Announcement

Collapse
No announcement yet.

Understand Bhagwan's Leelas

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Understand Bhagwan's Leelas

    Understand Bhagwan's Leelas

    "தப்பு செஞ்சா சாமி கண்ண குத்திடும்," என்ற குழந்தைகளை மிரள வைக்கும் அறிவுரை எப்படி தோன்றியது?


    புராணங்கள் மற்றும் இதிஹாசங்களில் இறைவனது லீலைகளைப் பற்றிய பல சுவையான கதைகள் உள்ளன. கதைகளில் நிகழும் சம்பவங்கள் மற்றும் அவற்றின் கதாபாத்திரங்கள் மூலமாக நல்வாழ்விற்குத் தேவையான பல விஷயங்களைக் குறிப்பாலுணர்த்துவது தொன்மையான பாரத கலாச்சாரத்தின் சுவையான அம்சங்களில் குறிப்பிடத்தக்கது.

    இவ்வாறு வழிவழியாக வந்துள்ள கதைகளில் ஒன்றான மஹாபலியின் கதையில் ஒரு சம்பவம் இது. வாமன ரூபத்தில் (உயரம் அதிகமற்ற குழந்தை போன்ற உருவம் - தசாவதாரங்களில் ஒன்று) வந்த மஹாவிஷ்ணு, மிகுந்த பராக்கிரமமும், புகழும் பெற்ற மஹாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி நிலம் தானமாகக் கேட்கிறார். நாராயணனின் பரம பக்தனான பிரஹலாதனின் (நரசிம்ம அவதாரம் அமைய வழிவகுத்த அசுர வம்ச இளவரசர்) பரம்பரையைச் சார்ந்த அசுரனாக இருந்தாலும், மஹாபலி வாக்குத் தவறாத உத்தமன் மற்றும் வேண்டி வந்தோர்க்கு வாரியளிக்கும் வள்ளல்.

    வாமனர் கேட்ட கொடையை அவர் அளிக்க முன்வந்து, மூன்றடியை தாரை வார்த்துக் கொடுக்க நீருள்ள கிண்டியை எடுத்தபோது, அசுரர்களின் குலகுருவாகிய சுக்கிராச்சாரியார் வாமனர் வடிவிலுள்ளவர் மாயாவிநோதனான மஹாவிஷ்ணவே என்பதை உணர்ந்து, எதற்காக அந்த வரத்தைக் கேட்டிருக்கக்கூடும் என்று யூகித்து, மஹாபலியைத் தானம் அளிக்காமல் தடுக்கிறார். தானம் அளிப்பதைத் தர்மமாகக் கொண்ட அப்பேரரசன் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதிலிருந்து தான் வழுவலாகாது என்று அறிவுறுத்தி, தனது குருவின் தடையை மீறி தானம் அளிக்க முயல்கையில், சுக்கிராச்சாரியார் ஒரு வண்டின் உருவெடுத்துக் கிண்டியின் வாயை அடைத்து விடுகிறார். அதைக் கண்டு மாயக்கண்ணனான மதுசூதனன் மயக்கும் மோகனப் புன்னகையுடன் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்துக் கிண்டியின் அடைப்பை நீக்குகிறார். தர்ப்பை தன் கண்ணைக் குத்தவே, சுக்கிராச்சாரியார் வண்டின் உருவை விடுத்து மீண்டும் தன்னுருவிற்கு மீள்கிறார். எனினும், தர்ப்பையால் குத்தப்பெற்ற ஒரு கண்ணில் பார்வையை இழக்கிறார்.

    இதன்பின்னரே, மஹாபலி மூன்றடியைத் தாரை வார்த்துக் கொடுக்க, வாமனராகிய வேணுகோபாலன், பேருருவை அடைந்து, முதல் அடியில் பூமியையும், இரண்டாவது அடியில் விண்ணையும் அளக்க, மூன்றாவது அடிக்குத் தன்னையே தலைவணங்கி அளித்த மஹாபலிச் சக்ரவர்த்திக்குப் பாதாள உலகின் ஆட்சியை வழங்கி, அவர் இறைவனுக்கே கொடையளித்த நன்னாளை எக்காலத்திலும் மக்கள் திருநாளாகக் கொண்டாடி மகிழ்வர் என்று வரமளித்தார். இதுவே ஓணம் என்ற பெயரில் இன்றளவும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகையின் தோற்றம்.

    மனரால் சுக்கிராச்சாரியாரின் கண் குத்துப்பட்ட சம்பவமே 'தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்திடும்,' என்ற ஒருவரிக் கதையின் மூலமாக இருக்கக்கூடும். ஆனால், சுவையான இக்கதையைக் கூறி, தவறுகள் புரியாமல் சீரிய வாழ்வு வாழ வேண்டும் என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்தும் திறமையுள்ளோர் இக்காலத்தில் அரிதாகவே உள்ளனர் என்பதால் 'பூச்சாண்டி சாப்பாட்டைத் தூக்கிட்டுப் போயிடுவான்,' என்பதுபோல இக்குறுங்கதையும் வெறும் பயமுறுத்தலுக்காகவே இன்று பயன்படுத்தப்படுகின்றது. இது முறையன்று.
    கோபம், பயம் ஆகியவை உடனடியாக விளைவை [அ] பாதிப்பை ஏற்படுத்தும் எதிர்மறை உணர்ச்சிகள். எனவே இவற்றைப் பயன்படுத்துவோர் ஆணி அடிக்கச் சுத்தியலைப் பயன்படுத்துவதுபோல் கவனமாகப் பயன்படுத்தாவிட்டால், கதை கேட்கும் குழந்தை 'சாமி என்பவர் கண்ணைக் குத்துபவர்,' என்று எளிமையான புரிதலுடன் இறைவனைக் கண்டு அஞ்சத் துவங்கிவிடலாம். இது அக்குழந்தையின் வளர்ச்சிக்கு எவ்வகையிலும் உதவாது. எனவே, குழந்தைகளுக்குக் கதைகூறுவோர் - அது ஒருவரிக் கதையாக இருந்தாலும் - அதன் உள்ளர்த்தம் மற்றும் மூலத்தைத் தெளிவாக அறிந்த பின்னரே பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.


    ஒன்றரை அடிக் குறளில் வாழ்க்கைத் தத்துவங்களை அழகுத் தமிழில் அளித்த வள்ளுவரும் 'கற்க கசடற' என்று குறிப்பிட்டு, எதையும் தெளிவாக அறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உள்ளார்.
    வெறும் பொழுதுபோக்கிற்குப் பயன்படும் 'ஹாரி பாட்டர்' போன்ற கற்பனைக் கதைகளல்ல நமது புராணங்கள் மற்றும் இதிஹாசங்களில் உள்ள கதைகள். கருணைக் கடலான இறைவனின் லீலைகளைப் பற்றிய கதைகள் பலவும் நல்வாழ்விற்கான நுணுக்கமான தகவல்களை உள்ளடக்கியவை. அவற்றை விளக்கமாக அறிந்து, சுவையாகப் பகிர்ந்து, நல்வாழ்வு வாழ நற்செயல்களைச் செய்வதன் அவசியத்தைக் குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது பெற்றோர் மற்றும் குடும்பங்களிலுள்ள மூத்தோரின் முக்கியக் கடமை ஆகும்!

    quora

    This post is for Sharing knowledge only, no intention to violate any copy rights
Working...
X