Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீமத்பாகவதம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீமத்பாகவதம்

    Srimad Bhagavatam skanda 7 adhyaya 9 in tamil
    Courtesy: Smt.Dr.Saroja Ramanujam
    ஸ்ரீமத்பாகவதம்- அத்தியாயம் 9


    பிரம்மாவையும் சிவனையும் முன்னிட்டுகொண்டு தேவர்கள் நரசிம்ஹனைத் துதித்தனர். ஆயினும் கோபாவேசத்தில் இருந்த அவரை நெருங்கத் துணியவில்லை. ஸ்ரீதேவியும் அதுவரை காணப்படாத அவர் உருவத்தைக் கண்டு அஞ்சினாள்.


    பிறகு பிரம்மதேவர ப்ரஹ்லாதனை நோக்கி அவன் தந்தையிடம் கோபம் கொண்ட அவரை சமாதானம் செய்யத் தூண்டினார். மஹா பாகவதனாகிய ப்ரஹ்லாதன் அவரிடம் சென்று கைகளைக் கூப்பி தரையில் விழுந்து வணங்கினான்.


    பகவான் அவனைப் பார்த்து கிருபையுடன் இளகியவராய் அவனைத் தூக்கித் தன் கரகமலத்தை அவன் மீது வைத்தார். அந்த கரஸ்பர்சத்தால் அசுபம் அனைத்தும் களையப் பெற்றவனும் பிரத்யக்ஷமாக பரமாத்மதரிசனத்தைப் பெற்றவனும் ஆன அவன் புளகாங்கிதத்துடன் உள்ளம் நெகிழ்ந்து கண்ணீர் பெருக மெய்மறந்து அவரிடமே பார்வையை வைத்து பக்தியினால் தழதழத்த சொற்களால் அவரை துதிக்கலானான்.


    பிரஹ்லாதன் கூறியது.
    பிரம்மாதி தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் சித்தர்களுக்கும் காண அரியவரான பரம புருஷன் தீய குலத்தில் பிறந்த என்னிடம் ப்ரீதி கொள்வதென்பது எவ்விதம்? தவமும் வேள்வியும் ஆற்றலும் புத்தியும் யோகமும் பரமபுருஷனின் வழிபாட்டிற்குப் பயன்படா என்று தோன்றுகிறது. கஜேந்த்ரனுக்கு கிடைத்தது போல பக்தியால் மட்டுமே அவர் அருள் கிடைக்கும்.


    ஜயிக்கப்படாதவரே ! உம்முடைய பயங்கரமான உருவத்தைக் கண்டு நான் அச்சம் கொள்ளவில்லை. சகிக்க முடியாததும் கொடியதுமான சம்சார சாகரத்தைக் கண்டு மட்டுமே நான் நடுக்கமடைகிறேன். என்னிடம் தயை வைத்து மோக்ஷவடிவமான ரக்ஷை அளிக்கும் உங்கள் பாதமூலத்திற்கு எப்போது அழைத்துச் செல்லப்போகிறீர்கள். பிறப்பு இறப்பு என்னும் சுழலில் சிக்கி மயக்கம் அடையாமல் எனக்கு பக்தி மேன்மேலும் வளர்ந்து உமது கைங்கர்யத்தில் எப்போதும் ஈடுபடச் செய்வீராக.


    மனிதர்கள் சாதாரணமாக விரும்பும் நீண்ட ஆயுள், செல்வம், ஆளுமை இவை அனைத்தும் ஒருபொருட்டல்ல என்பதைக் கண்டேன் . என் தந்தை தன் கண்ணசைவில் தேவர்களையும் மூவுலகங்களையும் அடக்கி ஆண்டார் ஆனால். அவர் உங்கள் முன் செயலற்றவர் ஆனார்.
    தமோகுணமும் ரஜோகுணமும் மிக்க இந்த அசுரகுலத்தில் பிறந்த எனக்கு உமது கரம் சிரசில் வைக்கப்பட்டது பெரும் பாக்கியம் அல்லவா?உமக்கு எல்லோரும் சமம். ஆயினும் உம் சேவையில் ஈடுபட்டோர்ர்க்கு உம் அருள் எளிதில் கிடைக்கிறது. நாரத முனிவரால் வழிகாட்டப்பட்ட நான் உமது அடியார்களின் சேவையில் எப்போதும் இன்பம் காண்பேன்.


    உமது பெருமையைப் பாடும் அமுதக்கடலில் மூழ்கியுள்ளேன் . நான் நரகத்தைக் கண்டும் அஞ்சவில்லை. உம்மிடம் பக்தி இல்லாமல் இந்த்ரிய சுகங்களை நாடும் மக்களைக் கண்டு வருந்துகிறேன். உம்மைத்தவிர இவர்களுக்கு வேறு கதி எது? ஆதலால் அவர்களை கடைத்தேற்ற நான் வாழ விரும்புகிறேன். "
    இவ்வாறு கூறிய பிரஹ்லாதனிடம் பகவான், "அசுரோத்தமனாகிய ப்ரஹ்லாதா, மங்கள வடிவினனே , உனக்கு மங்களம் உண்டாகட்டும். நான் உன்னிடம் மகிழ்ந்தேன் . உனக்கிஷ்டமான வரத்தைக் கேள் மக்களுடைய ஆசைகளை நான் பூர்த்திசெய்பவன்." என்று கூறினார்.
Working...
X