Announcement

Collapse
No announcement yet.

Agni Hotram is best to solve Ozone Problem - Dinamalar News

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Agni Hotram is best to solve Ozone Problem - Dinamalar News


    அக்னி ஹோத்ரம் செய்தால் ஓசோனில் உண்டான ஓட்டையை அடைக்கலாம்!
    இன்று, இயற்கை மிகவும் மாசுபட்டுள்ளது; சுற்றுப்புறச் சூழல் கெட்டு விட்டது; ஓசோனில் ஓட்டை உண்டாகின்றது; இதனால் இவ்வுலகில் பல இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு உலகை குலை நடுங்க வைக்கிறது என்ற கூக்குரல்கள் எங்கும் எழுந்துள்ளதைக் கேட்கிறோம். இயற்கை அல்லது சுற்றுச்சூழல் என்பது என்ன? நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் பூதங்களையே நாம் இயற்கை அல்லது சுற்றுச்சூழல் என்கிறோம்.

    நமது உடல் என்பதுதான் என்ன? அதுவும் இந்த ஐம்பூதங்களால் ஆனதுதானே? ஐந்து மூலப் பொருள்களால் ஆன நம் உடலை நோய் நொடிகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வது போலவே, ஐந்து ஆதாரங்களால் ஆகிய இந்த உலகத்தையும் மாசு என்ற கொடிய நோயிலிருந்து காப்பது மனிதர்களாகிய நமக்கே உள்ள கடமை அல்லவா? இது ஏன் நமது கடமையாகிறது? மனிதனின் சுயநலம் பூமியின் சுற்றுசூழலில் மாசினை ஏற்படுத்தி இயற்கையின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் மனித மனத்திலும் எதிரொலித்து, மனஉளைச்சலையும் இறுக்கத்தையும் ஏற்படுத்துகிறது. இதன் விளைவு? வன்முறை, பயங்கரம், துயரம், மனக்கவலை, இத் தீய விளைவுகளைச் சரி செய்வதும் நமது கடமை தான். அந்தக் கடமையை நிறைவேற்றும் பொழுது தான் மனிதன் மகிழ்ச்சி பாதையில் வெற்றி நடை போட முடியும். மனித வளத்தினையும் மேம்படுத்த முடியும்.


    இயற்கையை சரிசெய்ய எத்தனையோ வழிமுறைகளை மனித குலம் முயற்சி செய்து கொண்டு தான் இருக்கிறது. தீர்வு?... ஆனால் அனைவரும் கடைபிடிக்க கூடிய பாதுகாப்பான, சக்திவாய்ந்த, மேலும் மிக பெரிய வழி ஒன்றினை இறைவனே மனித குலத்திற்காக வேதத்தின் வழி வகுத்துக் தந்துள்ளார். மிகச் சிறந்த இந்த வழிமுறைதான் அக்னிஹோத்ரம் ஆகும்.


    வாழ்வை மேம்படுத்தும் அக்னி ஹோத்ரம்
    அக்னி ஹோத்ரம் இயற்கையை மேம்படுத்துவதோடு கடைபிடிக்கும் தனி மனிதனின் வாழ்வினையும் வளப்படுத்துவதாகும். வேதத்தில் மனிதனுக்கு ஐவகைக் கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன. அவை யக்ஞம் (வேள்வி), தானம், தவம், கர்மம், சுயபோதனை என்பதாகும். யக்ஞம் பல வகைப்படும். அவற்றுள் சிறந்ததும் நம் சக்திக்கு ஏற்றதும் மிகவும் எளிமையானதும் அனைவரும் கடைபிடிக்கக் கூடியதும் அக்னி ஹோத்ரமே.


    யார் அக்னிஹோத்ரம் செய்யலாம்?
    யார் யாரெல்லாம் அக்னி ஹோத்ரம் செய்யத் தகுதியுடையவர் என்ற கேள்வி எழுகிறதல்லவா? யார் வேண்டுமானாலும் இந்த வேள்வியைச் செய்யலாம் என்பது தான் இதன் சிறப்பு. நாடு, மொழி, மதம், இனம், வயது, அந்தஸ்து, ஆண், பெண் என்ற வித்தியாசமும் இன்றி இதனை மேற்கொள்ளலாம். ஒரு குடும்பத்தின் தலைவர் இந்த வேள்வியைச் செய்யும் போது அதன் பலன்கள் அவரை மட்டுமின்றி அக்குடும்ப உறுப்பினர் அனைவரையும் சென்று அடைகிறது அப்படி அந்தக் குடும்பத் தலைவர் மேற்கொள்ள இயலாத சூழ்நிலையில் வீட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் இதனைச் செய்யலாம். அவ்வளவு எளிமையானது இது. மேலும் சூழ்நிலை கட்டாயத்தால் ஏதோ ஓரிரு நாட்கள் அக்னிஹோத்ரம் செய்யாவிடில் தவறல்ல.


    எப்போது செய்ய வேண்டும்?
    ஒவ்வொரு நாளும் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமன நேரங்களில் கண்டிப்பாக இவ்வேள்வியைச் செய்ய வேண்டும். அவரவர் தாம் வசிக்கும் இடங்களில் உள்ள சூரிய உதய, அஸ்தமன நேரங்கள் துல்லியமாகக் குறிக்கப்பட்டுள்ள அட்டவணையில் உள்ள நேரத்தில் இதனைச் செய்ய வேண்டும். இந்த அட்டவணை அந்தந்த ஊர்களில் உள்ள அக்னிஹோத்ர ஆர்வலர்களிடம் கிடைக்கும்.


    வேள்விக்கான பொருள்கள்
    1. அக்னி ஹோத்ரம் செய்வதற்குக் குறிப்பிட்ட வடிவமும் அளவும் கொண்ட தாமிர பிரமீடு பாத்திரத்தைப் பயன்படுத்த வேண்டும், இப்பாத்திரத்தில் மேல் பாகம் 14.5*14.5 செ.மீ அடிப்பாகம் 5.25*5.25 செ.மீ உயரம் 6.5 செ.மீ இருக்க வேண்டும்.
    2. நாள்தோறும் வேள்வி செய்யும் இதற்கு உண்டான சூரிய உதய, அஸ்தமன நேர அட்டவணை.
    3. சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட பசுஞ்சாண வறட்டிகள். இரண்டு அல்லது மூன்று மெல்லிய வறட்டிகள் ஒரு தடவைக்குப் போதுமானது.
    4. 2 துளிகள் சுத்தமான பசுநெய், ஒரு சிட்டிகை முனை முறியாத முழுமையான பச்சரிசி. (கால் கிலோ அரிசியும், ஐம்பது கிராம் பசு நெய்யும் ஒரு மாதத்திற்குப் போதுமானது). பசு நெய்யைத் தவிர வேறு எந்த நெய்யையும் உபயோகிக்கக் கூடாது.
    5. தீ மூட்ட மாசற்ற கற்பூரம், காய்ந்த குங்கிலியம், பசு நெய் தோய்த்த பஞ்சுத் திரிகள் இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தலாம்.


    அக்னிஹோத்ரம் செய்யும் முறை
    சூரியோதய மற்றும் சூரியஸ்தமனத்திற்கு 10-12 நிமிடங்கள் முன்பு, காய்ந்த பசுமாட்டுச் சாணம் (வறட்டி) சில துண்டுகள் எடுத்து பிரமிடு பாத்திரத்தில் எளிதாகக் காற்றுப் புகும் வகையில், நடுவில் இடம் விட்டு அடுக்கி வைத்து, சிறிது மாசற்ற கற்பூரம் கொண்டு நெருப்பை ஏற்ற வேண்டும்.


    சரியாக சூரியோதய/ சூரியஸ்தமன நேரத்தின் போது பசு நெய் கலந்த முனை உடையாத அரிசியை உரிய மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே நடுவில் உள்ள நெருப்பில் இட வேண்டும். இந்த நெருப்பிலிருந்து வரும் வாயுக்கள் காற்று மண்டலத்தில் பரவி, சுற்றுச் சூழலைச் சுத்தம் செய்திடும் அரிய பணியை செய்கிறது. அதிகாலையில் கதிரவன் எழும்போது செய்யப்படும் அக்னி ஹோத்ரத்தின் சக்தி மாலையில் கதிரவன் மறையும் வரையிலும், அது போன்று மாலையில் செய்யப்படும் அக்னிஹோத்ரத்தின் சக்தி மறுநாள் காலையில் கதிரவன் உதிக்கும் வரை நீடித்திருக்கும்.


    அதிகாலையில் உச்சரிக்கப்பட வேண்டிய அக்னிஹோத்ர மந்திரம்
    சூர்யாய ஸ்வாஹா சூர்யாய இதம் ந மம
    பிரஜாபதயே ஸ்வாஹா பிரஜாபதயே இதம் நமம


    மாலையில் உச்சரிக்கப்பட வேண்டிய அக்னிஹோத்ரம்
    அக்நயே ஸ்வாஹா அக்நயே இதம் ந மம
    பிரஜாபதயே ஸ்வாஹா பிரஜாபதயே இதம் ந மம


    இந்த மந்தரங்களைக் கூடுமானவரை தெளிவாகவும் உரக்கவும் உச்சரிக்க வேண்டும். வேள்வியைச் செய்யும் நேரம் முழுவதும் நிமிர்ந்து அமர்ந்து சிரத்தையுடன் எரியும் சுவாலையைப் பார்த்தவாறே நிதானமாகச் செய்ய வேண்டும். இவ்வேள்வியைச் செய்யும் போது வேள்விப் பாத்திரத்தைச் சுற்றி அபரிதமான சக்தி அலைகள் உருவாகி அவை காற்றிலுள்ள நச்சுதன்மையை அழித்து பாதிப்பற்ற சுற்றுச் சூழலை உருவாக்கி மனித சமுதாயத்திற்குப் பேருதவி புரிகின்றது. எனவே அவிசுகள் எரிந்து முடியும் வரை எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் அவ்விடத்திலேயே அமர்ந்து இருத்தல் நல்லது. அப்போது நம் மனதில் ஒரு அமைதி நிலை தோன்றுவதை உணரலாம். வேள்வியைத் தொடர்ந்து செய்யும் போது நம் மனம் மிகவும் இலேசாக மாறி மன ஆற்றல் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கூடுமானவரை வேள்வியின் போது உடனிருந்து மந்திரங்களை உச்சரித்தால் அதிகப் பலன்களை உணரலாம். வேள்வியில் கலந்து கொள்ளும் குழந்தைகளின் மனமும் உடலும் நல்வளர்ச்சி அடைவதுடன் அவர்களிடம் பொறுமை, அறிவாற்றல், நினைவாற்றல் வளரவும் துணை புரிகிறது. இந்த அக்னிஹோத்ர வேள்வியை விவசாய நிலங்களில் செய்யும் போது விளைச்சலில் நல்ல பலன்களை அளிப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


    வேள்விக்கு முன்னர் குளிக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்ற போதிலும் குளித்துப் புத்துணர்ச்சியுடன் செய்வது அதிக பலன்களைத் தரக் கூடியது. அஸ்தமனத்தின் போது கை கால்களைச் சுத்தி செய்து கொண்டு வேள்வி செய்யலாம்.


    வேள்வி முடிந்தவுடன் அக்னி வளர்த்த பாத்திரத்தை அப்படியே விட்டு விடலாம். நெருப்பு தானாகவே அவிந்து சாம்பலாகும் வரை பாத்திரத்தில் அப்படியே கலையாமல் இருந்தால் அச்சாம்பலைப் பல விதங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம்


    ஏன் இந்தக் குறிப்பிட்ட பொருள்கள்?
    பிரமீடு வடிவத்திற்கும், அதனுள் நடக்கும் பவுதீக, வேதியல், உயிரியல் செயல்முறை மாற்றங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பிரமீடு வடிவமே மின்காந்த அலைகளையோ அல்லது காஸ்மிக் அலைகளையோ அல்லது வேறு சக்தி அலைகளையோ சேகரிக்கிறது. பிரமீடு குவியும் சக்தியே இந்த வினைகளுக்கு அடிப்படையாக அமைகிறது. எனவே அக்னி ஹோத்ர கலசத்தில் தோன்றும் சக்தி ஒரே மையத்தில் குவிக்கப்பட்டு சுற்றியுள்ள அண்ட வெளியில் கலக்கும் போது சுற்றுப்புறம் தூய்மை அடைகிறது. மாசுகளும், தீய கிருமிகளும் அகற்றப்படுகின்றன.


    இக்கலசம் செம்பு (தாமிரம்) உலோகத்தால் செய்யப்படுவது ஏன்? என்ற கேள்வி எழுகிறதல்லவா! செம்பு ஒரு சிறந்த மின்கடத்தி. மேலும் செம்பு உலோகத்தின் மூலக்கூறுகள் பிரமீடு வடிவத்திலேயே உள்ளன. எனவே அது ஒரு சிறந்த வேதிவினை ஊக்கியாகவும் செயல்படக்கூடியது. அடுத்து, அளவுகள், குறுகிய அடிப்பாகத்தில் இருந்து விரிந்து மேலே செல்கின்ற பாகத்தில் மூன்று மட்டங்கள் உள்ளன. இவை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து குறிப்பிட்ட அளவினை அடைகின்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.


    பசுஞ் சாண வறட்டி ஏன்? இன்று உலகில் நிலவும் எல்லா மருத்துவ முறைகளும் சாணத்தில் நோய் தீர்க்கும் மூலங்கள் உள்ளன என்பதை ஒப்புக் கொள்கின்றன. இப்பசுச் சாணத்தில் அதிக அளவில் காணப்படும் மெந்தால், அம்மோனியா, ஃபீனால், என்த்தால், ஃபார்மாலின் மற்றும் கிருமிகளை அழிக்கக் கூடிய பாக்டீரியாக்கள், நம்மைச் சுற்றிப் பரவியிருக்கக் கூடிய அண்ட வெளியைத் தூய்மையாக்கும் பணியில் ஈடுபடுகின்றன.


    ஆகவே இத்தகைய அரிய பயன்களை உடைய பசுச் சாணத்திலிருந்து முழு அளவிலான நன்மையைப் பெற வேண்டுமெனில் கெரோசின் போன்ற எண்ணெய்களை அக்னி வளர்க்கப் பயன்படுத்தக் கூடாது. மாசற்ற கற்பூரம், காய்ந்த குங்கிலியம், நெய்யில் தோய்த்தெடுக்கப்பட்ட பஞ்சுத்திரிகள் ஆகியவற்றையே பயன்படுத்த வேண்டும். வேள்வி செய்யும் போது நெருப்பானது முழுமையாக புகையின்றி எரிய வேண்டும். எனவே கோடையில் வேள்விக்கு 10 அல்லது 12 நிமிடங்கள் முன்னதாகவும் மழைக்காலத்தில் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு முன்பாகவும் நெருப்பினை மூட்டி விட வேண்டும்.


    வேதங்களும் பழங்கால மருத்துவர்களும் பசுநெய்யே உயிர் என்றும் மருந்துகளின் மருந்து என்றும் போற்றுகின்றனர். எனவே பசு நெய்யையே உபயோகிக்க வேண்டும். இந்நெய்யை நெருப்பில் இடும்போது அசெட்டிலின் என்ற எரிசக்திப் பொருள் உண்டாகி, காற்றின் மாசுக்களை உறிஞ்சி சுத்தப்படுத்துகின்றது. அடுத்தது பச்சரிசி, இதில் 14 முதல் 18 சதவிகிதம் ஈரப்பசையும் மாவுப் பொருளும் ஆகும். அரிசியின் மேற்பகுதியில் எண்ணெய்ச் சத்து உள்ளது. குறிப்பிட்ட அளவு ஒலியீனும், ஆல்புமினும் உண்டு. எனவே அவிசுப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.


    மிகப் பெரிய அறுவைச் சிகிச்சைக்குரிய உபகரணங்களைச் சுத்திகரிக்க ஃபார்மலின் பயன்படுகிறது. இந்த ஃபார்மலின் தான் அக்னிஹோத்ர வேள்வியில் பசுநெய்யும், முனை முறியாத பச்சரிசியும் எரியும் போது வெளிப்படுகிறது. இவை நம்மைச் சுற்றியுள்ள பாக்டீரியா கிருமிகளை செயல் இழக்க வைக்கிறது. தொடர்ந்து அக்னிஹோத்ர வேள்வி செய்யுமிடத்தில் சிறிது நாட்களில் ஊறு வினைவிக்கக் கூடிய பாக்டீரியாக்களே இல்லா சூழல் உருவாகிறது. பசு நெய்யும், பச்சரிசியும் எரியும் போது வெளியாகும் வாயுவை சுவாசிக்கும் ஒரு மனிதனின் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. இதயம் வலுப்படுத்தப்படுகிறது. நுரையீரலின் செயல்தன்மை அதிகரிக்கிறது. இதனால் மூளை சுறுசுறுப்படைகிறது. எனவே உடலும் மனமும் இறுக்கத்திலிருந்து விடுபட்டு எளிதாகிறது.


    குறிப்பிட்ட நேரம் ஏன்?
    இயற்கையின் தாள கதியில் மிகுந்த முக்கியம் வாய்ந்த கணங்கள் சூரிய உதயம் மற்றும் அஸ்தமான நேரங்கள் ஆகும். இந்த இரண்டு நேரங்களும் மனித உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தக் குறிப்பிட்ட நேரங்களில் சுற்றுச்சூழல் முழுவதும் சிறந்த அதிர்வலைகளால் செறிவூட்டப்படுகிறது. அதே நேரத்தில் மனித உடலில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படுகிறது. மேலும் சுசும்ப நாடி செயல்படுகிறது. சூரிய அஸ்தமன நேரத்தில் விஷ வாயுக்கள், மாசுகள், பாக்டீரியாக்கள் போன்றவை மனித மற்றும் விலங்கு உடல்களைத் தாக்கத் தொடங்குகின்றன. எனவே இந்த நேரத்தில் அக்னிஹோத்ரம் செய்யும் போது நம்மைச் சுற்றிலும் ஒரு பாதுகாப்புக் கவசத்தை உருவாக்குகிறோம். எனவே அக்னிஹோத்ரத்தின் முழு பலனையும் பெற இந்தக் குறிப்பிட்ட நேரம் தான் உகந்தது. நேரம் தவறி செய்யும் போது இப்பலன்களை நாம் இழக்கிறோம்.


    மந்திரங்கள்-ஒலி அதிர்வுகள்
    இக்குறிப்பிட்ட மந்திரங்களை உச்சரிப்பு மாறாமல் குறிப்பிட்ட நேரத்தில் கூறும் போது அது சுற்றுச்சூழலில் குறிப்பிட்ட ஆக்கபூர்வமான அதிர்வுகளை ஏற்படுத்துகிறது. இந்த ஒலி அதிர்வுகள் அக்னிஹோத்ரப் பலன்களை அதிகரிக்கச் செய்கிறது.


    அக்னிஹோத்ரச் சாம்பலின் பயன்கள்
    இச்சாம்பலின் தோலில் படரும் நோய்களை முற்றிலும் குணப்படுத்துகிறது. எவ்விதமான ஆறாத புண்ணையும் மூன்றே நாட்களில் குணப்படுத்த முடியும். நகச்சுற்றின் மீது இச்சாம்பலைத் தடவி வர அது இருந்த இடம் தெரியாமல் மறைகிறது. எட்டு வாரங்கள் தொடர்ந்து தேனுடன் அக்னிஹோத்ரச் சாம்பலைக் குழைத்து உண்டால் மாதவிடாய்க் காலங்களில் உண்டாகும் அளவுக்கு மிஞ்சிய இரத்தப் போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. ஏழு நாட்கள் தொடர்ந்து மூன்று வேளை உண்டால் சிறுநீரக வலி நீங்குகிறது. மைக்ரேன் எனப்படும் தாங்கொணாத் தலைவலி இச்சாம்பலினால் குணமாகும், தினமும் 2 வேளை அரைத்தேக்கரண்டி சாம்பலை உண்ண டான்ஸிலிடிஸ் எனப்படும் தொண்டையில் ஏற்படும் நுண்கிருமிகளின் பாதிப்பு நீங்கும். இச்சாம்பலைக் கொண்டு உணவு தானியங்கள், நீர் ஆகியவற்றை கிருமிகள் அற்றதாக மாற்றலாம். இச்சாம்பலை ஆறு, ஏரிகளில் கொட்டினால் நல்ல பலன் ஏற்படும். இது தாவரங்களுக்கு உரமாகவும் பூச்சி விரட்டியாகவும் உதவும். இப்பலன்கள் யாவும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டவையாகும்.


    முடிவுரை: சூரியன் இல்லாமல் உலகம் ஒளி பெற முடியாது. அதே போல அக்னி இல்லாத வாழ்வு நிறைவு பெற முடியாது. நெருப்பு ஒன்று தான் எல்லா அசுத்தங்களையும் நீக்கி சுத்தப்படுத்துவது. அது ஒன்று தான் என்றும் மாறாமல் தன்னுடைய அளவரிய ஆற்றலால் மற்ற நான்கு பூதங்களாகிய நீர், நிலம், காற்று, ஆகாயம், ஆகியவற்றின் இயக்கங்களைச் சமச்சீராக வைக்கிறது. ஆகவே அத்தகைய நெருப்பினைப் போற்றி நாம் தினமும் அக்னிஹோத்ர வேள்வியைச் செய்ய வேண்டும். இன்றைய நாகரீக உலகத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாத்து மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு நல்ல நண்பனாக இருக்கும் இந்த வேள்வியினை மனித சமுதாயம் ஜாதி, மத, இன வேறுபாடுன்றி ஏற்று முறையுடன் பயிற்சி செய்து நல்ல வளமான வாழ்வைப் பெறுவதாகுக.


    அக்னிஹோத்ர மந்திரம்
    காலை
    சூர்யாய ஸ்வாஹா சூர்யாய இதம் ந மம
    பிரஜாபதயே ஸ்வாஹா பிரஜாபதயே இதம் நமம


    மாலை
    அக்நயே ஸ்வாஹா அக்நயே இதம் ந மம
    பிரஜாபதயே ஸ்வாஹா பிரஜாபதயே இதம் ந மம


    சப்த ஸ்லோகங்கள்
    யதா ஸ்ருஷ்டம் ஜகதத் ஸர்வம் ததா லோக பிதாமஹ
    சதுர்வேத ஸமாயுக்தம் சாச்வதம் தர்ம மாதிசத்


    ப்ரும்மா இந்த உலகத்தை ச்ருஷ்டிக்கும் போது, நான்கு வேதங்கள் மூலமாக, என்றும் விளங்கும் மத ஒழுக்கக் கோட்பாடுகளை முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் காண்பித்துக் கொடுத்தார்.
    கிம் ஸத்கர்ம கிமத்யாத்மம் யதி விக்ஞாது மர்ஹதி
    ஸர்வ சாஸ்த்ரேஷு க்ரந்தேஷு ப்ரமாணம் பரமம் ச்ருதி


    வேதம் ஒன்றே நல்ல செயல், தர்ம கர்மங்கள், ஆத்மாவின் உண்மை நிலை என்ற எல்லா விஷயங்களும், ஆதிகார பூர்வமான கையேடு ஆகும்.
    அஸ்பஷ்டம்ஜ கதாஸ்பஷ்டம் தத்வக்ஞான விவேசனம்
    அன்யத்ர லப்யதே கிம்து ப்ரமாணம் பரமம் ச்ருதி


    ப்ரும்மம் பற்றிய தத்வங்கள், உண்மையான நிலை இவைகளைப் பற்றிய அறிவை, வேறு பல நூல்கள் தெளிவாகவோ, தெளிவில்லாமலே விவரித்திருந்தாலும், அதிகாரபூர்வமான நூல், வேதங்கள் மட்டுமேயாகும்.
    ஆர்ஷக்ரந்รทஷு ஸர்வேஷு ஸ்ருதி ப்ராமாண்ய மேவச
    ஸர்வத: ஸாரமாதத்யாந் நிஜ கல்யாண ஹேதவே


    பெரிய ரிஷிகளால் சொல்லப்பட்ட, மனிதனுடைய நன்மைக்காக எழுதப்பட்ட க்ரந்தங்கள் எல்லாவற்றிற்கும் மூலநூல் வேதங்களேயாகும்.
    சுஷ்க வாதரதா: கேசின் நான்ய தஸத்தீதி வாதின
    ஸர்வ தே விலயம் யாந்த்தி மித்யா கலஹ காரிண


    விவரமில்லாத வறட்டு வாதங்கள், இறைவனின் ராஜ்ஜியத்தை மதிக்காது, கண்ணால் காணும் உலகம் மாத்திரமே உண்மை, மற்றதெல்லாம் பொய் என்ற வாதங்கள் பொய்யான உதவாக்கரையான வாதப் பிரதிவாதங்களைத் தோற்றுவிக்கின்றன. எனவே, இவ்வாதங்கள் எல்லாம் கரைந்து போய், மறைந்து விடும்.


    நாஸ்திக வேதநிந்திகா: பாகண்டா வேத தூஷகா
    ஏதே ஸர்வா வினச்யந்த்தி மித்யாசார ப்ரவர்த்தகா


    நாஸ்திகர்கள், வேதத்தை நிந்திப்பவர்கள், வேஷதாரிகள், பொய்யாகப் பேசி மற்றவர்களைக் கவர்பவர்கள் இவர்கள் தப்பான எண்ணங்களையும், நடவடிக்கைகளையும் பரப்புபவர்கள். ஆதலால், அவர்கள் நசிந்து போவர்.


    யக்ஞ தான தப: கர்ம ஸ்வாத்யாய நிரதோ பவேத்
    ஏஷ ஏவஹி ஸ்ருத்யுக்த: ஸத்ய தர்ம ஸனாதன


    யக்ஞம், தானம், தபஸ், கர்மா, ஆத்ம பரிசோதனை இவைகளில் உன்னை ஈடுபடுத்திக் கொள். இவைகள் தான் வேதங்கள் சாற்றும் என்றுமுள்ள ஸத்ய தர்மம்.


    வ்யாஹ்ருதி ஹோமம்
    பூ: ஸ்வாஹா அக்னயே இதம் நமம
    புவ: ஸ்வாஹா வாயவே இதம் நமம
    ஸுவ: ஸ்வாஹா ஸுர்யாய இதம் நமம
    பூர்புவஸுவ ஸ்வாஹா ப்ரஜாபதயே இதம் நமம


    ம்ருத்யுஞ்ஜய மந்தரம்
    ஓம்! த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்தனம்!
    உர்வாருகமிக பந்தனான்! ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதார்!!


    நாம் ஒவ்வொருவரும் செய்யக்கூடிய அக்னிஹோத்ரமானது. நம்மையும் காக்கும். ஓசோனில் ஏற்பட்டுள்ள ஓட்டையை மறைத்து இவ்வுலகத்தையும் காக்கும்.


    Thanks for your Visit! Please invite your friends to support this forum! This website is Totally 100% FREE for Users! Many more Value Added Services like Valuable books, Periodicals, Education Materials can be given for members. This can be done only with the support of large volume of members. Please Support by adding members, visiting often, posting often!


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X