Announcement

Collapse
No announcement yet.

கற்பூரம் ஏற்றுவது ஏன்?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கற்பூரம் ஏற்றுவது ஏன்?

    கற்பூரம் ஏற்றுவது ஏன்?


    Click image for larger version

Name:	-obama-bows-.jpg
Views:	1
Size:	39.0 KB
ID:	34490Click image for larger version

Name:	-aarti.jpg
Views:	1
Size:	29.2 KB
ID:	34491Click image for larger version

Name:	-camphornatural.jpg
Views:	1
Size:	17.8 KB
ID:	34492

    Picture of President Obama with Hindu Priest at White House in 2009.

    வினவுங்கள் விடை தருவோம்- பகுதி 1
    கற்பூரம் ஏற்றுவது ஏன்?


    Q) Why do we light camphor in temples? A)The answer is available in English as well.

    “தீப மங்கள ஜோதி நமோ நமோ

    தூய அம்பல லீலா நமோ நமோ” (திருப்புகழ்)

    “தமசோ மா ஜோதிர் கமய”
    (இருளில் இருந்து ஒளிக்கு அழைத்துச் செல்: பிருஹத் ஆரண்யக உபநிஷத்)
    1.ஏன் இறைவனுக்கு கற்பூரம் காட்டுகிறோம்? (கு.அருள் ஜெகன் கேட்ட கேள்வி)
    அ) கோவில்களில் கடவுளின் பிரதிமை/ உருவம் உள்ள கர்ப்பக்கிரகம் (கருவறை) இருட்டாக இருக்கும். பழங் காலத்தில் மின் விளக்குகள் கிடையாது.புகை, எண்ணெய் முதலியன பட்டு மூர்த்தியின் உருவம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக பல கோவில்களில் வெளியே தான் விளக்குகள் வைக்கப்பட்டு இருக்கும். கற்பூரமோ நெய் விளக்கோ காட்டும்போது கடவுளின் உருவம் நன்கு தெரியும். அப்போது பட்டர் அல்லது அர்ச்சகர் அந்தக் கோவிலின் , மூர்த்தியின் பெருமையை மனப்பாடமாக ஒப்புவிப்பார். இது புத்தகத்தில் படித்துச் சொல்லும் விஷயம் அல்ல. அவர் கூறுவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக செவி வழி மூலம் பெறப்பட்ட அரிய விஷயம். அவ்வாறு ஒருவர் சுவாமியின் மீது வெளிச்சம் போட்டுக் காட்டி, விவரிக்கும்போது நமது முழு கவனமும் அதன் மீது இருக்கும். இவ்வாறு மனம் குவியும்போது நாம் செய்யும் பிரார்த்தனை அப்படியே நிறைவேறும். அப்போது கடவுளைத் தரிசனம் செய்யும் எல்லோரும் ஒரே ‘வேவ் லெந்த்’தில் இருப்பதால் இறையருள் பெறுவது எளிதாகிறது.


    Picture of pure camphor
    ஆ) இதற்கு ஒரு தத்துவ விளக்கமும் உண்டு. மனத்திலுள்ள இருட்டு, அதாவது அஞ்ஞானம், விலக இறை அருள் தேவை. ஆரத்தியில் காட்டும் தீபம் எப்படி கர்ப்பக்கிரக இருளைப் போக்குகிறதோ அதுபோல, நம் அகத்தில் உள்ள இருளும் வழிபாட்டில் மறைந்து விடும்.

    இ) கற்பூரத்துக்கும் நெய் தீபத்துக்கும் வேறுபாடு உண்டு. கற்பூரம் என்பது ஒரு விநோதமான ஹைட்ரோகார்பன் பொருள். இதை எரிக்கும்போது பதங்கமாதல் (சப்ளிமேஷன் ) என்னும் முறையில் எரிகிறது. அதாவது அந்தப் பொருளை சூடு படுத்தும்போது திட நிலையில் இருந்து திரவ நிலைக்குச் செல்லாமல் நேரடியாக வாயு நிலைக்குப் போய்விடும். இதே போல கற்பூரம் போல வெள்ளை உள்ளம், தூய உள்ளம் உடையோர், இடைப்பட்ட நிலைகளைக் கடந்து நேராக இறைவனிடத்தில் ஐக்கியமாகலாம் என்பதையும் கற்பூர ஆரத்தி நினைவுபடுத்துகிறது.

    ஈ) கற்பூரம் வெண்மையானது. அது போல ஆன்மா சுத்த தத்துவ குணமுள்ளது. கற்பூரம் ஏற்றியவுடன் அது தீபம் போல எரிகிறது. அதே போல மலம் நீங்கப்பெற்ற ஆன்மாவானது ஞானாக்கினியால் சிவகரணம் பெற்று நிற்கிறது. கற்பூரம் இறுதியில் ஒன்றுமின்றி கரைந்து போகிறது. அதே போல ஆன்மாவானது சரீரத்தை விட்டு நீங்கி மறைந்து இறைவனோடு ஒன்றுபடுகிறது.


    Picture of camphor tree
    உ) இதோ சுவாமி தயானந்த சரஸ்வதி அளிக்கும் பதில்: ஆலயத்துக்குச் செல்லும்போது வெளிச்சம் நிறைந்த வெளிப் பிரகாரத்தில் இருந்து கருவறைக்கு முன் வந்து நிற்கிறோம். அங்கே இருள் சூழ்ந்து இருக்கிறது. விளக்கு ஒளியில் மங்கலாக விக்ரகம் தெரிகிறது. அர்ச்சகர் கற்பூரத்தை ஏற்றி நம்மை தரிசிக்க வைக்கிறார். தலையில் உள்ள மணிமுடியால் தலை இருக்கும் இடம் தெரிகிறது. காதில் உள்ள குழையால் முகம் இருக்கும் இடத்தைப் பார்க்கிறோம். கழுத்தில் உள்ள மாலை அவருடைய மார்பைக் காட்டுகிறது இடையில் உள்ள அணி இறைவனின் மேனியைக் காட்டுகிறது, காலில் உள்ள சதங்கை அவனது பாதங்களைக் காட்டுகிறது. ஆகக் கற்பூரம் ஒவ்வொரு இடத்திலும் ஒளியேற்றும்போது, இறைவனின் உருவத்தை நாம் ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து விடுகிறோம்.

    Picture of chemical formula of camphor
    இது எப்படி இருக்கிறது? இறைவனின் சக்தியை உணருவதன் மூலம் , அவனைப் புகழ்ந்து பாடுவதன் மூலம் அவனை அடையாளம் காணுவதைப் போலத்தான் இருக்கிறது. சூடான சூரியனின் கதிர்களும், குளிர்ந்த நிலவின் ஒளியும், கண்ணைக் குளிரச் செய்யும் தாவரங்களின் பசுமையும் தாகத்தைத் தணிக்கும் ஊற்றின் நீரும் இறைவனின் பிரதியாக , அவனுடைய புகழின் வடிவமாக நமக்குத் தரிசனம் தருகின்றன. அவற்றின் மூலம் இப்படி நாம் இறைவனைப் புரிந்து கொள்கிறோம். “எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா?” என்று கூறி மகிழ்கிறோம். இதே செயலைத் தான் நாம் ஆலயத்தின் கருவறையிலும் செய்கிறோம். இத்தனை சிறப்பான வடிவத்தை சுடர் ஒளி அங்கம் அங்கமாகக் காட்டும் போது, அடையாளம் கண்டு கொள்கிறேனே! என்று கூறி வியக்கிறோம். அப்படி உணரும்போது நமது அறியாமை கரைந்து மறைகிறது. அதே போல கற்பூரமும் ஒளி அணைந்து காற்றில் கரைந்து மறைந்து விடுகிறது.

    ஞானாக்கினியில் அறியாமை எரிக்கப்படுவதை, கற்பூரம் நமக்கு ஒளிகாட்டி எரிந்து மறைவதன் மூலம் உணர்த்துகிறது. ஒளியே வடிவான இறைவனை ஒளி மூலம் உணர்கிறோம். அப்போது ஞானமே வடிவான இறைவன் நமக்குள்ளேயே இருப்பதை உணர்கிறோம்.
    இந்தத் தத்துவத்தைக் காட்டுவதே கற்பூரம் ஏற்றித் தரிசனம் செய்ய வைக்கும் நிகழ்ச்சியாகும்”. (சுவாமி தயானந்த சரஸ்வதி).


    (குறிப்பு: இப்போது தமிழ்நாட்டுக் கோவில்களில் கற்பூரம் ஏற்றுவதை அனுமதிப்பதில்லை. இதற்குக் காரணம் தூய கற்பூரத்துடன் செயற்கையான மெழுகைச் சேர்க்கும்போது அது கரித் தூளை உமிழ்கிறது. இது புறச் சூழலைக் கெடுக்கிறது. இதற்குப் பதிலாக அதே ஒளியூட்டும் பணியை நெய் விளக்கு செய்கிறது. தத்துவம் ஒன்றே.)

    (பி.பி.சி. தமிழோசையில் தமிழ் ப்ரொட்யூசராகப் பணியாற்றிய ஆறு ஆண்டுக் காலத்தில், ‘வினவுங்கள் விடை தருவோம்’ என்று நான் (லண்டன் சுவாமிநாதன்) நடத்திய நிகழ்ச்சி, 35 மொழிகளில் முதன்மையாக நின்றது. ஒரே ஆண்டில் 19,000 நேயர் கடிதங்களைப் பெற்று சாதனை படைத்தது (1987- 1992). அந்தக் கேள்வி பதில்களை அதே தலைப்பில் புத்தகமாக வெளியிட்டவுடன் 3000 புத்தகங்களும் உடனே விற்றுத் தீர்ந்துவிட்டன. இப்போது எனது 500 ஆய்வுக்கட்டுரைகளைப் படிப்போர் தனிப்பட்ட மெயிலில் சில கேள்விகளைக் கேட்கின்றனர். அவைகளுக்குப் பதில் அனுப்பி வந்தேன். இனி அதையும் பழைய பி.பி.சி. பாணியில் வெளியிட்டால் என்ன என்று தோன்றியது. நீங்களும் கேள்விகள் கேட்கலாம்).


    Source swami 48
Working...
X