Announcement

Collapse
No announcement yet.

வேதமும் தமிழ்நாடும் – பாகம் 2

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வேதமும் தமிழ்நாடும் – பாகம் 2

    வேதம் -வேதமும் தமிழ்நாடும் – பாகம் 2

    இந்தக் காலத்தில் இப்படியெல்லாம் விதண்டாவாதம், மரியாதைக்கு அர்ஹமான (உரிய) விஷயங்களில் கேலிப்பேச்சுக்கு பேசுவதெல்லாம் ஏற்பட்டிருக்கின்றன. ஆசார்யாள் முடிவாக உபசதேசித்த "ஸோபான பஞ்சக"த்தில் 'துஸ்தர்க்காத் ஸுவிரம்யதாம்'என்று சொல்கிற போது, குதர்க்கமாக, குயுக்தியாக மத விஷயங்களில் அர்த்தம் பண்ணுவதைத்தான் கண்டித்திருக்கிறார். மிகவும் பூஜ்யமான வேதத்தின் விஷயத்தில் இது மிகவும் அவசியம். பவ்யத்தோடு பணிவோடு அதைக் கேட்டுக் கொள்ள வேண்டும்.

    வேதாந்த நிர்ணயத்துக்கு நல்ல யுக்திகளை ஒரு பிரமாணமாக ஆசார்யாள் ஒப்புக் கொள்கிறார். குயுக்தி, துஸ்தர்க்கம் (குதர்க்கம்) தான் கூடாது என்கிறார். எந்த அளவுக்குத்தான் மநுஷ்ய அறிவு போக முடியுமோ அந்த எல்லைக்குள்ளேயே அதற்கு அதிகாரம் கொடுத்து வேதத்தை ஆராய்ச்சி பண்ணுவதில் தப்பில்லை. ஆனால், நம் சிற்றறிவுக்கு எல்லையே வகுக்காமல் பூரண அதிகாரம் கொடுப்பதுதான் தப்பு...

    ஸ்நானம்-ஸந்த்யா என்றில்லாமல், ஸந்த்யா-ஸ்நானம் என்றதற்குக் காரணம்:பிராம்மணனுக்கு ஸந்த்யா வந்தனம் தான் மற்ற எல்லா அனுஷ்டானங்களைவிட முக்கியமாக இருப்பது. அதனால் அவனுடைய கர்மாவைச் சொல்லும்போது அதற்கே முதலிடம் கொடுத்திருக்கிறது.

    ஆறு தொழில்களில் முதலாவது ஸந்த்யா-ஸ்நானம். இரண்டாவது ஜபம் - அநேக மஹாமந்திரங்களை, அவரவர் குலதேவதை இஷ்டதேவதை முதலியவற்றின் மந்திரங்களை ஜபிப்பது. மூன்றாவது ஹோமம், அதாவது யக்ஞம். நாலாவதாக தேவதா பூஜனம் - கந்த, புஷ்ப, தூப, தீப, நிவேதனங்களால் ஈச்வரனை வழிபடுவது. ஐந்தாவதாகச் சொன்ன ஆதித்யம் என்றால் அதிதியை உபசரிப்பது.. அதாவது விருந்தோம்பல். கடைசியில் வைச்வ தேவம். பஞ்சமனும், நாய் முதலான ஜந்துக்களும் உள்பட ஸகலப் பிராணிகளுக்கும் பலி போடுவது வைச்வதேவம்.

    இப்படிப் பண்ணுபவர்களைத்தான் 'அறுதொழிலோர்'என்று ரொம்பவும் பெரியவரான வள்ளுவர் சொல்கிறார். கெட்ட ராஜ்யத்தில் பிராம்மணர்கள் வேத அத்யயனம் பண்ண மாட்டார்கள், வேதத்தை மறந்து விடுவார்கள் என்கிறார் - அறு தொழிலோர் நூல் மறப்பர். பிராம்மணர்கள் வேதத்தை மறக்காமல் இருக்க வேண்டும்;அப்படிப்பட்ட நல்ல ராஜ்யம் ஏற்படவேண்டும் என்பதுதான் வள்ளுவரின் ஆசை என்று இதிலிருந்து தெரிகிறது.

    தமிழ்த் தெய்வம் என்று சொல்லப்படும் ஸுப்ரமண்ய ஸ்வாமியின் ஆறுமுகங்களை வர்ணிக்கும்போது, சங்க நூலான திருமுருகாற்றுப் படையில், அவருடைய முகங்களில் ஒன்று பிராம்மணர்கள் வேதவிதி தப்பாமல் செய்யும் யக்ஞங்களை ரக்ஷிக்கவே இருக்கிறது என்கிறது.

    ஜைன பௌத்த சம்பந்தமே முக்கியமாக உள்ள ஐம்பெரும் காப்பியங்களில்கூட, பல இடங்களில் வேதத்தை, வைதிக தர்மத்தை ரொம்பவும் சிலாகித்துச் சொல்லியிருக்கிறது. சிலப்பதிகாரத்தில் எங்கே பார்த்தாலும் வர்ணாச்ரம தர்மங்களை எடுத்துச் சொல்லியிருக்கிறது;'அந்தணர் ஒம்பலை' விசேஷித்துச் சொல்லியிருக்கிறது; வேத சப்தம், யக்ஞம் ( ஆரண ஒதையும் செந்தீ வேட்டலும் ) இவற்றைக் கொண்டாடியிருக்கிறது என்று புலவர்கள் சொல்லுகிறார்கள். வைச்யனான கோவலன் அநேக வேத கர்மாநுஷ்டானங்களைப் பண்ணினதற்கு அதிலே குறிப்புகள் இருக்கின்றன என்கிறார்கள்.

    தமிழ் வார்த்தைகளும், வழக்கிலுள்ள அநேக வசனங்களுமே, இந்த நாட்டின் வைதிக ஈடுபாட்டுக்குப் பெரிய சான்றுகளாக இருக்கின்றன. 'யஜனம், யக்ஞம்' என்பனவற்றுக்கு 'வேட்டல், வேள்வி'என்ற வார்த்தைகள் பிராசீனமாக இருந்து வருகின்றன. 'சயனம்'என்ற யக்ஞ மண்டப அமைப்புக்குப் 'பரப்பு'என்ற வார்த்தை பழங்காலத்திலிருந்து இருக்கிறது. இம்மாதிரி வேறு நாகரிகத்திலிருந்து வந்த விஷயங்களுக்கு, ஒரு பாஷையில் தனிப்பெயர்கள் ஆதிகாலத்திலிருந்து இருக்க முடியாது.

    இப்போது கிறிஸ்துவ தேசத்திலிருந்து பைபிள் வந்தால், அதற்கு நாம் 'கிறிஸ்துவ வேதம்' என்று பேர் கொடுத்தாலும், வேள்வி மறை என்பவை போல் இந்தப் பேர் வேரூன்றாமல் பைபிள், பைபிள் என்றேதான் சொல்கிறோம். அதுவுமில்லாமல் அதை வேதம் என்கிறபோது, வேதம் என்று ஏற்கெனவே நம்மிடமிருக்கிற மூல சாஸ்திரத்தின் பேரைக் கொண்டுதான் அதற்குப் பேர் வைத்திருக்கிறோம். பைபிளைத் தவிர வேறு வேதம் நமக்கு உண்டு. ஆனால் வேத யக்ஞத்தைத் தவிர வேறே 'வேள்வி'என்று ஒன்று கிடையவே கிடையாது. 'வேள்வி' என்று தமிழிலே பெயர் இருந்தாலும், வைதிக தர்மத்தில் இல்லாததாகத் தமிழ் நாட்டுக்கு என்று மட்டும் வேள்வி என்ற வேறு கர்மா இருக்கவில்லை. இப்படியே 'மறை'என்றால் வேதம்தான். தமிழிலே வேறே மறை என்று ஒன்று இருந்து, அந்தப் பெயரை வேதத்துக்கு வைக்கவில்லை.

    இந்த 'மறை' என்ற வார்த்தை ரொம்பவும் ஆழமான, பொருத்தமான பொருள்
    கொண்டதாகும். வேதங்களில் அங்கங்கே மறைவாக ரக்ஷிக்கவேண்டிய பகுதிகளுக்கு 'ரஹஸ்யம்' என்று வேதத்திலேயே பேர் கொடுத்திருக்கிறது;உபநிஷத்துக்களில் இப்படிப்பட்ட ரஹஸ்யமான பாகங்களையே தனியாக 'உபநிஷதம்'என்று குறிப்பிட்டிருக்கிறது. வேதியர்கள் தங்களுக்குள்ளயே ஜாக்ரதையுடன், கொஞ்சமும் அம்பலப் படுத்தி விடாமல் மறைவாக ரக்ஷிக்க வேண்டிய சில பாகங்களை மட்டுமே வேத, உபநிஷத்துக்கள் இப்படிச் சொல்கின்றன.

    தமிழ் இன்னம் ஒரு படி மேலே போய் வேதம் முழுதையும் 'மறை' என்று சொல்லிவிட்டது!'மறை'என்றால் மறைத்து ரஹஸ்யமாகக் காப்பாற்றப்பட வேண்டியது என்று அர்த்தம். வேதம் அதிலே அதிகாரம் பெற்றவர்களிடம் மட்டும் பேசிற்று. 'இன்னின்ன பாகங்களை நீங்கள் மறைவாகப் போற்றி வாருங்கள் என்று அதிகாரிகளுக்குச் சொல்லிற்று. தமிழ் பாஷை வேதியர்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், ஸமஸ்த ஜன சமூகத்தையும் எடுத்துக் கொண்டு பேசும்போது, எப்படி வேதமானது பிராம்மணர்களுக்குள்ளேயே சில பாகங்களை ரஹஸ்யமாக ரட்சிக்க வேணடும் என்கிறதோ, அதே மாதிரி ஸகல வர்ணத்தாரையும் எடுத்துக் கொள்கிறபோது வேதம் முழுதையும் அதில் அதிகாரமுள்ளவர்கள் அதிகாரமில்லாதவர்களிடமிருந்து ரஹஸ்யமாக ரட்சிக்க வேண்டும் என்று கருதியே, முழு வேதத்துக்கும் "மறை" என்று பேர் கொடுத்து விட்டது!அதை எல்லாருக்கும் என்று democratise பண்ணிவிடக்கூடாது என்பதுதான் தமிழ் ஜனங்களின் தொன்று தொட்ட அபிப்ராயம் என்பது "மறை"என்ற இந்த வார்த்தையிலிருந்தே தெரிகிறது.

    Contd…3…
    source; subadra
Working...
X