Announcement

Collapse
No announcement yet.

பகுதி - 2 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையு

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பகுதி - 2 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையு

    பகுதி - 2 பைரவர் வரலாறும் வழிபாட்டு முறையும்

    தண்ணீர் தேடி அலைந்தார். இந்தச் சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த கால பைரவர், மாடு மேய்க்கும் சிறுவனாக வடிவம் கொண்டு, அப்பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அனுமனும், அந்த சிறுவனை அழைத்து, தம்பி! எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது. தண்ணீர் இருக்கும் இடத்தைக் காண்பிப்பாயா? என்று கேட்டார். சிறுவனும் அனுமனை சிறிது தூரம் அழைத்துச் சென்று கங்காதேவியைத் தோன்ற நினைத்துக் கொண்டார். அவரின் விருப்பப்படியே கங்காதேவி அருணா நதியாக சிறிது தூரத்தில் ஓடத் தொடங்கினாள். காளிங்க மடுக்கரையில் அருணா நதியைக் கண்டு மகிழ்ச்சியடைந்த அனுமன் அந்த மகிழ்ச்சியில் கையில் வைத்திருந்த சிவலிங்கத்தை சிறுவன் வடிவிலிருந்த கால பைரவரிடம் கொடுத்து, தான் தண்ணீர் அருந்திவிட்டு வரும் வரை அதனை வைத்திருக்கும்படி வேண்டினார். சிறுவனும், ஐயோ நானோ சிறுவன்; அதிக நேரம் இந்த பாரத்தைக் கையில் வைத்திருக்க இயலாதே என்றான். அனுமனும் உனக்கு சிரமம் தெரியாதிருக்க வரம் தருகிறேன் என்று சொல்லி காளிங்க மடு அருகினில் நீரருந்தச் சென்றார். குறிப்பிட்ட நல்ல நேரத்தில் லிங்கத்தை வாங்கிச் செல்ல அனுமன் காத்திருந்தார். ஆனால் அதே நல்ல நேரத்தில் அங்கு சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்துவிட்டு, மன நிறைவுடன், பாரம் தாங்காமல் லிங்கத்தை பூமியின் மேல் வைத்து விட்டேன் என்று கூறிவிட்டு சிறுவன் ஓடிவிட்டான். சிறுவனின் குரல் கேட்டு அனுமன் திடுக்கிட்டார். ஆனாலும் பூமியில் வைத்த லிங்கத்தை எடுப்பது ஒன்றும் சிரமமான காரியமல்லவே, சஞ்சீவி மலையையே எடுத்து வந்த எனக்கு இந்தப் பூமியிலிருந்து எடுப்பது என்ன பளுவா? என்று கர்வத்துடன் லிங்கத்தை வாலால் சுற்றி எடுக்க முயன்றார். ஆனால் அவரால் சிவலிங்கத்தை எடுக்க முடியவில்லை. ஆணவத்தால் தான் அலட்சியமாக சிவலிங்கத்தை எடுக்க முயன்றதற்கு சிவனாரிடம் மன்னிப்பு கேட்டவாறு இருகை கூப்பி பணிவுடன் வணங்கி நின்றார். அனுமனை மன்னித்த சிவபெருமானும், நான் நல்ல முகூர்த்த நேரத்தில் இந்த இடத்தில் அமர்ந்து விட்டதால் நீ பூசிப்பதற்கு வேறொரு காசி லிங்கத்தை எடுத்துக்கொண்டு போ என்று ஆணையிட்டார். அப்பொழுது இயற்கைச் சூழ்நிலை சாதாரண நிலைக்குத் திரும்பியது. திடீரென நிகழ்ந்துவிட்ட இயற்கை மாற்றத்திற்கு என்ன காரணம் என்று யோசிக்கையில், இது கால பைரவரின் ÷க்ஷத்திரம். அவர்தான் காசியிலிருந்து எடுத்து வந்த சுயம்புலிங்கத்தை இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக இப்படி நடந்து கொண்டார் என்ற உண்மை அனுமனுக்குத் தெள்ளத் தெளிவாகியது.

    ராமரின் கட்டளையை நிறைவேற்றுவதற்கு தனக்கு இடையூறாக இருந்தது இந்த காளிங்க மடுதான் என்று கோபம் கொண்டு, அருகில் இருந்த காரிகிரி என்ற மலையைப் பெயர்த்து எடுத்து அந்த மடுவில் போட்டு, இந்த நதிப்பகுதி வனம் சூழ்ந்த பகுதியாக மாறட்டும் என்று சாபமளித்தார் அனுமன். இராமேசுவரத்தில் எல்லோரும் காசி லிங்கத்திற்காகக் காத்திருப்பார்கள் என்பதால் நேரத்தை வீணாக்காமல் மறுபடியும் காசிக்குச் சென்றார். இந்த முறை காசியில் தெரிந்த காட்சிகள் அனுமனுக்கு ஆச்சரியமளித்தது. காரணம் காசியில், கங்கைக் கரையில் எங்கு நோக்கினும் இலிங்கங்களாகவே காட்சியளித்தன. இந்த லிங்கங்களில் எது சுயம்புலிங்கம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் அனுமன் திணறினார். அப்போது ஒரு குறிப்பிட்ட இலிங்கத்திற்கு மேலே கருடன் வட்டமிட்டது. அதே நேரம் பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புகளினால் அதுவே சுயம்புலிங்கம் என்பதை உணர்ந்த அனுமன் அதனை எடுக்க முயன்றார். காசியின் காலபைரவராகிய தன்னிடம் அனுமதி ஏதும் பெறாமல் அனுமன் இலிங்கத்தை எடுக்க முயல்வது கண்டு கோபமடைந்த கால பைரவர், என் அனுமதி இல்லாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம் என்று அனுமனைத் தடுத்தார். முதல்முறை சிவலிங்கத்தை எடுத்துக்கொண்டு போகும்போதும் இந்த பைரவர் ஏதோ சூழ்ச்சி செய்து காளிங்க மடுவில் தடுத்துவிட்டார். இப்பொழுது மறுபடியும் தன்னுடைய முயற்சிக்குத் தடை செய்கிறார் என்று கோபமடைந்த அனுமன் கால பைரவரைத் தாக்கத் தொடங்கினார். ஆணவத்தால் செய்த போராகையால் அனுமனுக்குத் தோல்வியே கிட்டுகிறது. அந்த சமயத்தில் அங்கு வந்த முனிவர்கள் பைரவரை வணங்கி, உலக நன்மைக்காகவும், இராமனின் பெருமைக்காகவும் இந்தச் சிவலிங்கம் தென்னாடு போக அனுமதிக்க வேண்டும் என்று வேண்டினார்கள். அனுமனும், விரைவாக எடுத்துச் செல்ல வேண்டுமென்பதாலேயே அவரின் அனுமதி பெறாமல் சிவலிங்கம் எடுக்க முனைந்ததைக் கூறி மன்னிப்புக் கோரினார். கால பைரவரும் மகிழ்ச்சியடைந்து சிவலிங்கத்தை அனுமனுக்குக் கொடுத்தனுப்பினார். தன் அனுமதி பெறாது இலிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்குத் துணைபுரிந்த கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக் கூடாது என்றும், சுயம்புலிங்கத்தை அனுமனுக்கு உறுதி செய்த பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக் கூடாது என்றும் கால பைரவர் சாபமிட்டார். அவரின் அந்த சாபப்படியே இன்றும் காசியின் நகர எல்லையில் கருடன் பறப்பதில்லை. அங்கே பல்லிகளும் ஒலிப்பதில்லை.

    கால பைரவர்: காசி கோயிலில் பைரவர்தான் பிரதானமாகக் கருதப்பட்டு வணங்கப்படுகிறார். சனீஸ்வர பகவானுக்கு குருவாக விளங்குபவர் பைரவர். சனீஸ்வரன், சூரியன் மகனான யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு கௌரவக் குறையை அடைந்தார். அவருடைய தாய் சாயாதேவியின் அறிவுரைப்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரகப் பதவி கிடைக்கப் பெற்றார். ஆகையால் பைரவர் சனீஸ்வரருக்கு குருவாக விளங்கியும் அருள்பாலிக்கிறார்.

    ஸ்வர்ணாகர்ஷண பைரவர்: ஸ்வர்ணாகர்ஷண பைரவர் சிவனின் பிரதிபிம்பம் என்று புராணம் கூறும். ஸ்வர்ணாகர்ஷண என்றால் எளிதில் கவரக்கூடிய என்று பொருள். இவர் செந்நிற மேனியையும் அல்லது மலர்ந்த தாமரை மலர் முகம், பொன்னிற சடை, முடியில் பிறைச்சந்திரன், கரங்களில் தாமரை, அமுத கும்பம், மணிகள் பொதிந்த சங்கம், அபயம், வரதத்தோடு பொன் சொரியும் குடத்தை ஒரு கரத்தால் தாங்கி, மறுகரத்தால் தம்மை தழுவும் ஆதி சக்தியை ஒரு புறத்துத் தழுவியவர் என ஆகமம் கூறுகிறது. ஸ்வர்ணாகர்ஷண பைவர மூர்த்தி அம்பாளுடன் சேர்ந்து அருள்பாலிப்பார். பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களும் அருளும் அம்பிகை மகா ஸ்வர்ண பைரவி. பொன் சொரியும் குடம் ஏந்தியவள். அபயம் தரும் முத்திரை கொண்டு ஸ்வர்ண பைரவருடன் இணைந்து அருள்பாலிக்கிறார். வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது. தேய்பிறை அஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம் ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றி விபூதி அல்லது ருத்திராபிஷேகம் செய்து வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும். இவரை நம்பிக்கையுடன் வழிபவுவதால் வறுமை, பகைவர்களின் தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம் மற்றும் பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில் மகிழ்ச்சியைப் பெறலாம். நம்பிக்கையுடனும், பக்தியுடனும் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் படத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன் தேய்பிறை அஷ்டதி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக் கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும். வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் பைரவி சிலை அல்லது படத்தை வைத்து பூஜித்த வர கடையில் வியாபாரம் செழித்து செல்வம் பெருகி வளம் பெறுகிறார்கள். தினந்தோறும் பைரவர் காயத்ரியையும், பைரவி காயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும்.

    ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு ஏற்ற நைவேத்தியம்: வெல்லம் கலந்த பாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும்.ஸ்வர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம் தனச் செழிப்பைத் தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டு நாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும் தன விருத்தியையும் அடைவார்கள். பவுர்ணமியன்று இரவு எட்டு மணிக்கு தீபத்தை ஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தன வரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும். இந்த தினத்தை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்பொழுது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.
Working...
X