Announcement

Collapse
No announcement yet.

புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை ப

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை ப

    சென்னை சிங்கபெருமாள் கோவில் – ஒரகடம் சாலையில் திருக்கச்சூரை தாண்டி அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆப்பூர். அந்த ஊரில் உள்ள ஒரு மலை மேலே ஒரு சிறிய வைணவத் திருக்கோவில். அந்த கோவிலில் நின்றகோலத்தில் ஒரு அழகிய பெருமாள். “மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது” என்பது பழமொழி. அந்த பழமொழி உண்மை என்பதை உணர இந்த கோவிலில் வந்து பெருமாளை வழிபட்டு செல்ல வேண்டும். பெருமாள் குடி இருக்கும் இந்த மலைக்கு பெயர் ‘ஒளஷத கிரி’ (மூலிகை மலை). ஒளஷதம் என்றால் மருந்து என்று பெயர். பல் வேறு மூலிகைகள் நிறைந்த மலை என சொல்லபடுகிறது இந்த ‘ஒளஷத கிரி’.
    பெருமாள் பெயர் ‘நித்திய கல்யாண பிரசன்ன வெங்கடேச பெருமாள்’. மற்ற கோவில்களை போல அல்லாமல் பெருமாளுக்கு இங்கு வஸ்திரத்துக்கு பதில் புடவையே சாத்தப்படுகிறது. பல சிறப்புக்கள் பெற்ற இந்த ஆலயத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்
    ராம ராவண யுத்தத்தின் போது இந்திரஜித்தின் ப்ரம்மாஸ்திரத்தால் தாக்கபட்டு ராம சேனையும், இலக்குவணும் மூர்சையாகி விழுந்து விடுகின்றனர். ஜாம்பவானின் அறிவுறைப்படி மயங்கிய மற்றும் இறந்தவர்களை உயிர்பிக்க ஆஞ்சநேயர் இமயமலையை அடுத்த ரிஷபம் மற்றும் கைலாய மலைகளில் இடையில் உள்ள மூலிகை மலையில் இருந்து நான்கு வகையான மூலிகைகளை எடுக்க செல்கிறார். இறந்தவர்களை உயிர்பிக்கும் மிருத சஞ்ஜீவனி, உடல் காயத்தை ஆற்றும் விசல்யகரணி, காயத்தால் உண்டான வடுவை போக்கும் சாவர்ணய கரணி, அறுபட்டஉடலை ஒட்ட வைக்கும் சந்தான கரணி என்பவை அந்த நான்கு மூலிகைகள். மூலிகைகளை தேடிக்கொண்டிருந்தால் நேரம் வீணாகும் என்ற காரணத்தால் ஹனுமான் அந்த மலையையே தன் வாலால் பெயர்த்து கையில் ஏந்தி கொண்டு இலங்கையை நோக்கி பறக்கிறார்.
    அவ்வாறு இலங்கை செல்லும் வழியில் ஒரு கையில் இருந்து மறுகைக்கு மூலிகை மலையை மற்றும் போது அந்த மலையில் இருந்து விழுந்த ஒரு சிறு பகுதி தான் வளர்ந்து இந்த ஔஷத கிரியாக மாறி நிற்கிறது. அந்த மலையில் இருந்து விழுந்த மண் திருகச்சூரிலும் விழுந்ததாம். அங்கிருக்கும் சிவபெருமானின் பெயர் மருந்தீஸ்வரர்.
    இந்த பகுதிக்கும் ஆஞ்சநேயர் தூக்கிச் சென்ற சஞ்ஜீவனி மலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது புலனாகிறது.
    சென்ற ஞாயிறு ஜூலை 13 அன்று இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு சென்றோம். கண்காட்சியை பார்த்துவிட்டு பின்னர் அங்கிருந்து அப்படியே நேரே வேளச்சேரி தாம்பரம் வழியாக சிங்கப்பெருமாள் கோவில் பயணம்.
    சரியாக 5.00 மணிக்கு மலை மீது இருக்கவேண்டும் என்பது ப்ளான். அப்போது தான் பிரார்த்தனை கிளப் பிரார்த்தனையை அங்கு செய்ய முடியும். 5.00 மணிக்கு மலை மீது இருக்கவேண்டும் என்றால் அடிவாரத்திற்கு 4.30 க்கெல்லாம் சென்றுவிடவேண்டும். 3.00 மணிக்கு திருவான்மியூரிலிருந்து கிளம்பினோம்.
    வழியில் அர்ச்சகருக்கு ஃபோன் செய்து, “ஏதேனும் வாங்கி வரவேண்டுமா?” என்று கேட்டோம்.
    “எனக்கு ஒன்றும் வேண்டாம். மலை மீது குரங்குகள் நிறைய உண்டு. அவற்றுக்கு வேண்டுமானால் சாப்பிட பிஸ்கட் வாங்கி வாருங்கள்” என்றார்.
    வழியில் ஒரு கடையில் இருபது பாக்கெட்டுகள் PARLE-G வாங்கிக்கொண்டோம்.
    சரியாக 4.30 கெல்லாம் ஆப்பூர் வந்துவிட்டோம்.
    ஆப்பூர் மிக அருமையான ஒரு ஊர். ஊர் கிராமம் போல இல்லை. நன்கு டெவலப் ஆகியிருக்கிறது. நகரத்து பரபரப்புக்களில் இருந்து.
    கோவிலுக்கு செல்லும் பாதையில் திரும்பி, மலையை நெருங்க நெருங்க பரவசம் தொற்றிக்கொண்டது. அடிவாரத்தில் பைக்கை பார்க் செய்துவிட்டு, அர்ச்சகருக்கு போன் செய்து நாம் வந்து சேர்ந்துவிட்ட தகவலை சொன்னோம். “நீங்க மேலே கோவில்ல வெயிட் பண்ணுங்க…. நான் வந்துகிட்டே இருக்கேன்” என்றார்.
    500 படிகளையும் ஒரே மூச்சாக ஏறுவது இயலாதது. சில படிகள் ஏறி கொஞ்சம் ஆசுவாச படுத்திக்கொண்டு மூலிகை காற்றை சுவாசித்து பின்னர் படிப்படியாக ஏறினால் சிரமம் தெரியாமல் இருக்கும்.


    படியேற ஆரம்பித்தோம். ஒவ்வொரு 100 படிக்கும் ஒரு நிமிடங்கள் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு மீண்டும் ஏறினோம். மேலே செல்லச் செல்ல, ஜில்லென்ற மருந்து நம்மை வருட ஆரம்பித்தது. ஆப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள் தெரிந்தது. எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்று பசுமை தான். நீர்நிலைகளும், பசுமைப் புல்வெளிகளும் பார்க்கவே கண்கொள்ளா காட்சிதான். ஆளையே தூக்கும் அளவுக்கு ஜில் ஜில் காற்று வேறு.
    அட… அட… சென்னைக்கு அருகே இப்படி ஒரு தலமா… இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே.. என்று மனம் துடித்தது.
    சென்னையில் இருப்பவர்கள் ஒருமுறை தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு குடும்பத்தினருடன் அவசியம் வரவேண்டும். (சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து அப்பூருக்கு ஷேர் ஆட்டோ வசதி இருக்கிறது.) கார் வைத்திருப்பவர்கள் நிச்சயம் தவறாமல் வரவேண்டும்.


    சுமார் 500 படிகள் ஏறி மலை உச்சியை அடைய வேண்டும். படி அமைக்கும்போது, பழைய ஒரிஜினல் படிகள் எப்படி இருந்தது என்று வருங்கால சந்ததியனருக்கு தெரியவேண்டும் என்பதற்காக சில அடி தூரங்களை அப்படியே விட்டுவைத்திருக்கிறார்கள். பார்க்கவே கண்கொள்ளா காட்சி

    மலையில் ஏறியவுடன் நம்மை முதலில் வரவேற்பது சிறிய திருவடி என போற்றப்படும் அனுமனின் வழித்தோன்றல்கள். அதாவது குரங்குகள். இவை இந்த மலையை விட்டு அகலுவதில்லை. இந்த மலையிலேயே வசித்து கொண்டு வரும் பக்தர்கள் தரும் உணவை மட்டுமே உண்டு வாழ்வதாக சொல்கிறார்கள்.

    முதலில் ஒரு சிறிய மண்டபம் போன்ற அமைப்பு பின்னர் நேரே சென்றால் இறைவன் சந்நிதி. பெரிய திருவடியின் ஒரு சிறிய சிலை பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது. அந்த மண்டபத்தில் தசாவதார சுதை சிற்பங்கள், மற்றும் அஷ்ட ல*ஷ்மிகள் நடுவில் திருவேங்கடவன் சுதை சிற்பம். பெருமாள் சந்நிதி. பெருமாள் இங்கே பார்பதற்கு திருவேங்கடவனின் சிறிய வடிவு போல காட்சி அளிக்கிறார். முன்பே சொன்னது போல பெருமாள் மூர்த்தி சிறிது தான், ஆனால் பெருமானின் ஆற்றலை உனர்ந்தவர்கள் பல்வேறு இடங்களில் இருந்து தேடி வருகின்றனர்.
    கோவிலுக்கு செல்பவர்கள் அங்கே வாழும் குரங்குகளுக்கும் ஏதேனும் உணவு எடுத்து செல்வது நல்லது. தமக்கும் அவர்கள் குடிநீர் மற்றும் தின்பண்டங்கள் எடுத்து செல்வது நல்லது, ஏனெனில் 500 படிகள் ஏறும்போது களைப்படைவது நிச்சயம். நினைக்கும் அனைவருக்கும் நிச்சயம் அருள்வான் நித்திய கல்யான பிரசன்ன வெங்கடேசன்.

    பெருமாளால் நன்மை பெற்ற பக்தர்கள் பலர் இந்த கோவிலுக்கு பல்வேறு கைங்கர்யங்களை செய்து வருகின்றனர். உதாரணமாக காஞ்சிபுரத்தை சேர்ந்த ஒரு பக்தர் அவர் சுமார் எட்டு ஆண்டுகளாக இங்கே வருவதாகவும் அப்போதெல்லம் மலை மேல் செல்ல சரியான பாதை இல்லாமல் இருந்ததாகவும், பின்னர் அவரும் இன்னும் சில பக்தர்களும் சேர்ந்து நடைபாதை அமைக்க முயற்சி எடுத்து பல்வேறு கால கட்டங்களில் படிப்படியாக படி அமைத்தார்களாம்.
    கோவிலின் சிறப்பு
    இங்கே தனியாக தாயார் சந்நிதி கிடையாது. பட்டரின் கூற்றுபடி பெருமாள் லஷ்மி சொருபமாகவே இருந்து தன்னகத்தே மஹாலக்ஷ்மியை கொண்டிருப்பதால் அவருக்கு வச்திரத்திற்கு பதில் புடவையே சாற்றப்படுகிறது. வேறு வஸ்திரங்கள் சாற்றபடுவதில்லை. தாயாரும் பெருமாளும் இனைந்து ஒரேவடிவில் இருப்பதால் எப்போதும் கல்யாண கோலத்தில் இருப்பதாக நம்பிக்கை, அதனால் தான் பெருமாள் பெயர் ”நித்திய கல்யான பிரசன்ன வெங்கடேச பெருமாள்”.
    அகத்திய மாமுனிவர் தவம் செய்த ஒரே வைணவத் திருத்தலம் இது மட்டுமே என்று கூறப்படுகிறது.

    மேலே கோவிலை அடைந்த பிறகு நம்மை முதலில் வரவேற்றது குரங்கார் தான். ஒருவர் வர, அவருக்கு நாம் வாங்கிச் சென்ற பிஸ்கட் பாக்கெட்டுக்களை பிரித்து பிஸ்கட்டுக்களை போட, எங்கிருந்து தான் வந்தார்களோ தெரியாது சுமார் இருபது முப்பது குரங்குகள் நம்மை நோக்கி ஓடிவந்தன.

    நமக்கு ஒரே பயம். பிஸ்கட் பையை பிடுங்கிக்கொண்டு போய்விட்டால் என்ன செய்வது. பிஸ்கட் பையை நமது பேக்கில் பத்திரப்படுத்தி ஒவ்வொன்றாக எடுத்து பிரித்து போடா ஆரம்பித்தோம்.
    ஒரு சில வலிமையான குரங்குகள், மற்ற குரங்குகளுக்கு எதுவும் கிடைக்காதபடி அவையே எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போக, அந்த அப்பாவி குரங்குகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து நாம் பிஸ்கட் போட்டோம். ஒரு சில குரங்குகள் உரிமையோடு நம்மருகே வந்து கையை நீட்டி வாங்கிச் சென்றன.
    சில குரங்குகள் பிஸ்கட்டுக்காக அவற்றுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டன. நாம் தான் பிஸ்கெட்டை போட்டு அவற்றை திசை திருப்பி ஒழுங்குபடுத்த வேண்டியிருந்தது. சிறிது நேரத்தில் அனைத்தும், நன்கு நம்மிடம் பழகிவிட்டன.
    (குரங்குகளை சீண்டுவது, அவற்றை நோக்கி கற்களை எறிவது கூடவே கூடாது!)
    எப்படியும் ஒரு 50, 60 குரங்குகள் இருக்கும். சமீபத்தில் தான் குட்டியை ஈன்ற குரங்குகள் ஒரு நான்கைந்து உண்டு. குட்டிக்கு அவை பிஸ்கட் ஊட்டும் அழகே தனி.
    உள்ளம் நிறைந்த ஒரு அன்னதானம் இது. காரணம், இந்த குரங்குகளுக்கு வேறெதுவும் இங்கு கிடைக்காது. நம்மை போன்ற பக்தர்கள் தரும் உணவுப்பொருள் தான் இவற்றுக்கு ஆகாரம்.
    (பிஸ்கட்டுக்களை வாங்கிச் செல்பவர்கள், கவரோடு குரங்குகளுக்கு தயவு செய்து போடவேண்டாம். கவர்களை பிரித்தே பிஸ்கட் போடவேண்டும். மேலும் கவர்களை இங்கே மலைமீது போடாமல், தங்களுடனே எடுத்துச் சென்று கீழே ஊரில் உள்ள குப்பைத் தொட்டிகளில் போடவேண்டும். மலையை எக்காரணம் கொண்டு அசுத்தம் செய்யவேண்டாம். அதன் இயற்க்கை தன்மையை மாசுபடுத்தவேண்டாம்! மலையை அசுத்தம் செய்யாமல் இருந்தாலே அதுவே மிகப் பெரும் சேவை!)
    * பழங்களை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது.
    ஏனெனில், அவை சாப்பிடாமல் விட்டுவிடும் பட்சத்தில் அல்லது சண்டையிட்டு வீணாக்கும் பட்சத்தில் அவை அழுகும் வாய்ப்பு உள்ளது. அங்கு சுத்தம் செய்ய ஆட்கள் கிடையாது. மேலும் பழங்கள் வந்தால் ஈக்கள் வந்துவிடும் அபாயம் இருக்கிறது. பிஸ்கட், பொரி போன்ற DRY FOODS அங்கு மிகவும் ஏற்றது. பிஸ்கெட்டுகள் சற்று கூட வாங்கிச் சென்று அர்ச்சகரிடம் கொடுத்துவிட்டால் ஸ்டாக் வைத்திருந்து கூட கொடுக்கலாம்.
    நம்மைப் பொறுத்தவரை இவை குரங்குகள் அல்ல. இந்த மலையில் வசிக்கும் ரிஷிகள். தங்கள் தனித்தன்மை கெடக்கூடாது என்று இந்த ரூபத்தில் ஸ்ரீனிவாசனின் கோவிலில் நித்தம் அவனை தரிசித்தபடி இங்கு வசிக்கிறார்கள் என்றே நம் நம்புகிறோம்.
    சில குட்டிகள் செய்யும் சேட்டை கண்கொள்ளா காட்சி. கம்பியை பிடித்து தொங்கி சாகசம் செய்வது. மரத்தின் உச்சிக்கு சென்று அங்கு தொங்குவது என்று இந்த மலைக் கோவில் முழுக்க அவற்றின் ராஜ்ஜியம் தான்.


    இவற்றை பார்த்தபோது நமக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. இந்த குரங்குகளுக்கு குடிக்க தண்ணீர் எப்படி? இங்கு மலை மேல் தொட்டியோ அல்லது தண்ணீர் குழாயோ கிடையாது. அப்படியிருக்க இவை எப்படி தாகம் தீர்த்துக்கொள்ளும்?
    நமது கேள்விக்கு சற்று நேரத்தில் விடைகிடைத்தது.

    நாம் கோவிலில் இருக்கும்போதே ஒருவர் வந்தார். ஒரு பை நிறைய பிஸ்கட் பாக்கெட்டுகள், பொரி ஆகியவற்றை குரங்குகளுக்கு போட்டார்.
    பின்னர் கிணற்றுக்கு சென்று (மலை மீது கிணறு!) நீர் இறைத்து ஒரு பிளாஸ்டிக் ட்ரேயில் ஊற்றினார். குரங்குகளுக்கு என்று வைக்கப்பட்டுள்ள ட்ரே என்று அப்புறம் தான் புரிந்தது.
    விசாரித்ததில், அவர் பெயர் கார்த்திக் என்பதும் மேற்கு மாம்பலத்தில் இருந்து வருவதாகவும், சுமார் ஆறு மாதங்களாக வருவதாகவும் கூறினார். வரும்போதெல்லாம் இங்கு குரங்குகளுக்கு பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி வந்து போட்டுவிட்டு அடுத்து ஒரு வாரத்துக்கு தேவையான பிஸ்கட் பாக்கெட்டுக்களை பட்டரிடம் கொடுத்துவிடுவதாகவும், அவர் மற்ற நாட்களில் குரங்குகளுக்கு அவற்றை போடுவார், நீர் இறைத்து ட்ரேவில் ஊற்றுவார் என்றும் சொன்னார்.

    கேட்கவே சந்தோஷமாக இருந்தது. கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவிடுபவனாயிற்றே இறைவன்… தன்னையே நம்பியிருக்கும் இந்த ஜீவன்களை விட்டுவிடுவானா?
    கார்த்திக் அவர்கள் செய்வதும் சேவை தான். மிகப் பெரிய சேவை. மிகப் மிகப் பெரிய அன்னதானம். அனுமனின் அருள் அவருக்கு பரிபூரணமாக கிடைக்கட்டும்.
    சித்தர்கள் பெளர்னமி இரவுகளில் வந்து இங்கே வழிபடுவதாக நம்பிக்கை. பெருமாள் மிகுந்த வரப்பிரசாதி என பக்தர்கள் சாட்சியம் சொல்கிறார்கள்.
    பெருமாளின் பெருமைகளை சொற்களால் முழுவதும் சொல்வதென்பது இயலாது, அனைவரும் ஆப்பூர் சென்று பெருமானை தரிசித்து வழிபட்டு பயன் பெற வேண்டும்.
    ஒரு சில நாடி ஜோதிடங்களில் கூட இந்த கோவிலில் பரிகாரம் செய்ய பரிந்துரைக்க படுவதாக தகவல் உண்டு.
    கோவிலை பற்றிய சரித்திர ஆதாரமோ அல்லது புராண வரலாறோ யாருக்கும் சரியாக தெரியவில்லை. தெரிந்தவர்கள் அது குறித்து பகிர்ந்துகொள்ளலாம்.
    நாங்கள் பேசிக்கொண்டிருந்த போதே பட்டர் வந்துவிட்டார். பாலாஜி பட்டர். இவர் ஒரு அனிமேஷன் டிசைனர். தனது தந்தைக்கு உதவும்பொருட்டு இந்த கைங்கரியத்தை செய்து வருகிறார். ஒரு நாள் ஒரு வேளை படியேறியதற்கே நமக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க… இங்கே இவர் தினமும் இருவேளை படியேறி இறங்குகிறார்.
    இவருக்கு வருமானமெல்லாம் பெரிதாக கிடையாது. நம்மை போன்று ஆலயத்திற்கு வருபவர்கள் தட்டில் போடுவது தான்.
    பட்டரிடம் பேசியதில் நாம் முன்னேர் விளக்கிய கோவிலின் தல வரலாற்றை சிறப்புக்களை நம்மிடம் விளக்கினார்.
    பெருமாளுக்கு தீபாராதனை காட்டி தீர்த்தப் ப்ரசாதமும் திருத்துழாயும் தந்தார். தொடர்ந்து புட்டு பிரசாதம் தரப்பட்டது.
    இந்த கோவிலில் உழவாரப்பணி செய்ய நமது விருப்பத்தை தெரிவித்ததும், “ரொம்ப சந்தோஷம். தாரளமாக செய்ங்க…” என்று ஒப்புதல் தந்தார். இப்படி ஒரு கோவிலில் உழவாரப்பணி செய்வது நாம் செய்த பாக்கியம்.
    கோவில் சிறிய கோவில் தான். அதிக வேலை கிடையாது. ஒட்டடை அடித்து, தரையை பெருக்கி, சோப் ஆயில் போட்டு பிரகாரத்தை அலம்பிவிடவேண்டும். ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் குப்பைகளை பிளாஸ்டிக் கவர்களை சேகரித்து அப்புறப்படுத்தவேண்டும். அவ்வளவு தான்.
    உழவாரப்பணிக்கு வருபவர்களுக்கு மதிய உணவுக்கு புளி சாதம், தயிர் சதம் உள்ளிட்ட தளிகைகளை தயார் செய்து தருவதாக கூறியிருக்கிறார்.
    * நாம் உழவாரப்பணிக்கு செல்லும்போது, இங்குள்ள அனுமனின் வழித்தோன்றல்களுக்கு அளிக்க தேவையான தின்பண்டங்களும், பிஸ்கட்டுகளும் போதுமான அளவு வாங்கிச் செல்லப்படும். தவிர ஒரு மாதத்திற்கு தேவையான பிஸ்கட்டுகளும் (STOCK) வாங்கி தரப்படும்.
    வரும் 27 ஜூலை ஞாயிறன்று இங்கு உழவாரப்பணி நடைபெறும். கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் நமக்கு தகவல் தெரிவிக்கவும். வேன் ஏற்பாடு செய்யப்படும். (வேன் ரூட் ஐயப்பன்தாங்கல் >> போரூர் >> விருகம்பாக்கம் >> வடபழனி >> 100 அடி ரோடு >> கத்திப்பாரா சந்திப்பு >> விமான நிலையம் >> குரோம்பேட்டை >> தாம்பரம் >> மறைமலைநகர் >> ஆப்பூர்).

    கோவிலின் முகவரி : ஸ்ரீ நித்ய கல்யாண வெங்கடேச பெருமாள் கோவில், ஔஷத கிரி மலை, ஆப்பூர், சிருவாஞ்சூர் – 603204.
    (ஆப்பூர் கோவில் விபரங்கள் உதவி : aatralaithedi.blogspot.in)
    வழிகாட்டி சிமெண்ட் பலகை வைக்கும் கைங்கரியம்!
    இப்படி ஒரு கோவில் இங்கே இருப்பது பற்றி பலருக்கு தெரியாதது ஆச்சரியம் தான். இது பற்றி பட்டரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “வேண்டுமானால் எங்கள் தளம் சார்பாக இந்த பகுதியை சுற்றியுள்ள முக்கிய சந்திப்புக்களில் சிமெண்ட்டினால் ஆன வழிகாட்டி போர்டுகள் வைத்து தருகிறோம்” என்றோம்.
    இதை அவர் எதிர்பார்க்கவில்லை. மிகவும் மகிழ்ச்சியுடன் “அப்படி வெச்சு தந்தீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும்” என்றார்.
    போர்டுகள் வைப்பதற்கு தேவையான உள்ளூர் அமைப்புக்களின் ஒப்புதல், போர்டு வைக்க ஆகும் செலவு உள்ளிட்ட அனைத்தையும் நாமே பார்த்துக்கொள்கிறோம் என்று கூறியிருக்கிறோம்.
    ஃபோட்டோஷாப்பில் டிசைன் செய்யப்பட்ட சாம்பிள் கான்க்ரீட் வழிகாட்டி போர்டு ஒன்றை உங்கள் பார்வைக்கு இணைத்திருக்கிறோம். (நாம் வைக்கும் போர்டு இப்படித்தான் இருக்கும்.)


    நம் வாசகர் சந்திரசேகரன் என்பவர் இங்கே மறைமலைநகரில் தான் வசிக்கிறார். (மறைமலைநகர் இங்கேயிருந்து 4 கி.மீ. தான்). அவரிடம் இது பற்றி சொல்லி, வழிகாட்டி பலகைகள் வைக்க உதவவேண்டும் என்று சொன்னபோது, மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார். “நீங்கள் அடுத்த ஞாயிறு நேரில் வாருங்கள். உள்ளூர் அமைப்புக்களிடம் பேசி அனுமதி பெற்று எந்தெந்த இடத்தில் வைப்பது என்று முடிவு செய்துவிடலாம். உடனடியாக வேலையையும் துவக்கிவிடலாம். நான் அனைத்தையும் உடனிருந்து அனைத்தையும் பார்த்துக்கொள்கிறேன்!” என்றார்.
    சொன்னபடி நேற்று முன்தினம் நாமும் நண்பர் சந்திரசேகரனும் அந்த பகுதியில் சுமார் மூன்று மணிநேரம் சுற்றி போர்டு வைப்பதற்கு மூன்று இடங்களை தேர்வு செய்திருக்கிறோம்.
    1) சிங்கப் பெருமாள் கோவில் சந்திப்பு அருகே
    2) மறைமலைநகர் சந்திப்பு அருகே
    3) ஒரகடம் சந்திப்பு அருகே என மொத்தம் மூன்று இடங்களை தேர்வு செய்திருக்கிறோம். (முதல் இரண்டு ஜி.எஸ்.டி. ரோட்டில் வருகிறது.)
    உடனடியாக அந்தந்த இடங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களிடம் இது பற்றி கூறி அவர்களது ஒப்புதலையும் பெற்றுவிட்டோம்.
    ஒரு போர்டு வைப்பதற்கான செலவு – கொத்தனார் கூலி, போக்குவரத்து செலவு, பெயிண்டர் கூலி உள்ளிட்ட அனைத்தும் சேர்த்து எப்படியும் ரூ.4000/- ஆகும். மூன்று போர்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 12,000/- என்று தெரிகிறது. இது தவிர, கோவில் அடிவாரத்தில் சாலையில் உள்ள துருப்பிடித்த பழைய இரும்பு போர்டும் (துவக்கத்தில் நீங்கள் பார்த்த படம்) பெயிண்ட் அடிக்கப்பட்டு புதிதாக எழுத தீர்மானித்திருக்கிறோம். (இதற்கு தனி செலவு.)
    இன்று அதற்கான பணிகள் பூர்வாங்க துவங்கவிருக்கிறது.
    இது போன்ற பாரம்பரியமிக்க கோவில்களுக்கு பக்தர்கள் அதிகளவு வரவேண்டும். அப்போது தான் கோவிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும். அதற்கு நிச்சயம் இந்த வழிகாட்டி பலகைகள் உதவும். அதற்கு ஏதோ நம்மாலான ஒரு சிறிய முயற்சி.
    வாசகர்கள் இந்த எளிய முயற்சிக்கு வழக்கம்போல தோள் கொடுக்கவேண்டும். இது ஒரு வேண்டுகோள். அவ்வளவே. விருப்பம் உள்ளவர்கள் உதவிடலாம். ஒருவேளை தொகை கூடுதலாக சேர்ந்தால், நமது வழக்கமான அறப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.
    நமது தளத்தின் வங்கிக் கணக்கு முகவரிக்கு :
    Name : Rightmantra Soul Solutions
    A/c No. : 9120 2005 8482 135
    Account type : Current Account
    Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
    IFSC Code : UTIB0001182
    தொகையை செலுத்திய பின்பு, மறக்காது நமக்கு simplesundar@gmail.com, rightmantra@gmail.com ஆகிய முகவரிகளுக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது 9840169215 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்.
    தங்கள் ஆதரவுக்கு நன்றி!
    - See more at: http://rightmantra.com/?p=12579#sthash.2qDBO5V9.dpuf
Working...
X