ஆசமனம் என்பதற்கு அகராதியில் आचमनम्- கர்மானுஷ்டானத்தின் ஆரம்பத்திலும்,முடிவிலும், சிறு துளிகலாக மூன்று முறை மந்திரங்களுடன் கூடிய ஜலத்தை (வலது உள்ளங்கையினால்) பருகுதல்-sipping drops of water, thrice (with mantras) before and after religious ceremonies (from palm of right hand) என்று பொருள் உள்ளது.
ஆசமனம் என்பது உள்ளத்தையும்,வாக்கையும் தூய்மைபடுத்தும் செயலாகும். பல்வேறு நற்செயல்களுக்கு முன்னும்,பின்னும் இதை
செய்வர். கை, கால்களை கழுவுதல், குளித்தல் இவை உடல் தூய்மைக்காக செய்வதாகும்.ஆசமனம் என்பது உள்ளத் தூய்மைக்காக செய்வதாகும்.
வலது கையை பசுவின் காதுபோல் கோகர்ண முத்திரை செய்து கொண்டு, அதில் உளுந்து மூழ்குமளவிற்கு ஜலம் எடுத்துக்கொண்டு, பிறகு சுண்டு விரலையும் கட்டை விரலையும் நீக்கி கையை குவித்துக் கொண்டு உறிஞ்சுகின்றபோது ஒலி எழாமல்,கைகள் உதட்டின் மீது படாமல் நீர் பருகுவதே ஆசமனம் எனப்படும். இவ்வாறு 3 முறை மந்திரம் கூறி நீர் பருக வேண்டும்.பிறகு உதடுகளை வலதுகை பெருவிரலின் அடியால் இரண்டு தடவை துடைத்து, பின் கட்டை விரல் தவிர நான்கு விரல்களாலும் துடைக்கவேண்டும்.
*ஆசமன மந்திரம்*
இந்த ஆசமன மந்திரமானது அவரவர் குல ஆசாரப்படியும், குரு உபதேசப்படியும் வேறுபடும். சிலர் அச்சுதாய நமஹ,அனந்தாய நமஹ,கோவிந்தாய நமஹ. என்று கூறி செய்வர். இது பௌராணிக ஆசமனம் எனப்படும்.
சிலர் ரிக்வேதாய ஸ்வாஹா, யஜுர்வேதாய ஸ்வாஹா,சாமவேதாய ஸ்வாஹாஎன்பர் இது வேதாசமனம் எனப்படும்.
சிலர் ஆத்ம தத்வாய ஸ்வாஹா,வித்யா தத்வாய ஸ்வாஹா,சிவ தத்வாய ஸ்வாஹாஎன்பர் இது தத்வாசமனம் எனப்படும்.இதில் சிவ தீக்ஷை பெற்ற சிவாசார்ய பெருமக்கள் ஆத்ம தத்வாய ஸ்வாஹாஇதில் உள்ள ஸ்வாஹா விற்கு பதிலாக ஸ்வதா என்பர்.
நான்கு வகை தீர்த்தங்களும் உள்ளங்கையில் எங்கு இருக்கின்றன என்று சொல்லப்படுகிறது. கட்டை விரலுடைய அடிபாகத்தில் ப்ரம்ம தீர்த்தம், சுண்டு விரலுடைய அடிபாகத்தில் ரிஷி தீர்த்தம், நான்கு விரல்களுடைய நுனி பாகத்தில் தேவ தீர்த்தம், ஆள்காட்டி விரல்-கட்டை விரல் இவைகளுடைய நடுபாகத்தில் இருக்கும் தீர்த்தம் பித்ரு தீர்த்தம் ஆகும்.
இவைகளில் பித்ரு தீர்த்தம் தவிர மற்ற மூன்று தீர்த்தத்தாலும் ஆசமனம் செய்யலாம். மேலும் ஆசமனத்தில் உட்கொள்ளும் நீரானது நம் மார்பு வரை செல்லவேண்டும் என்கிறது சாஸ்திரம்.
*ஆசமனம் எப்படி செய்யக்கூடாது*
1.நின்று கொண்டு
2.முழங்கால்களுக்கு வெளியில் கைகளை வைத்துக்கொண்டு
3.உட்கார்ந்து கொண்டு
4.யஞோபவீதம் இல்லாமல்
5.தலை மயிரை விரித்துக்கொண்டு
6.தெற்கு-மேற்கு திசைகளை பார்த்து ஆசமனம் செய்யக்கூடாது.
*சில சிறப்பு விதிகள்*
1.சாப்பிட்ட உடன் ஆசனத்தில் அமர்ந்திருந்தாலும் செய்யலாம்.
2.நதி,குளம்,நீர் நிலைகளில் முழங்கால் அளவு நீர் இருந்தால் அதில் நின்றுகொண்டு ஆசமனம் செய்யலாம்.முழங்காலுக்கு கீழ் நீர் இருந்தால் அந்த நீர்நிலையில் ஆசமனம் செய்யக்கூடாது.
ஆசமனம் செய்ய முடியாவிட்டாலும்,தூய்மையான ஜலம் கிடைக்காவிட்டாலும்,அந்த சமயத்தில் ப்ராம்மணர்கள் தங்கள் வலது காதை தொட்டுக்கொள்ளலாம்.இது ஆசமனத்திற்கு சமானமாகும்.ஏனெனில் கங்கை,ஆதித்தன்,வருணன்,சந்திரன்,அக்னி,வாயு இவர்கள் ப்ராம்மணர்களின் வலது காதில் எப்போதும் இருப்பதாக மனுவும்,பராசர ரிஷியும் கூறுகின்றனர்.
Bookmarks