Announcement

Collapse
No announcement yet.

Kambaramayanam - 04

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Kambaramayanam - 04

    Kambaramayanam - 04

    ஆதி அந்தம் அரிஎன யாவையும்
    ஓதினார். அலகு இல்லன உள்ளன
    வேதம் என்பன - மெய்ந் நெறி நன்மையன்
    பாதம் அல்லது பற்றிலர் - பற்று இலார்.


    முற்ற ஓதிக் கற்றவர்க்கும் வேதங்களுக்கும் பற்று அற்றவர்க்கும் கடைச்சரண் பகவானின் பாதங்களே. அறிவின் முதிர்ச்சி கலையின் முடிபு பற்றுறுதியின் எல்லை. யாவும் கடைத்தேற இறைவனின் கழலொன்ற கதி என்கிறது இப்பாடல். எந்நிலை உற்றார்க்கும் அரணாவது சரணாகதியே என்பது பக்தி நெறியினர் ஏற்கும் முடிபு. அதனைக் கவிச் சக்கரவர்த்தி இப்பாடலால் உறுதி செய்கிறார்.

    பாடலுக்குப் பொருள் காண்பதற்கு அரிய வகையில் சொற்களின் கிடக்கை அமைந்துள்ளது. இக்கிடக்கையைப் பயன்படுத்திப் பலவாறு பொருள்கொண்டனர் சான்றோர்; அவர்தம் உரைப் பெருமைத் திறத்தை குறைக்குமாறில்லை. எனினும், இங்குக் கண்ட பொருள் தெளிவு காண உதவுகிறது.

    ‘கோடிப் பழமறைகள்’ என்பதால் வேதங்கள் அலகு இல்லை எனவும், நான்கு எனப் பகுக்கப்பட்டதால் அலகு உள்ளன என்றும் சொற்கூட்டிப் பொருள்கொண்டார் உண்டு. வேதம் ஓதத் தொடங்கும்போதும் ஓதி முடிக்கும்போதும் ‘அரி’ என ஓதுதல் கட்டி ‘ஆதி அந்தம் அரியென’ எனப் பாடங்கொண்டு உரை வகுத்தார் உண்டு. எவ்வாறு பொருள் கொண்டாலும் செய்யுளின் சொற்கிடக்கை தெளிவு அற்றதாகவும் இடர் தருவதாகவும் உள்ளது.

    பலவாறு பொருள் கொண்டாலும் பரமன் பாதத்தைப் பற்றிடும் அடைக்கலக் கருத்து யாவர்க்கும் உடன்பாடே.

    உலகம் யாவையும் என்னும் திருவிருத்தம் முதல் இம்மூன்று பாட்டாலும் பொதுமையாற் பிரமத்தை வணங்கினான் கம்பன். “இது மகா காவியமாகையால் இம் மூன்று பாட்டுக்கும் தனித்தனியே பொருள் விரிக்கிற் பெருகுமென அறிக”

    முதற் பாடலால் பகவானை நேரிடையாகவும் இரண்டாம் பாடலால் பாகவதர் துணையால் பகவானை மறைமுகவாகவும் மூன்றாம் பாடலால் சரணாகதியைச் சுட்டிய வகையில் பகவானை முடிநிலையாகவும் கவிச் சக்கரவர்த்தி விளக்குகிறார் என இயைபு காண்டலும் ஒன்று.






Working...
X