Announcement

Collapse
No announcement yet.

வைகாசி விசாகம் - வெள்ளிக்கிழமை - 24.05.2013 VAIKASI VISHAKAM - FRIDAY - 24.05.2013

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வைகாசி விசாகம் - வெள்ளிக்கிழமை - 24.05.2013 VAIKASI VISHAKAM - FRIDAY - 24.05.2013

    வைகாசி விசாகம் - வெள்ளிக்கிழமை - 24.05.2013
    VAIKASI VISHAKAM - FRIDAY - 24.05.2013


    Click image for larger version

Name:	Karthick.jpg
Views:	1
Size:	46.1 KB
ID:	34631
    முருக வழிபாட்டுக்கு உகந்த நாட்களில் முக்கியமானது வைகாசி விசாகம். கந்தனாகிய சக்தி வெளிப்பட்ட திருநாள். அதனால் விசாகன் என்பதும் முருகனுடைய திருப்பெயர்களில் ஒன்று. மாசியில் சிவபிரான் மன்மதனை எரித்துப் பின்னர் உயிர்ப்பித்த காமதகனம் (ஹோலி, காமன் பண்டிகை). பின்னர் பங்குனி உத்திரம், சித்திரா பௌர்ணமியில் சிவ-பார்வதி திருக்கல்யாணம். வைகாசி விசாகத்தில் குமரன் உதயம். அழகாக, தொடர்ச்சியாக இந்த தெய்வத் திருவிழாக்கள் வருகின்றன.

    அசுரசக்திகளை அழிக்க பரமனின் நெற்றிக்கண்ணில் உதித்த சக்திச் சுடர்களை அக்னிதேவன் கங்கையில் சரவணப் பொய்கையில் இட, அங்கு தோன்றினர் ஆறு குமாரர்கள். கார்த்திகைப் பெண்கள் அவர்களைப் பாலூட்டி, சீராட்டி வளர்த்தனர். அதனால் அக்னிகர்ப்பன், காங்கேயன் (கங்கையின் மைந்தன்), சரவணன் (சரம் என்ற நாணல் புதர்கள் மண்டிய பொய்கையில் அவதரித்தவன்), கார்த்திகேயன் (கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப் பட்டவன்) ஆகிய திருநாமங்களால் முருகப் பெருமானை வணங்குகிறோம். பரம்பொருளாகிய பிரம்மமே திருமுருகனாகி உலகைக் காக்கின்றது.

    “அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
    பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
    கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே
    ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய”


    என்று கந்தபுராணம் கூறுகிறது. சுத்த சிவமே சுப்பிரமணியமாகி நின்றது என்பதனை, “ஆறுமுகம் ஆனபொருள் நீயருள வேண்டும், ஆதிஅருணாசலம் அமர்ந்த பெருமாளே” என்று அருணகிரியார் பாடுவார்.

    முருகனுக்குரிய எல்லாத் திருத்தலங்களிலும், குறிப்பாக திருச்செந்தூரில் விசாகப் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது.

    “துள்ளியோடும் மீன்களின் விளைடாட்டால் செந்தூரின் வயல்கள் அழிந்தன. அவன் கடம்பமலர் மாலையின் மயக்கும் வாசத்தால் பூங்கொடிபோன்ற பெண்கள் மனம் அழிந்தது. மயிலேறிவரும் அந்த மாவீரனின் வேல் பட்டு கடலும், மலையும், சூரனுமாய் வந்த அசுர சக்திகள் அழிந்தன. அவன் திருவடிகள் பட்டு பிரமன் என் தலைமேல் எழுதியிருந்த தலையெழுத்து அழிந்து விட்டது”என்று அருணகிரியார் முருகனை வணங்கித் தான் உய்வு பெற்றதைக் கூறுகிறார்.

    “சேல்பட்டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
    மால்பட்டழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன்
    வேல்பட்டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்பும் அவன்
    கால்பட்டழிந்ததது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே”


    - கங்தரலங்காரம், 40. சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதர் முருகப் பெருமானின் பூரண அருள் பெற்றவர். முருகனே அவருக்கு ஞான குருவாய் வந்ததால் “குரு குஹ” என்பதையே தனது எல்லா இசைப் பாடல்களிலும் முத்திரையாக அமைத்தார்.

    சூரனின் சேனைகளை அழித்த குமரன், திருச்செந்தூர் படைவீட்டில் தேவ சைன்யங்கள் சூழ அமர்ந்திருக்கிறான். சகல தேவ சக்திகளும் அவனை வாழ்த்த அங்கு கூடியிருக்கின்றனர். இந்தக் காட்சியை இசைக் கோலமாக விரிக்கிறார் தீட்சிதர், சுத்தசாவேரி ராகத்தில் அமைந்த ஒரு அழகிய கீர்த்தனையில் -

    ஸ்ரீகுருகுஹ தாரயாஸு மாம் – சரவண பவ (ஸ்ரீ)
    சுரபதி ஸ்ரீபதி ரதிபதி வாக்பதி
    க்ஷிதிபதி பசுபதி ஸேவித (ஸ்ரீ)


    (முழுப்பாடலையும் இங்கே கேட்கலாம். பாடியவர் திருமதி அருணா சாய்ராம். பாடலுக்கு முன்வரும் “மயூராதிரூடம்” என்ற சுலோகம் ஆதிசங்கரர் அருளியதாகக் கூறப்படும் சுப்ரமண்ய புஜங்கம் துதியில் உள்ளது).

    http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=2660&Cat=3
Working...
X