எல்லாம் பெற்றுவிட்டான். அவனைக் கொல்வதற்கு பாவம் இன்னொருவர் மனிதனாக தோன்றி இலங்கை வரை சென்று வேலையை முடித்தார். மனைவியின் சகோதரர் தான் பொறுப்பாக அதை செய்தவர்.


    மனைவி சக்தி மிக்கவள். இவரையே ஆட்டி வைப்பவள். மதுரையிலும் பாண்டியன் மகளாக பிறந்தவள், வடக்கே பனிமலை ராஜா ஹிமவானுக்கும் பெண்ணாக ஒரு சமயம் பிறந்தவள். பாண்டியராஜன் பெண்ணை மனம் புரிந்து கொண்டதால் தான் அவள் கணவர் மதுரையில் தெய்வமாக போற்றப்பட்டு பாண்டியன் நிர்மாணித்த தமிழ்ச்சங்கத்தில் ஈடு பாடு கொண்டார். ஒன்றா இரண்டா அவரது விளையாட்டு. எண்ணற்ற திருவிளையாடல்களை செய்து அசத்தி இருக்கிறாரே. அவளுக்கும் எத்தனை ஆயிரம் பெயர்கள் உண்டு. அவள் இல்லாவிட்டால் அவள் கணவரே இல்லை.


    ரெண்டு பிள்ளைகள். விநாயகன், விக்னேஸ்வரன், கணபதி, கணேசன் எத்தனையோ பேர் அவனுக்கு. பெரிய பிள்ளை இவன். மண்டை பெரியது. யானைத் தலை. கம்பீரமானவன். எவ்வளவு நேரம் பார்த்தாலும் அலுக்காத அழகன். எங்கள் வீட்டில் இரு நூறுவருஷங்களாக இருப்பவன். இன்னும் என் தமையன் வீட்டில் என் தமையன் மூலமாக அன்றாட பூஜை பெறுபவன். அவன் படமும் இணைத்திருக்கிறேன். இத்தனை வருஷங்கள் என்னை காப்பாற்றியவன்.


    அவனை வணங்கி ஒரு காரியம் ஆரம்பித்தால் எந்த குறையும் வராது காப்பவன். அப்பாவின் பூதகணங்களை கட்டி மேய்ப்பவன். கணநாதன் என்று பெயர். ரொம்ப சிம்பிள் அப்பாவைப்போல். மரத்தடியில், குளக்கரையில், நாற்சந்தியில் தெருமுனையில் சந்தோஷமாக இருப்பவன். வருஷாவருஷம் சாதாரண களி மண்ணில் அவனை உருவமைத்து வீடு தோறும் கொண்டாடும் மக்கள் கோடானுகோடி பேர். ஆச்சு இன்னும் ரெண்டு மூணு நாளில் அவன் பிறந்தநாள். அவனுக்கு பிடித்த எளிமையான ஆபரணம் அப்பாவைப்போல சிம்பிள் தான். அருகம்புல், எருக்கம்பூ. எவருமே லக்ஷியம் செய்யாத அந்த எருக்கம்பூ அவன் பிறந்த நாள் அன்று அப்பப்பா என்ன டிமாண்ட் அதற்கு. நிறையபேர் களிமண்ணில், எருக்கம்பூவில் காசு பார்க்க உதவுபவன் கணேசன். களிமண்ணில் அவன் ஜம்மென்று உட்கார்ந்து அவன் பின்னால் ஒரு காகித குடை செருகி ஒரு பலகை மேல் வைத்து அசையாமல் பெருமையோடு எத்தனை வருஷம் வீட்டுக்கு சுமந்து வந்திருக்கிறேன்.


    இன்னொரு விஷயம். இவனை நினைத்து வேண்டி வணங்கி ஒரு சிறு சுழி போட்டு விட்டு எழுதும் வழக்கம் இன்னும் சாகவில்லை. நிறைய பேர் இன்னும் பிள்ளையார் சுழி '' உ'' மாதிரி போட்டுவிட்டு தான் எதையும் எழுத துவங்குபவர்கள். பிள்ளையார் சுழி போட மறந்ததால் என் வலது கை முட்டியில் சுப்ரமணிய அய்யர் பிரம்படி சார்த்தியது இன்னும் நினைவில் வலிக்கிறது. எழுத ஆரம்பித்தால் படு வேகமாக எழுதுபவன். பேனா பென்சில் கிடைக்கவில்லையே என்று எதிர்பார்க்காமல் தனது தந்தம் ஒன்றை ஒடித்து அதை ஓலைச்சுவடியில் எழுத்தாணியாக உபயோகித்து ஒரு மஹாஆஆஆ பாரதத்தையே எழுதி விட்டானே. நான் கம்ப்யூட்டரில் அதை கதையாக எழுத ரெண்டு வருஷத்திற்கு மேல் பிடித்தது!!!


    சமீபத்தில் ஒரு சிலை பார்த்தேன். அம்மா பார்வதி இடுப்பில் உட்கார்ந்து கொண்டு பால் தேடுகிறான். தும்பிக்கை வழியாக உறிந்து குடித்து பசியாற பார்க்கிறான். அம்மாவின் இடுப்பில் அவளது இடது கை அவனை ஆசையோடு அணைக்க. அம்மாவின் இன்னொரு கையைப் பிடித்தபடி தம்பி நிற்கிறான். இன்னொரு சிலை. அதில் தம்பி இடுப்பில், யானைத்தலை அண்ணா அம்மா கையைப் பிடித்துக் கொண்டு. அமெரிக்காவில் ஒரு நிறுவனம் இதை செய்ய சொல்லி சிலை பெரிய தொகைக்கு விற்கப்பட்டதாம். சமீபத்தில் சிலையின் படம் பார்த்தேன் அதை வைத்து தான் இதை எழுத தோன்றியது.


    என்ன குடும்பம் ஐயா இது. அற்புதம். தம்பி பற்றியும் கொஞ்சம் எழுதுகிறேன்.


    தம்பி ஆற்றில் பிறந்தவன். அப்பாவின் நெருப்பில் உதயமானவன். ஆறு தலைகள். எல்லோருக்கும் ஆறுதலை அளிப்பதால் ஆறுதலையனா? என்றும் இளமையானவன். அப்பா குணம் அப்படியே. மலைமேல் ஏறி அமர்ந்துகொள்வான். கோபம் கூட அப்பா மாதிரி தான். ஒரு பழம் கிடைக்கவில்லை. அண்ணன் யானை தலையன் ஏமாற்றி பெற்றுவிட்டான் பெற்றோரிடம் என்று கோபம். அப்பா அம்மா தனக்கு நியாயமாக சேரவேண்டியதை போட்டியில் உண்மையாக வென்றதற்காக மாம்பழத்தை தரவில்லை என்று கோபித்து துணியை அவிழ்த்து எறிந்துவிட்டு கிழித்து ஒரு கோவணமாக தரித்து ஆண்டியாகிவிட்டான். ஒரு நல்ல மலை அகப்பட்டது நிற்க. பழனி என்று பெயர் அதற்கு. எல்லோரும் அவனை பழனியாண்டி என்று அழைக்க ஆரம்பித்தார்கள். பிரபல பெயர்கொண்டவன். பல பேர் அங்கே சென்று இன்னும் மொட்டை அடித்துக் கொள்கி றார்கள்.


    இந்த குடும்பத்தை பற்றி நாளெல்லாம் எழுதலாம். கடல் போல் விஷயம் இருக்கிறது. இடமோ நேரமோ இல்லையே.
Working...
X