Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூரணவதாரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூரணவதாரம்

    ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூரணவதாரம்

    ஸ்ரீகிருஷ்ண பகவான் கீதையில், அஞ்ஞான உலகத்தினருக்குத் தெரியாத ஞானப் பிரகாசத்திலேயே ஞானியானவன் எப்போதும் இருக்கிறான் என்கிற அர்த்தத்தில், உலகம் முழுவதும் தூங்கும் காலத்தில் ஞானி விழித்துக்கொண்டிருக்கிறான் என்கிறார். எங்கும் ஒரே இருட்டாக இருக்கும் காலத்தில் ஒரு வெளிச்சம் தோன்றினால் அதை வரவேற்கிறோம். ஒரு பாலைவனத்தின் நடுவில் கொஞ்சம் நீரும் நிழலும் தென்பட்டால் அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது.
    இருண்ட மேகங்களின் மத்தியில் தோன்றும் மின்னல் அதிகப் பிரகாசத்தோடு விளங்குகிறது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா தக்ஷிணாயணத்தில் ஆவணி மாதத்தில் ஸ்ரீ கிருஷ்ண பக்ஷ அஷ்டமியன்று நடுநிசியில் பிறந்தார். நமக்கு ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாள். நம் உத்தராயணம் அவர்களுக்குப் பகல். தக்ஷிணாயணம் அவர்களுக்கு ஒரு இரவு. ஆகையால் ஸ்ரீ கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்களுக்கு இரவு ஆகிறது.
    இம்மாதிரியே நமக்கு ஒரு மாதம் பித்ருக்களுக்கு ஒரு நாளாகும். நமது சுக்ல பக்க்ஷம் அவர்களுக்குப் பகல். கிருஷ்ண பக்ஷம் இரவு. ஆகையால் கிருஷ்ணன் பிறந்த கிருஷ்ண பக்ஷம் பித்ருக்களுக்கு இரவாகிறது. அஷ்டமி, பக்ஷத்தின் நடுவில் வருவதால் அன்று பித்ருக்களுக்கு நடுநிசியாகும். கிருஷ்ணன் பிறந்தது அஷ்டமியன்று நடுநிசி. இதனால் என்ன ஏற்படுகிறது. கிருஷ்ணன் அவதரித்த காலம் தேவர்கள், பித்ருக்கள், மனிதர்கள் எல்லோருக்கும் இரவு.
    எல்லா தினுசிலும் இருட்டு அதிகமாக இருக்கும் சமயம். கிருஷ்ணன் பிறந்ததும் இருள் நிறைந்த சிறைச்சாலை. இப்படி கிருஷ்ணாவதார காலத்தில் எல்லாம் இருள் மயமான சூழ்நிலை. அவனுடைய பெயரும் கிருஷ்ணன். 'கிருஷ்ண' என்றால் கறுப்பு என்று பொருள். அவனது மேனியும் கறுப்பு. இப்படி ஒரே கறுப்பான சமயத்தில் தானும் கறுப்பாக ஆவிர்ப்பவித்தாலும் அவனே ஞான ஒளி.
    நல்ல காளமேகங்களிடையே மின்னல் மாதிரி இத்தனை இருட்டுக்கு நடுவே தோன்றிய ஞான ஒளி. ஞான ஒளியால்தான் மங்காத பிரகாசமுடையதாய் இன்றும் என்றும் ஜ்வலித்துக்கொண்டிருக்கிறது. அஞ்ஞானத்தால் இருண்டிருக்கும் உலகத்தில்தான் ஞானத்தின் மகிமை அதிகமாக விளங்கும். அப்படியே கிருஷ்ணனின் பெருமை பிரகாசிக்கிறது. அவனுடைய கீதை உலகெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. அவனுடைய லீலா விநோதங்கள் நிறைந்திருக்கும் ஸ்ரீ மத் பாகவதம் புராண சிரேஷ்டமாக விளங்குகிறது.
    உடலுக்கு ஒளியளிப்பது கண். உயிருக்கு ஒளி தருவது ஞானம். உலக உயிர்களுகெல்லாம் ஞான ஒளி தருகிறவனாக இருப்பவனே கண்ணன். நம் தென்னாட்டில் அவன் ஸ்ரீ கிருஷ்ணன் மாத்திரம் அல்லாமல் கண்ணனும் ஆகிவிட்டான். அகக் கண்ணையும் புறக் கண்ணையும் அம்ருதத்தில் மூழ்கடிக்கும் வடிவம் அவனுடையது. நம் காதின் வழியாக வேணுவினால் கீத அம்ருதத்தையும், உபதேச சாரமான கீதாம்ருதத்தையும் உட்செலுத்தி குளிர வைக்கும் அந்தக் கண்ணனே நம் உலகுக்குக் கண். கறுப்பினிடையே விளங்கும் ஒளி காட்டும் கண். அந்த ஒளியும் அவன்தான்.
    ஸ்ரீ கிருஷ்ணன் ஒரே அவதாரத்தில் அநேக விதமான லீலைகளைச் செய்து நடித்திருக்கிறான். மிகவும் சேஷ்டை செய்யும் குழந்தை, பிறகு மாடு மேய்க்கும் பையன், குழலூதிக் கூத்தாடும் கலைஞன், இவற்றை அநுபவிக்கும் ரசிகன், (சாணூரன், முஷ்டிகன் என்ற கம்சனைச் சேர்ந்த மகாமல்லர்களை ஜெயித்தபோது) மல்யுத்தத்தில் தேர்ந்தவன், (நக்னஜித் என்ற ராஜாவின் பெண்ணான சத்யை என்பவளைக் கலியாணம் செய்துகொள்வதற்கு நிபந்தனையாக ஏழு காளைகளை அடக்க வேண்டும் என்றபோது) காளை மாடுகளை அடக்கிக் காட்டியவன், ராஜதந்திர நிபுணன், தூது செல்பவன், சாரதி, திரவுபதி போல் தீர்க்க முடியாத கஷ்டத்தில் சிக்கிக்கொண்டவர்களைக் காக்கும் ஆபத்பாந்தவன்.
    குசேலர் போன்ற அநாதர்களை ரட்சிக்கும் பக்தவத்ஸலன், பீஷ்மருக்கு முக்தியை அளித்தவன். தன்னையே கொல்லும்படியான அம்பைப் பிரயோகித்த வேடனுக்கும் முக்தி கொடுத்தவன்… இப்படியெல்லாம் லீலை செய்திருக்கிறான்.
    உலகத்தில் நல்லதும் பொல்லாததுமாகிய அநேக விதமான மனப்போக்கை உடையவர்களாக ஜீவர்கள் அமைந்திருக்கிறார்கள். வீரனும் சூரனும், திருடனும் ஸ்திரீலோலனும், பேதையும் உழைப்பாளியும், கிழவனும் குழந்தையும், இறுமாப்புடையவனும் பரோபகாரியும், மனமுருகியவனும் கல்நெஞ்சக்காரனும் கஞ்சனும் ஊதாரியும், மூடனும் கல்விமானும், யோகியும் ஞானியுமாகப் பலவிதமான மன நிலையை உடையவர்கள் உலகத்தில் இருக்கிறார்கள். இவர்களில் தீய அம்சம் உள்ளவர்களை முற்றிலும் நல்ல அம்சங்களாகக் கொண்ட ஒரு மகாத்மா அல்லது தெய்வ அவதாரத்தால் ஆகர்ஷிக்க முடியாமலே போகலாம்.
    ஒரு திருடனுக்கு இன்னொரு திருடனைப் பற்றிய கதையே ரஸமாயிருக்கும். ஒர் உல்லாஸ புருஷனுக்கு இன்னோர் உல்லாஸ புருஷனின் கேளிக்கைகளே சுவாரஸ்யமாக இருக்கும்.
    ஸ்ரீகிருஷ்ணன் நல்லவர்களை மட்டுமின்றி மற்றோரையும் கவர வேண்டுமென்றே ஜாரசோர சிகாமணியாக, கபடனாக, மாயனாக, தந்திரசாலியாக எல்லா வேஷமும் போட்டான். பற்பல போக்குக்கொண்ட மக்கள் எல்லோரையும் தனது வகை வகையான லீலைகளால் தனித்தனியே ஆகர்ஷித்துத் தன்னுடைய கருணைக்கும் அதன் மூலம் ஞானத்துக்கும் பாத்திரமாக்கிக் கடைத்தேற வைத்த ஸ்ரீ கிருஷ்ணாவதாரமே பரிபூரணவதாரம்.
Working...
X