Announcement

Collapse
No announcement yet.

Kulasekhara Azhwar - Spiritual story

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kulasekhara Azhwar - Spiritual story

    Kulasekhara Azhwar - Spiritual story
    வீர சேரன் வைஷ்ணவனானான்- J.K. SIVAN


    அவன் பிறக்கும்போது மலையாள சேர தேசத்து ராஜகுமாரன். இளவரசன். அரசனுக்குத் தேவையான யானை யேற்றம், குதிரையேற்றம், வாள் , வில், மல்யுத்தம், போன்ற சகல பயிற்சிகளும் .கற்பிக்கப்பட்டன . ஆர்வமுடன் கற்று, தேறி பிறகு ராஜாவானான். சிறந்த முறையில் ஆட்சி புரிந்த அவனை மக்கள் போற்றினர். அவனது வீரம் பலம் எல்லாம் ஒன்றும் அறியாத பாண்டிய சோழ ராஜாக்கள் அவன் நாட்டின் மேல் படையெடுத்துத் தோற்றுப் போனார்கள். அவனது வீரத்தை மெச்சித் தோற்ற பாண்டிய ராஜா தன் பெண்ணை அவனுக்கு கல்யாணம் பண்ணி வைத்தான். ஒரு பிள்ளையும் பெண்ணும் கூட பிறந்துவிட்டது. ,


    ராஜாவைப்பற்றி ஒன்று இங்கே சொல்லவேண்டும். அவனுக்கு மகா விஷ்ணு மீது அளவு கடந்த பக்தி. அதுவும் திருப்பதி வெங்கடாசலபதி என்றால் அலாதி பக்தி, பிரேமை.


    ராஜா ஒரு நாள் ஒரு அதிசயக் கனவு கண்டான். வெங்கடாசலபதி தோன்றி அவனை ஆசீர்வாதம் பண்ணுவது போல. எப்போதுமே அவன் ராமர் கிருஷ்ணர் பற்றிய உபன்யாசங்கள், கதைகள் ஆவலாக கேட்பான். ராமரை ரொம்ப ரொம்ப பிடிக்கும். பஜனைகளில் ரொம்ப ஈடுபடுவான். விஷ்ணு பக்தனாச்சே. ,பாகவதர்களுக்கு நிறைய சம்பாவனை கொடுப்பான்.


    ஒரு தடவை ஒரு உபன்யாசகர் ராஜாவின் அரண்மனையில் ராம ராவண யுத்தம் கதை சொல்லிக் கொண்டிருந்தார். நேரம் ஆகிக்கொண்டே வந்தது. ஆர்வமாக ராஜா கேட்டுக் கொண்டிருந்தான். உபன்யாசகர் ராஜாவின் ஆர்வத்தை கவனித்து, மேலே மேலே விஸ்தாரமாக ராவண சைன்யத்தின் பெரும் பலத்தை ராமன் தனி ஒருவனாக எதிர்த்து யுத்தம் புரிவதை வர்ணித்துக் கொண்டு போனார். ராஜாவோ ராம பக்தன். ரொம்ப கோவம் வந்து விட்டது அவனுக்கு.


    ''என்ன இது அக்கிரமமாக இருக்கிறதே. என் ராமன் தன்னந் தனியனாக இந்த ராவணனிடம் போராடிக் கொண்டு இருக்கிறான். ராவணனோ மிகுந்த பலசாலி, ராக்ஷசன். படையெல்லாம் வேறு ஏராளமாக இருக்கு. இந்த ராமன் பாவம் ஒத்தை ஆளாக ரொம்பநேரமாக களைச்சுப் போய் போராடிக் கொண்டிருக்கிறான். யுத்தம் நீண்டு கொண்டே போகிறதே.''


    ''நிறுத்துங்கள் உடனே'' - ராஜா பெரிதாக கத்தினான்.


    பாகவதர் அரண்டு போனார். நாம் சொன்னதில் ஏதோ பிசகு ஆகிவிட்டது போல் இருக்கிறதே. கதையை நிறுத்தினார். கதை கேட்டுக் கொண்டிருந்த ராஜாவுக்கு ஏனோ கோபம் வந்துவிட்டதே. ராஜாவின் கோபம் எதில் கொண்டு சேர்க்குமோ, என் தலை தப்புமா?"


    ''எங்கே சேனாபதி, கூப்பிடுங்கள் அவரை.''


    சேனாபதி உடனே வந்தார், கைகட்டி நின்றார். பாகவதருக்கு பாதி உயிர் போய் விட்டது. வெடவெடவென்று நடுங்கிக்கொண்டிருந்தார். பூனைமுன் எலி.


    ''எங்கேய்யா நமது சேனைகள். உடனே திரட்டு. ஓடு சீக்ரம். இலங்கைக்குப் போ. ராமன் ஒத்தையிலே ராவணனோடு போராடிக்கொண்டு இருக்கும் போது நாம் இங்கே சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டா இருப்பது. கிளம்பு உடனே '' என்றதும் பௌராணிகர் வெலவெலத்துப் போனார்.


    ''ஒரு நிமிஷம் ராஜா'' என்று ஆரம்பித்த பாகவதர் ராஜா எந்த அளவுக்கு ராம பக்தி உள்ளவன் என்று புரிந்துகொண்டதால் ரெண்டே நிமிஷத்தில் ராம ராவண யுத்தத்தை அழகாக முடித்து ராமன் ராவணனை வதம் செய்து வென்று விபீஷணனை ராஜாவாக்கின வரையிலும் வேகமாக மூச்சைப் பிடித்துக்கொண்டு சொல்லி முடித்தார். தனது தலைக்கு ஆபத்து இல்லாமல் காத்தவனே ஸ்ரீ ராமா'' என்று அந்த ராமனை வேண்டிக்கொண்டார்.


    ராஜாவும் இனி தனது உதவி ராமனுக்கு தேவையில்லை என்று புரிந்து கொண்டு மகிழ்ந்தான்.


    ராமர் அன்று மீண்டும் அவன் கனவில் தோன்றி அவனது பக்தியை மெச்சி இன்றிலிருந்து எனக்கு நீ லக்ஷ்மணனைப் போல உடன் பிறப்பு. உனது பெயரோடு ....... பெருமாள் என்று பெயர் இன்றுமுதல் உலகில் விளங்கும் என்றார். ராஜாவுக்கு மட்டற்ற ஆனந்தம். அந்த ராஜா தமிழிலும் சமஸ்க்ரிதத்திலும் நிறைய எழுதினான் பெருமாளைப்பற்றி.


    ராமனுக்கு தங்கச்சிலை வடித்து பூஜை பண்ணினான். விலை உயர்ந்த நவரத்ன மாலையைச் சாற்றினான். கோவிலே கதி என்று சகலமும் மறந்து சந்தோஷமாக இருந்தபோது ஒரு நாள் ராமன் விக்ரஹத்தின் மீது போட்டிருந்த விலையுயர்ந்த மாலையை காணவில்லை!.


    ''எங்கே கண்டுபிடியுங்கள் உடனே மாலையையும் திருடனையும். யார் எடுத்தது?''
    மந்திரிகள் ஓடினர், தேடினர், காணோம். ஒருவர் மெதுவாக


    'அரசே, இங்கு உபந்யாசகர்கள் அடிக்கடி வருவதால் அவர்களில் யாரோ ஒருவர் எடுத்திருக்கலாம்.....'' என்று மென்று முழுங்கி சொன்னபோது ராஜா துடித்தான். வெகுண்டான்.


    ''என்ன சொல்கிறாய் நீ ?'' அபசாரம், மகாபாவம்.''


    ராஜா காதைப் பொத்திக்கொண்டான் . உடல் துடித்தது. வியர்த்தது. நடுங்கியது. ராமனின் பெருமை போற்றிச் சொல்லும் விஷ்ணு பக்தர்களையா அவமதித்து அவதூறாகச் சொன்னாய். இதை கேட்டதாலே நான் தண்டனைக்கு உள்ளாகி விட்டேன். கொண்டுவா ஒரு விஷ நாகத்தை உடனே இங்கே.''


    மந்திரி சேனாபதி அதிகாரிகள் நடுங்கிவிட்டனர். ராஜா சொன்னால் சொன்னதுதான். மறுவார்த்தை பேசக்கூடாது. மீறக்கூடாதே. பசியோடு ஒரு விஷநாகம் ஒரு பாத்திரத்தின் உள்ளே விடப்பட்டு கொண்டு வரப்பட்டது.


    'பரம பாகவதர்களை அவமதித்ததைக் காதால் கேட்ட என்னை இந்த கொடிய விஷநாகம் தீண்டி நான் இப்போதே மரணமடைகிறேன். இதுவே எனக்கு தக்க தண்டனை''.அந்த பாத்திரத்தில் கையை விட்டான் ராஜா.


    எல்லோரும் விதிர் விதிர்த்து வியர்க்க மூச்சு மாரடைக்க நின்றுகொண்டிருந்த அந்த நேரத்தில் கொடிய விஷ நாகப் பாம்பு பேசாமல் மல்லிகைப்பூவாக மாறி சாதுவாக பாத்திரத்திற்குள் சுருண்டு கிடந்தது. உள்ளே கைவிட்ட ராஜாவின் கையை மல்லிகைப் பூ கடிக்குமா?'


    ராஜ்ய பாரத்தில் கவனமில்லாமல் எப்போதும் ராஜாவைச் சூழ்ந்திருக்கும் பஜனை கோஷ்டி, உபன்னியாசகர்களை எல்லாம் விரட்டி ராஜாவின் கவனத்தை மீண்டும் அரசாங்க விஷயங்களில் ஈர்க்க ஒரு மந்திரி சொன்ன யோசனையின் படி அந்த மந்திரிகளே நவரத்னமாலையை ராமன் விக்ரஹத்தின் மேலிருந்து அகற்றி பழியை யாரோ ஒரு பௌராணிகர் மேல் போட்டு ராஜாவுக்கு பாகவதர்கள் மேல் கோவம் வந்து அவர்களை விரட்டி விட்டால், ராஜாவுக்கு மீண்டும் ராஜ்ய நிர்வாகத்தில் கவனம் வரும்'' என்று தான் அவர்கள் நம்பினார்கள் .கதை வேறுமாதிரி ஆகிவிட்டதே!


    ராஜாவின் காலடியில் விழுந்தனர் மந்திரிகள். தாங்கள் போட்ட நாடகத்தை எடுத்துச் சொன்னார்கள் . மன்னிப்பு கேட்டனர். ராஜா அவர்கள் எண்ணத்தை புரிந்துகொண்டான். தான் ஆன்மீக யாத்திரையில் முழுமையாக ஈடுபட்டு க்ஷேத்ராடனம் செய்ய முடிவெடுத்தான். தனது பிள்ளையை ராஜாவாக்கினான். கிளம்பிவிட்டான்.


    எங்கு சென்றான். என்ன செய்தான்? .


    அவன் இனி ராஜா இல்லை, ராஜா இனிமேல் ஸ்ரீ குலசேகர ''பெருமாள்'', பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான தமிழ் வளர்த்த குலசேகர ஆழ்வாராக ஆகிவிட்டாரே. நமக்கு அவரைப்பற்றி எல்லாமே தெரியுமே.
Working...
X