Announcement

Collapse
No announcement yet.

நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நாள் கிழமை விஷேடங்களின் போது ஏன் அவசியம்

    ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று கூறினார்கள் பெரியோர். நம்மால் தினசரி ஆலயத்திற்கு செல்ல முடியாவிட்டலும், வாரம் ஒரு முறையாவது செல்ல வேண்டும். வாரம் ஒரு முறை செல்ல முடியாவிட்டாலும், நாள், கிழமை விஷேடங்களின் போதாவது செல்லவேண்டும். ஏன் தெரியுமா? உங்கள் பிறந்தநாள், திருமணநாள், உங்கள் பெற்றோரின் பிறந்த நாள் ஆகிய முக்கியமான விஷேடமான நாட்களின் போது நீங்கள் எப்படி மகிழ்ச்சியாக இருப்பீர்களோ, உங்கள் வேலைக்கார்களுக்கோ பிள்ளைகளுக்கோ எப்படி கேட்டதையெல்லாம் வாங்கித் தருவீர்களோ அதே போன்று தான் தெய்வங்களும் அன்று மகிழ்ச்சியாக இருப்பார்கள். நாம் கேட்பதையெல்லாம் தயங்காது அருள்வார்கள். பண்டிகை, நாள், கிழமை விஷேடங்களின் தெய்வங்களின் அருள் அதிகளவு வெளிப்படும். அதை நமக்கு சாதகமாக்கிகொள்ளவேண்டும்.
    இன்று ஆடிப்பூரம். அம்பிகையும் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும் பிறந்த நாள். அவர்கள் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கும் நாள். இந்த நன்னாளில் தவறாமல் சென்று அவர்களை தரிசித்து அவர்கள் அருளை பெறுங்கள். வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், கொஞ்சம் பூச்சரம் இது போதும் அவர்கள் மனம்குளிர. இது தவிர இன்று ஒரு எழைக்கேனும் அம்பிகையின் பெயரைக் கூறி அன்னதானம் செய்யுங்கள். இல்லையா.. பசுவுக்கு பழமோ, புல்லோ, கீரையோ வாங்கித் தாருங்கள். இது எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமாக உங்களிடம் இருக்கும், நீங்கள் விட்டுவிட நினைக்கும் தீய பழக்கம், ஏதேனும் இருந்தால் அதை இன்று விட்டுவிடுங்கள். அன்னைக்கு அதைவிட பெரிய பரிசை நீங்கள் தரமுடியாது.
    நாம் ஏற்கனவே கூறியது போல, நாள், கிழமை, விஷேடங்கள் மற்றும் பண்டிகைகளை பற்றி படிப்பது, கேட்பது, கேட்க செய்வது, படிக்கச் செய்வதும் என அனைத்துமே புண்ணியம் தான்.
    எனவே ஆடிப்பூரம் தொடர்பான இந்த பதிவை தவறாமல் படிக்கவும்.



    இன்று ஆடிப்பூரம் – அம்பிகையின் பிறந்த நாள்!
    உலகை ஆளும் அம்பிகை அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரத்தில் இந்த விழா அனைத்து அம்மன் கோவில்களிலும், வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. உலக மக்களை காக்க சக்தியாக, அம்பாள் உருவெடுத்த புண்ணிய தினம் இது என்று கூறப்படுகிறது. இந்த தலைசிறந்த நாளிலேயே பெரும்பாலும் சித்தர்களும், யோகிகளும் தவத்தை தொடங்குவதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
    ஆடி மாதம் என்பது தட்சிணாயன காலத்தின் தொடக்க காலம். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள். அவர்களது இரவுக் காலமே தட்சிணாயன காலம் ஆகும். இதுவரை வடக்கு நோக்கி நகர்ந்து கொண்டிருந்த சூரியன் தனது தெற்கு நோக்கிய பயணத்தை தொடங்கும் மாதம். உத்தராயணக் காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால், தட்சிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் இந்த காலங்களில்தான் வரும். இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூரம் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.
    உலகத்தை படைத்து, காத்து, ரட்சித்து அருளும் அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக்காப்பு, குங்குமக் காப்பு நடத்துவார்கள். ஆனால் அன்னைக்கு வளைகாப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனிச் சிறப்பாகும். எனவே உலக உயிர்கள் அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அன்னைக்கு இந்த நாளில் வளைகாப்பு நடத்தப்படுகிறது. வளைகாப்பு முடிந்ததும் அன்னையை அலங்கரித்த வளையல்கள் அனைத்தும் பெண் பக்தர் களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
    அம்மன் கோவில்கள் அனைத்திலும், ஆடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக வாகன சேவையுடன் சிறப்பாக நடைபெறும். திருவாரூர் கமலாம்பாள், நாகப்பட்டினத்தில் நீலாயதாட்சி அம்மன், திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை, திருமயிலை கற்பகவல்லி ஆகிய தலங்களில் உள்ள அம்மனுக்கு ஆடிப்பூரத்தன்று மதியம் சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெறும். இரவு விரைமலர் குழல் வல்லி, மறைமலர் பதவல்லி, கற்பக வல்லிக்கு வளைகாப்பு உற்சவம் நடத்தப்படும். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மனுக்கு, ஆடிப்பூரம் அன்றைய தினம் கூழ் வார்க்கும் விழா நடைபெறும்.


    வைணவக் கோவில்களில்..
    ஆடிப்பூரம் விழா சைவ ஆலயங்களில் மட்டுமல்லாது, வைணவ தலங்களிலும் வெகு சிறப்பாக நடைபெறும். ஏனெனில் ஆண்டாள் அவதரித்த தினம் ஆடி மாதத்தில் வரும் பூரம் நட்சத்திரம் ஆகும். துளசி தோட்டத்தில் அவதரித்த ஆண்டாளின் இயற்பெயர் கோதை என்பதாகும். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீவில்லிபுத்தூரை, வடமாநில மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்து கூறுவர்.
    இந்த புண்ணிய தினத்தில் ஆண்டாள் ஆலயத்துக்கு சென்றுவருவது மிகவும் நன்மை தருவதாகும். எம்பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய மலர் மாலையை தானே சூடிக் கொண்டு அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற திருநாமம் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் ஆண்டாள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம்தான் ஆடிப்பூரம். அந்த அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்.
    ஆடிப்பூர தகவல் உதவி : தினத்தந்தி
    - See more at: http://rightmantra.com/?p=12742#sthash.Nj4AiAB9.dpuf
Working...
X