சிவாயநம. திருச்சிற்றம்பலம்.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

*பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றில் பிறந்த தொன்னகர் போற்றி!*

*நெல்லை மாவட்ட சிவாலயத் தலங்கள் தொடர்.*
*(16-வது நாள்.)*

*அருள்மிகு இராமலிங்கசுவாமி திருக்கோயில்.*
*பணகுடி.*

*இறைவன்:*அருள்மிகு இராமலிங்க சுவாமி.


*இறைவி:* அருள்தரும் சிவகாமி அம்மன்.


*தீர்த்தம்:* அனுமன் நதி தீர்த்தம்.


*தல விருட்சம்:* மகிழ மரம்.


*ஆகமம்:* காரண ஆகமம்.


*தல அருமை:*
இவ்வூர் அனுமன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஊராகும்.


பணகுடி என்பது, பணம் நிரம்பிய ஊர் என்றும், பனையடியில் தோன்றியதால் பணங்குடி என்றும் வழங்கினர்.


பண்பட்ட நிலவளங்களை இவ்வூர் பெற்றிருந்ததால் பணங்குடி என்பது மருகி பணகுடி எனவாயிற்று.


நான்குநேரியில் இருக்கும் கல்வெட்டொன்றில் இவ்வூரை *அதிவீரராமபுரம்* என இவ்வூர் என குறித்தல் உள்ளது.


இவ்வாறு பழமை வாய்ந்த இவ்வூரில் இறைவன் குடிகொண்டிருக்கும் இவ்வாலயத்தைக் கட்டியவர் உத்தமபாண்டிய மன்னர் ஆவார்.


இராமாயண காலத்தில் இராமன் இலங்கை வேந்தனோடும், படைவீர்களோடும் போரிட்டு சீதையை மீட்டு வந்தான்.


தன் மீது பற்றிய பிரம்மஹத்தி தோஷம் நீங்க இராமேசுவரத்துக் கடற்கரையில் லிங்கம் செய்து வழிபட்டதாக இராமாயணம் கூறுகிறது.


இராமேசுவரம் சென்று வழிபட முடியாதவர்கள், தென்னாட்டில் இராமன் வழிபட்ட இலிங்கத்தைப் போன்றே இங்கேயும் லிங்கத்தை நிர்மாணம் செய்து வழிபடட்டும் என்று, இக்கோயிலை கட்டியதாக கூறுகிறார்கள்.


கெளதம மகரிஷியால் நிர்மாணிக்கப்பட்டது என்ற சிறப்பு இத்திருக்கோயிலுக்கு உண்டு.


கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் அதிவீரராம பாண்டியன் இக்கோயிலை எழுப்பியுள்ளான்.


இக்கோயில் சைவ வைணவ ஒற்றுமைக்குச் சான்றான கோயில்.


இராமன் இங்கும் வந்து ஈசனை வழிபட்டார் என்று இவ்வூர் மக்கள் கருத்தை பதிகிறார்கள்.


நம்பிசிங்கப் பெருமாள் என்றழைக்கப்படும் இவரை, வடநாட்டு யாத்திரிகர்கள் *சோட்டா நாராயணா* எனவழைத்து வழிபட்டுச் செல்வதை இன்றும் காணமுடியும்.


*வழிபாட்டு காலம்:*
நான்கு கால பூஜைகள்.
காலசந்தி- காலை 8.00 மணிக்கு,
உச்சிக் காலம் - காலை 10.00 மணிக்கு,
சாயரட்சை - மாலை 5.00 மணிக்கு,
அர்த்த சாமம் - இரவு 9.00 மணிக்கு.


காலை 5.30 மணி முதல் காலை 11.00 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் ஆலயம் திறந்திருக்கும்.


*திருவிழாக்கள்:*
தைப்பூசத் திருவிழா பத்து நாட்கள்.
ஒன்பதாவது நாள் தேரோட்ட உற்சவம்.
பத்தாவது நாளன்று தெப்ப உற்சவம்.


மே மாதம் அக்னி நட்சத்திரம் நாட்களில் நம்பிசிங்க பெருமாளுக்கு வசந்த உற்சவ திருவிழா ஐந்து நாட்களாக நடைபெறும்.


சித்ரா பெளர்ணமி அன்று ஆயிரத்தெட்டு திருவிளக்கு பூஜை மிக சிறப்பாக நடைபெறும்.


திருவாதிரை, திருக்கல்யாணம், சதுர்த்தி, திருக்கார்த்திகை ஆகியவை சிறப்பாக நடைபெறுகிறது.


தேய்பிறை அஷ்டமி மற்றும் பிரதோஷ வழிபாடும் நடந்து வருகிறது.


*இருப்பிடம்:*
இக்கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில், இராதாபுரம் வட்டத்தில், திருநெல்வேலி யிலிருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில், வள்ளியூரை அடுத்ததாக ஏழு கி.மி. தொலைவில் இருக்கிறது.


நாகர்கோவிலிலிருந்தும் திருநெல்வேலி வரும் சாலையில் இருபத்தைந்து கி.மி. தொலைவில் உள்ளது.


பணகுடி பேருந்து நிலையத்தின் அருகிலும், பணகுடி இரயில் நிலையத்திலிருந்தும் ஒரு கி.மி. தொலைவில் உள்ளது.


பேருந்துகளும் இரயில்களும் அனைத்துப் பகுதிகளுக்கும் இணைக்கப்பட்டிருக்கிறது.


*அஞ்சல் முகவரி:*
செயல் அலுவலர்,
அருள்மிகு இராமலிங்க சுவாமி திருக்கோயில்,
பணகுடி,
இராதாபுரம் வட்டம்.
திருநெல்வேலி-627 109.


*தொடர்புக்கு:*
04637- 222888.


திருச்சிற்றம்பலம்.


*நாளைய பதிவில் களக்காடு அருள்மிகு சத்தியவாகீசுவரர் திருக்கோயிலில்.*



*கோவை. கு.கருப்பசாமி.*

*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*