Announcement

Collapse
No announcement yet.

Completion -positive story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Completion -positive story

    Completion -positive story


    இட்லி பூவாட்டம் வந்திருக்கு*
    வெகு பிஸியான பூந்தமல்லி ஆவடி சாலை. கண்ணாடி கிளாஸில் இருந்த சர்க்கரை இல்லாத கசப்புக் காஃபியை உறிஞ்சியபடி ஓடும் வாகனங்களை இலக்கில்லாமல் வெறித்துக் கொண்டிருந்தான் அவன்.


    "கண்ணு.. இன்னிக்கு பத்து பேக்கெட்டுத்தான் வாங்கியாந்தேன். ஒன்னே ஒன்னுதான் மீந்து இருக்கு. நீ வாங்கிக்கே ராஜா."


    வயசு எழுபதுக்கு குறையாது. வெள்ளெருக்குத் தலை. வெளுத்துப்போன வெள்ளைப் புடவை. இன்ன நிறமென இனம் காணமுடியாத வண்ணத்தில் தோளில் தையல் விட்டுப்போன ரவிக்கை.


    கறுத்தக் காய்ப்புக் காய்த்த கையில் சாயம் போன சரவணா ஸ்டோர்ஸ் பிளாஸ்டிக் பை.


    ஆழ்ந்த கவனம் கலைக்கப்பட்டாதால் உண்டான மெலிதான எரிச்சலில், ப்ச்ச்சென முனகிக்கொண்டே குரல் வந்த திசையில் திரும்பினான் அவன்.


    "என்னது ஆயா?"


    "இட்லி மாவு கண்ணு..!"


    "இட்லி மாவு..!?"


    "பொசு பொசுன்னு மல்லீப்பூ மாரி வரும். பாக்கெட்டு பதினெஞ்சு ரூவா. பாஞ்சு இட்லி வரும்."


    "ம்ம்ம்.."


    "வாங்கிக்கோ நயினா. கடசீப் பாக்கெட்டு. பதினெஞ்சுசு ரூவாகூட வாணாம். பத்து ரூவா குட்துட்டு எடுத்துக்கோ."


    நான்கைந்து முறை வேண்டாமென்று சொன்னபின்னும் இட்லி மாவு பாக்கெட்டைக் கையில் திணிக்காத குறையாக மல்லுகொடுத்தது அந்தக் கிழவி.


    மணி ஆறுதான் ஆகிறது. வீட்டுக்குப் போய் என்னத்தைக் கிழிக்கப்போகிறோம். கொஞ்ச நேரம் இதுங்கிட்டப் பேச்சுக் கொடுத்துதான் பார்ப்போமே......


    "ஆயா உனக்கு புள்ளைக் குட்டி இல்லையா? இந்த வயசுல இப்டீ கஷ்டப்படறியே?"


    "கட்டிக்கினவன் குட்ச்சே செத்துப்பூட்டான். விட்டுது சனியன்னு நெனைச்சா, ஒன்னே ஒன்னு பெத்ததும் அவன் அப்பன் வழிலே உருப்புடமா குட்ச்சி குட்ச்சே சீரழியுது."


    "ம்ம்ம்.. ஒரு நாளைக்கு எவ்ளோ தேறும்..!"


    "ஒரு பாக்கிட்டு பதிமூன்னுக்கு வாங்கறேன். பதினெஞ்சுக்கு விக்கறேன்."


    "ம்ம்ம்."


    "நாள் பூரா நாயா இங்க அங்க ஓடுனாலும் இருவது பாக்கெட்டு போனா அதுவே தலைக்கு மேல வெள்ளம்."


    ரெட் லைட் க்ராஸிங்கில் கையேந்துபவர்கள்கூட நாளொன்றுக்கு வெகு எளிதாக இருநூறுக்குக் குறையாமல் பார்த்துவிடுகிறார்கள்.


    இந்த கிழவி நாள் முழுவதும் வேகாத இந்த கார்த்திகை வெயிலில் ஏன் இப்படி வெந்து சாகிறது?


    ஒரு நொடி மூடிய விழிகளுக்குப் பின்னால் அவனுடைய ஆசை ஆயாவின் முகம் வந்து போனது. மனசு வலித்தது அவனுக்கு.


    "ஆயா.. மாவைக்குடு இப்டீ.."


    கிழவியிடம் மொடமொடக்கும் ஒரு நூறு ரூபாய்த் தாளை நீட்டினான் அவன்.


    "கண்ணு சில்ற இல்ல நயினா..!" கிழவியின் முகம் சட்டெனத் தொங்கிப்போனது.


    "ஆயா.. நீ தெனம் இந்தப்பக்கம் வருவேல்ல?"


    நாளை மறுநாள் அவன் பெங்களூருக்கு ட்ரெய்ன் ஏறியே ஆகவேண்டும்.


    "ஆமா..!"


    "நான் ஆறு மணிக்கு தெனம் இங்கதான் டீ குடிப்பேன். காசு தீர்ற வரைக்கும் ஒரு பாக்கெட்டு குடுத்துக்கிட்டே போ..!"


    "இல்ல நயினா.."


    "இன்னா இல்ல.?"


    *"ராவைக்கு என் மூச்சு நின்னுபோச்சுன்னா உன் துட்டைத் திருப்பிக்குடுக்க நான் இன்னொரு ஜென்மம் எடுக்கணும். அதெல்லாம் வேணாம்."*


    கிழவியின் கண்களில் ஒரு தீர்மானம், ஒரு நம்பிக்கை மின்னியது.


    "ஆயா.. என்னாப் பேச்சு பேசற நீ..?"


    *"ஆமாம் கண்ணு. போன ஜன்மத்துலே நான் என்னாப் பாவம் பண்ணனோ இப்டீ நாயாப் பேயா அலையறேன். இதுக்கு மேல வாணாம் கண்ணு..!"*


    *மல்லைய்யாக்களும் நீரவ் மோடிகளும் பிறந்த இதே தேசத்தில்தான் இந்தக் கிழவியும் ஜனித்திருக்கிறது.*




    _அந்த ஆயா சொன்ன மாதிரியே இட்லி பூவாட்டம் வந்திருக்கு.._!


    படித்ததில் பிடித்தது
Working...
X