Announcement

Collapse
No announcement yet.

இந்த ஊர்ல சிவாலயம் எங்கே இருக்கு?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இந்த ஊர்ல சிவாலயம் எங்கே இருக்கு?

    இந்த ஊர்ல சிவாலயம் எங்கே இருக்கு?''

    இந்த ஊர்ல சிவாலயம் எங்கே இருக்கு?

    அன்பர் மாலியின் இந்தக் கேள்விக்கு, கூட்டத்தில் எவரிடம் இருந்தும் பதில் இல்லை.

    அவர்களில் பழுத்த பழமான ஒரு முதியவர் மட்டும், 'இங்கே ஒரு பெருமாள் கோயில் இருக்கு. அதுபோக, மாரியம்மன் கோயிலும் அய்யனார் கோயிலும் உண்டு. ஊர் எல்லையில் ஒரு பிள்ளையார் கோயில் இருக்கு. அவ்வளவுதான். மத்தபடி இங்கே சிவன் கோயில் எதுவும் இருக்கிறதா தெரியலையே?'' என்றார்.

    90 வயது மதிக்கத்தக்க அந்தப் பெரியவருக்கே சிவாலயம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என்றால், மற்றவர்களுக்குத் தெரிந்திருக்க வழி இல்லையே!

    மகா பெரியவா மறுபடியும் ஏதோ சைகையால் கேட்டார்... 'மேல் கோடியில பெருமாள் கோயில் இருந்தா, கீழ்க் கோடியில சிவன் கோயில் இருந்திருக்கணுமே?''
    நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், தற்போது அங்கே சிவாலயம் இல்லை. முன்னொரு காலத்தில் இருந்ததா என்றால், அதுகுறித்தும் அந்த ஊர்க்காரர்களுக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. அனைவரும் மௌனமாக இருந்தார்கள்.

    அந்த நேரத்தில் ஓர் இஸ்லாமிய தம்பதி அங்கே வந்த னர். தன்னை லத்தீஃப் பாய் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த இஸ்லாமிய அன்பர், தன் மனைவியின் பெயர் மெகருன்னிசா என்றும் தெரிவித்தார். தாம் கொண்டு வந்திருந்த இரண்டு சீப்பு பேயன் பழங்களை யும், ரோஜாப் பூக்களையும் மகாபெரியவா முன் சமர்ப்பித்தார்.


    அவர்களை தலை முதல் பாதம் வரை ஏற இறங்கப் பார்த்தது நடமாடும் தெய்வம். கருணை மிகுந்த அந்தப் பார்வையில் மெய்ம்மறந்து போனார்கள் அந்த இஸ்லாமிய தம்பதியர். ஒருவாறு சுதாரித்துக்கொண்டு, சிலிர்ப்பான அந்தத் தருணத்தில் இருந்து மீண்டு, லத்தீஃப் பாய் பேசத் தொடங்கினார். அற்புதமான ஒரு தகவலை விவரித்தது அவரது பேச்சு.

    பல நூற்றாண்டுகளுக்கு முன்னால், அங்கே சிவன் கோயில் ஒன்று இருந்திருக்கிறது. காலமாற்றத்தில் கோயில் சிதிலமாகி, மண்ணுக்குள் புதையுண்டு போனது. கோயில் இருந்த இடமும் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, பலப் பல கைகள் மாறி, இப்போது லத்தீஃப் பாயின் வசம் இருக்கிறது.
    'எங்க வாப்பா பள்ளிவாசல் நிலங்களைக் கவனிச்சுக் கும்போது, கூடவே கோயில் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தாக.

    ஒரு மரக்கால்கூட குறையாம அளந்து கொடுப்பாக. 'சிவன் சொத்து குலம் நாசம்’னு அவுகளுக்கு இருந்த அதே நேர்மையை யும், நல்ல எண்ணத்தையும், புத்தியையும் எனக் கும் கொடுத்திருக்கான் இறைவன். ஆனாலும் என்ன... எனக்குப் பொறந்த ஒரு பெண் பிள்ளை யும் மன வளர்ச்சி இல்லாம இருந்து, பத்து வருஷத்துக்கு முன்னாடி இறந்தும் போச்சு.


    சரி... நாம அறிந்தோ அறியாமலோ பாவம் செஞ்சிருக்கோம்போல; அதனால்தான் அல்லா நமக்கு இப்படியரு தண்டனையைக் கொடுத் திருக்காருன்னு சமாதானம் பண்ணிக்கிட் டோம். காலமும் அப்படியும் இப்படியுமா ஓடிப் போயிடுச்சு. நேத்திக்கு கொல்லைப்பக்கம் மண்ல வேலை செஞ்சுட்டிருந்தேன்.

    அப்ப... மண்வெட்டி ஏதோ கல்லுல பட்ட மாதிரி 'ணங்’குனு ஓசை கேட்டுச்சு. கவனமா மண்ணை விலக்கிப் பார்த்தால்... பெரிய சிவலிங்கம்! ராத்திரி முழுக்க உறக்கம் வரல்லே சாமி! 'அல்லா... இப்ப என்ன பண்றது!’ன்னு புரியாம, விசனத்தோட உட்கார்ந்திட்டிருந்தோம். விடிஞ்சதும் தான், சாமி இங்கே வந்திருக் கிறதா பக்கத்துல இருந்த ஜனங்க பேசிக்கிட்டாங்க. உடனே இங்கே ஓடி வந்துட்டோம். இதுக்குமேல நான் என்ன செய்யணும்னு சாமி தான் வழி காட்டணும்.


    மனசார என் நிலத்தை எழுதித் தர்றேன். இதுக்காக எனக்கு பணம், காசு எதுவும் வேணாம். முன்னே இருந்த மாதிரியே அங்கே சிவன் கோயில் கட்டிக்கலாம். ஊர் ஜனங்களுக்கு அது பயன்பட்டுதுன்னா, அதனால ஊர் ஜனங்க சந்தோஷப்படுவாங்கன்னா, அதுவே அல்லாவையும் சந்தோஷப்படுத்தும்!'' என்று நெகிழ்ச்சியோடு, கண்ணீர் மல்கப் பேசி முடித்தவர், அப்படியே இன்னொரு காரியத்தையும் செய்தார்.


    ''இந்தாங்க, கோயில் கட்ட எங்களோட காணிக்கையா நூத்தியரு ரூபாய். முதல் வரவா இதை வாங்கிக்குங்க!' என்று வெற்றிலை பாக்குத் தட்டில் வைத்துக் கொடுத்தார். அங்கிருந்த அனைவருக்கும் உடம்பு சிலிர்த்துப் போட்டது.



    அதுவரை மௌனமாக எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த மகா பெரியவா, புன்னகையோடு சைகையால் அந்த இஸ்லாமிய அன்பரை ஏதோ கேட்டார். அது அவருக்குப் புரியாமல் போகவே, ஒரு சிலேட்டும் பலப்பமும் கொண்டு வந்து மகாபெரியவாளிடம் தந்தார்கள். அவர் சிலேட்டில் எழுதிக் காண்பித்தார்... 'மார்க்கக் கடமையை முடித்துவிட்டீர்களா?’ என்று.


    படித்துப் பார்த்த இஸ்லாமிய அன்பர், ''இன்னும் இல்லே சாமி! அதுக்கான பண வசதியை அல்லா இன்னும் எங்களுக்குக் கொடுக்கலை. எத்தனையோ வருஷம் முயற்சி பண்ணியும் மக்கா- மதீனா போகும் பாக்கியம் இன்னும் வாய்க்கலை'' என்றார் கண்ணீர் மல்க.


    உடனே பெரியவா, வைத்தியநாதன் நின்றிருந்த பக்கமாகத் திரும்பினார். ''இத்தனை உசத்தியான மனுஷர் நிலத்தைத் தரேன்கிறார். அவாளுக்கு நாம எந்த ஒத்தாசையும் செய்ய வேண்டாமா?'' என சைகையால் கேட்டார். தொடர்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பதையும் சைகை யாலேயே உத்தரவு பிறப்பித்தார். பெரியவாளின் விருப்பத்தை அப்படியே கூட்டத்தாரிடம் எடுத்துச் சொன்னார் வைத்தியநாதன்.


    அவ்வளவுதான்... ஒட்டுமொத்த ஊரும் சேர்ந்து ஒரே குரலில் ஒப்புக்கொண்டது... ''அவங்க புனித யாத்திரை போய்வர ஆகற செலவு மொத்தமும் நம்மளோடது!''


    அதைக் கேட்டு இஸ்லாமிய தம்பதிக்கு மனம்கொள்ளா மகிழ்ச்சி! அவர்களுக்கு மட்டுமில்லாமல், அங்கிருந்த எல்லோருக்குமாக, கை தூக்கி ஆசீர்வாதம் செய்தது மானுட தெய்வம்.

    பிறகு, மெள்ள எழுந்த மகாபெரியவா, தூணில் சாத்தியிருந்த தண்டத்தை கையில் எடுத்துக்கொண்டார். அப்படியே நடந்து வந்து பல்லக்கில் ஏறி உட்கார்ந்துகொண்டார். மீண்டும் ஊர்க்காரர்களைப் பார்த்து ஒரு புன்னகை; கரம் உயர்த்தி ஆசீர்வாதம்!

    பரிவாரங்கள் பின்தொடர, பல்லக்குப் புறப்பட்டது.


    ஊர்வலத்துடன் வந்த அன்பர் மகாலிங்கம் சொன்னார்... 'எனக்கு இப்பத்தான் தெரியுது... மகாபெரியவா ஏன் திடீர்னு இந்த ஊருக்கு வர முடிவு பண்ணினார்னு!''


    காரணம் இன்றிக் காரியம் இல்லையே! மகாபெரியவாளின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒரு காரணம் உண்டு!


    ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!


    ANBUDAN<>K S RAMAKRISHNAN<>
Working...
X