Announcement

Collapse
No announcement yet.

கோவை கிருஷ்ணா ஸ்வீட் அதிபர் கிருஷ்ணன்...!!!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கோவை கிருஷ்ணா ஸ்வீட் அதிபர் கிருஷ்ணன்...!!!

    கோவை கிருஷ்ணா ஸ்வீட் அதிபர் கிருஷ்ணன்...!!!

    அது 1988ஆம் வருடம். தொழிலை அபிவிருத்தி செய்ய வங்கியில் இருந்து கடன் கேட்டிருந்தோம். கொஞ்சம் உதாசீனமாகப் பதில் கிடைத்தது. இதை தந்தையிடம் சொல்லவேயில்லை.

    திடீரென்று அப்பா, அம்மா இருவரும் காஞ்சிபுரம் போகலாம் என்று அழைத்த உடன் கிளம்பினேன். பெரியவாளைத் தரிசனம் செய்ய, 300க்கும் அதிகமானோர் நின்றிருக்க, நாங்கள் கடைசியில் நின்றிருந்தோம்.

    திடீரெனப் பெரியவா வழிவிடச் சொல்லி கூட்டத்தை சைகை செய்தார். வழி கிடைத்தவுடன் கடைசியில் நின்றிருந்த எங்களை அருகில் வரும்படி அழைத்தார். மெய் பதற அவர் முன் சென்று நின்றோம்.

    “என்ன வேண்டும்?” என்று இரண்டு முறை கேட்டார்.

    நாங்கள், “எதுவும் வேண்டாம்” என்று, பவ்யமாகத் தலை அசைத்தோம்.

    மூன்றாவது முறை கோபமாகக் கேட்டார்.

    உடனே “பிரசாதம் வேண்டும்” எனக் கூறினோம்.

    உடனே, தனது திருவடிகளில் அணிந்திருந்த பாதுகைகளை எடுத்து, தாமரை மலரை அதன் மேல் வைத்து எங்களிடம் கொடுத்தார்.

    பரதாழ்வார், ஸ்ரீராமரின் பாதுகைகளைக் கேட்டுப் பெற்றார். அது மகா புண்ணியம். கேட்காமலேயே – மகா பெரியவாளின் பாதுகை கிடைத்ததும் இதுதான் நினைவுக்கு வந்தது.

    அந்த நொடியில் என் சர்வ நாடியும் அடங்கின. சர்வாங்கமும் ஒடுங்கின. மேனி புல்லரித்து, எத்தனை நேரம் உறைந்து போனேன் என்று தெரியாமல் செய்த அபார கருணை அது. பரவசமான நேரம்!
    உயிர் உள்ளவரை இறைவனது எல்லையில்லாக் கருணை என்னை ஆள வேண்டும் என்ற இறைஞ்சுதலுடன், அந்தப் பாதுகைகளைச் சுமந்து வந்தேன்.

    தேரில் தெய்வம் உலா வந்து கொண்டிருக்கும்போது, தெருவில் இறங்கி, நாம் அந்தத் தெய்வத்தை தரிசனம் செய்யப் போகும் சமயத்தில், அந்தத் தெய்வம் தேரிலிருந்து இறங்கி வந்து நம் கைகளைப் பிடித்துக்கொண்டு கருணை செய்தால் எப்படி இருக்கும்? அந்த மாதிரியான ஒரு புளகாங்கிதம் அது.

    காஞ்சியில் இருந்து திரும்பி வந்த உடன், வங்கியில் இருந்து அழைப்பு வந்தது. ‘ஏதோ ஒரு டென்ஷனில் சொல்லிவிட்டோம். எத்தனை லட்சம் வேண்டுமானாலும் கடன் தருகிறோம். வேண்டுமானால், செக்கை அனுப்பி வைக்கிறோம்’ என்றனர்.

    இப்படி ஒன்றிரண்டு அல்ல; 20 வருடங்களுக்கும் அதிகமாக வாடாமல் அதே மலர்களுடன், சந்தனப் பேழையில் இருந்துகொண்டு, நிறையத் திருப்பங்களை, நானே எதிர்பார்க்காத அளவுக்கு நடத்தி வருகின்றன, அந்தப் பாதுகைகள்.”

    சொல்லும்போதே அவர் குரலில் பரவசம் தெறிக்கிறது. அந்தப் பரவசம் நமக்குள்ளும் ததும்பத்தான் செய்கிறது.

    ~ கோவை கிருஷ்ணா ஸ்வீட் அதிபர் கிருஷ்ணன்.

    நன்றி: “தீபம்“ (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)

    ~ குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி

    நாற்பது வருஷத்துக்கு முன்னாடி காஞ்சிபுரத்தில் ஒரு அக்ரஹாரத்தின் வழியாய் காமாட்சியம்மன் கோயிலுக்குப் போய்க்கிட்டிருந்தேன். திடீரென பெரியவர் வர்றார்ன்னு குரல் கேட்டது. பரபரப்பாய் மக்கள் இங்கேயும், அங்கேயும் போய்க்கிட்டிருந்தாங்க. நானும் ஏதோ வயசான பெரியவர் வர்றார்ன்னு திரும்பிப் பார்த்தா, மஹா பெரியவா.


    நான் சடார்ன்னு அந்த ஞானியின் காலைப் பிடிச்சிட்டேன். அப்புறம் அவர் அந்த இடத்தை விட்டுப் போயிட்டார். நான் ஒரு மணி நேரம் அந்த இடத்திலேயே நின்னேன். அக்ரஹாரத்து அய்யர்களெல்லாம், ‘நாங்க கூட-இவரைத் தொட்டது கிடையாது. நீ காலையே பிடிச்சுட்டியே’ன்னாங்க. நான் ரொம்பப் பயந்து போயி, கோயிலுக்குள் நுழைந்தேன்.

    கோயிலுக்குள் மஹா பெரியவர் பக்தர்களுக்கு ஆசீர்வாதம் பண்ணிக்கிட்டிருந்தார். தூரத்தில் நின்ன என்னை ‘வா’ன்னு சைகையால கூப்பிட்டார்.

    ‘சாமி தெரியாமல் காலைப் பிடிச்சுட்டேன்’னேன்.

    அதற்குப் பெரியவர் ‘ஏதோ பூர்வஜென்ம வாசம், என் காலைப் பிடிச்சுட்ட. பரவாயில்லை, என்ன பண்றே’ன்னு கேட்டார்.

    ‘சினிமாவுல இருக்கேன்’ என்றேன்.

    ‘அதனால என்ன? எங்க இருந்தாலும் ஒழுக்கமாக இரு’ என்று சொல்லி தமது கைகளை எனது கைகள் மீது வைத்து ஆசீர்வாதம் பண்ணினார்.

    அன்றிலிருந்து இன்று வரை காமாட்சின்னு சொல்லும்போது, அந்த மஹா பெரியவர் என்னை ஆசீர்வதிக்கிறதா உணர்றேன்.“

    ~ குணச்சித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி

    நன்றி: “தீபம்“ (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)
Working...
X