Announcement

Collapse
No announcement yet.

Quotes of Periyavaa

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Quotes of Periyavaa

    Posted: 25 May 2014 11:48 PM PDT
    Courtesy: Sri.K.Gopalakrishna

    ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

    ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி
    ஸ்வாமிகளின் அருள்மொழிகள்

    1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய்
    பிரதக்ஷிணம்
    செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று
    சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த
    உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு
    விட வேண்டும்.

    2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள்
    செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம்
    அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும்
    சௌக்யமாக
    இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.

    3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம்
    நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற
    மதங்களுக்கெல்லாம்
    இருக்கிறதே என்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு
    நிரம்ப
    சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது
    ஏற்பட்டது.

    4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது.
    நமக்குத்
    தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ
    வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு
    போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன்
    சாமாண்ய
    தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க
    வேண்டும்.
    அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.

    5. மூன்று
    மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர்
    ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார்.
    பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய
    அனுக்ரஹத்தால்
    ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு
    முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.

    6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு
    புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறே இருக்கின்றன. பதினெட்டு
    புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32
    எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை
    மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச்
    சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம்
    உடையது.

    7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு.
    இரண்டு
    எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில்
    மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின்
    மத்தியில்
    இருக்கிறது. (சிவ என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம்
    சொன்னால்
    போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த
    க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.

    8. வேதங்களுள் யஜுர் வேதம்
    முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம்
    முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய
    மானது.
    அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் 'நம: சிவாய' என்ற பஞ்சாக்ஷர
    வாக்கியம்
    மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் 'சிவ' என்ற இரண்டு அக்ஷரங்கள்
    அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.
    இந்த
    அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில்
    சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.

    9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள்
    எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும்.
    அவைகளாவன:
    (1) விபூதி தரித்தல், (2) ருத்ராக்ஷம் அணிதல், (3) பஞ்சாக்ஷர
    மந்திரத்தை
    ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் 'சிவ' என்ற
    பதத்தை ஜபம்
    செய்தல், (4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல், (5)
    இருதயத்தில் சதா
    சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக்
    கொடுக்கக் கூடியது.
    (குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று
    ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத்
    தாராளம்
    சொல்லலாம். கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும்
    இயம்புவராயிடின்
    எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே -
    சம்பந்தர்.)

    10. பரமேச்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால்
    சொல்லுவதனாலும் கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய
    ஆக்ஞையை
    யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார்.
    குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம் அடிக்கிறோம். அதுபோல
    பரமேச்வரன்
    தேவதைகளை சிக்ஷித்தார். காளகூடவிஷம் பாற்கடலில் உண்டானபொழுது
    அதைச்
    சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேச்வரனுடைய குழந்தைகள்.

    11. பரமேச்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான்.
    அதனுடைய
    அர்த்தத்தை விசாரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு
    மாண்டூக்யோபநிஷத் என்று பெயர். அதில் 'சாந்தம் சிவம் அத்வைதம்
    சதுர்த்தம்
    மன்யந்தே' என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம்.
    ப்ரதோஷ காலத்தில் ஈச்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈச்வரன் கோயிலில்
    ப்ரதோஷ
    காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து ஈச்வர தரிசனம் செய்கிறார்கள்.

    12. சாங்க்ய சூத்திரத்தில் மூன்று கண் உள்ளவன் என்று
    சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில்
    ஈச்வரன்
    என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம
    சூத்திரத்தில் 'சப்தாதேவப்ரமித' என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன்
    என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேச்வர ஸ்வரூபம்.

    13. நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா என்ற
    க்ரந்தத்தில்
    ஒரு கேள்வி கேட்கிறார். 'கோ ப்ராம்மணை ருபாஸ்ய:?' 'காயத்ரி
    அர்க்காக்னி
    கோசர: சம்பு:' எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும்
    மூன்றிலும் ப்ரகாசிக்கிறது? சிவன் தான். காயத்ரியின்
    பரமதாத்பர்யமாயிருப்பவர் அவரே. சூரியனிடத்தில் பிரகாசிப்பவரும் அவர்
    தான்.
    ஸ்ரீருத்ரத்தில் பரமேச்வரன் அக்னி ஸ்வரூபியாக இருக்கிறார் என்று
    சொல்லப்பட்டிருக்கிறது. எனவே இந்த மூன்றிலும் பரமேச்வரனை ஆராதிக்க
    வேண்டும்.

    14. விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க
    வேண்டும். ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று
    அம்பிகையை
    ஆராதித்தாள். அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும்
    உண்டாகிறது. அதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள்.

    15.
    ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம்
    பக்தி
    இருக்க வேண்டும். எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ
    அப்படி
    அம்பிகை லோகத்தில் வித்தை, செல்வம் முதலியவைகளை அடையச் செய்து
    பின்பு
    தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள்.

    16. அம்பாளுக்கும் பரமேச்வரனுக்கும் உள்ள சம்பந்தம் எப்படிப்பட்டதென்றால்
    சரீர சரீரி பாவ சம்பந்தம். உடலும் உயிரும் எப்படியோ அப்படிதான் சரீர சரீரி
    பாவமும். இந்த உடலுக்கு உயிர் இருக்கிறது. இந்த உயிருக்கு இன்னோர்
    உயிர்
    ஆதாரமாக இருந்தால் அதைத்தான் உயிருக்கு உயிராய் இருப்பது என்று
    சொல்வர்.
    பரமேச்வரன் உயிர் என்றால் அந்த உயிருக்கு உடம்பு எது? அம்பாள்தான்.
    'சரீரம்
    த்வம் சம்போ:' என்று ஆசார்யாள் அம்பாளைப் பார்த்துச் சொல்லுகிறார்.

    17. சர்வஜகத்தும் பரமேச்வரனுடைய சரீரம். அதற்கு அப்படியே கவசம்
    மாதிரி
    இருப்பது அம்பிகை சரீரம். அப்படி இருக்கும்படியான நிலையில்
    பஞ்சபூதங்களுக்கும் மேலே மனசு என்று ஒன்று இருக்கிறதே அதுவும் நீதான்.
    ஆகாசமும் நீதான். அக்னியும் காற்றும் ஜலமும் பூமியும் நீதான். நீயே எல்லா
    ஸ்வரூபமாகவும் ஆகியிருக்கிறாய் கொஞ்சம் கொஞ்சம்
    எங்களிடத்திலிருக்கும்படியான ஞானம், ஆனந்தம் எல்லாவற்றுக்கும்
    ஆதாரமாக
    சிதானந்த ஸ்வரூபமாக இருப்பவளும் நீதான். சமஸ்த ப்ரபஞ்சமும்
    உன்பரிணாமத்தைத்
    தவிர வேறு ஒன்றும் கிடையாது. சிவன் சரீரி, நீ அவனுக்குச் சரீரம்,
    சிவயுவதி
    பாவம் உங்கள் இரண்டு பேரிடத்திலும் இருக்கிறது. இப்படி ஆசார்யாள்
    சௌந்தர்ய
    லஹரியில் சொல்லியிருக்கிறார்கள்.

    18. தொடர்ச்சியாக வந்த தாரையை
    நாம் அறுத்துவிடக் கூடாது. ப்ராணாயாமத்தோடு சித்த ஏகாக்ரத்தோடு
    மந்த்ரலோப
    மில்லாமல் பரமேச்வர அர்ப்பணம் பண்ணி எல்லாவற்றையும்
    கர்மானுஷ்டானங்கள்
    பண்ணவேண்டும். பக்திச்ரத்தையோடு கர்மகலாபத்தோடு பண்ண வேண்டும்.
    அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    19. காயத்ரி என்னும்
    வார்த்தைக்கு எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை
    ரக்ஷிப்பது
    என்பது அர்த்தம். கானம் பண்ணுவது என்பது ப்ரேமையுடனும் பக்தியுடனும்
    உச்சரிப்பதாகும். யார் தன்னைப் பயபக்தியுடனும் ப்ரேமையுடனும்த
    உச்சாரணம்
    செய்கிறார்களோ அவர்களை காயத்ரி மந்திரம் ரக்ஷிக்கும்.

    20. ப்ரதோஷ
    காலத்தில் எல்லோரும் சிவஸ்மரணம் பண்ண வேண்டும். மனதினாலும்
    வாக்கினாலும்
    'சிவ' என்ற இரண்டு அக்ஷரங்களைத் தியானித்துச் சொல்ல வேண்டும்.
    நித்யம்
    சந்த்யாகாலம் ப்ரதோஷ காலமாகும். த்ரயோதசி சந்த்யா காலத்தில்
    இருக்கிறது
    மஹாபிரதோஷ காலமாகும். நித்யமும் சாயங்காலத்தில் ஐந்து நிமிஷமாவது
    சிவ
    ஸ்மரணை பண்ணிக்கொண்டு வர எல்லோரும் சங்கல்பம் செய்து
    கொள்ளவேண்டும். ஆயுள்
    பர்யந்தம் செய்வதாக சங்கல்பம் பண்ணிக் கொண்டு மனதினால் ஸ்மரணம்
    பண்ணிக்கொண்டு வாக்கினால் சிவநாமாவைச் சொல்ல வேண்டும்.

    21.
    உஷ்ணத்தினால் உருக்கப்பட்ட நெய்யை நிறமற்றதாகக் காண்கிறோம். அதே
    நெய்
    குளிர்ந்தவுடன் வேறொரு நிறத்தையடைகிறது. ஈசனை உருவமற்றவர்,
    அரூபி எனச்
    சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் பக்தர்களின் உள்ளத்தில் ஈசன்பால் அன்பு
    பரிபூரணமாக விளங்கும் பொழுது அந்தக் குளிர்ந்த நிலையில் உருவம் இல்லாத
    கடவுளும் அவர்களது பக்திக்குக் கட்டுண்டு அவர்களை உய்விக்க ஓர்
    உருவத்தை
    யடைகிறார்.

    22. ஓரிடத்தில் ஆபரணம் எதுவுமின்றி இயற்கை எழிலுடன்
    ஈசன் பிக்ஷாண்டார் மூர்த்தியாகத் திருக்கோலங் கொள்ளுகிறார். மற்றொரு
    புறம்
    அழகே உருக்கொண்ட சுந்தரேச்வரராக அவர் காட்சியளிக்கிறார். அதே கடவுள்
    பயமுள்ளவர்களுக்குப் பயத்தைப் போக்கி அபயத்தை அளிக்கும் பைரவ
    மூர்த்தியாகத்
    தோன்றுகிறார். வீரத்தைக் காண்பிக்கும் நிலையில் அவரே வீரபத்திரராகவும்
    காட்சியளிக்கிறார். தேவர்கள் விரும்பிய ஆனந்தத்தைக் கொடுக்க சிற்சபையில்
    அந்த ஈசனே நடனமாடுகிறார். எல்லாவற்றிலும் உயர்ந்ததான ஞானத்தைக்
    கொடுக்கும்
    தெய்வமாக தக்ஷிணாமூர்த்தி வடிவத்துடன் அமர்ந்து மௌனத்தினால் சனகாதி
    முனிவர்களுக்கு அவரே உபதேசம் அருள்கிறார். இவைகளெல்லாம்
    பரமசிவனின்
    திருக்கோலங்கள்.

    23. சுவாமி எங்கும் இருக்கிறார். அவரை ஒரு
    கல்லில் வைப்பானேன் என்று கேட்கலாம். எங்கும் அவர் இருப்பதாகச்
    சொல்லுகிறோமாயினும் எங்கும் அவர் இருக்கின்றார் என்ற நினைவு மனதில்
    இல்லை.
    சுவாமி எங்கும் இருக்கிறார் என்ற எண்ணம் இருந்துவிடின் பொய்சொலுவானா?
    கெட்ட
    காரியம் செய்வானா? எங்கும் அவர் இருப்பது உண்மையே, அவர் இருப்பது
    மாத்திரம் நமக்குப் போதாது. அவருடைய அருளைப்பெற வேண்டும்.

    24.
    சூர்ய கிரணம் இருக்கிறது. ஒவ்வொரு கிரணமும் நெருப்பே. ஆனால் ஒரு
    துணியை
    வெய்யிலில் காட்டினால் அதில் தீப்பற்றிக் கொள்ளவில்லை. லென்ஸ் என்ற
    பூதக்
    கண்ணாடியை வெய்யிலில் காட்டி அதன் கீழ் ஒரு துணியைப் பிடித்தால் அதில்
    தீப்பற்றிக் கொள்கிறது. பூதக்கண்ணாடி அனேக கிரணங்களை ஒருமிக்கக்
    குவிக்கிறது. அப்படியே எங்குமுள்ள ஈச்வரனுடைய அருள் நமக்குக்
    கிடைக்கும்படிச் செய்ய ஆலயம் அவசியமாக இருக்கிறது.

    25. கோடிகோடி
    மக்கள் வீணாகப்போனாலும் ஒருவன் பூர்ணத்வம் அடைந்து விட்டால் அதுதான்
    நம்முடைய மதத்தின் ப்ரயோஜனம். அவன் ஒருவன் அனுக்ரஹகத்தாலேயே
    உலகம்
    க்ஷேமமடையும். அப்படிப்பட்ட ஒருவன் உண்டாவதற்காகத்தான் நாம்
    பிரசாரங்களைச்
    செய்கிறோம்.

    26. உலகத்தில் பாவம் பண்ணாமல் இருக்கிறவன் யாராவது
    உண்டா என்றால் குழந்தை அல்லது பைத்தியக்காரன்தான். ஞானிகளின்
    உயர்ந்த
    நிலைக்கு உதாரணம் 'பாலோன்மத்தவத்' என்று சொல்லுவார்கள். பாலன்
    என்றால்
    குழந்தை. உன்மத்தன் என்றால் பைத்தியம். உன்மாதம் என்றால் தலைக்கு
    மேலே
    ஏறிப்போகிற பித்தம். உன்மாதத்தை உடையவன் உன்மத்தன். ஈசுவரனுக்கு
    உன்மத்தசேகரன் என்று பெயர். உன்மத்தம் என்றால் ஊமத்தம் பூ.
    சம்ஸ்க்ருதத்தில் ஊமத்தைக்கு உன்மத்தம் என்று பெயர். ஊமத்தம் பூவை
    அவன்
    தரித்துக் கொண்டிருக்கிறான். அதில் சிவனுக்கு அதிகப் பிரியம்.
    உன்மத்தசேகரன் என்பதற்கு இரண்டாவது அர்த்தம் பைத்தியத்துக்குள் தலைவன்
    என்பது.

    27. பரமசிவனுக்கு உரிய ஐந்து அடையாளங்களில் பஸ்மமாகிய
    விபூதி ஒன்று; அவனுக்குப் பிரியமான மற்றோர் அடையாளம் ருத்ராக்ஷம்.
    வில்வம்
    மற்றொன்று. பஸ்மம் சத்ய ஸ்வரூபமானது. அதை சாக்ஷாத் பரமசிவனுடைய
    ஸ்வரூபமே
    என்று சொல்லவேண்டும். ப்ரபஞ்சமெல்லாம் நசித்தாலும் தான் அழியாமல்
    இருப்பவன்
    பரமசிவன். உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் எரிந்துபோனால் பஸ்பமாகி
    விடுகிறது. அதை எரித்தால் அது அழிவதில்லை. சிவ ஸ்வரூபமும்
    அத்தகையதே.

    28. ருத்ராக்ஷத்தின் பெருமை மிக அதிகம். ருத்ராக்ஷத்தைச்
    சிவபெருமானுடைய
    அடையாளமாகப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். ருத்ரனுடைய நேத்திரம்
    அது. அதைத்
    தமிழில் 'திருக்கண்மணி' என்று சொல்லுவார்கள். மற்ற விருக்ஷங்களுடைய
    விதைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த ருத்ராக்ஷத்திற்கு உண்டு.
    இயற்கையில்
    துளையோடு உண்டாவது ருத்ராக்ஷம் ஒன்றுதான். இந்த ருத்ராக்ஷம் பாரத
    தேசத்தில்
    நேபாளத்தில் இருக்கிறது.

    29. அறுபத்தி நான்கு கலைகள், பதினான்கு
    வித்தைகள், இவற்றில் நான்கு வேதங்கள் பிரதானமானவை. நான்கு
    வேதங்களுள்
    மூன்று வேதங்கள் பிரதானமானவை. மூன்று வேதங்களுள் யஜுர்வேதம்
    பிரதானமானது.
    யஜுர் வேதத்திலும் மத்திய காண்டம் பிரதானமானது. மத்திய காண்டத்திலும்
    ஸ்ரீருத்ரம் பிரதானமானது. ஸ்ரீருத்ரத்திலும் பஞ்சாக்ஷரம் பிரதானமானது.
    பஞ்சாக்ஷரத்திலும் 'சிவ' என்ற இரண்டு எழுத்துக்கள் பிரதானமானவை,
    வேதத்துக்கு ஜீவாம்சமாக இருப்பவை 'சிவ' என்னும் இரண்டு அக்ஷரங்கள்.
    பஞ்சாக்ஷர உபதேசம் நாவுக்கு ஆபரணமாக இருப்பது.

    30. உலகத்திலுள்ள
    எல்லாருமே சிவன் குடிமக்கள். சிவன் மஹாபிதா. நாம் எல்லோரும் யக்ஞம்
    செய்கிறோம். அக்னி காரியம் இல்லாமல் வைதிகமதமே இல்லை. உலகம்
    முழுவதுமே
    வேதம் பரவியிருந்த காலத்தில் எல்லோருமே அக்னி காரியம் செய்தார்கள்.
    அக்னி
    காரியத்தின் கடைசியில் பஸ்ம தாரணம் உண்டு. வைஷ்ணவர்களாக
    இருந்தால்
    பாஞ்சராத்ர ஆகமத்திலுங்கூட ஹோமங்களுக்குப் பிறகு ஹோம பஸ்மத்தை
    எடுத்துத்
    தரித்துக் கொள்ள வேண்டும்.

    31. சப்தத்வீபங்களிலும் வேதமே
    பரவியிருந்த காலத்தில் உலகம் முழுதும் பஸ்மதாரணம் செய்து
    கொண்டிருந்தார்கள். நாம் செய்த அபசாரங்களால் இன்றைக்கு இந்த தேசத்தை
    தவிர
    இதர தேசங்களில் மதாந்தரங்கள் வந்தவிட்டன. அதற்கு நாமே காரணம். நாம்
    மறுபடியும் நம்முடைய அனுஷ்டானங்களை எல்லாம் சரிவர மேற்கொள்ள
    வேண்டும்.
    வைதிகமதம் முன்போலவே எல்லா இடங்களிலும் வரவேண்டும். இதற்கு
    நம்மிடத்தில்
    அனுஷ்டானம் வரவேண்டும். பஸ்மதாரணம் அவசியம். பஸ்மம்
    சிவஸ்வரூபம்.
    கலியுகத்தில் எல்லாவிதமான பாபங்களையும் போக்குவதற்கு பஸ்மதாரணம்,
    ருத்ராக்ஷதாரணம், சுத்த ஸ்படிக ஸ்வரூபத்யானம், வில்வ அர்ச்சனை
    இவைமிக
    அவசியம்.

    32. பெரியவர்கள் தங்களுடைய அனுபத்தின் மூலமே வெளியே
    சிவகாரியங்களைச் செய்து, உள்ளே அதற்கு ஏற்ற விளைவுகளை உண்டாக்கிக்
    கொள்ளலாம் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். அதனால் தான்
    மிலிட்டரிக்காரன்
    யூனிபாஃரம் போட்டால் வீரத்தன்மை வருகிறது என்று சொல்லுகிறான்.
    அப்படித்தான்
    பக்தி வரவேண்டும், சாந்தம் வர வேண்டும், சத்தியம் வர வேண்டும் என்றால்
    'சிவ' சின்னங்கள் போட்டுக்கொள்ள வேண்டும் என்று பெரியவர்கள்
    சொன்னார்கள்.
    வெளியில் நாம் செய்கின்ற சில சம்ஸ்காரங்களினாலே உள்ளே சில நன்மைகள்
    ஏற்படுகின்றன. இவை எல்லாம் வெளிவேஷம் என்று நினைத்தால் வெறும்
    வேஷமாகவே
    போய்விடுகின்றன. ஆத்மார்த்தமாக ஜீவனை பரிசுத்தம் செய்து
    கொள்வதற்காகச்
    சின்னங்களை அணிகிறேன் என்று நினைத்தால் சத்தியமாக உள்ளே பரிசுத்தம்
    ஏற்படுகிறது. புறத்திலே தரிக்கும் சின்னங்கள் ஆத்மாவுக்கு
    உபயோகப்படுகின்றன.

    33. நாம் எத்தனையோ அபசாரம் பண்ணிக்
    கொண்டிருந்தாலும் நமக்கெல்லாம் அனுக்ரஹம் பண்ணிக்கொண்டு பரமேச்வரன்
    சகல
    புவனங்களையும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறார். நாம் செய்கிற அக்கிரமத்தைப்
    பார்த்தோமானால் நமக்கு ஒருவேளை அன்னங் கிடைக்கலாமா? அப்படி
    இருக்கிறபோது
    நம்மைப் போன்ற சகல ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு வேளையும் அன்னம்
    கிடைத்துக்
    கொண்டிருக்கும்படியாக நம்மிடமிருந்து ஒருவித பிரயோஜனத்தையும்
    எதிர்பார்க்காமல் சர்வேச்வரன் அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறார்.

    34. சகல வஸ்துக்களும் அழிந்தாலும் கடைசியில் தான் ஒன்று மட்டுமே
    சத்தியமாக
    இருக்கிற பஸ்மத்தை நெற்றியிலும், ஸ்வபாவமாகத் துவாரங்களுடனும்
    முகங்களுடனும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிற ருத்ராக்ஷங்களைக் கழுத்திலும்,
    சாக்ஷாத் மஹாலட்சுமியின் வாசஸ்தலமாகிய வில்வத்தைச் சிரசிலும்,
    வேதத்தின்
    மத்யமணிக்கு, நடுநாயகமணிக்கு, ஒப்பாக விளங்குகிற 'சிவ' என்னும்
    இரண்டு
    அக்ஷரங்களை நாக்கிலும், சுத்த ஸ்படிக ப்ரகாச மஹாலிங்கத்தை
    உள்ளத்திலும்
    தரித்துக்கொண்டு ஜன்ம சாபல்யத்தை அடைய வேண்டும்.

    35. நாம் எதை
    நினைக்கிறோமோ அது மயமாக ஆகிவிடுகிறோம். சுத்த ஸ்படிகமாக
    விளங்குகிற
    பரமேச்வரனை நினைத்தால் நம் மனசு சுத்த ஸ்படிகமாக ஆகும். அவர் தான்
    எப்போதும் துக்கமென்பதே இல்லாதவராக ஆனந்த ஸ்வரூபியாக இருக்கிறார்.
    ஆகவே
    விபூதி ருத்ராக்ஷ தாரணம், பஞ்சாக்ஷர ஜபம், உள்ளே சுத்தஸ்படிக சங்காச
    ரூபியாகிய பரமேச்வரனுடைய தியானம், வில்வார்ச்சனை இவற்றை
    எப்போதும் நாம்
    செய்து கொண்டே இருக்க வேண்டும்.

    36. ஸ்ரீஅப்பய்ய தீக்ஷிதர் என்று
    ஒரு பெரியவர் இருந்தார். இன்றைக்கு நாம் விபூதி ருத்ராக்ஷம் தரித்திருப்பது
    அவர்களுடைய ப்ரயத்தனத்தின் ப்ரயோஜனம். அவர்கள் 104 புத்தகங்கள்
    எழுதியிருக்கிறார்கள். சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள். விஷ்ணு
    த்வேஷத்தினால் அப்படிச் செய்யவில்லை. விஷ்ணு பக்தி என்று பேர்
    வைத்துக்கொண்டு சிவ பக்தியை நாசம் பண்ணி சிவத்வேஷத்தை வளர்ப்பதை
    அவர்கள்
    வெறுத்தார்கள். 'சிவத்வேஷத்தை சகிக்க மாட்டேன்' என்று சொல்லிச்
    சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள்.

    37. 'வேதத்தில் ஸ்வாமியைப்
    பற்றிச் சொல்லும்போது' எதற்கு மேல ஒன்றுங் கிடையாதோ அது தான்
    ஸ்வாமி.
    எதற்குக் கீழே ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. மிகப்
    பெரியனவற்றுக்
    கெல்லாம் பெரியது ஸ்வாமி மிகச் சிறிய அணுவுக்கெல்லாம் அணுவானது
    ஸ்வாமி
    என்று வருகிறது. ஸ்வாமி என்பவர் மிகச் சிறியனவற்றுக்கெல்லாம் சிறியதாய்
    இருப்பவர் என்றால் என்ன அர்த்தம்? அவர்தாம் எல்லாமாய் இருக்கிறார்.
    அதனால்
    அவரைத் தவிர வேறு ஒன்று இல்லாத நிலை வந்துவிடுகிறது. சின்னதும்
    அவர்தான்,
    பெரியதும் அவர்தான், சின்னதைக் காட்டிலும் சின்னதாக, பெரியதைக்
    காட்டிலும்
    பெரியதாக இருக்கிறவர் பட்டகட்டையாக ஸ்தாணுவாக-இருக்கிறார். அப்படி
    உட்கார்ந்திருப்பவர் காரியமே இல்லாமல் சாந்தமாக உட்கார்ந்திருப்பவர்,
    ஆனந்தமாக உட்கார்ந்திருப்பவர் தக்ஷிணாமூர்த்தி.

    38. சிவன்
    கோயிலுக்குப் போனால் மஹாலிங்கம் கிழக்கே பார்த்துக் கொண்டிருப்பார்.
    அவருக்கு ஈசான்ய (வடகிழக்கு) திக்கில் நடராஜா தெற்கே பார்த்துக்
    கொண்டிருப்பார். ஒரு காலை வேறு தூக்கிக்கொண்டு நற்பார். அவரை
    எப்பொழுதும்
    நாம் இருதயத்தில் தியானம் பண்ணிப்பண்ணி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை
    நினைத்து,
    அந்த ஆனந்த தாண்டவ மூர்த்தியின் ஸ்வரூபம் மனத்தில் ஸ்புரிக்கும்படி
    ஆகிவிட்டால் அதைத்தான் சித்தியாகி விட்டது என்று சொல்வது.

    39.
    ஆனந்தத்திலே இரண்டு வகை இருக்கிறது. பொங்குகிற ஆனந்தம் ஒன்று,
    அடங்கி
    அனுபவிக்கின்ற நிலை ஒன்று. பொங்குகிற ஆனந்த தாண்டவ மூர்த்தி
    நடராஜா. அவர்
    சடையைப் பார்த்தாலே இது தெரியும். இப்படி இரண்டு பக்கமும் 'கிர்ர்'
    என்று
    அவர் சுற்றுகிற வேகத்தில் சடை தூக்கிக் கொண்டு நிற்கிறது. 'விரித்த
    செஞ்சடையான்' ஆகிவிடுகிறான். அப்போது அவன் கையில் இருக்கும்
    உடுக்கையிலிருந்து 'அ இ உண், ருலுக்' என்பதான பதினாறு சூத்திரங்கள்
    வந்துகொண்டிருக்கின்றன. ஆனந்த தாண்டவ மூர்த்தியின் கையிலிருந்து
    வரும்படியான அந்தப் பதினாலு சூத்திரங்களுந் தாம் அதிலிருந்து விரிந்த மஹா
    பாஷ்ய புத்தகத்தில் அடங்கி இருக்கின்றன. கூத்தாடும்போது பொங்கி வந்த
    சப்தங்கள் புத்தகத்தில் அடங்கி இருக்கின்றன.

    ஆனந்தக் கூத்தின்
    சப்தங்கள் அடங்கியிருக்கும் படியான புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு
    சாந்தமாக அமைந்திருக்கும் படியான ஆனந்தத்தோடு உட்கார்ந்திருக்கும்படியான
    மூர்த்தி தக்ஷிணாமூர்த்தி. இவரும் தெற்குப் பக்கம் பார்த்துக் கொண்டு தான்
    ஈச்வரனுடைய தென்னண்டைப் பிரகாரத்தில் உட்கார்ந்திருக்கிறார். நடராஜரின்
    கோலத்தில் சடைகள் நான்கு பக்கமும் விரிந்து கிடக்கின்றன.
    தக்ஷிணாமூர்த்திக்
    கோலத்தில் அவை அமைந்த ஜடா மண்டலமாகத் தொங்கிக்
    கொண்டிருக்கின்றன. அங்கே
    சந்திரன் தெறித்துக் கொண்டிருக்கிறது. இங்கே ஆனந்தமாகப் பிரகாசித்துக்
    கொண்டிருக்கிறது. ஒருகால் பூமியிலிருக்க இன்னொரு காலைத் தூக்கிக்
    கொண்டு
    அங்கே கூத்தாடிக் கொண்டிருக்கிறார். ஒரு காலின் மேல் இன்னொரு காலைத்
    தூக்கிப் போட்டுக் கொண்டு இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அங்கே
    ஆனந்தமூர்த்தி, இங்கே ஞானமூர்த்தி.

    40. 'சத் சித் ஆனந்தம்' என்று
    நாம் கேட்டிருக்கிறோம். சச்சிதானந்தம் என்று சொல்லிக்கொண்டும்
    இருக்கிறோம்.
    இதற்கு அர்த்தம் என்ன என்று அநேகம் பேருக்குத் தெரிந்திருக்காது.
    தெரிந்திருந்தாலும் புரிந்து கொண்டிருப்பவர்கள் சில பேர்தான் இருப்பார்கள்.
    'சத்' என்பது ஒரு புறம் இருக்கட்டும். 'சித்' என்பது தான் ஞானம்.
    தக்ஷிணா
    மூர்த்தி காட்டிக் கொண்டு இருக்கும்படியான முத்திரைக்குச் சின்முத்திரை
    என்று பெயர். ஆனந்தம் பொங்கி அடங்கும் போது ஞானம் பூர்ணமாக
    நிறைந்திருந்தால் அதுதான் சாந்தம். ஞானம் நிறைந்தவனிடம் ஆனந்தமும்
    நிறைந்திருக்கிறது என்று அர்த்தம். ஞானம் நிறைந்து ஆனந்தமும் நிறைந்து,
    அடங்கியிருக்கும் படியான தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில்தான் அவரைப்
    போலவே
    உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பெரியோர்கள் பஞ்சாக்ஷர ஜபம்
    பண்ணுவார்கள். ஜபம் பண்ணுவது தக்ஷிணாமூர்த்தி சந்நிதானம். தரிசனம்
    பண்ணுவது
    ஆனந்தக் கூத்தன் சந்நிதானம்.

    41. பிக்ஷாடனமூர்த்தி அதோமுகமாக
    இருண்டு விரலைக் காட்டிக் கொண்டிருக்கும்படியான முத்திரையைச்
    சின்முத்திரை
    என்று சொல்லுகிறார் என்று நினைக்கிறேன். பிக்ஷாடன மூர்த்தியின் ஒரு
    கையில்
    இரண்டு கால்களையும் தூக்கிக்கொண்டு ஒரு குட்டிமான் நிற்கும். இவர்
    கையை
    வைத்துக் கொண்டிருக்கும்படியான முத்திரையை அது பார்த்துக் கொண்டு
    நிற்கிறாற்போல இருக்கும். 'இதோ உனக்கு ஆகாரம் இருக்கிறது பார்' என்று
    ஸ்வாமி சொல்வது போல் அந்த இரண்டு விரலையும் அதனிடம் காட்டிக்
    கொண்டிருப்பது
    போல இருக்கும். ஒரு புல்லை அதற்குக் காட்டுகிற மாதிரி, 'உனக்கு ஒரு
    வஸ்து
    இருக்கிறது' என்று சொல்கிற மாதிரி இருக்கிறது. இப்படி அனேகம்
    மூர்த்திகள்.

    42. பாபத்தை ஒரே க்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு.
    இரண்டு
    எழுத்துக்களாலான ஒரு பெயர் அது. சகல வேதங்களுக்கும் மத்தியில்
    இருப்பது.
    அதுவே வேதங்களின் ஜீவரத்னம். கோயிலில் மஹாலிங்கம் போலவும்,
    தேகத்தில்
    உயிர்போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. அதை வாக்கினால்
    சொல்ல
    வேண்டும். யார் சொல்ல வேண்டும்? மனிதனாகப் பிறந்தவன் சொல்ல
    வேண்டும்.
    ஊமையாக இல்லாத எவனும் சொல்லலாம். அதைச் சொல்லுவதற்காகத்தான்
    நாக்கு
    இருக்கிறது. மனிதன் அதைச் செய்யாவிட்டால் 'நாக்கினால் செய்யக்
    கூடியதை இவன்
    செய்யவில்லை. இவனுக்கு நாக்கு கொடுத்தது பிரயோஜனமில்லை' என்று
    பரமேச்வரன்
    திரும்பி வாங்கிவிடுவான். ஆகவே அதை எல்லோரும் சொல்லியாக
    வேண்டும். அதை ஒரு
    தரம் சொன்னால் போதும். வேறொரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம்.
    சொன்னால்
    அந்த க்ஷணத்திலேயே அது பாபத்தைப் போக்கிவிடும். ('சிவ' என்ற
    நாமாவே அது).

    43. பரமேச்வரனை நாம் நேரில் பார்த்து நமஸ்காரம் பண்ண வேண்டாம்.
    அவருடைய
    நாமாவே போதும். நமக்கு நன்றாகத் தெரிந்தது அது. நம்முடைய மதத்தில்
    பாப
    பரிகாரத்துக்கு சுலபமான மார்க்கம் இருப்பதாகச் சொன்னேன். அது இந்த
    ஸ்மரணந்தான். ப்ரதோஷ காலத்தில் இந்த நாமாவைச் சொன்னால் போதும்.
    பெரியவர்கள்
    - சிஷ்டர்கள் சாயங்காலத்தில் இதைச் சொல்லுவார்கள். அப்பேர்ப்பட்ட
    பரமேச்வரன் சகல வேத சாஸ்த்திரங்களின் தாத்பர்யமாகிற ஓங்கார
    ஸ்வரூபமாக
    இருக்கிறார். ஓங்காரந் தான் எல்லாத் தத்துவங்களுக்கும் முடிவானது.

    44. நேற்று ஒரு வைஷ்ணவர் குழந்தையோடும் தாயாரோடும் இங்கே
    வந்திருந்தார்.
    குழந்தையைப் பார்த்து 'உம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்' என்று
    அவர் சொன்னார். உம்மாச்சி என்றால் ஸ்வாமி என்பது அர்த்தம்.
    குழந்தைகளின்
    பரம்பரையிலே சில வார்த்தைகள் வழங்கி வருகின்றன. அந்த வார்த்தைகள்
    இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் வருஷங்களாக வந்து கொண்டிருக்கின்றன.
    பெரியவர்கள் வார்த்தை மாறும். குழந்தைகள் வார்த்தைகள் மாறா. உம்மாச்சி
    என்ற
    வார்த்தையும் குழந்தைகள் பரம்பரையில் வந்த பழைய வார்த்தை - உம்மாச்சி
    என்பது யாரைக் குறிக்கிறது?

    ஒரு நாள் மலைக்கோட்டைக்குப்
    போயிருந்தேன். அங்கே ஒருவரை 'உம்மாச்சு' என்று கூப்பிட்டார்கள்.
    அங்கே உள்ள
    கோயில் ஸ்ரீபாதந்தாங்கிகள் வாத்திமப் பிராமணர்கள். அவர்களில்
    திருநல்லமென்னும் கோனேரி ராஜபுரத்திலிருந்து வந்தவர்கள் இருந்தார்கள்.
    திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர் உமாமகேச்வரர் என்பது. அந்தப் பெயரை
    வைத்துக் கொண்டிருந்த உமாமகேச்வரையர் என்று ஒருவர் அங்கே இருந்தார்.
    அவரைத்
    தான் 'உம்மாச்சு' என்று கூப்பிட்டார்கள். ஆகவே உமாமகேச்வரர் என்பது
    'உம்மாச்சு' என்றாயிற்று என்று தெரிகிறது. அதுவே தான் உம்மாச்சி என்றும்
    ஆயிற்று. ஆகையால் குழந்தை பாஷையிலிருந்து அவர்களுடைய ஸ்வாமி
    உமாமகேச்வரர்
    என்பது தெரிந்தது. அந்த ஸ்வாமி அவர்களுக்கு மாறவில்லை.

    குழந்தைகளுடைய எண்ணப்படி பழைய காலத்திலிருந்து ஸ்வாமியாக
    எண்ணப்பட்டு
    வந்தவர் உமாமகேச்வரர் என்பது தெரிகிறது. குழந்தைகளால் சொல்லப்படும்
    ஒரு
    விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தை தான் தெய்வம். அவர்களிடத்தில்
    காமக்
    குரோதங்கள் இல்லை. 'குழந்தையாக இரு' என்று உபநிஷத் சொல்லுகிறது.
    அதற்கு
    மோச எண்ணம் இல்லை. கபடம் இல்லை. அவைகளெல்லாம் இல்லாதபோது
    வருவதுதான்
    உபநிஷத், உபநிஷத்தும் குழந்தையினுடைய வார்த்தையும் ஒன்றுதான். இந்த
    இரண்டும் பரமேச்வரரைச் சொல்லுகின்றன. பாகவதமும் அப்படியே
    சொல்லுகிறது.
    ஆகையால் நாம் எல்லோரும் சிவத்தியானம் செய்ய வேண்டும்.
    சிவநாமோச்சாரணம்
    செய்ய வேண்டும். நல்ல கதியை அடைவதற்கு சுலபமான வழி அதுதான்.

    45.
    சிவன் கோயில்களில் கர்ப்ப க்ருஹத்தில் உள்ள லிங்கத்தை மஹாலிங்கம்
    என்கிறோம். எந்தக் கோயிலிலும் மஹாலிங்கத்திற்குக் கபாலீச்வரர் என்றோ
    வன்மீகநாதர் என்றோ பல பெயர்கள் உண்டு. ஆனால் ஒரு மஹாலிங்கத்துக்கு
    மாத்திரம் மஹாலிங்கம் என்றே பெயர். அந்த மஹாலிங்கம்
    மத்தியார்ஜுனத்தில்
    இருக்கிறது. மத்தியார்ஜுனம் என்பது திருவிடைமருதூர். அங்குள்ள
    லிங்கத்தை
    மஹாலிங்கம் என்று விசேஷமாகச் சொல்லுகிறோம். காரணம் சோழதேசமே
    ஒரு கோயிலாக
    இருக்கிறது. "சிவ: சோளே" என்று சொல்வதுண்டு. சைவத்திற்குச்
    சோழதேசம்
    பிரசித்தம் என்பது அதன் அர்த்தம்.

    46. எந்தச் சிவன் கோயிலிலும்
    கன்னி மூலையில் விக்நேச்வரரும், மேற்கில் சுப்பிரமணியரும், வடக்கில்
    சண்டேச்வரரும், தெற்கில் தக்ஷிணாமூர்த்தியும், அக்கினி மூலையில்
    சோமாஸ்கந்தரும், ஈசானததில் நடராஜரும் இருப்பார்கள்.
    மத்தியார்ஜுனத்திற்கு
    நேர்மேற்கில் பத்துமைல் தூரத்திலுள்ள ஸ்வாமிமலை சுப்பிரமணிய
    க்ஷேத்திரம்.
    அதற்குச் சிறிது தெற்கில் கன்னி மூலையிலுள்ள திருவலஞ்சுழிக் கோயில்
    திருவிடைமருதூர் மஹாலிங்கத்துக்கு விக்நேச்வரர் சந்நிதி.
    திருவிடைமருதூருக்குப் பத்துமைல் தெற்கில் ஆலங்குடி என்ற ஊர்
    இருக்கிறது.
    அது தக்ஷிணாமூர்த்தி க்ஷேத்திரம். இடைமருதுக்கு நேர் வடக்கிலுள்ள
    திருச்சேய்ஞலூர் என்பது சண்டேச்வரர் கோயில். திருவிடைமருதூருக்கு நேர்
    கிழக்கிலுள்ளது திருவாவடுதுறை. அது நந்திகேசுவரர் சந்நிதி. திருவாரூரில்
    சோமாஸ்கந்தர், தில்லையில் நடராஜர், சீர்காழியில் பைரவர். இப்படிச் சோழ
    தேசமே ஒரு சிவாலயமாக இருக்கிறது.
    47. ஸ்வாமி இருக்கிறாரா? இருந்தால்
    அவர் எப்படி இருக்கிறார்? என்ன பண்ணுகிறார்? என்ற கேள்விக்குப் பதிலாகக்
    கண்ணன் கீதையில் அர்ஜுனனுக்கு உன்ன உபதேசம் பண்ணுகிறார் என்று
    கொஞ்சம்
    பார்ப்போம். "அப்பா, ஈச்வரன் தான் ஒவ்வொருத்தருடைய
    இருதயத்திற்குள்ளும்
    இருந்து அவர்களை ஆட்டிவைத்துக் கொண்டிருக்கிறான்" என்று சொல்கிறார்.
    நீங்கள் பொம்மலாட்டம் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? உள்ளே ஒருத்தன்
    இருந்துகொண்டு பொம்மைகளை உள்ளேயிருந்தே அனேகம் கயிறுகளைக்
    கட்டிக்கொண்டு
    அவற்றை இழுப்பதன் மூலம் ஆடவைப்பான். அந்தப் பொம்மைகள்போல்
    இருக்கிற
    தேகத்தையுடைய எல்லாப் பிராணிகளையும் உள்ளேயிருந்து ஒருத்தன்
    ஆட்டிவைத்துக்
    கொண்டிருக்கிறான். அவன் ஆட்டுகிறதனால் தான் இவை ஆடுகின்றன. அந்த
    ஈச்வரன்
    தான் எல்லாப் பிராணிகளுடைய ஹ்ருத்தேசத்திலும் இருக்கிறான் என்று
    கண்ணபிரான்
    உபதேசம் செய்கிறார்.
    - ஹர ஹர மஹாதேவா -


    Source:kn ramesh
Working...
X