Announcement

Collapse
No announcement yet.

Krishna's pranks in tamil

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Krishna's pranks in tamil

    ''கண்ணன் என்னும் மன்னன் பேரை சொல்லச் சொல்ல..'' J.K. SIVAN ..


    வீட்டு வாசலில் பேச்சு குரல் கேட்டு யசோதை வெளியே வந்தாள் .
    எதற்கு இத்தனை கோபியர் இன்று கூட்டமாக வந்து நிற்கிறார்கள்.என்ன விசேஷம் இன்று ?
    வாருங்கள் கோபியரே, என்று அழைத்து வீட்டில் அவர்கள் வந்து அமர்கிறார்கள்.
    ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சில கணங்கள் செல்ல ஒருத்தி ஆரம்பிக்கிறாள்.
    ''யசோதா.. உன் கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்ல வந்திருக்கிறோம்.
    '' ஆஹா,சொல்லுங்களேன்''
    ''நீ வருத்தப்படுவாய். ஆனால் பல நாட்களாக உன்னை சந்தித்து இதை சொல்ல வேண்டும் என்று எங்களுக்கு எண்ணம். பேசியவள் கண்கள் அங்கும் இங்கும் யாரையோ தேடின...
    யசோதைக்கு ஓரளவு புரிந்துவிட்டது. நிச்சயம் அவனைப்பற்றி தான்..... எதிர்பார்த்தது தான்...... ஏதோ குளறுபடி.....
    ''எதுவாயிருந்தாலும் சொல்லுங்கள்.' யந்திரம் போல் யசோதையின் வாய் பேசியதே தவிர உள்ளூர அவள் கலங்கிப்போனாள் .
    ''இப்படியா ஒரு மகனை நீ வளர்ப்பாய்?'' என்றாள் ஒருத்தி.
    ''அவன் செய்யும் அக்ரமங்க ள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல ''
    'அவனோடு ஒரு கூட்டம் ஒன்று சேர்ந்து கொண்டு அலைகிறது... அப்பப்பா ஒரு வீடு பாக்கி இல்லை ''
    என்ன செய்தான் என் மகன்.....சொல்லுங்கள் ''
    எப்படித்தான் உன் மகனுக்கு தெரியுமோ, ஒருவர் வீடு விடாமல் ஊரில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வீட்டில் வெண்ணெய் ,தயிர் பானைகள் உடைகிறது. வெண்ணெய் திருடு போகிறது. எப்படி குடித்தனம் நடத்துவது. எவ்வளவு உயரத்தில் தொங்கவிட்டாலும், கண்ணில் படாமல் எங்கே ஒழித்து வைத்தாலும் கண்டுபிடித்து எடுத்து விடுகிறான் உன் பிள்ளை அவன் நண்பர்களோடு சேர்ந்து.''
    ''உடைந்த பானைகள் தான் மிஞ்சுகிறது. உள்ளே வைத்திருந்த வெண்ணெய் ஆவியாகிவிடுகிறது..... என்று ஒருவள் சொல்லி சிரித்தாள்.
    ''நாங்கள் வந்ததே இதை உன்னிடம் சொல்லி, எப்படியாவது நீ அவனை கண்டித்து இனி அவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக தான்... நாங்கள் வருகிறோம் அம்மா''.


    அடுக்கடுக்காக அவர்கள் தன் பிள்ளை கிருஷ்ணனை பற்றி புகார் சொன்னதைக் கேட்ட யசோதை ஒருபுறம் கோபம் ஒருபுறம் அதிசயத்தோடு திகைத்தாள். எங்கே அவன்? இன்று ஒரு கை பார்த்துவிடுகிறேன்.


    சிலையாக ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருந்த அம்மாவை பார்த்து விட்டான் அவன். அவள் முகம் வாட்டமாக .இருக்கிறதே. தெரு முனையிலேயே அவனும் நண்பர்களும் எல்லா கோபியரும் கிருஷ்ணன் வீட்டிலிருந்து வெளியேறுவதை பார்த்து விட்டார்கள். ஏதோ நடந்திருக்கிறது.
    ''அம்மா '
    'தேனினும் இனிய குரல் கேட்டு அவனை நோக்கினாள் யசோதை . ஒரு கணம் அவன் மீது அளவற்ற பாசம் பொங்கியது. ''என்ன தவம் செய்தேன் அம்மா என்று இவன் அழைக்க....''
    '' கிருஷ்ணா இங்கே வா''
    வந்தவனை '' எதிரே உட்கார்'' என்றாள் . நழுவின அவனை பிடித்து உட்கார வைத்தாள் . கைககளை கட்டிக்கொண்டு குட்டியாக அவள் எதிரே அமர்ந்த அவன் கண்களைை உற்று நோக்கினாள், நிர்மலமான விசால விழிகள் அவள் விழியோடு கலக்கும்போது மனம் ஆனந்த பரவசமாகியது.
    ''ஏன் இப்படி எல்லாம் செய்கிறாய்?
    'நான் என்ன செய்தேன் அம்மா. ஒன்றுமே செய்யவில்லையே... ஒரு கையில் புல்லாங்குழலோடு தலையசைத்து குண்டலங்கள் ஆட, கைகளை அசைத்து நாடகமாடினான் ''
    ''பொய் சொல்லாதே. ஏன் எல்லார் வீட்டிலும் போய் வெண்ணெய் திருடி தின்கிறாய்?''
    ''இல்லவே இல்லையே . நான் எங்கே எவர் வீட்டுக்கு எப்போது சென்றேன்?'' வாயின் ஓரம் வெண்ணை துளி ஒன்று வெள்ளைவெளேர் என்று அவன் கரு நீல முகத்தில் அவனைக் காட்டிக்கொடுத்து அவனுக்கு துரோகம் செய்தது. அவன் நடிப்பு அவளுக்கு சிரிப்பை தந்தது.
    ''அடுத்தவர் வீட்டில் வெண்ணை எடுக்க ஏனடா சென்றாய் கிருஷ்ணா, நம் வீட்டில் கருமை,வெண்மை என வகை வகையாய் பசுக்கள் இருக்கிறதே. அவை தரும் பாலும் அளவிலாமல் இருக்கிறது. ,அதில் உள்ள தயிரும்,வெண்ணையும் , நம் வீட்டில் நிரம்பி இருக்கிறதே... என்ன குறை, குறைவு இங்கே?? ஏன் எப்படி எல்லாம் செய்து என்னை அவமானப்படுத்துகிறாய்? இந்த ஆயர்பாடி கோபியர்கள் கோபக்காரர்கள். பொல்லாதவர்கள், விடியும் பொழுதே, நம் வீட்டிற்குள் வந்து வம்புகள் சொல்கிறார்கள் உன்னைப்பற்றி. ரெண்டு காதும் கேட்டு புளித்து விட்டது எனக்கு. இது தான் நீ பிள்ளை வளர்க்கும் லக்ஷணமா? என்று ஒருத்தி என்னை கேட்கும்போது வெட்கி தலை குனிந்தேன். உன் அப்பா காதுக்கு இந்த விஷயம் எட்டி, அவர் உன் மேல் ரொம்ப கோபமாக இருக்கிறார். அவர் கண்ணில் படாதே. ''நீ எல்லாம் ஒரு அம்மாவா?'' என்று என்னை கோபிக்கிறார்.


    ''என் அருமை கண்ணையா, நீ இனிமேல் தெருவில் விளையாட போக வேண்டாம். நம் வீட்டிலேயே உன் ஸ்நேகிதர்களோடு விளையாடு''


    நல்லபிள்ளையாக தலை ஆட்டினான். அவன் போட்ட திட்டப்படி இன்று யமுனைக்கரையை ஒட்டிய ஒரு கோபி வீட்டில் பன்னிரண்டு பானைகளில் வெண்ணெய் இருக்கிறது என்ற விஷயம் நேற்றே காதுக்கு எட்டி இன்று அந்த வீட்டு கோபி எப்போது யமுனைக்கு ஸ்னானம் செய்ய போகிறாள் என்று காத்திருந்தார்கள்.


    சரி என்று கண்ணன் தலை ஆட்டியதும் பாவம் என் பிள்ளை. சாது இந்த குழந்தை. இதன் மேல் எதற்கு அவ்வளவு பேரும் அபாண்டமானாக குறை சொல்கிறார்கள்... எல்லாம் பொறாமையினால் இருக்கும் ... யசோதை எழுந்து உள்ளே சென்றாள் .


    யசோதை உள்ளே செல்லும் வரை சாதுவாக அமைதி திலகமாக உட்கார்ந்திருந்த கிருஷ்ணன் விருட்டென்று எழுந்து வாசலை நோக்கி ஓடினான். ரெண்டு வீடு தள்ளி ஒருவன் அவனுக்காக காத்திருந்தான்.
    என் வீட்டிலா வந்து என்னை பற்றி குறை சொன்னாய். பார் உன் வீட்டில் நடக்கப்போவதை..... யமுனை நதிக் கரை கோபி வீட்டில் இன்று கொள்ளை நடக்கப்போகிறதே.
Working...
X