Announcement

Collapse
No announcement yet.

Mantra upadesam -Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Mantra upadesam -Periyavaa

    ""மஹாபெரியவா உபதேசித்த மந்திரத்தின் மகிமை!""


    "கடவுளின் குரல்"- தொகுப்பு: நா. அக்க்ஷிதா
    24 /10 /2018 குமுதம் இதழிலிருந்து…


    மஹாபெரியவாளின் அன்றாட சந்திரமௌலீஸ்வர பூஜைக்கு புஷ்பங்களை எடுத்துவைப்பது முதலான கைங்கர்யங்களைச் செய்து வந்தார் ஒரு பக்தர். அவரது மகன், ஸ்ரீமடத்தில் சாமவேத அத்யாபகராக இருந்தார். (ஸ்ரீமடத்தின் வேத பாடசாலையில் சாமவேதம் கற்றுத்தரும் ஆசா(ர்ய)ன்)


    ஒரு சமயம் அவருக்கு கடுமையான உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது. அந்த சங்கடம் தொடர்ந்து இருந்ததால் அவரால் இயல்பாகச் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், யாரிடமும் சொல்லாமல் எங்கேயாவது சென்று விடலாமா? என்று கூட நினைத்தார் அவர்.


    தான் எங்கேயாவது சென்றுவிட்டால், வயதான தன் தாயாரும், தன்னிடம் வேதபாடம் கற்கும் மாணவர்களும் கஷ்டப்படுவார்களே என்ற எண்ணம் எழவே, தன் வேதனையையும் மறைத்துக் கொண்டு, வழக்கமான பணிகளைச் செய்து கொண்டிருந்தார்.


    ஒரு நாள் இரவு உடல் உபாதை தாங்காமல், படுக்கையில் அமர்ந்தபடியே மஹாபெரியவாளை மனதார்த் துதித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் எப்படியோ வலியை மறந்து தூங்கிப் போன அவருக்கு ஒரு கனவு வந்தது.


    அந்தக் கனவில் ஒரு சன்யாசி வந்தார். "என்னோடு வா!" என்று அவரைக் கூப்பிட்டவர், மகாபெரியவர் வழக்கமாகத் தாங்கும் சிவஸ்தானத்துக்கு அழைத்துக் கொண்டுபோனார். அங்கே அவர் பார்த்த காட்சி, அவரைப் பரவசத்தில் ஆழ்த்தியது. உள்ளே எளிமையாக சயனித்தபடி இருந்த மஹாபெரியவா அவரைப் பார்த்து, "இங்கே வா!" என்று அழைத்தார்.


    பரமாச்சார்யாளின் திருவடிப் பக்கத்தில் சென்று பவ்யமாக அவர் நிற்க, தனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு யந்திரத்தை எடுத்த மஹாபெரியவா அதைக்காட்டி, "இதில் என்ன எழுதியிருக்கிறது என்று படி!" என்றார்.


    அதில் அவருக்குத் தெரியாத மொழியில் ஏதோ எழுதி இருந்தது. அதைத் தயக்கத்துடன் சொன்னார். உடனே அந்த யந்திரத்தை நன்றாக துடைத்த மஹாபெரியவா, "சரி இப்போ படிக்க முடிகிறதா பார்!" என்று மறுபடியும் காட்டினார்.


    என்ன ஆச்சரியம்! முதலில் பார்த்தபோது அதில் தெரியாத மொழியில் இருந்த எழுத்துக்கள் இப்போது அவருக்கு நன்றாகத் தெரிந்த சம்ஸ்கிருத எழுத்துக்களாக மாறியிருந்தன.


    "தும் துர்காயை நமஹ" என்று சமஸ்கிருதத்தில் எழுதியிருந்ததை படித்தார், சாமவேதி. "இந்த மந்திரம் தான் உனக்கான உபதேசம். எதை எப்போதும் விடாமல் ஜபம் செய்! எல்லாம் சரியாகும்!" பரமாசார்யா சொல்ல, சட்டென்று தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தார், சாமவேத ஆசிரியர்.


    மறுநாள் முதல் "தும் துர்காயை நமஹ" என்ற மந்திரத்தை எப்போதும் ஜபிக்க ஆரம்பித்தார் அவர். வெகு சீக்கிரமே உடல்நலப் பிரச்னைகள் எல்லாம் நீங்கி பரிபூர்ண குணம் அடைந்தார், அவர். இது நடந்த ஒரு சில நாட்களுக்குப் பிறகு அவரது கனவில் கையில் திரிசூலம் ஏந்திய ஒரு பெண்மணி அவர் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து வர ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் ஏதோ நினைவு என்றிருந்த அவர், தினமும் அந்தக் கனவு தொடரவே பயந்து போனார்.


    தனக்குத் தொடர்ந்து வரும் அந்தக் கனவை, தனக்குத் தெரிந்த ஒருவரிடம் சொன்னார். அவர் அம்பிகையை வணங்குபவர். சாமவேத ஆசான் சொன்ன எல்லாவற்றையும் கேட்ட அவர், "அது வேறு யாரும் அல்ல, மஹாபெரியவா சொன்ன உபதேசத்தைக் கடைபிடிக்கிறதால் உனக்கு துர்க்கை தரிசனம் தந்திருக்கிறாள்!" அவர் சொல்ல, சிலிர்த்தது அவருக்கு. அதேசமயம், கனவில் வந்தது அம்பாள்தானா? அல்லது தன்னுடைய பயத்தைப் போக்க இவர் ஏதாவது சொல்கிறாரா? என்ற எண்ணமும் எழுந்தது.


    இந்த சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு ஒருநாள், காமாட்சியம்மன் கோயிலுக்குச் சென்றவர், கொடிமரத்தின் அருகில் உபதேச மந்திரத்தை ஜபம் செய்யத் தொடங்கினார். அந்த சமயத்தில் அம்பாளின் சன்னதியில் சேவை செய்யும் அர்ச்சகர் அங்கே வந்தார். "இங்கே பிரகாரத்தில் நின்று மந்திரம் ஜபிப்பதைவிட, உள்ளே வந்து மூலஸ்தானத்தில் அம்பாள் பக்கத்தில் உட்கார்ந்து சொல்லுங்களேன்!" என்று சொன்னதோடு, தன் கையில் இருந்த காப்பைக் கழற்றி அதை அவர் கையில் கட்டிவிட்டார். அவரோடு சென்று கருவறையில் அம்பாளுக்குப் பக்கத்தில் அமர்ந்து மந்திரஜபத்தைத் தொடங்கினார், சாமவேத ஆசிரியர்.


    தன்னை மறந்து மந்திர ஜபம் செய்து கொண்டிருந்த அவர், நீண்ட நேரத்துக்குப் பிறகு கண்களைத் திறந்தார். அப்போது, "நீங்கள் எப்போது இங்கே வந்து அமர்ந்தீர்கள்? உங்களை இங்கே உட்கார்ந்து ஜபம் செய்யச் சொன்னது யார்?" என்று கேட்டபடியே அந்த சன்னதியில் சேவை செய்யும் அர்ச்சகர் வர, திடுக்கிட்டுப் போனார், சாமவேதி.


    "நீங்கள்தானே உங்கள் கையில் இருந்த காப்பினைக் கழற்றி என் கையில் அணிவித்து, இங்கே வந்து உட்கார்ந்து ஜபம் செய்யச் சொன்னீர்கள்? இப்போது நீங்களே இப்படிக் கேட்கிறீர்களே!" என்று கேட்டதோடு, தன் கையில் கட்டியிருந்த காப்புச் சரடையும் காட்டினார்.


    அர்ச்சகர் திடுக்கிட்டார். அவர்கள் இருவரும் குழம்பியபடியே எதுவும் புரியாமல், காமாட்சி அம்மனைப் பார்க்க, அங்கே தன் கனவில் திரிசூலத்தோடு வரும் பெண்மணி அமர்ந்திருப்பது போல் தெரிந்தது சாமவேதிக்கு. அடுத்த நிமிடம் அவருக்கு எல்லாம் புரிந்தது.


    "கனவில் வந்து தனக்கு ஆசார்யா மந்திர உபதேசம் செய்தது உண்மையா? அல்லது பிரமையா? கனவில் சூலத்தோடு வரும் பெண் உண்மையிலேயே அம்மன்தானா? மஹாபெரியவா உபதேசம் செய்த மந்திரம் உண்மையிலேயே அத்தனை மகிமை வாய்ந்ததா? என்றெல்லாம் தன் மனதுக்குள் இருந்த சந்தேகங்களுக்கான விடைதான், இந்த சம்பவம் என்பதை உணர்ந்த அவருக்கு, அம்பாள் சன்னதி அர்ச்சகர் வடிவில் வந்து தன் கையில் காப்புச் சரடினைக் கட்டிவிட்டுச் சென்றவரும் அந்த மகானாகத்தான் இருக்க வேண்டும் என்பது தெளிவாகப் புரிந்தது".


    ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர! காஞ்சி சங்கர! காமகோடி சங்கர!


    ஓம் தத் சத்🙏
Working...
X