ரமணர் பக்தர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அங்கு வெளிநாட்டுக்காரர் ஒருவர் வந்தார். அவரால் தரையில் அமர முடியவில்லை.
ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார். குரு கீழேயும், பக்தர்கள் ஆசனத்திலும் அமரக் கூடாது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. இதைக் கண்ட ஆஸ்ரம நிர்வாகிக்கு கோபம் வந்தது. கீழே அமரும்படி தெரிவித்தார். அவரோ, தன்னுடைய இயலாமையைத் தெரிவித்தார். அப்படியானால் வெளியேறும்படி நிர்வாகி அறிவுறுத்தினார். வாடிய முகத்துடன் புறப்பட்டார் வெளிநாட்டவர்.
அப்போது ரமணர் நிர்வாகியிடம், ""என்னப்பா ஆச்சு?'' என்றார்.
""ஒண்ணுமில்லே சுவாமி. அவரால் கீழே உட்கார முடியாதாம். நாற்காலியில தான் உட்கார முடியுமாம். அதனால் தான் வெளியேறும்படி அனுப்பி விட்டேன்,'' என்றார் மெதுவாக.
ரமணர், அந்த நிர்வாகியிடம் மரத்தை அண்ணாந்து பார்க்கச் சொன்னார். அதில் ஒரு குரங்கு அமர்ந்திருந்தது.
""இதோ மரத்து மேலே குரங்கு இருக்கு பார். அதுவும் என்னை விட உசரமான இடத்தில் தான் இருக்கு! அதையும் வெளியில் அனுப்பி விடுகிறாயா?'' என்றார் பவ்யமாக.
அமைதியாக நின்ற நிர்வாகியிடம், ""யாரும் உலகத்தில உசத்தியும் இல்லே! தாழ்ச்சியும் இல்லே! அவரை உடனே கூப்பிடுங்க!'' என்று அழைத்து வரச் சொன்னார். உயர்வு தாழ்வு கருதாத ரமணரின் ஞானநிலையை அனைவரும் போற்றினர்.
![]()
Dear you, Thanks for Visiting Brahmins Net!
Click here to Invite Friends
Bookmarks