Announcement

Collapse
No announcement yet.

கண்ணன் என் ஸேவகன்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கண்ணன் என் ஸேவகன்

    கண்ணன் என் சேவகன்

    என்.வி.எஸ் குரலில் கேட்க:



    கூலி மிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம்மறப்பார்
    வேலை மிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்
    ஏனடா நீ நேற்றைக்கிங்கு வரவில்லை என்றால்
    பானையிலே தேளிருந்து பல்லால் கடித்ததென்பார்
    வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்
    பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்
    ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறு செய்வார்
    தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்
    உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம்பலத்துரைப்பார்
    எள் வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்
    சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு, கண்டீர்
    சேவகரில்லாவிடிலோ செய்கை நடக்கவில்லை

    இங்கிதனால் யானும் இடர் மிகுந்து வாடுகையில்
    எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
    மாடு கன்று மேய்த்திடுவேன் மக்களை நான் காத்திடுவேன்
    வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்
    சொன்னபடி கேட்பேன் துணிமணிகள் காத்திடுவேன்
    சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
    ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்
    காட்டு வழியானாலும் கள்ளர் பயமானாலும்
    இரவிற் பகலிலே எந்நேரமானாலும்
    சிரமத்தைப் பார்ப்பதில்லை தேவரீர் தம்முடனே
    சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறாமற் காப்பேன்
    கற்ற வித்தை ஏதுமில்லை காட்டு மனிதன் ஐயே!
    ஆன பொழுதும் கோலடி குத்துப்போர் மற்போர்
    நானறிவேன் சற்றும் நயவஞ்சனை புரியேன்
    என்று பல சொல்லி நின்றான் ஏது பெயர்? சொல் என்றேன்
    ஒன்றுமில்லை கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை என்றான்

    கட்டுறுதி உள்ள உடல் கண்ணிலே நல்ல குணம்
    ஒட்டுறவே நன்றாய் உரைத்திடும் சொல் ஈங்கிவற்றால்
    தக்கவனென்றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்
    மிக்க உரை பல சொல்லி விருது பல சாற்றுகிறாய்
    கூலி என்ன கேட்கின்றாய்? கூறு என்றேன் ஐயனே!
    தாலி கட்டும் பெண்டாட்டி சந்ததிகள் ஏதுமில்லை
    நானோர் தனியாள் நரை திரை தோன்றாவிடினும்
    ஆன வயதிற்களவில்லை தேவரீர்
    ஆதரித்தாற் போதும் அடியேனை நெஞ்சிலுள்ள
    காதல் பெரிதெனக்குக் காசு பெரிதில்லை என்றான்

    பண்டைக் காலத்துப் பைத்தியத்தில் ஒன்றெனவே
    கண்டு மிகவும் களிப்புடனே நானவனை
    ஆளாகக் கொண்டுவிட்டேன் அன்று முதற்கொண்டு
    நாளாக நாளாக நம்மிடத்தே கண்ணனுக்கு
    பற்று மிகுந்து வரல் பார்க்கின்றேன் கண்ணனால்
    பெற்று வரும் நன்மை எல்லாம் பேசி முடியாது
    கண்ணை இமை இரண்டும் காப்பது போல் என் குடும்பம்
    வண்ணமுறக் காக்கின்றான் வாய் முணுத்தல் கண்டறியேன்
    வீதி பெருக்குகிறான் வீடு சுத்தமாக்குகிறான்
    தாதியர் செய் குற்றமெலாம் தட்டி அடக்குகிறான்
    மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
    ஒக்க நயம் காட்டுகிறான் ஒன்றும் குறைவின்றி
    பண்டமெலாம் சேர்த்து வைத்து பால் வாங்கி மோர் வாங்கி
    பெண்டுகளைத் தாய் போல பிரியமுற ஆதரித்து
    நண்பனாய் மந்திரியாய் நல்லாசிரியனுமாய்
    பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகனாய்
    எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி என்று சொன்னான்.
    இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்!

    கண்ணன் எனதகத்தே கால் வைத்த நாள் முதலாய்
    எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்
    செல்வம் இளமாண்பு சீர்ச சிறப்பு நற்கீர்த்தி
    கல்வி அறிவு கவிதை சிவயோகம்
    தெளிவே வடிவாம் சிவஞானம் என்றும்
    ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கி வருகின்றன காண்!
    கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்!
    கண்ணனை யாம் கொள்ளக் காரணமும் உள்ளனவே!

    ---மஹாகவி சுப்ரமணிய பாரதியார்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X