Announcement

Collapse
No announcement yet.

தன்னை இகழ்ந்தவருக்கும் அருள் செய்த ஸ்ரீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தன்னை இகழ்ந்தவருக்கும் அருள் செய்த ஸ்ரீ

    ஸ்ரீ ராகவேந்திரர் மந்த்ராலயத்தில் பிருந்தாவனப் பிரவேசம் செய்த பின்பு பல ஆண்டுகள் கழித்து நடந்த ஒரு நிகழ்ச்சி இது. ஸ்ரீ வியாச தத்வக்ஞ தீர்த்தர் என்பார் மிகச் சிறந்த ஆச்சார்யாள்களில் ஒருவராக திகழ்ந்து வந்தார். அவரிடம் பல சிஷ்யர்கள் பாடம் பயின்று வந்தனர்.
    ஒரு நாள் தனது சிஷ்யர்களுக்கு ‘நியாய சுதா’ என்ற நூலை போதித்து வந்தார். ‘நியாய சுதா’ என்பது மிகவும் கடினமான நூல். இதை புரிந்துகொள்வதென்பது அவ்வளவு சாமான்யமானதல்ல. அதிகமான ஞானம் இருந்தால் தான் நியாய சுதாவை புரிந்துகொள்ள முடியும்.


    ஸ்ரீ ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகள் வெங்கடநாதராய் கும்பகோணம் விஜயீந்திர ஸ்வாமிகள் மடத்தில் ஸ்ரீ சுதீந்திர தீர்த்தரிடம் வித்யாப்யாசத்தில் இருந்த காலத்தில் நியாய சுதா என்னும் இந்த கடினமான நூலுக்கு பாஷ்யம் எழுதினார். யாருமே தர முடியாத விளக்கங்களை எல்லாம் மிகவும் எளிமையாய் எல்லாரும் எளிதில் புரிந்துகொள்ளுமாறு வெங்கடநாதர் நியாய சுதாவிற்கு உரை எழுதியிருந்ததை கண்டு ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் வியந்தார். வெங்கடநாதனைப் பற்றி குறை சொன்ன சக சிஷ்யர்களிடம் வெங்கடநாதரின் புலமையை எடுத்துரைத்து ‘பரிமளாச்சாரியார்’ என்ற பட்டத்தை கொடுத்து கௌரவித்து நியாய சுதாவின் உரைக்கு ‘சுதா பரிமளம்’ என்ற பெயரையும் வைத்திருந்தார்.
    அப்படிப்பட்ட நியாய சுதாவைத் தான் ஸ்ரீ வியாச தத்வக்ஞ தீர்த்தர் தனது சீடர்களுக்கு பாடமாய் நடத்திக்கொண்டிருந்தார். ஆனால் ஸ்ரீ வியாச தத்வக்ஞ தீர்த்தருக்கு ஸ்ரீ ராகவேந்திரர் இயற்றிய சுதா பரிமளத்தின் மேல் அவ்வளவாக நல்ல அபிப்ராயம் ஏற்படவில்லை. அவரது கருத்துப்படி சுதா பரிமளம் என்பது ஒரு மூகடிப்பிணி. அதாவது கருத்துக்களை சரிவர விளக்காமல் மேம்போக்கான விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பது தான் ஸ்ரீ வியாச தத்வக்ஞ தீர்த்தரின் அபிப்ராயமாக இருந்தது.
    இதனால் நியாய சுதாவை பாடம் நடத்தும்போது ஸ்ரீ ராகவேந்திரரின் சுதா பரிமளத்தை சமயம் கிடைக்கும்போதெல்லாம் சிஷ்யர்களிடம் பரிகசித்தும் வந்தார். தான் சொல்வது தான் சிறந்தது என்பது போல, சுதா பரிமளத்தை இரண்டாம் பட்சமாக்கினார்.
    இப்படியாக இருக்கும்போது ஒரு நாள், ஸ்ரீ வியாச தத்வக்ஞ தீர்த்தரின் சிஷ்யர்கள் நியாய சுதாவை பற்றிய சில சந்தேகங்களை கேட்டு அதை விளக்குமாறு கேட்டுக்கொண்டார்கள்.
    “உங்கள் சந்தேகங்களை போக்க வேண்டியது என் கடமை. உங்களுக்கு எந்த இடத்தில் புரியவில்லை என்று கேளுங்கள். எளிமையாக விளக்குகிறேன்…!” என்று கம்பீரமாக தீர்த்தர் சொன்னதும் சிஷ்யர்கள் தமது சந்தேகங்களை அவரிடம் இயம்பினர்.
    சிஷ்யர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு ஸ்ரீ வியாஸ தத்வக்ஞ தீர்த்தர் விளக்கமளிக்க முற்பட்டார். எப்படி எல்லாமோ விளக்கங்களை கொடுக்க முற்பட்டபோதும் அதில் அவருக்கே திருப்தி ஏற்படவில்லை. சிஷ்யர்களுக்கும் சந்தேகம் தீரவில்லை. பலவாறாக சிந்தித்தும் பார்த்தார். தீர்த்தருக்கு விளக்கங்களே தோன்றவில்லை. தான் அளிக்கும் விளக்கம் தான் சிறந்தது, சுதா பரிமளாவில் தனக்கு தெரியாதது எதுவுமே இல்லை என்று இது நாள் வரை மார்தட்டி வந்த தீர்த்தர் இப்போது தலை குனிந்தார். சிஷ்யர்களின் சந்தேகங்களை களைய முடியவில்லையே என ஆதங்கம் கொண்டார்.
    மனம் குழம்பிய தீர்த்தர் அதற்கு மேலும் பாடம் நடத்தாமல் அன்றைய வகுப்பை சீக்கிரம் முடித்துக்கொண்டு, விளக்கங்களை அடுத்த நாள் தருவதாக சொன்னாரே தவிர, அன்று முழுவதும் சிந்தித்து சிந்தித்தே நேரத்தை கழித்தாரே தவிர, எந்தவொரு விளக்கமும் அவருக்கு கடைசி வரை தோன்றவேயில்லை.
    சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்த வெகு நேரம் வரை உறக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டிருந்தார். பாதி இரவிற்கு மேல் தான் அவருக்கு உறக்கமே வந்தது. கூடவே ஒரு அதிசயமும் நிகழ்ந்தது.
    ஆம்… சிஷ்யர்களின் சந்தேகங்களை போக்க முடியாமல் அவதிப்பட்ட ஸ்ரீ வியாச தத்வக்ஞ தீர்த்தரின் கனவில் ஸ்ரீ ராகவேந்திரர் தோன்றினார். எந்தெந்த இடங்களுக்கு விளக்கங்கள் தேவை என்று தீர்த்தர் குழம்பினாரோ, அந்த இடங்களுக்கெல்லாம் சுதா பரிமளத்தில் தெளிவான விளக்கங்கள் இருப்பதை சுட்டிக் காட்டி, தீர்த்தரை தெளியவைத்து ஸ்ரீ ராகவேந்திரர் மறைந்தார்.
    ஸ்ரீ வியாச தத்வக்ஞ தீர்த்தருக்கு மெய்யெல்லாம் ஜில்லிட்டது. பரபரப்புடன் எழுந்து சுதா பரிமளத்தை புரட்டினார்.
    “ஆஹா… ஆஹா… என்ன அருமையான விளக்கங்கள். இப்பேர்ப்பட்ட பாஷ்யத்தையா நான் இது வரையில் இகழ்ந்து வந்தேன். என்னே என் மடமை. குரு ராகவேந்திரா…! நின்னை இகழ்ந்த என் மீது இவ்வளவு கருணை பூண்டனையே…! ஆஹா என்னே என் பாக்கியம்!! என் ஜென்மம் சாபல்யம் பெற்றது. உன்னையே ஒவ்வொரு நாழிகையும் வேண்டி துதிப்போர் கணக்கில்லாமல் இருக்க, உன்னைப் பரிகசித்த என் கனவில் தோன்றி எனது சஞ்சலத்தை களைந்து என்னை நானே உணரச் செய்த குரு தேவா! இனி என்றென்றும் நான் உன் அடிமை… என்றென்றும் நீ எனக்கு அருள் புரிய வேண்டும் குருதேவா!” என்று ஸ்ரீ ராகவேந்திரரை ஸ்மரித்துக்கொண்டார்.
    அடுத்த நாள் காலையில் தனக்கு முந்தைய இரவு ஏற்பட்ட ஆத்மானுபவத்தை கூறி சந்தேகங்களுக்கான விளக்கத்தையும் சுதா பரிமளத்திலிருந்து சிஷ்யர்களுக்கு விளக்கியதும், ஸ்ரீ ராகவேந்திரரின் கருணையையும் மகிமையையும் அனைவரும் போற்றித் துதித்தனர்.
    (நன்றி : ‘ஸ்ரீ ராகவேந்திர மகிமை’ பாகம் 1 | தட்டச்சு : www.rightmantra.com )
    ================================================================
Working...
X